கொள்ளைநோய் பிளேகும் கொரோனா வைரஸும்
கட்டுரை
எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி
கொள்ளை நோய் பிளேகும் கொரோனா வைரஸும்
உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மேலை நாடுகளில், குறிப்பாக பிரான்ஸில் ஏற்கெனவே பிரபலமான பிரெஞ்சு நாவலொன்று மீண்டும் மறு வாசிப்புக்குள்ளாக்கப் படுகிறது; அறிவுஜீவிகளிடையே அதிகம் பேசப்படுகிறது ; அதன் பிரதிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. நாவலின் தலைப்பு ‘லா பேஸ்த்’ (La Peste). நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யு எழுதிய இந்நாவல் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘The Plague’ எனும் தலைப்பில் இரு வேறு மொழிபெயர்ப்பாளர் களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றது.
1947 ஆம் ஆண்டு, இரண்டாவது உலகப்போர் முற்றுப்பெற்று இரண்டே ஆண்டுகள் ஆகியிருந்தன.
போரை நிரந்தரமாக வெற்றி கொண்டுவிட்டோம் என்று மிதமிஞ்சிய மமதையிலும் மகிழ்ச்சியிலும் இருந்த மக்களுக்கு இந்த நாவல் உருவகமாக ஓர் எச்சரிக்கையாக அமைந்தது என்பர்.
ஆயினும் அன்று பிளேக் எழுப்பிய கேள்விகள், இன்று கொரோனா எழுப்பும் கேள்விகளை ஒத்திருக்கின்றன. நாவலில் பிளேக் நோய்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், இன்று கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளும்கூட ஒத்திருக்கின்றன. அதுதான் இந்நாவலின்மீது பெருகிவரும் ஆர்வத்திற்குக் காரணம்.
நாவலின் கதை சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில், அல்ஜீரியாவின் ஒரான் (Oran) நகரில் நடப்பதாகச் சித்திரிக்கப்படுகிறது. அங்கு ஒருநாள், நகரின் பல இடங்களில் ‘பிளேக்’ எனும் கொள்ளை நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வெகுவிரைவிலேயே நோய் பரவி மக்களைப் பாதிக்கின்றது. நகரத்தார் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். பாதிப்புக்குள்ளானவர்கள் கடுமையான வயிற்றுவலிக்குள்ளாகின்றனர். ஒரு திருப்புளியைச் செலுத்திக் குடல்களைக் குடைந்தால் உண்டாவது போன்ற வலியால் துடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துமடிகின்றனர். ஓராண்டுவரை நீடிக்கும் இந்த அவல நிலையை மற்றவர்கள் எதிர்கொள்வதைக் காட்சிப்படுத்துவதுதான் இந்த நாவலின் கதை.
கதையின் முக்கிய கதாபாத்திரம் ரியோ (Rieux), ஒரு மருத்துவர்; ஊரின் தலைமை மருத்துவரும்கூட. நோயை எதிர்த்துப் போராடுவதையே தன் கடமையாக ஏற்றுக்கொள்கிறார். இரவு பகலாக உழைக்கிறார். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஊரின் எல்லைகள் மூடப்படுகின்றன. யாரும் அவர் அனுமதியின்றி ஊருக்குள் நுழைய முடியாது; வெளியிலும் போகமுடியாது. தரு (Tarrou) என்பவரின் துணையோடு ஊரில் எங்கெங்கு நோயாளிகள் அழைக்கின்றனரோ அங்கெல்லாம் நேரம் காலம் பாராமல் சென்று பணியாற்றுகிறார். நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளைத் தேடியலைகிறார்.
அடுத்ததாக, அவ்வூர் தேவாலயப் பாதிரியார் பனெலு (Paneloux). நோயினால் அச்சமடைந்த மக்கள் தேவாலயத்தில் சென்று வழிபடும்போது அவர்களுக்காகப் பாதிரியார் உரையாற்றுகிறார். அச்சமயம் அவர்களைக் கடுமையாகவே சாடுகிறார். அவர் பார்வையில், கொள்ளைநோயின் தாக்கத்திற்கு முக்கியக் காரணம் அவர்கள் தேவாலயத்தையும் வழிபாட்டையும் அலட்சியம் செய்ததுதான். அவர்கள் தேவாலயத்திற்கு வந்தாலும் இறைவனிடம் மனமுருகி வேண்டுவதில்லை என்றும் வருந்துகிறார். ஆகவே இறைவனின் கோபம்தான் கொள்ளைநோயாக வெளிப்பட்டு, மக்களைத் தண்டிக்கின்றது என்பது அவருடைய உறுதியான கருத்து. “என் அன்புச் சகோதரர்களே, நீங்கள் துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், இந்த அனுபவம் உங்களுக்குத் தேவையான ஒன்றுதான்,” என்கிறார். அப்படி சொல்லும் அவர், தன்னுடைய கருத்தை ஒளிவுமறைவின்றிச் சொல்வதைத் தன் கடமையாகவே நினைக்கிறார். அவரிடம் எந்த ஓர் உள்நோக்கமும் கிடையாது. அவருடைய நாணயத்தையும் நம்பகத்தன்மையையும் யாரும் சந்தேகிக்கவில்லை. அவருடைய விளக்கத்தைத்தான் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
கடவுள் தண்டிக்கிறார் என்ற கருத்தில் மருத்துவர் ரியோவிற்கு உடன்பாடில்லை. அவ்வூரில் நடந்த ஒரு சம்பவம் அதனை நிரூபிக்கின்றது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அவ்வூர் நீதிபதியின் குழந்தையும் அடங்கும். வலி பொறுக்கமுடியாமல் அலறிக்கொண்டிருக்கும் அக்குழந்தை அருகில் ரியோவும் பாதிரியாரும் செய்வதறியாது திகைத்துநிற்கின்றனர். அப்போது ரியோ, பாதிரியாரிடம் கேட்கிறார் : “வழிபாட்டில் அலட்சியம் காட்டிய தற்காகத் தண்டிக்க வேண்டுமானால், இறைவன் பெரியவர்களைத்தான் தண்டிக்க வேண்டும். ஒன்றும் அறியாத இந்தக் குழந்தையை ஏன் தண்டிக்க வேண்டும்?”
பாதிரியாரால் பதில்சொல்ல முடிய வில்லை.
ஆனால் அன்றே அவர் சிந்தனையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் ஆலயத்தில் அவர் ஆற்றும் இரண்டாவது உரையில் காணப்படுகிறது. இறைவனின் வழிகள் நம் புரிதலுக்கு உட்பட்டதல்ல. நம் பகுத்தறிவுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்குட்பட்டதைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவ்வெல்லையைத் தாண்டி, பகுத்தறிவால் கடக்கமுடியாத ஒரு பாதாளம் இருக்கின்றது. அதனைக் கடக்க வேண்டுமானால், நம்பிக்கையைத்தான் துணைக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அதனைக் கடந்தால்தான் இறைவனை அடையமுடியும். ஆகவே இறை நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்பதுதான் அவர் அளிக்கும் விளக்கம். அவரும் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. தன் கொள்கையில் உறுதியாக இருந்த அவரை நோய் தாக்கியபோது, எவ்வித மருத்துவ உதவியையும் நாடாமல் மரணத்தை நேரடியாகச் சந்திக்கிறார்.
இந்நாவலில் முக்கியத்துவம் பெறும் இன்னொரு நபர் பத்திரிகை நிருபரான ராம்பேர் (Rambert) அவன் அந்நகரில் பிறந்தவனில்லை. பாரிஸில் தன் காதலியை விட்டுவிட்டு ஒரான் நகருக்குச் செய்தி சேகரிக்க வந்தவன். தன் வேலை முடிந்ததும் பாரிஸுக்குக் கிளம்புகிறான். ஆனால் ஊரின் எல்லைகள் மூடப்பட்டதால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. தலைமை மருத்துவர் ரியோவிடம் சென்று மன்றாடுகிறான். அவர் இணங்கவில்லை. அவருடைய மனைவியும்கூட நகருக்கு வெளியில் ஏதோ ஒரு சிற்றூரில் உடல் நலம் குன்றி, மரணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். தான் போட்ட சட்டத்தைத் தானே மீறக்கூடாது என்ற உயர் பண்பு கொண்ட மருத்துவர், அவரைக்கூடப் போய்ப் பார்க்கவில்லை.
ராம்பேர் வேறு வழியில்லாமல் சில இடைத்தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஊரிலிருந்து தப்பிக்க முயற்சி மேற்கொள்கிறான். முயற்சி வெற்றியடையும் தருணத்தில், அவனிடத்தில் மனமாற்றம் ஏற்படுகிறது. “தன்னைச் சுற்றி அனைவரும் துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும்போது, தான் மட்டும் சுகபோகமாக வாழ நினைப்பது வெட்கித் தலைகுனியவைக்கும் ஒரு விஷயம்,” என்ற எண்ணம் ஏற்படவே, ஒரானில் தங்கி மக்கள் சேவையில் ஈடுபட முடிவுசெய்கிறான்.
கொத்தார் (Cottard) மேற்குறிப்பிட்டவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். அவர்களெல்லாம் நோயை எதிர்த்துப் போராடும்போது, கொத்தார் மட்டும் நோயின் தாக்கம் நீடிக்கவேண்டுமென்று விரும்புகிறான், வேண்டிக்கொள்கிறான். அவன் கள்ளச்சந்தையில் பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பவன். காவல்துறையால் தேடப்பட்டு வருபவன். நகரில் ஏற்பட்ட நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவன் மீதான காவல்துறையின் கண்காணிப்பு சற்றுத் தளர்ந்திருக்கிறது. ஆகவே கொள்ளை நோய் அவனுக்குச் சாதகமாகத் தோன்றியது. அவனைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் நோயை எதிர்த்துப் போராடியதால், நோய் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. தெருக்களில் மக்கள் மீண்டும் நடமாடத் தொடங்குகின்றனர். நோயை வெற்றிகொண்டுவிட்டதைக் குறிக்கும் வகையில் விழா எடுக்கின்றனர்; விருந்து வைக்கின்றனர்; பட்டாசுகள் வெடிக்கின்றனர்.
ரியோ அவற்றில் கலந்துகொள்ள மறுக்கின்றார். இங்குதான் நாவலின் முக்கியச் செய்தியொன்று வெளிப்படுகிறது. ரியோவின் பார்வையில், நோயை வெற்றிகொண்டுவிட்டோம் என்று இறுமாப்புகொள்வது தவறு. ஏனெனில், அடைந்த வெற்றி நிரந்தரமானதன்று.
“பிளேக் நோய்க்கிருமி அழிவதோ மறைவதோ கிடையாது. இருபது முப்பது ஆண்டுகள் தொடர்ந்து அது உறக்கநிலையில் உங்கள் வீட்டு மேசை நாற்கலிகளில், அல்லது உங்கள் ஆடை அணிகலன்களில் தொற்றிக்கொண்டிருக்கலாம். படுக்கை அறையில், தட்டுமுட்டுச் சாமான்களில், கைக்குட்டையில், பழைய பேப்பர்களில் பதுங்கிக்கொண்டிருக்கக் கூடும். பல ஆண்டுகள் கழித்து, அது மீண்டும் விழித்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கேட்கலாம்.”
ஆகவே, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, தீமையை எதிர்ப்பதில் விழிப்புடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர் மக்களுக்கு விடுக்கும் செய்தி.
அன்று அவர் விடுத்த செய்தி, பிளேக் நோய்க்குமட்டுமன்றிப் போருக்கும் பொருந்தியது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கருதினர். மனிதகுலத்திற்கு நாசம் விளைவிக்கும் கருத்துகளும் எண்ணங்களும் இரண்டு உலகப் போர்கள் வெடிக்கக் காரணமாக இருந்தன. கொள்ளைநோய்க் கிருமிகளுக்கு ஒப்பாகப் பாவிக்கப்படும் அக்கருத்துகளும் எண்ணங்களும் மனித மனத்திலிருந்து இன்னும் மறைந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும், அவை தலைதூக்கலாம். மீண்டும் மனிதகுலத்தை அழிக்க முற்படலாம். அவை தலைதூக்காமல் இருக்க வேண்டுமானால் அரசும் தனிமனிதனும் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இல்லையேல் விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். இந்தக் கருத்தைத்தான் மறைமுகமாக வலியுறுத்துகிறார் காம்யு. அது எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவருக்கும் பொருந்துவதால் அவருடைய நாவலின் வெற்றிக்கான காரணத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
மின்னஞ்சல்: srakichena @ gmail.com