கோகுலக்கண்ணன் கவிதை
கவிதை
கோகுலக்கண்ணன்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
அம்மாவின் குழந்தைகள்
அம்மா தினமும் இழக்கிறாள்
தன் குழந்தைகளை
இரவில்
அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளும் குழந்தைகள்
காலையில் யாரோவாக
வெளிவருகிறார்கள்
அவர்களை மீண்டும்
முதலில் இருந்து
நேசிக்கத்தொடங்குகிறாள்
குழந்தைகளை எப்போதும்
ஒரு தருணத்தில் வைத்துக்கொள்ள
முடியாது
அவள் தோற்கிறாள்
அறைகளும்
பொழுதுகளும்
ஆட்டங்களும்
இடங்களும்
அவர்களை விழுங்கி மாற்றித் தருகின்றன
நேற்றின் குழந்தைகளை இழந்தவள்
இன்றைக்கு வந்தவற்றின்
முகத்தை
கன்னத்தைத் தடவி அறிகிறாள்
ஆனாலும் குழந்தைகளை
இழந்துகொண்டே இருக்கிறாள்
வேறு குழந்தைகளாக அவர்கள் மாறி வரும்வரையில்
அவள் பதற்றத்துடன் இருக்கிறாள்
அவளுக்குத் தெரியும்
அவர்கள் வருவது நிச்சயமில்லை என்று
இரவில் அம்மாவின் தனிமை
அவளையும் அழித்தெழுதப் பார்க்கிறது
குழந்தைகள் கேட்காமலே
அவள் தன்னை
ஒரே மாதிரியாக வைத்துக்கொள்கிறாள்
அவளுடைய ப்ரயத்தனங்கள்
ஏழு கடல் தாண்டுவதுபோன்றது
அவர்களுக்குத் தெரியவருவதில்லை
அவர்கள் அம்மாவை இழப்பதில்லை
இரண்டாம் வானம்
இந்த உலகத்தில்
பார்க்க
கேட்க
எவ்வளவு இருக்கிறது!
காற்றில் மிதக்கும் மயிலிறகிலிருந்து
காட்டைத் துளையிடும் வண்டின் ரீங்காரத்திலிருந்து
மழை போகும் பாதையிலிருந்து
தூரத்துக் கப்பலின் பனியில் மங்கும் முழக்கத்திலிருந்து
பறவையின் சிறகில் மடங்கியொடுங்கும் வானத்திலிருந்து
முதல் வானம் என்மேல் கவிழ்ந்து வீழ்ந்தது
குரல்வளை நெரிய கண்கள் பிதுங்க
காலடி தள்ளாட
உங்களுக்காக
எவ்வளவு காலம் நான் தாங்கிச் செல்வது
முதல் வானத்தை
இரண்டாம் வானத்தின் கீழே சேர்ந்தபோது
எல்லா இடத்திலும் வியாபித்த
ஒரு மாபெரும் கண்ணாடி முன்னால்
எதுவுமே இல்லாததன்
பிரதிபலிப்பில்
நான் எப்படி இருந்தேன்
இரண்டாம் வானம் கீழே நடுங்கும் கைபேசி
மொழி ஒன்றே
வார்த்தைகளும் ஒன்றே
ஏனோ புரியவில்லை
அதனால்
நமக்கு மேலே விரியும் வானம் கேட்கிறது
இரண்டாம் வானம் என்று உண்டா?
மேகங்கள் மௌனமாகவே கலைந்துபோகின்றன
மழை தராது
மீண்டும் எதையோ கேட்கிறாய்
வானத்தைப் பார்ப்பதை நான் நிறுத்தவேயில்லை
நான் ஏற்கெனவே பார்த்த வானம் போலவேயில்லை இப்போது
உன் கேள்விக்கான பதில் மௌனம் என்றால்
அடுத்த கணம் ஏன் பாதாளத்தில் விழுகிறது?
அங்கிருந்து கேட்கும் கேவல் யாருடையது?
மூன்றாம் குரலாய் உன் கைபேசி ஒலிக்கிறது
மீண்டும் மீண்டும் அழைக்கும் அதன் குரலுக்கு
உன் பதில் என்னவாக இருக்கும்?
இந்தக் கணத்தில்
மௌனத்தை எதிர்கொள்ளத் தெரியாமல்
என் பைக்குள்
கைபேசத் துடிக்கிறது
மின்னஞ்சல்:gokul.ramaswamy@gmail.com