இம் என்றால் . . .
தலையங்கம்
இம் என்றால்...
அம்பேத்கரின் 129வது பிறந்த நாளை நாடே கொண்டாடிக்கொண்டிருந்த ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்கரிய - இடதுசாரியச் சிந்தனையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்டேவும் மற்றொரு செயற்பாட்டாளரான கௌதம் நவ்லகாவும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடையேயும் கருத்துரிமை ஆர்வலர்களிடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் நினைவுநாளில் நடந்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர் என்றும் பிரதமரைக் கொல்ல முயற்சித்த மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளவர் என்றும் தெல்தும்டே மீது வழக்கு பதியப்பட்டது. பீமா கோரேகான் நிகழ்வில் ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கவில்லை என்பது மட்டுமல்ல பீமா கோரேகான் பற்றி மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தவர் அவர். ஆனந்த் என்ற பெயர் குறிப்பு இருப்பதாகக்கூறி அது இவரே என்று குற்றம் சுமத்திக் கைது செய்ய முயன்றது அரசு. அடிப்படையில் இது முகாந்திரமற்ற ஆதாரம். தெல்தும்டேவின் சகோதரர் மாவோயிஸ்ட் ஆதரவாளர். ஆகவே இதை வைத்து தெல்தும்டேவை இலக்காக்கியுள்ளனர்.
தேர்ந்த கல்வியாளரான தெல்தும்டேவின் கருத்துப் பணிகள் இன்றைய ஆளும்தரப்புக்கு இடையூறாக இருந்துவருகிறது. அவரை முடக்கிப் பணியவைப்பதற்காகவே இவ்வழக்கு கையாளப்பட்டிருக்கிறது. தெல்தும்டே சமீபத்தில் எழுதிய கடிதத்தில் தான் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டதில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
UPA என்று சொல்லப்படக்கூடிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்திருப்பது இந்திய அறிவுஜீவி சமூகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல். பிரதமரைக் கொல்ல முயன்றார் என்பதைவிட அவர் ஒரு மாவோயிஸ்ட் என்பதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
கேரளத்தில் நீதிபதி சியாம் பாலகிருஷ்ணன் 2015 அளித்த தீர்ப்பு ஒன்றில் ஒருவர் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்பதே கைதுசெய்வதற்குக் காரணமாகிவிடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்து பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட உதாரணங்கள் ஏராளமானவை இருக்கின்றன. இந்தியாவின் மூத்த வரலாற்று அறிஞர்களே நீதிமன்றத் தீர்ப்பின் இந்த முன்னுதாரணத்தினைச் சுட்டியுள்ளனர்.
தெல்தும்டே, நவ்லகா இருவரும் கருத்தியல் தளத்திலும் மனித உரிமைச் செயற்பாட்டிலும் தம்மை வெளிப்படையாக முன்வைத்து இயங்கியவர்கள். அவர்கள்மீது மறைமுகச் சதி என்று குற்றம் சாட்டியிருப்பது இந்திய அறிவுச்சூழலை அரசு கட்டுப்படுத்த முனைவதற்கான முயற்சியாகும். ஏற்கனவே கௌரி லங்கேஷ் தொடங்கி எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசே சிந்தனையாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் ஒருதலைப்பட்சமான ஆதாரங்களைக் காட்டிக் கைதுசெய்து வருகிறது. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கருத்தியல் தளத்திலும் இம்முயற்சியை எதிர்த்து முறியடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.