வடகடல் வாழ்வின் வசீகர முகிழ்வாய்
மதிப்புரை
வடகடல் வாழ்வின் வசீகர முகிழ்வாய்
ஜோ டி குரூஸ்
தேசம்மா
(சிறுகதைகள்)
க. அரவிந்த் குமார்
காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை,
நாகர்கோவில் - 1
பக். 152 ரூ.180
வாழ்வின் பல்வேறு கூறுகளையும், அதன் பரிமாணங்களையும் அனுபவ முதிர்ச்சியோடு தரிசனமாய்ச் சுமந்துவரும் படைப்புகளே இலக்கியம். அது வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் இனக்குழுவின் தொன்மங்களையும் தாங்கி வருவதோடு சூழலுக்கேற்றவாறு மாறுதல் அடையாத வாழ்வைச் சீண்டவும் செய்யும், தவறான நடைமுறைகளை நோக்கிக் கேள்விகளையும் எழுப்பும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் க. அரவிந்த் குமார். ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு மூலம் நெய்தல் இலக்கியம் அடுத்தகட்டப் பாய்ச்சலை நோக்கி நகர்கிறது என்ற நம்பிக்கையைத் தருகிறார். தொகுப்பில் மொத்தமாகப் பதினைந்து கதைகள், ஆனாலும் நெய்தல் சார்ந்த கதைகளிலேயே மனம் லயித்துக் கிடக்கிறது.
வடகடல் பட்டிணவர் வாழ்வில், தேசம்மா ஒரு தொன்மம். அவளிடம் பயம் கலந்த மரியாதையும், தொடர்ந்த வழிபாடும் இன்றும் உண்டு என்பது சென்னை, பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் கண்கூடாகக் கண்டது. பெரிய பட்டிணவர், சிறிய பட்டிணவர் என்ற சாதிய வேறுபாடுகள் திருமணங்கள் மூலம் பெருவாரியாகக் களையப்பட்டு இரு சாதிகளும் கலந்துவிட்டிருந்தாலும், இன்றும் அந்த வேற்றுமையைப் பேணிவருபவர்கள் உண்டு. தேசம்மாவை, ஒருசாரார் வழிபட்டாலும் மறுசாரார் பயந்தே வாழ்கிறார்கள். தென்பகுதியின் இசக்கிகள் வழிபாடுபோல.
இதற்கிடையே, பாண்டிச்சேரிப் பகுதிகளில் ‘பணிந்தவர்கள்’ என்றொரு புதுச் சாதி கடந்த ஐம்பது வருடங்களில் உருவாகியிருக்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் வாழும் ஊரில் நடந்த வழக்கில், தண்டனையாய் ஊர் விலக்கானவர்கள் சாதியாய் உருமாற்றம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் பாண்டிச்சேரிக் கடலோரம் சமீபத்திய எடுத்துக்காட்டு. ஆய்வாளர்கள் நுணுகி நோக்க வேண்டிய மிக முக்கியமான சமூகப் பரிமாணம் இது. ஏறத்தாழ இருபத்தியோரு சாதிகளாய்ப் பிரிந்துகிடக்கும் தொல்குடிப் பரதவர் இனக்குழு, பங்காளிச் சண்டையை விடுத்து இனமாய் விழித்துக்கொள்வதே அடுத்தகட்ட நகர்வை வாய்க்கச் செய்யும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ‘தேசம்மா’.
‘வருத்திச்சி’யின் திலகர் போன்ற பலரைக் கடலோர வாழ்வில் கண்டிருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று ஞாபகம். பகீரதா என்ற செல்ஃப் புரப்பல்டு பார்ஜ், பாம்பன் தெக்குவாடி மீன் இறங்குதளக் கட்டுமானத்துக்காகச் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. வேலை முடிந்து அது திரும்பிச்செல்ல வேண்டும். பார்ஜின் வயது நாற்பதைத் தாண்டிச் சாதனங்களும் பழுதடைந்து விட்டிருந்தபடியால், பார்ஜைப் பாம்பனுக்குக் கொண்டு வந்திருந்த பத்துநபர் கொண்ட குழு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். இங்கேயே பழைய இரும்புக்கு வெட்டி எடுத்துவிடுங்கள் என்று கூறினார்களாம். முதலாளிக்கோ, அது சென்னைத் துறைமுகம் வந்தே ஆக வேண்டும்.
சிக்கலான சூழலில் பாம்பனைச் சேர்ந்த முப்பது வயதேயான சந்தியா முன்வருகிறான். சம்பளத்தைப் பற்றிப் பேசாமல், துணைக்கு ஒரு சமையல்காரரும் தேவையான எரிபொருளும் போதும் என்கிறான். யாருக்கும் நம்பிக்கை இல்லை, ஆனாலும் வேறு வழியே இல்லாமல் சம்மதிக்கிறார்கள். பார்ஜை, தனிமனிதனாய் தென்கடலிலிருந்து பாம்பன் ரயில்வே பாலத்துக்குக் கீழாகப் பாக்கு நீரிணைக்குக் கொண்டுவந்து கரையோரமாக வேதாரண்யம் கடந்து, காற்றும் அலையும் மோதும் திறந்தவெளி வங்கக் கடலில் பயணித்துச் சம்பந்தப்பட்ட எல்லோருமே ஆச்சரியப்படும் விதத்தில், இரண்டாம் நாள் இரவு சென்னைத் துறைமுகம் அடைந்திருக்கிறான். அவனது சாகசப் பயணம் மதிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், திரும்பி ஊருக்குச் செல்வதற்கான பணத்தைக் கொடுப்பதிலும் தாமதப்படுத்திச் சென்னைப் பட்டணத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.
நடைமுறைக்கு உதவாத உளுத்துப்போன சட்டங்களைப் பிடித்துக்கொண்டு ஆட்சி அதிகாரம் செய்யும் அட்டூழியங்களால் சீரழிவது திலகர் போன்ற திறமையான கடலோடியின் வாழ்வு. கடலோரங்களில் குடும்ப வருவாய் ஈட்டும் தலைவன் இறந்தாலோ அல்லது இறப்புக்கு இணையான நிலையை அடைந்தாலோ, குடும்பப் பொறுப்பைத் தானே முன்வந்து சுமப்பது பெண்கள். நெய்தல் நிலையாமை என்ற அடிச்சரடிலேயே இன்றும் பயணிக்கிறது. வடசென்னையின் பெரும்பாலான குடும்பங்களின் எதிர்காலமே மீன் விற்கும் பெண்களால் என்பது ஒருபுறமென்றால், மறுபுறம் உயிரைத் துச்சமென மதித்துத் தன் குடும்பத்துக்காகப் பணி செய்யும் கன்னியப்பர்கள். கடமை உணர்ச்சியுடன் கூடிய தூய்மையான அன்பைக் கொச்சைப்படுத்துவது படுகொலைக்குச் சமம் என்கிறது ‘ராஜாதி ராஜா’.
ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நெருடலையும் ஆச்சர்யத்தையும் பரிதவிப்பையும் நிறைவையும் தந்தாலும், தொகுப்பின் இறுதிக் கதையான ‘கடைசிச் சொத்து’ என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதம். பழம்பெரும் இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்வதில், அனுபவசாலிகளான எழுத்தாளர்களே தடுமாறும் இக்கால கட்டத்தில் சிலப்பதிகாரச் சொல்லாடலின் தன்மை மாறாமல், அதை ஒரு சிறுகதைக்குள் நவீனப் புனைவாக்கி, இப்படியும் இருக்கலாம்தானே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஆசிரியர்.
நெய்தல் வாழ்வின் மீதான சமவெளியின் காழ்ப்புணர்வை பூடகமாய்ச் சொல்வதற்கு ஆழ்ந்த அறிவும் தெளிந்த பார்வையும் வேண்டும். மகாபாரதம், இராமாயாணம், சிலப்பதிகாரம் எனப் பெரும் இலக்கியங்களுக்கு ஊற்றுக்கண்ணாய் இருந்தது அகத்தில் கொழுந்து விட்டெரிந்த தீ தானே!
மின்னஞ்சல்: rnjoedcruz@gmail.com