அம்பேத்கர் 129
சிறப்புப் பகுதி
அம்பேத்கர்
129
புதிய தலைமுறையின் அம்பேத்கர்
1990களின் அம்பேத்கர் நூற்றாண்டு இந்திய சமூக அரசியல் களத்தில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு. அம்பேத்கர் பெயரும், அவர் எழுத்துகளின் தொகுப்புகளும் இந்திய அரசியலில் அழுத்தமான அடையாளத்தையும் புதிய விவாதங்களையும் உருவாக்கின. புதிய தலைமுறை தலித் இயக்கங்களுக்கு உந்துதலாக விளங்கின. தலித் இலக்கியம், தலித் வரலாறு என்னும் முறைகள் உருவாகி சமூகவரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. அதுவரையிலும் காணத்தவறிய அறிவுஜீவிகள் அவரின் மேதமையை உணரத்தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியில் இன்றைக்கு அவர் பெயர் அரசியலின் மையத்திற்கு வந்திருக்கிறது. அவர் பெயரையும் நினைவுகளையும் மைய அரசியல் சொல்லியாக வேண்டிய அவசியத்தை அடைந்துவிட்டன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அவரின் முக்கியத்துவம் பல்வேறு தளங்களில் அழுத்தம் பெற்றிருக்கின்றன. நான் இந்த இடத்திற்கு வந்ததற்குக் காரணம் அம்பேத்கர் என்று ஒரு கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அம்பேத்கர் திட்டங்களும் விழாக்களும் எடுக்கப்பட்டன. அவரது நினைவு அடையாளங்கள் கண்டுகொள்ளப்படுகின்றன; புதுப்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அம்பேத்கர் பெரியாரோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறார். பெரியாரின் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நீலச்சட்டைப் பேரணி நடத்துகிறது. இடதுசாரி மேடைகளில் அம்பேத்கர் பிம்பமும் கருத்துகளும் ஏறியிருக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் எத்தகைய அரசியல் இருக்கிறது என்பதைத் தாண்டி அம்பேத்கரின் முக்கியத்துவம் தவிர்க்க முடியா இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இவையாவும் அவர் விரும்பிய அரசியல் கனவுகளுக்குச் சாதகமானதாக மாற வேண்டும் என்பதே நம் விருப்பம்.
இதற்கிணையாக தலித் அடையாளத்தில் அம்பேத்கரின் முகம் புதிய எழுச்சியாக அமைந்துள்ளது. அம்பேத்கரியப் பெரியவர்களின் அடையாளங்களாக இருந்த ஜெய்பீம், நீலம், பௌத்தம் போன்ற அடையாளங்கள் மறுபதிப்பைப் பெறத் தொடங்கியுள்ளன. ரோஹித் வெமுலா, விக்னேஷ் மேவானி, சந்திரசேகர ஆசாத் போன்ற இந்தத் தலைமுறை இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அம்பேத்கரியம் என்ற யோசனை தலித்தியம் சாத்தியமுடைய பிற கருத்துகளோடும் இணைந்து பயணிப்பது தொடர்புடைய விவாதங்கள் நடக்கின்றன.
மதச்சார்பின்மை, இந்திய அரசியலமைப்பு, அதிகாரக் குவிப்பு போன்ற சமகால அரசியல்விவாதங்களில் அம்பேத்கரின் கருத்துகள் என்ன என்று கவனிக்கப்படுகின்றன. அவரது மேதமை விதந்தோதப்படுகின்றது. மேலும் சாதி, தீண்டாமை போன்றவை தவிர்த்த பிரச்சினைகளிலும் அவரது பங்களிப்புகளைக் கண்டுசொல்லும் எழுத்துகள் பெருகத் தொடங்கியுள்ளன.
இப்பின்னணியில்தான் அம்பேத்கர் பிறந்த இந்த ஏப்ரல் மாதத்தில் அம்பேத்கர் சிறப்பிதழாகக் காலச்சுவடு வெளியாகிறது. அம்பேத்கரின் வெவ்வேறு தளங்களிலான சிந்தனைகளையும் பங்களிப்புகளையும் சுட்டும் கட்டுரைகளும் மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்களித்துள்ளனர்.
அறிமுகமும் ஒருங்கிணைப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்