கொரோனா பூனை
கதை
கொரோனா பூனை
நாகரத்தினம் கிருஷ்ணா
வெண் துகில் வெயில் வேய்ந்த முற் கோடைக்காலம். வீட்டுக்கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை. முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவதுபோலப் பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது. தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசித் திரைகளின் பொய்ப்பிம்பங்களில் அலுப்புற்றிருந்த விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின. இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக்கூட ஊரடங்கோ என சந்தேகிக்கக்கூடிய அமைதி. மனிதர் ஆக்ரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இயற்கை.