நெடுவழி விளக்குகள்
அஞ்சலி
நெடுவழி விளக்குகள்
ஸ்டாலின் ராஜாங்கம்
தலித் எழில்மலை (1945-2020)
தலித் எழில்மலை. இப்பெயரில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. இரண்டுமே பெற்றோர் சூட்டியவை அல்ல. ஒன்று அவராகச் சூடிக்கொண்டது; மற்றொன்று ஏழுமலை என்ற இந்து மதப் பெயரை அவராக மாற்றிக்கொண்டது. இந்தப் பெயர்களே அவரின் அரசியலைச் சொல்லிவிடுகின்றன. இராணுவத்திலும் தபால் துறையிலும் பணியாற்றியவர். ஒன்பது மொழிகள் தெரிந்தவர். தேர்ந்த பேச்சாளர். அம்பேத்கரியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். நீலச்சட்டை, ஜெய்பீம் அவர் அடையாளங்கள். கூட்டங்களில் சாதிமறுப்பு நூல்களை விற்பதில் எந்தவிதச் சங்கோஜமும் கொள்ளாதவர். பெங்களூரிலிருந்து வி.டி. ராஜசேகர் கொணர்ந்த தலித் வாய்ஸ் இதழின் விற்பனையாளராக இருந்தவர்; அவ்விதழின் தமிழ் மொழிபெயர்ப்பாக தலித் குரல் என்ற இதழைக் கொணர்ந்தார். வி.டி. ராஜசேகரோடு இணைந்து தலித் சாகித்திய அகாதமியை ஆரம்பித்தார். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதே தலித் அகாதெமியின் நோக்கமாக இருந்தது. 1982ஆம் ஆண்டில் அம்பேத்கர் எழுதிய நூலின் ஒரு பகுதியை ‘விடுதலைக்கு என்ன வழி?’ என்ற பெயரில் முதல் வெளியீடாகக் கொணர்ந்தது அப்பதிப்பகம். தொடர்ந்து வி.டி. ராஜசேகர், பேராயர் அசாரியா ஆகியோர் எழுதிய 26 ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளும் வெளியாயின. அம்பேத்கரின் பிற நூல்களும் பின்பு வெளி
யிடப்பட்டன.
தலித் எழில்மலையின் அரசியல் வாழ்வை இரண்டு கட்டங்களாகக் கூறமுடியும். முதல் கட்டமாக, 1980களில் அம்பேத்கரிஸ்ட் பேரவை, தலித் மக்கள் முன்னணி சார்பாக அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூர் வட்டாரங்களில் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். குடிநீர், சுடுகாட்டுப் பாதை, பட்டா போன்ற கோரிக்கைகளுக்காகப் பேரணி, ஆர்பாட்டங்கள் நடத்தினார். வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டக் கோரிய பெரிய பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. எழுத்தாளர்களை அழைத்து நிர்வாகிகளுக்கு வகுப்பெடுக்க வைத்ததுண்டு. தலித் பெரியவர்களின் நடைமுறையாக இருந்த தீக்ஷா பூமி பயணத்தை (அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர்) தன்னுடைய அமைப்பினரின் நடைமுறையாக்கியவர். காந்தி - அம்பேத்கர் இடையே நடந்த (1932) பூனா ஒப்பந்தத்தைக் கைவிட்டு மீண்டும் இரட்டை வாக்குரிமையை எழுப்ப வேண்டும் என்ற கருத்தை உருவாக்கியதில் முக்கியமானவர். பின்னாட்களில் தலித் பண்பாட்டுக் கூட்டங்களில் கலகச்செயல்பாடாக முன்வைக்கப்பட்ட மாட்டிறைச்சி உணவைத் தான் நடத்திய கூட்டங்களில் இயல்பாக நடைமுறைப்படுத்தியவர்.
அரசியல் பயணத்தின் இரண்டாம் கட்டம் 1990கள்; பாமகவில் அவர் சேர்ந்ததில் இருந்து அது தொடங்குகிறது. வி.டி. ராஜசேகர் தொடர்புக் காலத்திலிருந்தே ‘தலித் மக்கள் x பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை’ என்னும் அரசியலை ஏற்றிருந்தவர்; இவர் பின்பு இக்கருத்தைப் பேசத் தொடங்கியிருந்த பாமகவில் சேர்ந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆக்கப்பட்டார். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து, பின்பு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் ஆனார். அத்தருணத்தில் சென்னை தாம்பரம் சித்த மருத்துவ ஆய்வு மையம் அடிக்கல் நாட்டப்பட்டபோது அதற்கு அயோத்திதாசர் பெயரைச் சூட்டினார். அந்தக் காலத்திலும் தலித் சாகித்திய அகாதமி சார்பான வெளியீடுகள் கொணரப்பட்டன. குறிப்பாக ஞான. அலாய்சியஸ் அயோத்திதாசரின் நேரடி எழுத்துக்களை வெளியிட்ட அதே ஆண்டில் ஏற்கனவே கோலார் தங்கவயல் பௌத்த சங்கத்தினரால் வெளியிடப்பட்டிருந்த அயோத்திதாசரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் பிரசுரங்களை நூல்களாகத் தொகுத்து அகாதமி சார்பாக வெளியிட்டார். இவற்றில் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் துணையாக இருந்து இயங்கினர். இந்த வெளியீடுகள் எவற்றிலும் எழில்மலையின் பெயர் இடம் பெற்றதில்லை.
அதேபோல மொழிபெயர்க்கப்பட்டு நீண்ட காலம் இருந்த அம்பேத்கரின் ‘காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ என்ற நூலையும் பதிப்பித்து ராமதாஸைக் கொண்டு வெளியிட்டார். அமைச்சர் பதவியைத் தொடர்ந்து ராமதாஸோடு ஏற்பட்ட முரண் காரணமாக பாமகவை விட்டு வெளியேறி அதிமுகவில் சேர்ந்து எம்பியாக இருந்து ஏறக்குறைய கடைசிக் காலங்களில் அரசியலிலிருந்தே ஒதுங்கினார். 1980களில் தலைவராவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அந்நோக்கில் யோசித்திராத எழில்மலை பாமகவில் இருந்து விலக நேர்ந்த 2000த்திற்குப் பிறகு தன்னை முற்றிலும் ஒரு அரசியல்வாதியாகத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியை நோக்கி நகர்ந்தார். அவர் தன் வாழ்க்கையைப் பற்றிப் பதிவு செய்திருக்க வேண்டும். அத்தகைய தொடர்புகளும் அனுபவங்களும் அவருக்கு இருந்தன. அவற்றில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தெரிந்துகொள்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட தலித்துகள் x பிற்படுத்தப்பட்டவர்கள் இணைவு என்ற அரசியலின் தலித் தரப்புப் பிரதிநிதியாக இருந்தவர். கள அளவில் தலித்துகளோடு முரணைக் கையாளும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கட்சியில் தலித் அடையாளத்தோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எழில்மலை கடந்த மே 6ஆம் தேதி காலை காலமானார்.
பொன்வயல் சந்திரன் (1938-2020)
அயோத்திதாசர் எழுத்துக்களைத் தொகுத்துக் கொணர்ந்தபோதே அதற்கு இணையாக அயோத்திதாசர் கால இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘Religion as Emancipatory identity: A Buddhist movement among the Tamils under Colonialism’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டார் ஞான. அலாய்சியஸ். அயோத்திதாசரின் இயக்கம் அழுத்தம் பெற்றிருந்த கோலார் தங்கவயல் அந்நூலுக்கு பிரதானத் தரவாகக் கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறு அவருக்கு உதவிய கோலார் பௌத்தர்களை நூலில் குறிப்பிட்டிருப்பார் அலாய்சியஸ். அதில் முதலில் இடம்பெற்றிருக்கும் பெயர் சந்திரன். கடந்த மே மாதம் சந்திரனைக் கோலாரில் இருந்த அவரது வீட்டில் சந்தித்தபோது அலாய்சியஸ் இந்த அறையில்தான் தங்கி இருந்தார் என்றார். அயோத்திதாசருக்குப் பின்பும் ஊக்கத்தோடு இயங்கிய கோலாரின் பெளத்தச் செயல்பாடுகளோடு இணைந்திருந்தவர் சந்திரன். அயோத்திதாசரின் வழித்தோன்றலான அப்பாத்துரையாரிடம் பயின்று அவர் நடத்திய பள்ளியில் 40 ஆண்டுக் காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல மொழிகள் அறிந்தவர். குறிப்பாகப் பாலி மொழியில் புலமை பெற்றிருந்தார்.
அடிப்படையில் சட்டம் பயின்றவர்; நல்ல பேச்சாளர், எழுத்தாளர். பௌத்தம் தொடர்பாகப் பல நாடுகளுக்கும் பயணம் செய்து கட்டுரைகள் சமர்ப்பித்தவர். அம்பேத்கர் சுடர் ஏட்டை நடத்தியவர்; பொன்வயல் மாத இதழையும் நீண்ட காலம் நடத்தினார். ‘கௌதம சித்தார்த்தா’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும் நடத்தியவர். ‘புத்தநெறி’, ‘நமது கடமை’, ‘புத்த வழிபாட்டு நூல்’, ‘அண்ணல் அம்பேத்கர் பாதை’, ‘பௌத்தம் என்பது என்ன?’ மொழிபெயர்ப்பு நூல், ‘is Buddhism a Religion’, ‘What is Religion’ , போன்ற ஆங்கில நூல்களை எழுதினார், மொழிபெயர்த்தார். இந்நூல்கள் யாவும் நாற்பது ஐம்பது பக்கங்கள் கொண்டவையே. பிரச்சாரமே அவற்றின் பிரதான நோக்கம்.
அவர் வீட்டில் பழைய நூல்களைக் கொண்ட நூலகம் உண்டு. அம்பேத்கர் கோலார் தங்கவயல் வந்தபோது அப்பாத்துரையாரைச் சந்தித்தமைக்கான சாட்சிகளில் ஒருவர். இவர் போன்றோரின் பங்களிப்புகள் தீவிர அறிவுலகிற்குத் தெரியாவிட்டாலும் கல்விப்புல ஆய்வுகளுக்கு இவர்களின் பங்களிப்புகள்தாம் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. சந்திரன் மே மாதம்
காலமானார்.
வி.கே. தாமோதரன்
மே மாதக் காலச்சுவடு இதழில் ‘பெடரேஷன் எனும் ஒடுக்கப்பட்டோர் அமைப்பு’ கட்டுரையில் வட ஆற்காடு பகுதியில் இப்போதும் பெடரேஷன் ஆள் என்று சொல்லக்கூடிய பெரியவர்களைப் பார்த்துவிட முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய பெரியவர்களில் ஒருவர் வி.கே. தாமோதரன்.
தொன்னூறு வயதை நெருங்கியவர், மே மாதம் வேலூரில் காலமானார். பெடரேஷனில் தொடங்கிய பயணம் பின்னர் இந்தியக் குடியரசுக் கட்சியில் தொடர்ந்தது. கடைசிவரை அம்பேத்கரின் கட்சி என்ற முறையில் அதிலேயே செயல்பட்டுக் காலமாகியிருக்கிறார். வாழ்நாள் செயல்பாட்டாளராக இருந்தும் அரசியலின் பெயரால் எந்தப் பலனையும் பெறாதவர்களில் ஒருவர். பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியோடு இணைந்து செயல்பட்டவர். இவர்போன்ற பெரியவர்கள் இத்தகைய பணியைத்தான் செய்தார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடிவதில்லை. ஒரு கிராமத்தில் சென்று அம்பேத்கரைப் பற்றிப் பேசுவதும் வாழ்நாள் இயக்கப் பணிதான். சிறுசிறு பிரச்சினைகள், அதையொட்டிச் சின்னச் சின்ன விஷயங்களை முன்னெடுத்து வேலை செய்தவர். இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொண்டது என்று மட்டுமல்லாமல் பஞ்சமி நிலப் போராட்டம் எழுந்தபோது வேலூர் பகுதியில் அதை முன்னெடுத்தவர். குறிப்பாகக் கலவைப் பகுதியில் குடும்பத்தோடு சென்று நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் எல்லோராலும் நினைவு கூரப்படும். பல கிராமங்களில் அம்பேத்கர் சிலையை நிறுவ முற்பட்டவர். பொதுவாக இவர் போன்றோர் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவற்றிற்கு ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளைத் தொடர்ந்து எடுத்துச்சென்று அழுத்தங்களைக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தனர். அன்று தொடங்கிய பணிஅவரது கடைசிக் காலம் வரையிலும்
தொடர்ந்தது.
அந்த வகையில் சிறியதே எனினும் அதன் வழிபெற்ற பலன்கள் விரிந்தவை; கண்ணுக்குத் தெரியாதவை. சத்தமில்லாமல் பணியாற்றியவர்களின் மரணம் சத்தமில்லாமல் நடந்துவிட்டது.
மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com