கவிதைகள்
கவிதைகள்
வண்ணநிலவன்
ஓவியங்கள்: ஆதிமூலம்
போலிருத்தல்
எல்லாரையும் போலிருக்க
எல்லாராலும் முடியாத் தொல்லையில்
அவரவர் போலிருந்தார்
அவரவரே ஆனார்
காட்டு மானும்
தோட்டத்து மல்லியும்
தன்போதம் தொலைத்து
சிவமென்றிருந்தன.
நுகர்வு
சொப்பனங்களில்
கரைந்துகிடந்தபோது
உன் உபவாசங்களை முகர்ந்தேன்
என் பிணத்தை நானே எரித்தேன்
மயானச் சாம்பலைக்
காலத் துருவேறிய நதியில் கரைத்தேன்
கணவன் – பிள்ளைகளென்று
காலந்தள்ளும் உன்னிடம்
நினைவுகள் வேய்ந்த
குடிசையை விட்டுச் செல்கிறேன்
பத்திரமாகப் பார்த்துக்கொள்.
நீ
தாவரங்களுக்குப் பேரிட்டபோது
கடவுள் சிரித்தார்
பேர்சொல்லி மீன்களை
அழைத்த தருணத்தில்
நன்றியில்லா உயிர்கள்
கரையோரத்தில் ஒதுங்கின
இரைதேடியலையும் மிருகம்
வீட்டுக் கதவைத் தட்டியது
குரும் பலாவின் ஈசர்
பொங்குமாங் கடலுக்கு மேலேறி
வனம் புகுந்துவிட்டார்
நீதிமன்றத்தில் சிந்திக்கிடக்கும்
உவப்பற்ற தண்டனைகளைப்
பொறுக்கிக்கொண்டிருக்கும்
நீ
அலைந்து திரியாமலிரு.
புறக்கடை
வாழ்வின் அர்த்தத்தை
ஓயாது முடைகிறேன்.
பிசிறுகளை
மிடறுமிடறாய்க் குடிக்கிறேன்.
நீரற்ற குளத்தின் ஏக்கத்தோடு
நினைவுகளைப் பகிர்வதுண்டு.
கரப்பான், எலிகளுடன்
பயணம் போனதற்காகப்
புனிதமற்ற என்னைப்
புறக்கடையில் வீசினர்.
சில முயற்சிகள்
அகாலத்துப் பறவைகள்
விடியலைத் தின்ன
தருணம் பார்க்கின்றன
திசைகளற்ற வெளியைக்
காலம் புணர்கிறது
நினைவின் மடக்குகளில்
உயிர்வாழும் மனம்
கருணைக் கொலைஞனைத்
தேடியலைகிறது
வெட்டத் தழைக்கும்
சிறகுகளோடு
காலம் நீள்கிறது
துன்பம் உவகையின்றி
ஜடமாகி விடாதிருக்க
ஓயாது முயலுகிறேன்
கவலைகள்
ஓய்ந்துகிடக்கும் தண்டவாளத்தை
எழுப்ப விரைகிறது ரயில்.
நகரும் ரயிலுடன்
கவிதை தேடிப் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி
பிடிமானமற்ற மனது
தொடுவானத்தைத் தேடி ஓடுகிறது
தும்பை முறித்துக்கொண்டு
ஓடும் கன்று -
ரயில் பாதைச் சித்திரமாயிற்று.
தீட்டாத சித்திரங்களை நினைத்து
ரவிவர்மா கவலைப்படுகிறார்.
இன்று
ஆளற்ற வீதிகளை
யாரும் திருடும் முன்பு
நடந்துவைத்தேன்.
வானத்தைப் பறவைகள்
பங்குபோட வரும் முன்பு
பறந்துவைத்தேன்.
கருக்கல் பொழுதை
ஆடைக்குள் ஒளித்துவைத்தேன்.
வீடு திரும்பும் மாடுகள்
காகங்களைச் சுமந்து செல்கின்றன.
வயக்காட்டு ஓடைகளைப்
பாம்புகள் அளந்துகொண்டிருக்கின்றன
நேற்றைப் போல
இன்று இல்லை.
அறியாமை
ஜாமத்துச் சொப்பனங்கள்
மனதைவிட்டு நழுவுகின்றன.
நினைவொழுகும் மனதில்
புதிரென எழும்புகிறது புனைவு.
தோற்றம் – மறைவுகளின்றிப்
பால்வீதி அகண்டுகிடக்கிறது.
கடவுளின் இருப்பும்
கலைகளின் விதிகளும்
புரிவதேயில்லை