வனமேவும் ராஜகுமாரி
கதை
வனமேவும் ராஜகுமாரி
ராம் முரளி
ஓவியங்கள்: மணிவண்ணன்
பெருங்கடலின் முன்னால் அவன் நின்றிருந்தான். வெப்பத் தளை ஆங்காரம் கொண்டு அவனது உடலின்மீது கவிந்து தழுவி விலகியது. அலைகள் கரை தொடும் வெறியுடன் கிளம்பிக் கிளம்பி ஒன்றின் மீதொன்று புரண்டு மடிந்து முன்னோடி, மண்ணில் ஏறிப் படர்ந்து விரிந்து மீண்டும் பின்னகர்ந்து உள்ளொடுங்கின. சுடுகாற்றிலும் ஈரம் பிசுபிசுத்தது. ஆளையே சாய்த்துவிடுகிறாற்போல் காற்றின் திண்மையும் அதன் மூச்சுவிசையும் அழுத்தம் கொண்டிருந்தன. கடல்முன் நின்று கைகளைப் பின்னால் பிணைத்தபட