கவிதைகள்
கவிதைகள்
சேரன்
முடியா முடிவு
இன்று முழுவதும் அலையலையாக
உங்கள் நினைவுதான்
நேற்றைய பின்னிரவில்
வழமையாக வரும் ஈழக்கனவுகளும்
கொலையுதிர் காலமும் அஞரும் வரவில்லை.
மீண்டும் மீண்டும் ஒரே கனவே வருமென்றால்
அதன் பொருள் என்ன எனக் கேட்டேன்
படுகொலைக்குத் தப்பி
டென்மார்க்கில் தஞ்சம் புகுந்த உளவளத்துறை அறிஞன் சொன்னான்:
சும்மா இரு.சொல்லற.
நோவும் துயரமும் காயமும் வெறுப்பும்
மேலெழாமல் தடுப்பதற்காகவே
ஒரேயொரு கனவு, பெருங்கனவு
உன்னோடு தொடர்ந்துவரும்
வரட்டும்.
வேட்கையும் அன்பும் விழைவும் இணையும்
புகலிடம் உங்களுக்கு வேண்டாம் எனில்
சொல்லுங்கள்.
போய் ஒழிவோம்.
காதலர்
திறபட மறுக்கிறது கதவு.
வெளியில் நீர் உறையும்போது கதவு பெறுகிற வலு
உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
நூறு சுருட்டுக்களைத் தொடர்ந்து புகைத்தாலும்
விலக மறுக்கும் புகாரும் நுளம்பும் சூழ்ந்தது
உங்கள் நகரம்.
எனக்கும் உனக்குமான கதவு இல்லை இது.
அப்படியான கதவொன்றை நாங்கள்
உருவாக்கிக்கொள்ளவும் முடியாது
அவர்கள் திறக்கிறார்கள். மூடுகிறார்கள்.
மறுபடியும் திறக்கிறார்கள்.
கதவுகளைப் பற்றித் தெரியாத காதலர்
புதைகுழிக்குள் இருக்கக் கூடும்.
அல்லது
நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்திலும் இருப்பார்கள்
அவர்களுக்கு எல்லாப் பக்கமும் வாசல்
எல்லாப் பக்கமும் கதவுகள்
ஒன்றும் திறவா.
சிங்கத்தின் கதவு
எப்படியும் அவர்களுக்குக் கனவுகளும்
அடையாநெடுங் கதவங்களும் வாய்க்கக் கூடும்
அவர்கள் கதவுகளை உடைக்கிறார்கள்
வியர்வையும் புணர்வும்மிக
நீராடி ஊரோடி என
அலறுகிறார்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பு
என் உச்சத்திலும் உள்ளே நுழைய மறுத்த
ஒரு காமத்துளி
கதவின் வலது பக்க மேல் மூலையில் தெறித்தது.
அன்பு வெடித்துத் துளிக்கும்போது
மகவு உயிர்க்கும். விழிக்கும் என்பதெல்லாம் பொய்தான்.
இட்ட துளி. எடுத்த துளி. விட்ட துளி.
நட்ட துளி எல்லாமே வலி.
சிங்கப்பூரின் கூலித்தமிழரின்
வெறுங்காற்றைப் போல.
திரிபு
போன வழியில் திரும்பி நடந்துவர
எந்தக் காதல் நெஞ்சும் அஞ்சும் என்பது
கடலோரக் கதை
வாழ்க்கை எப்போதும் குறிஞ்சியிலே
சுற்றிச் சுழல வேண்டும் என்பது
உயிரின் விதை
பட்டினத்துக்கு அடுத்தது பாலை
அங்கு முகமும் திரிகிறது
கடந்து செல்வதற்கு
நான் எடுத்துவைக்கிற ஒவ்வொரு கனவிலும்
ஒரு எரிமலர் விரிகிறது
அம்மலரா இம்மலரா உன் மலரா
என்கிற தீராத தத்தளிப்பின் தீர்வுக்கு
கடவுளிடமும் காண்டம் வாசிப்பவனிடமும் கணவனிடமும்
குழந்தைகளிடமும் கவிதைகளிடமும் தொடை
பிரியும் யோகாசனத்திடமும் இடையறாத பெருமூச்சிலும் விடை இல்லை.
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca