கொரோனா: விளைவுகள் பின்விளைவுகள்
தலையங்கம்
கொரோனா
விளைவுகள் - பின்விளைவுகள்
ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெவ்வேறு பேரிடர்கள் மனித குலத்தின் இயல்பான இருப்பைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன. வறட்சி, பஞ்சம், நில நடுக்கம், எரிமலைக் கொந்தளிப்பு, பெருமழை, கடற்கோள், கொள்ளை நோய்கள் ஒரு புறம். அரசியல், பொருளாதாரம், மதம், கோட்பாடு இவற்றின் மூலமான அதிகார வேட்கையால் மனிதர்களே சக மனிதர்கள்மீது நிகழ்த்தும் போர்கள் இன்னொரு புறம். இவை மனித இனத்தை நிலைகுலையச் செய்தன; செய்கின்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மனிதர்கள்மீது இயற்கை சுமத்தியிருக்கும் பேரிடர் கொரோனா வைரஸ் மூலம் பரவி உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கோவிட் 19 என்ற கொள்ளை நோய் ஆகும்.
சீனாவின் வூகான் நகரத்தில் உருவாகி உருமாற்றம் பெற்ற இந்தக் கொரோனா வைரஸ், இன்று தேச எல்லைகளை அலட்சியம் செய்து சுமார் 160 நாடுகளின் காற்றில் கலந்துவிட்டது. இது மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால். மனிதகுலம் ஒற்றுமையாக நின்று இந்தப் பேரிடருடன் போராடியிருக்க வேண்டும். ஒடுக்குமுறைகளும் யுத்தங்களும் பிரிவினைகளும் பொருளற்றவை என்பது தலைவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
இந்தக் கொள்ளைநோய்க்கும் இதன் அழிவுகளுக்கும் சீனாவை மட்டும் குற்றப்படுத்துகிற போக்கு, நோய் முகங்காட்டத் தொடங்கிய ஜனவரியிலேயே ஆரம்பமாகியது. அது இன்றளவும் தொடர்கிறது. இதற்குத் தலைமை தாங்குவது அமெரிக்காவும் அதன் அதிபரும். ஜனவரி 23ஆம் தேதி வூகான் நகரின் எல்லைக் கதவுகளைச் சீனா இழுத்து மூடியது. வைரஸ் தென் சீனக் கடலைத் தாண்டுகிறபோது வலுவிழந்துவிடும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கருதியிருக்க வேண்டும். யாருக்கோ வந்த நோய் என்பதாக இருந்தன அந்த நாடுகளின் எதிர்வினைகள். சீனாவை ‘ஆசியாவின் நோயாளி’ என்று விளித்தது வால் ஸ்ட்ரீட் ஜெர்னல். 19ஆம் நூற்றாண்டின் கடைசியில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, ஓப்பியம் யுத்தத்தில் தோல்வியுற்று ஆங்கிலேய வணிகர்களின் சமனற்ற ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பலவீனமான சீனாவைக் குறிக்க அன்று பயன்படுத்தப்பட்ட விளி அது. இன்று சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் பழைய ஏளனத்தைப் புதுப்பிக்கிறது வால் ஸ்ட்ரீட் ஜெர்னல். சீனாவை அங்கீகரிப்பதில் மேலைநாடுகளுக்குள்ள மனத்தடையின் வெளிப்பாடாக இதைப் பார்க்கலாம்.
தென் சீனக் கடலைக் கடந்து நோயின் கரங்கள் நாடுகள் பலவற்றைத் தீண்டிய பிறகுங்கூட டிரம்ப் இதைச் ‘சீன வைரஸ்’ என்றுதான் அழைத்தார். இந்த வைரஸ் சீனாவில்தான் உற்பத்தியாகியது, அப்படித்தான் அழைப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். இப்படி அவர் சொன்னபோது 10,000 அமெரிக்கர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சுமார் 250 பேர் மரணமடைந்திருந்தார்கள். இதற்கெல்லாம் சீனாதான் காரணம் என்று பழிசுமத்துகிற போக்கே அவரது பேச்சில் வெளிப்பட்டது.
நோய்த்தொற்றுக்கு எதிராகச் சர்வதேச அளவில் ஒருமித்த நடைமுறை கைக்கொள்ளப்படவில்லை. வைரஸ் தொற்று அறியப்பட்டவுடன் சீனாவில் உள்ள மாணவர்களைத் தாய்நாட்டிற்குக் கொணர்ந்தது இந்தியா. அவர்களைச் சீனாவின் பாதுகாப்பிலேயே விட்டது பாகிஸ்தான். சீனாவோடு உரச வேண்டாம் என்பது பாகிஸ்தானின் கருத்தாக இருந்திருக்கலாம். ஒவ்வொரு நாடும் எப்படி எதிர்வினையாற்றின என்பது அந்தந்த நாட்டின் செல்வம், செல்வாக்கு, சீனாவுடனான உறவு போன்றவற்றால்தான் தீர்மானிக்கப்பட்டன. ஒரு சர்வதேசப் பிரச்சனையில் உலகம் முழுக்க ஒரே ரீதியில் தம் திசைவழியைத் தீர்மானிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கருதவில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஓர் அலங்காரமான தலை இருக்கிறது. ஆனால் அதற்குக் கைகள் இல்லை. பற்கள் இல்லை. ஆகவே ஐ.நா. சொல்வதை யாரும் கேட்பதில்லை; ஐ.நா.வும் அதை எதிர்பார்ப்பதில்லை. உலக சுகாதார அமைப்பிற்கும் அதே கதிதான். நோயின் தீவிரம் தெரிந்ததும் உலகம் முழுமைக்குமான பயணக் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் உலக சுகாதார அமைப்பு வழங்கியிருக்க வேண்டும். அமைப்பு அப்படிச் செய்யவில்லை. அதற்குச் சிலநாடுகளின் வணிக நலன்கள் முக்கியமாக இருந்திருக்க வேண்டும். அதைப்போலவே இதைக் கொள்ளை நோய் என்று அறிவிப்பதற்கும் அமைப்பு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. மார்ச் 11 அன்று அப்படியான அறிவிப்பு வெளியானபோது வைரஸ் 110 நாடுகளைத் தீண்டியிருந்தது.
இந்தக் கொள்ளைநோயின் விளைவு மனித இனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் முடக்கிப்போட்டிருக்கிறது. நாடுகளுக்கு இடையிலான எல்லா உறவுகளையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. மனிதர்களுக்கு இடையிலான பரிவையும் புரிந்துணர்வையும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. மனித இருப்பின் பாதுகாப்பை இக்கட்டில் தள்ளியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறது. அவற்றை வென்றெடுக்கவும் செய்திருக்கிறது. கோவிட் - 19 கொள்ளை நோயிலிருந்தும் அது மீளும் என்பது உறுதி. ஆனால் இந்தப் பேரிடரின் பாதிப்பு தீராச் சாபமாக நம்மை வாட்டி வதைக்கும் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
இன்றைய உலகை நிர்ணயிப்பது பொருளாதாரமே. பொருளாதார வலிமையைப் பெருக்கிக்கொள்ளவே எல்லா நாடுகளும் முண்டி யடிக்கின்றன. பங்குச் சந்தைகளே மனிதர்களின் சுக துக்கங்களைத் தீர்மானிக்கின்றன. கொரானோவால் வீழ்ந்திருக்கும் பொருளாதாரம் மானுட இருப்பைத் தத்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
உலகெங்கும் பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்கிறது. 1987க்குப் பிறகு நேரும் பெரிய வீழ்ச்சி என்று பண்டிதர்கள் கவலைப்படுகிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. தங்கத்தின் விலை குறைகிறது. எண்ணெயின் விலை குறைகிறது (சர்வதேசச் சந்தையில்தான்). தனிமைப்படுத்தப்படும் சாதாரண மக்களுக்கு வேலை, தொழில் இல்லை. அவர்களது வாங்கும் சக்தி குறைகிறது. அவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. புதிய உற்பத்திகள் நடப்பதில்லை. பயணக் கட்டுப்பாடுகளால் முன்னைய உற்பத்திகளும் முடங்கிக் கிடக்கின்றன. விநியோகம் தடைப்பட்டு நிற்கிறது. மக்களின் தேவைக்கேற்ற பொருள் வசதியும் இல்லை. விநியோகம்- தேவை ஆகிய இரண்டு பற்சக்கரங்களும் இணைந்து சுழல முடியவில்லை. சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங் முதலான நாடுகள் வீழ்த்தப்படும் பொருளாதாரத்தை நிமிர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தச் சிக்கலால் அலைக்கழியும்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலை மேலும் அபாயத்தை எதிர்நோக்குகிறது. ஏற்கெனவே மீள முடியாத பொருளாதாரச் சுழலில் மூழ்கியிருக்கும் நாடு கொள்ளைநோய்க்குப் பிறகான நாட்களில் என்ன ஆகும் என்ற கவலை உருவாகிறது. இது பொருளாதாரக் கவலை. சக மனிதனும் தன்னைப் போன்றவன் என்று எண்ணாமல் வைரஸ் கிருமிகள் பரவ முகாந்திரமாக இருந்த மனிதர்களின் பொறுப்பின்மை எச்சரிக்கையாக முன் நிற்கிறது. இது குடிமையுணர்வு பற்றிய கவலை. இவை தவிர வேறு பெருங்கவலையும் ஏற்படுகிறது. இது நமது இறையாண்மையையும் அரசியல் அமைப்பையும் பற்றியது.
இது எவ்வளவு பெரிய பாதிப்பாக இருந்தாலும் இதன் பின்னரும் நாம் ஒரு நாடாக மக்களாக இனமாக எஞ்சியிருப்போம். ஆனால் ஒரு குடியரசாக, தற்போதைய அரசியலமைப்பில் இருப்போமோ என்ற கவலை ஏற்படுகிறது. இந்தியாவில் அவசர நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
கொள்ளைநோயை எதிர்கொள்ள அரசுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்ற வேண்டிய தேவை வரலாம். புதிய அதிகாரங்கள் கைகூடிய பின்னர் நிலைமை மேம்பட்டதும், கைவசமான அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்ட தலைவர்கள் அரிது. அதிகாரத்தின் இயல்பு அது. தன்னிலை இழக்காமல் அதிகாரத்தைப் பேணக்கூடியவர்கள் துறவிகளிலும் இல்லை!
விழிப்புணர்வுடன் இருப்பதும் கருத்துப்பரப்புரையில் ஈடுபடுவதும் காலத்தின் முக்கியம். அதற்கு வெற்று ஓசைகள் குறைந்து பொருள் பொதிந்த கருத்துகள் முன்னிலைப்பட வேண்டும். இது ஒப்பனை அரசியலுக்கான காலம் அல்ல. சமூக வலைத்தளங்களில் ஆதாரப்பூர்வமான கருத்துகளும் விவாதங் களும் பெருக வேண்டும். தமது எண்ணங்களிலும் கருத்துகளிலும் நம்பிக்கைகொண்டவர்கள் அதை அன்றாடம் சமூக வலைத் தளங்களில் நிறுவிக்கொண்டே இருக்கமாட்டார்கள். கருத்துகளை ஆதாரங்களுடன் செழுமையாக்கி முன்னிறுத்துவார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ‘ வளர்ந்த வல்லரசுக’ளை விட இந்தியா கொரோனாவை எதிர்கொண்டிருக்கும் விதம் மேம்பட்டதாகவே உள்ளது. அமெரிக்க அதிபரைப்போல அறிவியலுக்கு புறம்பான பொய்களையும் உளறல்களையும் இந்தியப் பிரதமர் அனுதினமும் பரப்பவில்லை. ‘நாம் நேசிக்கும் பலர் இறந்து விடுவார்கள்’ என்று பேசிவிட்டு மக்கள் கூடுவதைத் தடுக்காமல் ‘தந்திரோபாயமாக’ தொற்றை பரவவிட்ட இங்கிலாந்துப் பிரதமர்போல நடந்துகொள்ளவில்லை. பண்டைய மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று பிரதமர் இதுவரை விளம்பவில்லை. மாநில அரசுகளோடு இது தொடர்பாகச் சண்டை வளர்க்கவில்லை. அறிவியல் நிபுணர்களின் ஆலோசனையை மதித்து நடப்பதாகவே தெரிகிறது; இவை சாதகமாகத் தெரிபவை.
ஆனால் இன்று ஆட்சியிலிருக்கும் இந்துத்துவர்களும் அவர்களது பெருவாரியான ஆதரவாளர்களும் இந்த அரசியல் அமைப்பை மதிப்பவர்கள் அல்லர். அதைச் சகித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லது அழிக்கும் துடிப்பில் இருப்பவர்கள். அதற்கேற்ற கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கொள்ளை நோய்க்குப் பிந்தைய காலம் அமைந்துவிடக்கூடும். ஏற்கெனவே மக்கள் இணைந்து போராடமுடியாத காலகட்டம் உருவாகியுள்ளது. இதைச் சுரண்டாமல் இருக்கும் பெருந்தன்மை கூடிவந்தால் மகிழ்ச்சி.
இருப்பினும் அவநம்பிக்கையே இறுதியில் முன்னால் நிற்கிறது.