சோதனைக் காலம்
கட்டுரை
சோதனைக் காலம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
நீங்கள் அடுத்ததாகப் படிக்கப்போகும் இரண்டு கூற்றுகளில் எது சரியானது?
அ) முதலாம் எலிசபத் மகாராணியின் ஆட்சிநாட்களில் நாடாளுமன்றத்தை அவர் நல்லபடியாகக் கையாளவில்லை.
ஆ) முதலாம் எலிசபத் மகாராணியின் ஆட்சிநாட்களில் அவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் சுமுகமான உறவு இருந்தது.
மேற்குறிப்பிட்ட கேள்வி இங்கிலாந்துக் குடிவரவாளர்களுக்குப் பிரித்தானிய குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. வின்சன் சர்ச்சில் எழுதிய நான்கு பாகங்கள்கொண்ட ‘A History of the English-Speaking Peoples’ நூலை நான் பேனா மை தீரும்வரை பக்கம் பக்கமாக அடிக்கோடிட்டுப் படிக்காவிட்டாலும்கூட என் ஆங்கில வரலாற்று அறிவு அரிவரி மாணவனைவிடக் கொஞ்சம் மேலானது. இந்தக் கேள்வி எனக்கே தடுமாற்றத்தை உண்டாக்குகிறது. இதுபோன்ற புத்தியையும் உணர்ச்சிகளையும் மங்கச்செய்யும் கேள்விகளை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆங்கிலப் பிரஜாவுரிமைப் பெற நடத்தப்படும் ‘ஐக்கிய இராச்சியத்தில் வாழ்க்கை’ என்ற பரீட்சை, 2005இல் தொழிலாளர் கட்சி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கில வரலாறு, பழக்கவழக்கங்கள், தாம் உள்வாங்கிக்கொண்ட ஆங்கிலத் தன்மைகள் ஆகியவற்றை அடையாளப்படுத்த இந்தச் சோதனை உதவும் என்கிறார்கள் வந்தேறிகள். ஆனால் இதன் உள்நோக்கம் மறைந்துபோன ஆங்கில சாம்ராட்சிய ஏக்கம்போல் தெரிகிறது.
நான் பிரித்தானியக் குடியுரிமை பெற்றபோது தடுமாறச்செய்யும் கேள்வித்தாள்கள் இல்லை. விண்ணப்பப் பத்திரம் கூட ஆறுபக்கங்கள்தான். நானே என் கையால் நிரப்பி, பிறகு விண்ணப்பத்தை உறையில் வைத்து, தபால்உறையில் இருந்த பசையை நாக்கினால் தடவி, புறாவின் காலில் கட்டி அனுப்பவில்லை; ஆங்கிலக் கலாச்சாரத்தின் திருவுருவான சிகப்புத் தபால்பெட்டியில் போட்டு அனுப்பினேன். விக்டோரியன் காலம் போல் குதிரைவண்டிகள் இந்தத் தபால்களை எடுத்துப்போயிருக்கும்.
இப்போது இணையத்தில்தான் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கிறது. படிவம் தொண்ணூறு பக்கங்கள். ஒரு அப்புக்காத்தின் துணையில்லாமல் இதை நிரப்புவது கடினம். நீங்கள் நீங்களேதான் என்று நிரூபிக்க ஒரு தடயவியல் நிபுணராக மாற வேண்டியிருக்கும். இங்கிலாந்தில் வாழ்வதற்குத் தகுதியானவரென்று உறுதிப்படுத்த நீங்கள் முதன்முதலாக வந்திறங்கிய விமானப் பற்றுச்சீட்டு முதல் சமீபத்தில் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்திக் கட்டிய அபராத ரசீதுவரை தேவைப்படும்.
இந்தப் பரீட்சைக்கு உதவ ஆங்கில அரசே ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ என்ற கையேட்டையும் மாதிரிக் கேள்விகளைக் கொண்ட செயலியையும் வெளியிட்டிருக்கிறது. இந்தச் செயலியில் கிட்டத்தட்ட 423 கேள்விகள் உண்டு. ஆங்கில வரலாறு ‘நீண்ட பிரகாசமான வரலாறு’ என்ற தலைப்பில் கையேட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆங்கிலச் சரித்திரம் தூய்மைப்படுத்தப்பட்ட, ஒரு பக்கப் பார்வையுடையது. ஒருவிதத்தில் இது ஆங்கிலப் பழைமைவாதக் கட்சியின் வரலாறு. இந்தக் கற்பனாவாத ஆங்கில வாழ்க்கையையும் செயலியிலிருந்த வினாகளையும் ஒன்றுசேர்த்துப் படித்ததில் நான் கற்றுக்கொண்ட பாடங்களைக் கீழே தருகிறேன்.
பாடம் ஒன்று: ஆங்கிலேயர்கள் உலகத்தில் தலைசிறந்த விடுதலை வீரர்கள், அடிமைத்தனம் பற்றிய குறிப்புகளில் ஏதோ ஆங்கிலேயர்கள்தான் ஒரு தார்மீக வெறியோடு கறுப்பர்களின் அடிமை வாழ்வுக்கு விடுதலை வாங்கித்தந்தவர்கள் போல் சொல்லப்படுகிறார்கள். வில்லியம் வில்பபோர்ஸ் தனி ஆளாக நின்று அடிமைத்தனத்தை ஒழித்தவர் போல், மாபெரும் விடுதலை வீரராக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். இந்த மீட்பு வரலாற்றில் கறுப்பர்களின் பங்கு சேர்க்கப்படவில்லை. வில்பபோர்ஸுக்கு முன்னமே தன் விடுதலையைக் காசுகொடுத்துப் பெற்றுக்கொண்ட கறுப்பரான Olaudah Equiano (1745-97) பற்றி ஒருவரிகூட இல்லை. தான் அனுபவித்த சித்திரவதைகள்பற்றி அவர் எழுதிய நூல் ‘The Interesting Narrative and other Writings’ அவர் காலத்திலேயே பல பதிப்புகள் வெளிவந்தன. இந்த நூல்தான் தன்னுடைய கிறிஸ்தவ மனச்சாட்சியை உலுப்பிவிடக் காரணமாக இருந்ததென்று வில்பபோர்ஸே ஒத்துக்கொண்டிருக்கிறார். வில்பபோர்ஸைப் பற்றி இதையும் சொல்லிவிட வேண்டும். இவர் கடுமையான மதவாதி. ஒரு கிறிஸ்தவ இந்துத்துவவாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசினார். ‘இந்தியா இயேசுவுக்கே’ என்று முழங்கியவர்.
பாடம் இரண்டு: மற்றமைகள் (The Other) பற்றி எப்போதும் வழக்கத்தில் நைந்துபோன சொற்றொடரில் வர்ணிப்பது சாலச் சிறந்தது: ஒரே ஒரு இந்தியர் மட்டும் நூலில் செருகப்பட்டிருக்கிறார். அவரின் பெயர் ஷேக் தீன் முகம்மது (1759-1851). இவரின் சாதனை லண்டனில் 1810இல் முதல் காப்பிக் கடையை ஆரம்பித்தது. இவரும் இவருடைய மனைவியும் இணைந்து இன்னுமொன்றையும் ஆங்கில வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தினார்கள். தலைகழுவும் சவர்க்கார நிலையங்கள் (Shampooing Salons). ஒருசில ஆங்கிலேயர்களிடையே இந்தியர்களைப் பற்றிய ஒரு பொதுவான அபிப்பிராயம்: இந்தியர்கள் மூலையில் கடைவைப்பது அவர்களின் மரபணுவில் இருக்கிறதென்பது. இந்தத் தவறான கருத்தை நீட்டிக்க, இங்கே சுருக்கிச் சொல்லப்பட்ட முகம்மதுவின் வாழ்க்கை வரலாறு உதவும்.
பாடம் மூன்று: ஆண்களின் வரலாறே ஆங்கில வரலாறு. 77% ஆண்களின் பெயர்களே இக்கையேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 15% எட்டாவது ஹென்றியைப் பற்றியது. நாற்பது சதம் ஆங்கிலேயர்களின் வாழ்க்கைச் சுருக்கம் பெட்டியிட்டுச் சித்திரிக்கப்படுகிறது. காலனிய கவிஞர் கிப்லீங்கும், வங்காளப் பஞ்சத்திற்குக் காரணமாக இருந்த தீவிர இனவாதி வின்ஸ்டன் சர்ச்சிலும் கவனம் பெறுகிறார்கள். இவர்களின் கவிதையும் தேசிய உணர்வைத் தூண்டிவிடும் பேச்சும் ஆங்கில ஆண்மையின் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர்களின் துவேஷமான காலனியச் சிந்தனைகள்பற்றி எவ்விதமான தகவல்களும் இல்லை.
பாடம் நான்கு: ஆங்கில வரலாறு ஆங்கில ஆண்டைகள் பற்றியது: முதலாம் எலிசபத்தின் ஆட்சிக்காலம் நினைவுபடுத்தப்படுகிறது. இதில் டுடர்களின் (Hourse of Tudors) வம்ச ஆட்சிக்கு அதிகமான பத்திகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது தரும் மறைமுகச் செய்தி, இந்த நாட்களில் ஆங்கிலேயர்கள் அந்நியப் படைகளை அழித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது ஸ்பெயின் தேசத்திற்கு எதிரான வெற்றி. ஆனால் ஆங்கில அடித்தள மக்களின் போராட்டங்கள் பற்றித் தகவல்கள் இல்லை. பதினேழாம் நூற்றாண்டில் Diggers and Levellers என்பவர்கள் ஆண்டைகளுக்கும் அரசருக்கும் நில உரிமையாளர்களுக்கும் எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மார்க்ஸுக்கு முன்னமே வேளாண்மை சமத்துவம் பேசியவர்கள். பார்க்க: Christopher Hill இன் ‘The World Turned Upside Down: Radical Ideas During the English Revolution.’
பாடம் ஐந்து: பிரித்தானியாவில் வாழும் ஆசியர், கறுப்பர் இனச் சந்ததியர்களுக்கு இலக்கியம் படைக்க, ஓவியம் வரைய, சினிமா- நாடகங்களில் நடிக்க, கட்டட வடிவமைப்பாளராகச் செயல்படத் தெரியாது. எல்லாருமே முழு மொக்குகள்: ஒன்பது எழுத்தாளர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். எல்லாருமே வெள்ளையர்கள். அதில் இரண்டு பெண்கள். அவற்றில் ஒருவர் ‘ஹாரி பாட்டர்’ புகழ் ஆர்.கே. ரொலீங்; மற்றவர் விக்டோரியன் எழுத்தாளர் ஜென் ஒஸ்டின். பிரசித்திபெற்ற புக்கர் பரிசை இரண்டு தடவை பெற்ற ரூஸ்டியைப் பற்றியோ இயக்குநருக்கான ஆஸ்கர் பரிசு பெற்ற ஸ்டிவு மக்கூவின் பற்றியோ ஒருவரிகூட இல்லை. ஆங்கிலக் கட்டடக்கலையைக் கட்டுடைத்தவர் சோகா ஹாட்டாட். இவர்தான் லண்டன் ஒலிம்பிக் நீச்சல்குளத்தைக் கட்டியவர். இவரின் சமீபத்திய சாதனை பெய்ஜிங்கில் பிரமிக்கவைக்கக் கூடிய அளவில் கட்டிய புதிய விமானதளம். இவரைப் பற்றிய விவரங்கள் இல்லை.
பாடம் ஆறு: பெண் வாக்குரிமைகளுக்குப் போராடிய அனைவருமே ஆங்கிலப் பெண்கள்; அதுபோல் பொதுச் சேவைகளில் ஈடுபட்டவர்களெல்லாம் ஆங்கிலப் பெண்கள்: பெண் வாக்குரிமைக்கான போராட்டம் முழுக்க வெள்ளைப் பெண்களின் போராட்டமல்ல. இதில் இந்தியப் பெண்களின் பங்கும் உண்டு. அவர்களில் முக்கியமானவர் சோபியா டுலுப் சிங். இவர் மகாராஜா டுலுப் சிங்கின் மகள். இவர் வாக்குரிமைக்காக மட்டுமல்லாது வாக்கில்லாத பெண்கள் வரி கட்டத் தேவையில்லை என்றும் கலகம் செய்தவர். ஏமலி பன்கேர்ஸ்ட் பெண்களுக்காகக் குரலெழுப்பிய அதே சமயத்தில் சரோஜினி நாயுடு பெண்களின் வாக்குரிமை பற்றி இந்தியாவில் பேசினார். அதே போல் முதலாம் உலக யுத்தத்தில் தாதியாகச் சேவைசெய்த லாரன்ஸ் நைட்டிங்கேல் கொண்டாடப்படுகிறார். ஆனால் அதே போரில் யுத்த வீரர்களுக்கு வைத்தியம் பார்த்த கறுப்புப் பெண்ணான மேரி சீக்கோல் மறைக்கப்பட்டிருக்கிறார்.
வரலாறு வாகை சூடியவர்களால் எழுதப்படுவது. இந்தக் கையேடு வாடிப்போன வாகைசூடிகளின் மறைந்துபோன பொற்காலத்தை மீளக்கொண்டுவருவது போல் தெரிகிறது; பழைய ஏகாதிபத்தியம் பற்றிய ஏக்கத்தின் தொனி இது.
இதையும் சொல்லியாக வேண்டும்; அல்லாவிட்டால் மனச்சோர்வுற்றவனாக நான் மாற வாய்ப்புண்டு. இந்தியாவில் அல்லது இலங்கையில் குடியுரிமை கோருவோருக்குப் பரீட்சை நடத்தினால் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்று யோசித்தேன். அதன் விளைவைக் கீழே தந்திருக்கிறேன்.
இலங்கை கேள்வித்தாள்கள் இப்படி இருக்கலாம்.
1. சிங்கள இராணுவத்தின் பொழுதுபோக்கு என்ன?
அ) யாழ்ப்பாணப் பனங்கள்ளைக் குடித்துவிட்டு சுராங்கனி பாட்டுக்கு பைலா நடனம் ஆடுவது;
ஆ) அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்ப் பெண்களின் நிர்வாணத்தைக் காணொளி எடுப்பது.
இ) முக்கியமாக யாழ்ப்பாணத்திலிருக்கும் வாசக சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துவது.
2. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச
அ) சீனப் பேரரசர்கள் கோடை மாளிகைகள் கட்டுவது போல் இலங்கை முடுக்குகளில் யாருமே உபயோகிக்க முடியாத விமான நிலையம் கட்டுகிறவர்.
ஆ) தமிழ் அரசன் எல்லாலனை வீழ்த்திய துட்ட கைமுனுவின் மறு அவதாரம்.
இ) பிரபாகரனின் மாவீரர் உரைகளை மகாவம்சம் படிப்பது போல் தினமும் வாசிப்பவர்.
மோடி இந்தியாவில் கேட்கப்படக்கூடிய கேள்விகள்:
1. முகலாயர்களின் சாதனைகள்
அ) இறந்துபோன காதலிகளுக்கு ஏகப்பட்ட செலவில் பளிங்குக் கல்லறைகள் கட்டியது.
ஆ) மாட்டிறைச்சிப் பிரியாணியை அறிமுகப்படுத்தியது.
இ) இந்துக் கோயில்களைத் தாறுமாறாக இடிப்பது.
2. இந்திய ரயில்
அ) பிரயாணிகளின் கனிவான கரிசனைக்கல்ல. அமைச்சர்கள், மக்களவைப் பிரதிநிதிகளின் வசதிக்காக ஓட்டப்படுகிறது.
ஆ) இன்றும் ஆயிரம் மெழுகுவத்திகளால் இயக்கப்படுகிறது.
இ) ரயில் பெட்டிகள் சாதி, சமய, மொழி, பால் கட்டுப்பாடுகளை மீறிச் சமத்துவ சமூகத்தை உருவாக்கும் மார்க்சியச் சூழ்ச்சி.
அது சரி, தொடக்கத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன என்ற கவலையில் இருப்போருக்கு விடை இரண்டாவது கூற்று. இணையத்தில் கணிப்பு நெறிமுறையில் முன்னமைக்கப்பட்ட அனைத்துமே எந்த கருத்தியல் கொண்டவரால் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதில்தான் இருக்கிறது. எதற்கும் பரீட்சைக்குப் போகிறவர்கள் எட்டாவது ஹென்றியின் ஆறு மனைவிகளின் பெயர்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது.
மின்னஞ்சல்: rssugi@blueyonder.co.uk