அம்பேத்கர் கடிதங்கள்
அம்பேத்கர் கடிதங்கள்
தமிழில் : சிவசங்கர் எஸ்.ஜே.
முன்னுரையிலிருந்து....
அவரது நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூக கட்டமைப்பின் மீதான விருப்பை, தைரியமான குற்றச்சாட்டுகளை, புலமையை, விவேகத்தை, மனிதநேய சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்பு செய்யும் அவரது நோக்கத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தத் தொகுதி எங்கும் கடிதங்கள் விரவிக் கிடக்கின்றன.
1. நியூயார்கிலிருந்து அம்பேத்கர் ஜமேதாருக்கு
4, ஆகஸ்ட் 1913
கொலம்பியா பல்கலைக்கழகம்
நியூயார்க்
அன்புக்குரிய ஜமேதார்1
என்மீதான உங்கள் வழமையான அன்பிற்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை வழியனுப்ப வந்தபோது உங்கள் கண்களில் வழிந்த கண்ணீரில் தெரிந்த தகப்பனின் வாஞ்சையை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் என்னை வழிநடத்தியதுபோலவே என் மற்ற சகோதரர்களையும் கருணையோடு அணுகுவீர்கள் என நம்புகிறேன். உங்களின் கனிவான அணுகுமுறை மட்டுமல்ல உங்கள் சீர்திருத்தச் சிந்தனைமுறையே உங்களைப் போன்றோர் இன்னும் நிறையபேர் முன்வர வேண்டும் என எண்ணத் தூண்டியிருக்கிறது. வீழ்ந்துகிடக்கும் மக்களின் நலன் விரும்பும் நானும் என்னைப் போன்றோரும் மிகவும் துயருறுவது சொந்த மக்கள் மீள்வதுகுறித்து அக்கறை இல்லாதிருப்பதைக் கண்டே. பெரும்பான்மையாக சுபேதார்களும் ஜமேதார்களும் இந்தத் துரதிர்ஷ்டவசமான சமூகத்தின் உறுப்பினர்களாக இருந்தபோதும் அவர்கள் செய்த தவறுகளைச் சரிப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என அறிவேன்.
“மனிதர்களின் செயல்களில் ஏற்ற இறக்கம் உண்டு. அது ஆற்றின் போக்கில் அடித்துச் சென்றால் அதிர்ஷ்டத்தைக்கூட அடையலாம். செயல்படாமலிருந்தாலோ பயணத்தைத் தவிர்த்தாலோ அது துயரத்திலும் ஆழமற்றவைகளிலும் கட்டிப்போட்டுவிடும்” என்று ஷேக்ஸ்பியர் சொல்வது இப்போது ஜமேதார், சுபேதார் இளைஞர்களுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது. இருந்தும் பெற்றோர்களையே நான் இதற்குப் பொறுப்பாளி எனக் குற்றம் சாட்டுவேன். பெற்றோர்கள் பிறப்பையே (ஜென்மம்) தரமுடியும். வினைகளை (கர்மம்) அல்ல என்கிற கருத்தை நாம் விட்டொழித்தே ஆக வேண்டும். அவர்களால் தங்கள் குழந்தைகளின் விதியை மாற்ற முடியும். நம்மால் இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற முடிந்தால் நல்ல எதிர்காலத்தை நாம் காண முடியும். ஆண்களைக் கல்வியின் பால் திருப்புவதன் மூலமும் படிப்படியாகப் பெண்கல்வியை ஊக்குவிப்பதன் மூலமும்; நம் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நம்மால் விரைவுப்படுத்த முடியும். இதை உங்கள் மகளிடம்2 நீங்கள் உணரலாம்.
எனவே உங்கள் நோக்கம் நெருங்கியவர்களுக்கும், தொடர்பில் இருப்பவர்ககளுக்கும் கற்பிப்பதாக, கல்வியைப் பரப்புவதாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
தனிப்பட்ட விபரங்களை இக்கடிதத்தில் தேடிச் சலித்துப் பொறுமை இழந்திருப்பீர்கள், அவற்றுக்குள் நுழைகிறேன். ஜூலை 21 திங்கள்கிழமை மதியம் பன்னிரண்டு மணியளவில் எஸ்.எஸ். அன்கோனா கப்பலில் பத்திரமாக நியூயார்க்கை வந்தடைந்தேன்.பல்வேறு நபர்களிடமும் விசாரித்தறிந்து பல்கலையில் அனுமதியைப் பெற்றுவிட்டேன்; இருந்தும் கோடைகால வகுப்புகள் முன்னமே தொடங்கிவிட்டன. தாமதித்தாலும் தொடக்கப் பயிற்சியாக இருக்கட்டுமெனச் சேர்ந்திருக்கிறேன். இங்குள்ள உணவு பிடிக்கவில்லை, இனியும் பிடிக்குமென்று தோன்றவில்லை. மோசமான சமையல், பெரும்பாலான உணவுகளில் மாட்டுக்கறி கலந்திருக்கிறது. இந்த உணவுகளினால் உடல்நலத்தைப் பேண முடியவில்லையெனினும் நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அநேகமாக செப்டெம்பரில் இலையுதிர்காலத்தையொட்டி என் முறையான வேலைகள் தொடங்கும். முதல் ஒரு வாரம் பல்கலைக்கழக விடுதியான ஹார்ட்லி ஹாலில் தங்கியிருந்தேன். தற்போது காஸ்மொபோலிடன் க்ளப்பில் எண் -564 மேற்கு 114வது தெருவில் இந்திய மாணவர்கள் சிலர் தங்கியிருக்கும் இடத்தில் இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக சத்தாரா உயர்நிலைப்பள்ளியில் என்னோடு உடன்பயின்ற நண்பர் ஒருவர் இங்கிருக்கிறார். டைம் அலுவலகத்தின் பணியாளர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் சொல்லுங்கள்.
தங்களின் நேசமுள்ள
பீமாராவ் அம்பேத்கர்
பின்குறிப்பு:
மேற்காணும் முகவரியை நம் அலுவலகக் குமஸ்தா நண்பர்களுக்கு அளியுங்கள், அவர்கள் ஒருவேளை எனக்கு எழுத விரும்பலாம்.
1) டாக்டர் அம்பேத்கரின் தந்தை சுபேதார் ராம்ஜி சக்பால் அவர்களின் நண்பர்களில் ஒருவரான ஷிவ்னாக் கௌனாக் ஜமேதார் அவர்கள்.
2) மகர் சமுதாயத்தில் முதன்முதலில் நான்காம் வகுப்பு பயின்ற ஜமேதாரின் மகள். அவரது பெயர் கங்கு.
2. லண்டனிலிருந்து அம்பேத்கர் பதேனாவிற்கு ஆகஸ்ட்/செப்டம்பர் 1920
ஹென்றி எஸ்.கிங் & கோ
9, பால் ஹால்
லண்டன்
தேதி 1
பிரியத்துக்குரிய ப2
27-08-20 தேதியிட்ட உனது கடிதம் கிடைத்தது. பத்திரிகைக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தியமைக்கு மிகுந்த நன்றி. புத்தகங்கள் தொடர்பாக மேலும் தொந்தரவளித்தமைக்கு வருந்துகிறேன். புத்தகங்களைப் பெற பவார்3 எனக்கு எழுதியதாகச் சொல்வதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் புத்தகங்கள் வருவது குறித்து நிச்சயத்தன்மை அவருக்கில்லை. நான் உன்மேல் சுமத்தியிருக்கும் கவலைகள் நெருங்கிய நண்பனாயிருந்தாலும் பாவிக்க முடியாமை குறித்துத் துயருறுகிறேன்.
நான் கேட்பதெல்லாம் அதிகம் சுமைகளைத் தாங்கி என்னிடமிருந்து அந்நியப்பட்டு போய்விடாதே. நீ எனது அன்புக்குரிய நேசத்துக்குரிய ஒரே நண்பன்.
என்னுடைய ஆய்வுப்பணிகள் சீராகப் போய்க்கொண்டிருக்கின்றன.எப்படியும் ஜனவரிக்குள் முடித்துவிடுவேன். பகுதிகள் I&IIஉம் கிட்டத்தட்டத் தயாராகிவிட்டன. திரு. ஹாஜி அவர்கள் கேட்டுகொண்டதிற்கிணங்க திரு. டாக்டர் ஃபிக்ரி சட்டக்கல்விப் புத்தகங்களை என்னிடம் கையளிக்காததால் என்னால் வழக்கறிஞர் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வரும் மே மாதத்திற்குள் சட்டக்கல்வித் தேர்வை முடித்துவிட்டு அடுத்த வருடம் இலகுவாக ஜெர்மனி செல்லலாம் என நினைக்கிறேன். எனது மூக் நாயக் பத்திரிகையில் பெட்டக விளம்பரம் வெளிவருகையில் அது தொடர்பான தொகையை திரு. கோத்ரஜ்ஜிடம் பேசிச் செலுத்திவிடச் சொல். நீ அனுப்பியிருந்த பவாரின் கடிதங்கள்வழி நீ பங்குச்சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்திருப்பதை அறிய முடிந்தது. நண்பா ஒரேயொரு அறிவுரை சொல்ல என்னை அனுமதிப்பாயா? குதிரைப் பந்தயமும் பங்குச் சந்தையும் ஒன்றுதான். தயவுசெய்து இதிலிருந்து சற்று விலகியிரு.
கெர்சாஸ் உன்னைவிட்டுத் தனியே சென்றுவிட்டதை அறிந்து வருத்தம் அடைந்தேன். சமூக நலனைவிட இந்த உலகத்துக்குச் சுயநலம்தான் முக்கியம்.
உன் உடல்நலத்தைப் பேணிக்கொள். அது செல்வத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். உனக்கும் மிஸ்ரி, வாடியா, குர்செட்ஜி4 எல்லாருக்கும் என் அன்புகூர்ந்த நல்வாழ்த்துகள்.
பிரியமுடன்
பி.ஆர். அம்பேத்கர்
1) தேதி குறிப்பிடப்படவில்லை
2) ப என்பது திரு. நவால். எம். பதேனாவைக் குறிக்கும்.
3) கோலாப்பூரைச் சேர்ந்த தத்தோபா சாந்தாராம் பவார்.
4) மிஸ்ரி, வாடியா, குர்செட்ஜி இவர்கள் நவால். எம். பதேனாவின் உறவினர்களும் நண்பர்களும் ஆவர், அம்பேத்கருக்கும் நண்பர்கள்.
3. பம்பாயிலிருந்து அம்பேத்கர் தத்தோபாவிற்கு 19, ஆகஸ்ட் 1926
19-8-26
தாமோதர் ஹால்
பரேல்
பாம்பே -12
அன்புக்குரிய தத்தோபா1
உங்கள் கடிதம் கிடைத்தது. ஆச்சர்யம். திரு. ஷிவ்தர்க்கார்2 என் மகனின்3 மரணம் குறித்து உங்களுக்குத் தெரிவித்து நாட்களாகிறது. உங்களிடமிருந்து பதில் வராததால் என்மேலிருக்கும் அக்கறை குறைந்துவிட்டது என எண்ணினேன். வருத்தத்திலும் துயரிலுமிருக்கும் எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் சில வரிகள் எழுதியது, ஆறுதலாகவும் என்மேல் உங்கள் அக்கறை குறையாமலிருப்பதையும் காட்டுகிறது.
என் மகன் இறப்பிலிருந்து நானும் மனைவியும் மீண்டுவிட்டோம் எனப் பாசாங்கு செய்துவிட முடியாது. அது ஒருபோதும் மீள முடியா இழப்பு. அற்புதமான அழகான நான்கு குழந்தைகளை நாங்கள் மரணத்துக்குக் கையளித்துவிட்டோம். மூன்று மகன்களும் ஒரு மகளும். இந்த நினைப்பே எங்களை நசுக்குகிறது. உயிரோடு இருந்திருந்தால் வருங்காலம் அவர்களுக்கானதாய் அமைந்திருக்கும். மேகமூட்டங்கள் நகர்ந்துசெல்வதுபோலவே எங்கள் நாட்கள் நகர்கின்றன. எங்கள் வாரிசுகளின் இழப்பில் வாழ்வின் சுவையை இழந்துவிட்டோம். விவிலியம் சொல்வது போல் ‘நீ இம்மண்ணின் சுவையாய் இருக்கிறாய்: நீ இம்மண்ணைவிட்டு விலகிவிட்டால் மண் எப்படி சுவையுறும்.’ வெறுமையான, சூனியமான வாழ்வின் இத்தருணத்தில் இந்த உண்மையை உணர்கிறேன். என் கடைசி மகன் அற்புதமான குழந்தை. அவனுடைய மரிப்பு என் வாழ்வைப் புதர் பீடித்த தோட்டமாக்கிவிட்டது. என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இத்துடன் முடிக்கிறேன்
நொறுங்கிய மனத்தோடு
துயருறும்
பி.ஆர்.அம்பேத்கர்
1) 1919 வாக்கில், கோலாப்பூர் மகாராஜாவுடன் அம்பேத்கர் நெருங்கிப் பழகக் காரணமாயிருந்தவர் தத்தோபா சாந்தாராம் பவார். சாம்பஹார் சமூகத்தை சேர்ந்த இவர் பிற்பாடு அரசியல், மதமாற்ற விவகாரங்களில் அம்பேத்கரோடு முரண்பட்டுக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2) சீதாராம் நாமதேவ் ஷிவ்தர்க்கார், சாமர் சமூகத்தைச் சேர்ந்த இவர் அம்பேத்கரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகச் செயல்பட்டவர். அம்பேத்கர் வெளிநாட்டில் இருக்கையில் அவர் நடத்திய எல்லா பத்திரிகைகளையும் நிர்வகித்துவந்தார். பகிஷ்கிரித் ஹிதகாரிணி சபையின் பொதுச்செயலாளராக இருந்தார். 1935க்குப் பிறகு அம்பேத்கரிடமிருந்து மதமாற்றப் பிரச்சினையில் விலகிக் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.
3) ஜூலை 1926இல் மரித்த அம்பேத்கரது மகன் பெயர் ராஜரத்னா.
4. புதுதில்லியிலிருந்து அம்பேத்கர் பாவுராவிற்கு 31, டிசம்பர் 1943
22, பிரிதிவிராஜ் சாலை, புது தில்லி
31 டிசம்பர் 1944
அன்பான பாவுராவ்,
தங்கள் கடிதமும், மாசேயிடம் நீங்கள் கையளித்திருந்த சமதா சைனிக் தளத்தின்1 அமைப்புச் சட்ட நகலையும் பெற்றுக்கொண்டேன். நீங்கள் என்னிடம் நம் நண்பர்கள் சிலர் உங்கள்மீது தெரிவித்திருந்த புகார்களைக் குறித்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறேன் என்பதற்கு முன் அவற்றைக் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாததல்ல; தங்களைக் குறித்து மட்டுமல்ல எல்லாரையும் குறித்துப் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை நான் சட்டை செய்வதில்லை. அதே நேரம் பலரும் தங்கள் சுமையை இறக்கும் முகமாக என்னிடம் வந்து மனக்குமுறல்களைக் கொட்டிச் செல்வர்.பொதுவாழ்க்கையில் மிக நீண்ட அனுபவம் கொண்டிருப்பதால் எப்போதும் மக்கள் இதுபோன்ற முணுமுணுப்புகளைப் புகார்களை நியாயமாகவும் சில நேரம் அநியாயமாகவும் சொல்வார்கள் என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். ஆகவே யார்மீது புகார் தெரிவிக்கிறார்களோ அவர்களோடு இதைப் பகிர்ந்துகொள்வதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன். போலவே அவர்கள் குறித்து எந்த அபிப்பிராயமும் நான் வைத்துக்கொள்வதில்லை. புகார்களைப் பெற்றுக்கொள்வதோடு சரி, அவற்றை மறந்துவிடுவேன்; இல்லையென்றால் அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் நீங்கள் விடாப்பிடியாக உங்கள்மீது சொல்லப்பட்ட புகார்களை அறிந்துகொள்ளும் ஆவலில் இருப்பதால், நீங்களும் உங்கள்மீது புகார்கள் இருப்பதை நிச்சயமாக நம்புவதால் உங்கள் பக்க நியாயங்களை விளக்க ஏதுவாக அவற்றின் தன்மையை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
(1) உங்கள் முன்னிலையில் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சில பேச்சாளர்கள் தங்கள் பேச்சினூடே நான் ஒரு சிறந்த தலைவராக இருப்பதற்கு நாசிக் மாவட்ட மக்கள்தான் காரணமென்று பேசியிருக்கிறார்கள். அங்கிருந்த நமது கட்சியினர் நீங்கள் இந்த அநீதியான இரக்கமில்லாத குற்றச்சாட்டுகளைக் கடந்துபோகவிடாமல் உடனடியாக எழுந்து தகுந்த பதில் அளித்திருக்க வேண்டுமென எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. பிறகு வராலே எதிர்த்திருக்கிறார். இது அவருக்குப் பெரும் அவப்பெயரைத் தேடித் தந்திருக்கிறது.
(2) சாந்தாபாய் டானி மீது லாலிங்கர் ஈர்ப்புகொண்டு அவளைத் திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார். சவாந்த்தை2 இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். ஆனால் இதுகுறித்து சாவந்த் மற்றவர்களிடம் பேசிவிட்டு உங்களிடம் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே நீங்கள் அதீத வெறுப்பும் கோபமும் கொண்டு மறுவினையாற்றி இருக்கிறீர்களாம். மேலும் லாலிங்கர் சாந்தாபாயைத் திருமணம் செய்யத் தகுதி குறைந்த நபரெனவும் அப்படி செய்தால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல அது நாசிக் மாவட்டத்திற்கே கௌரவக் குறைச்சல் என்றும் சொன்னீர்களாம். சவந்தும் லாலிங்கரும் இதை அவமதிப்பாகக் கருதுகின்றனர்.
(3) போலே3 குறித்து நீங்கள் அவதூறான பிரச்சாரம் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் இருவருக்குமிடையில் அந்நியத்தன்மையும் விலகலும் வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு இதை நம்புவது கடினமாக உள்ளது. உங்கள் இருவருக்கிடையே இப்படியான திடீர் பிரிவினைக்கு என்ன காரியம் நடந்ததென்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் நம் கட்சியிலுள்ள சிலர் இது உண்மைதான் என்கின்றனர். அவர்கள் உங்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டிருப்பதைக் குறித்து ஒரு சித்திரத்தைத் தருகின்றனர். பூனாவில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் போலே இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நல்லமுறையில் செயலாற்றியமைக்காகக் கட்சி சார்பில் ஒரு பணமுடிப்பை போலேவுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்டிருக்கிறது. அப்போது யாரோ ஒருவர், “அப்படியான திட்டத்திற்கு நான் பங்களிக்கமாட்டேன். அது மீண்டும் ஒரு சினிமா கொட்டகை கட்டுவதற்கே போய்ச் சேரும்,” என்றிருக்கிறார். நீங்கள் அங்கு இருந்தபோதும் இப்படியான அறமற்ற குற்றச்சாட்டை வைத்த நபரைக் கண்டிக்கவில்லை, எதுவும் பேசவுமில்லை. உண்மையில் உங்களுக்கு இந்தப் பணமுடிப்பு விவகாரத்தில் எதிர்க்கருத்து இருப்பதாக நீங்கள் அறிவித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
(4) மட்கே புவா தன்னுடைய அதிகாரத்தைக் கீழிறக்க நீங்கள் பல விரோதமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் புகார் செய்திருக்கிறார். பலவற்றோடு சமீபத்தில் சமதா சைனிக் தள்ளின் தீர்மானம் மறுதலிக்கப்பட்டதைச் சொல்கிறார். தீர்மானத்தின் பின்னணியில் நீங்கள் இருந்ததாகவும், இது பொதுமக்களிடம் அவரைச் சிறுமைப்படுத்திவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.
இந்தக் கடிதத்தின் துவக்கத்திலேயே நான் குறிப்பிட்டதைப் போல் மக்கள் உங்களைப்பற்றி என்ன புகார் தெரிவித்தார்களோ அதை ஒரு அறிக்கையாளன் சொல்வதுபோல அப்படியே சொல்கிறேன்.அப்படியே செய்தும்விட்டேன். ஆனாலும் நான் என்ன உணர்கிறேன் என்பதைச் சொல்லாமல் இதை முடித்துவிட முடியாது. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் குறித்து எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் புகார் தெரிவித்தவர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள்.
நாம் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் இந்த இயக்கம் நீடிக்க வேண்டும், காலம் பெரிய அளவில் பிளவுகள் ஏற்படுத்தும் முன் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட வேண்டும், ஒற்றுமை தளிர்க்க செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். என்னை மிகவும் அதிர்ச்சியூட்டியது என்னவென்றால் நம் சக பணியாளர்களே உங்கள் நேர்மையையும் நோக்கங்களையும் பிரபலமாவதற்கான நடிப்பு எனச் சந்தேகப்படுவதைத்தான். அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பின்னால் நண்பர்களிடம் தெரிவிக்க விரும்பாத பயன்களை மறைத்துவைத்திருக்கிறீர்கள் என அச்சப்படுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் தரப்பைக் கேட்க நான் தயாராகிவிட்டேன். விளக்கங்கள் எப்போதும் சண்டை போடுவதற்கானதல்ல என்பதையும் சுட்டுகிறேன். ஒரு மனிதன் விளக்கம் சொல்ல முயல்கிறான் என்றால் அவன் தன் குணத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்றே அர்த்தம். ஆகவே விளக்கங்கள்மீது எனக்கு நம்பிக்கையில்லை. எனது கவலை, நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்பதும் நமது ஒற்றுமை அழியாமல் மறுகட்டுமானம் செய்வதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும்தான். பொதுவாழ்வில் பதவியோ அதிகாரமோ பெறும் நோக்கத்திற்காக நாம் வேலை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டாலே அது நிகழும். நாம் மக்களுக்குச் சேவை செய்யத் தீர்மானித்துவிட்டுக் காலத்துக்கும் சூழலுக்கும் நம்மை ஒப்படைத்துவிட்டாலே அது நமக்கான கனிகளைத் தரும் திருப்திகரமாக. இல்லையென்றால் நாம் நமது ஒற்றுமையை மறுபடி கொண்டுவர வேண்டும். இதுகுறித்து விரிவாகச் சொல்ல விரும்பவில்லை, எனினும் நான் எதிர்பார்க்கும் விளைவை இது ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
நான் அரசியல்களத்தில் நீண்டகாலம் இருப்பதாக இல்லை. இதிலிருந்து வெளியேறி எனக்குகந்த வேறு ஏதாவது ஒன்றில் ஈடுபடப் போகிறேன். என்னுடைய இல்லாமையின்போது என்ன நடக்கும் என்பதைச் சொல்ல இயலாது. ஆனால் உங்களுக்கு எனது முடிவான எச்சரிக்கையைச் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த மாவட்டங்கள் மீதான பற்றுதலால் பெருமைகொண்டு இருக்கிறீர்கள். சமூகக் காரணங்களைவிட ஊர் பெருமை முன்னுக்கு நிற்கிறது; இது உங்களை அழித்துவிடும். அதில் சந்தேகமேயில்லை.
ஜனவரி 10-ல் பாம்பே வருகிறேன்; ஒன்று அல்லது இரண்டு நாள்கள் இருப்பேன். உங்களைச் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.
அன்பான,
பி.ஆர். அம்பேத்கர்
1) டாக்டர் அம்பேத்கரால் துவங்கப்பட்ட சமதா சைனிக் தள் (சமூக சமத்துவப் படை) 1926இல் பாம்பேயில் செயல்படத்தொடங்கியது.
2) எம்.ஜி. சாவந்த்
3) ஆர்.ஆர். போலே
காலச்சுவடு வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘அம்பேத்கர் கடிதங்கள்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.