மலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்
EPW பக்கங்கள்
மலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்
நெகிழிப் பொருள்களை நிராகரித்திட வேண்டும் என்று அலையலையாகப் பிரச்சாரங்கள் மேற்கொண்டபோதிலும், மக்கள் மத்தியில் ‘பார்க்காதபோது கண்டுகொள்ளாத மனோநிலை’ நீடிக்கும் வரையிலும் இது வேலைசெய்யாது. நெகிழிப் பயன்பாட்டிற்குத் தடை என்று தலைவர்களால் அவ்வப்போது அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. மக்கள் இதற்கு உறுதியுடனும் தீர்மானகரமாகவும் செவிசாய்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இந்தியா நெகிழி மாசு இல்லாத நாடாக மாற்றப்படும் என்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 2022 வாக்கில் இந்தியாவிலிருந்து நெகிழி முற்றிலுமாக ‘ஒழித்துக்கட்டப்படும்’ என்கிற விரிவான பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ஒருதடவை பயன்படுத்தும் நெகிழிமீது முழுமையான தடை விதித்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மேற்கொண்டால் சுமார் பத்தாயிரம் தொழில் பிரிவுகள் மூடப்படுவதற்கு இட்டுச் செல்லும்; மேலும் அதனுடன் இணைந்துள்ள நுகர்வு நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். இது, மந்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்பட்டது. தடைசெய்வது தொடர்பாக ஊகங்கள் வெளிவந்துள்ளபோதிலும், அதற்கான அடிப்படைப் பணி நடைபெறாததும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு தடவை பயன்படுத்தும் நெகிழிக் குறித்த வரையறை தொடர்பான தெளிவின்மையும் தொடர்கிறது. அதன் பயன்பாடு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை; அல்லது அதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டு அதற்கு மாற்றாக வேறு எதைப் பயன்படுத்துவது என்பது குறித்துத் தெளிவான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
பல்வேறு மாநிலங்களில் தனிப்பட்டமுறையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் ஒரு தீர்வாக இருக்கவில்லை. அதே சமயத்தில், பிரச்சனைக்குரிய நெகிழிகளின் பயன்பாட்டை மறுசுற்றுக்கு விடாது படிப்படியாக அகற்றுவது சந்தேகத்திற்கிடமில்லாத விதத்தில் தேவையாகும்.
ஒருசமயத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களில் பெரும்பாலானவை, பயன்படுத்தப்பட்ட ஒருசில நிமிடங்களுக்குள் தூக்கியெறியப்படுகின்றன. இணையவழி வர்த்தக ஜாம்பவான்களும், சிப்பங்களில் அடைத்து உணவுப் பொருள்களை விற்கின்ற நிறுவனங்களும் இத்தகைய நெகிழிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சமீபத்திய பத்தாண்டுகளில் நெகிழிகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, கழிவுகளின் கலவையிலும் கடுமையான அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரத்து 940 டன்கள் அளவிற்கு நெகிழிக் கழிவுகள் உண்டாக்கப்படுகின்றன. இவற்றில், சுமார் நாற்பது விழுக்காடு மீண்டும் சேகரிக்கப்படுவதுமில்லை, மறுசுழற்சிக்கு விடப்படுவதுமில்லை.
தண்ணீரை மாசு படுத்துதல், சாக்கடைகளை அடைத்தல், மண்ணைத் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாக்குதல் போன்றவற்றைச் செய்வதுடன் இவற்றின் பயன்கள் முடிவுக்கு வருகின்றன. நெகிழி மாசு மிகவும் விரிவடைந்த அளவில் பரவியிருக்கிறது. இதனால் ஆமைகள், பசுக்கள், ஆழ் கடல் பகுதிகளிலும் தொலைதூர துருவப் பகுதிகளிலும் வாழும் ஏராளமான உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. நெகிழியால் இவற்றின் குடல்கள் அடைப்பட்டும் அல்லது புண்ணாகி ஓட்டை விழுந்தும், மூக்குகள் சிகரெட் துண்டுகளால் துண்டாக்கப்பட்டும், மூச்சுவிட முடியாமல் கழுத்துகள் நெரிக்கப்பட்டும் இறந்த உயிரினங்களின் படங்கள் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.
மனிதர்கள் சுமார் 250 நுண்ணிய நெகிழித்துண்டுகளை ஒவ்வொரு நாளும் உண்கின்றனர் என்று நடப்பு ஆராய்ச்சி நிறுவியிருக்கிறது. அதாவது ஒருவார அளவில் ஒரு கிரெடிட் கார்டு அளவுக்கு இணையான நெகிழி. இது அலட்சியமான முறையில் நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்துவதால் மட்டுமல்ல, மக்கள் உபயோகப்படுத்துகிற பற்பசை அல்லது முகத்தைக் கழுவுவதற்குப் பயன்படும் பல்வகை நுண்ணிய குண்டுமணிகளின் மூலமாகவும் நேரடியாக உள்செல்கின்றன. பிரதானமாக, புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீர் வழியாக உட்செல்கிறது. இவ்வுண்மைகளை மனிதர்கள் அறிந்தாலும்கூட அதனைப் பயன்படுத்தாது குறைத்திட அவர்களால் முடியவில்லை. பொருள்களை ஒருதடவை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் கலாச்சாரம் வந்துவிட்டதால் மட்டுமல்ல, நெகிழிப் பயன்பாட்டுடன் ஏற்பட்டுள்ள ஒருவிதமான சௌகரியமும் இன்றியமையாமையும் கூட இதன் காரணமாகும். உதாரணமாக, மருத்துவப் பயன்பாட்டில் நெகிழிப் புட்டிகள் மருந்துகளை மாசுபடுத்துகின்றனவென்றும், இந்தியாவில் பாதுகாப்பான விதத்தில் நெகிழிச் சிப்பங்கள் தயாரிக்கப்படவில்லையென்றும் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளபோதிலும், இன்றளவும் நெகிழியே பாதுகாப்பான, சுத்தமான ஒன்று என்று கருதப்பட்டு அதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவது நம் கலாச்சாரத்தின் ஒருபகுதியாக மாறியிருக்கிறது.
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தியபின் தூக்கியெறிந்துவிடுவார்கள். அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டுமென்றோ அதனால் ஏற்படும் கழிவுக்கு என்ன ஆகிறதென்றோ அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் வாழ்க்கைமுறை இவ்வாறு செல்லரித்துப்போயிருப்பது, நகரின் புறப்பகுதிகளில் அவை மலைபோல் வளர்ந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. தில்லியில் காசிபூர் பகுதிக் குப்பைமேட்டின் உயரம் அறுபத்தைந்து மீட்டரைத் தொட்டிருக்கிறது. இத்தகைய குப்பைக் குவியல்களிலுள்ள பல்வேறு பொருள்களின் கரைசல்களும் சுத்தப்படுத்தப்படாத கழிவுப்பொருள்களும் தண்ணீரை மாசுபடுத்தியும் இவற்றை எரிக்கும்போது புற்று உண்டாக்கக்கூடிய மாசை உருவாக்கியும் மக்களின் வாழ்க்கைக்கு ஓர் ஆழமான அச்சுறுத்தலாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
நெகிழிக் கழிவுப் பொருட்களை ஆரம்பத்திலேயே தனித்தனியாகப் பாகுபடுத்திப் பிரித்தோமானால் அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது சாத்தியமாகும். எனினும் அநேக நகர்மன்றங்கள் தங்கள் பகுதிகளில் காணப்படும் நெகிழிக் கழிவுகளையும் திடக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவதை அமல்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.
கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பில் முறையான மேலாண்மை இல்லாததன் காரணமாக, மிகவும் அசிங்கமான நெகிழிப் பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தும்போது அவை மிகவும் செலவு பிடிக்கக்கூடியதாகவும், பாதுகாப்பற்றதாகவும் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்த வேண்டியதாகவும் மாறிவிடுகிறது.
பல்வேறு உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்பட்ட பல அடுக்கு நெகிழிப்பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது மிகவும் சிரமம். இதனைச் சரிசெய்திட வேண்டுமானால் நெகிழிப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் நிறுவனங்கள் அவற்றைத் திரும்பவும் பெற்று உரியமுறையில் மறுசுழற்சிக்கு உட்படுத்துவதைக் கட்டாயமாக்கிடக்கூடிய விதத்தில் அமைப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டியது அவசியமாகும். மேலும், மறுசுழற்சி தொழில்நுட்பங்களையும் பதப்படுத்தும் முறைகளையும் வளர்த்தெடுப்பதும் அவசியமாகும். ஏனெனில் தற்சமயம் இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகள் மிகவும் தரம் தாழ்ந்தவிதத்தில் இருக்கின்றன.
நெகிழிப் பொருளாதாரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையானது, உற்பத்தி செய்யப்படும் நெகிழிப் பொருள்களை முழுமையாக மறுபடியும் உபயோகப்படுத்தினாலும் அல்லது மறுசுழற்சி செய்தாலும், அவ்வாறு மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு வரையறை உண்டு என்றும், ஒருசில தடவைகள் மட்டுமே அவ்வாறு செய்திட முடியும் என்றும் கூறுகிறது. மேலும், மறுசுழற்சி வர்த்தகப் பணியில் விஷத்தன்மையுள்ள கழிவுகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்றன. அவற்றைத் தம் நிலங்களில் கையாள்வது ஏழை மக்களே! இவை வணிகமென்றும் வாழ்வாதாரமென்றும் கூறப்படுகின்றன. இந்திய நிறுவனங்களுக்குத் தடை இருந்தபோதிலும்கூட, நெகிழியை இறக்குமதி செய்வதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன. ஏனெனில், மறுசுழற்சிக்கு ஆகும் செலவைவிட இது குறைவாக இருப்பதுதான் காரணம்.
பயன்படுத்தப்பட்ட நெகிழிகளைக்கொண்டு சாலைகள் அமைப்பதும் கட்டடங்கள் கட்டுவதும் இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டிடும் என இப்போது கூறப்படுகிறது. எனினும், நெகிழி இப்பூவுலகில் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் தாள், துணி, கண்ணாடி போன்றவையும்கூட அவற்றுக்கான தன்மைகளுடன் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவைகளாகவே இருக்கும்.
தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை நெகிழிகள், (பயோபிளாஸ்டிக்ஸ்) தட்டுகள் போன்றவை கூட, திறந்தவெளியில் குப்பைகள்போல் கொட்டினால் அவ்வளவு எளிதாக மக்குவதில்லை.
மனிதர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருள்களை முறையாக அப்புறப்படுத்தாததால், இவ்வாறு மலைபோல் குவியும் கழிவுகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றன. பல்வேறுவிதமான பொருள்களையும் விவேகத்துடன் பயன்படுத்துவதுடன், தற்போது மனிதர்களிடம் மலிந்திருக்கும் பயன்படுத்தியபின் தூக்கியெறியும் கலாச்சாரமும் மாற்றப்பட்டு, தூக்கியெறிந்த பொருள்களுக்கும் தமக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்று இருந்துவிடாமல், அவற்றை மறுபடியும் பயன்படுத்தும் போக்கினைக் கொண்டுவர வேண்டும். இல்லையேல் மனித சமுதாயம் தான் உருவாக்கிய கழிவுகளின் மீது தானே அமர்ந்துகொண்டு மூச்சுத்திணறிக் கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.
தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, அக்டோபர் 19, 2019.
தமிழில்: ச. வீரமணி
மின்னஞ்சல்: veeramani1107@gmail.com