தோப்பிலும் தோப்பிலைப் பற்றியும்
மதிப்புரை
தோப்பிலும் தோப்பிலைப் பற்றியும்
சிவராஜ் பாரதி
தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும்
தோப்பில் முகம்மது மீரான்
(ப-ர்): இர. பிரபா
எதிர் வெளியீடு
96, நியுஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642 002
பக். 120
ரூ. 130
தோப்பில் முஹம்மது மீரான் மறைந்து சில மாதங்கள் கழித்து அவரது தேங்காய்ப் பட்டணத்து இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு குடியிருந்தவர், “தேங்காய்ப் பட்டணம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு யூடியூப் வலைக்காட்சியில் நிறையக் காணொளிகள் இருக்கின்றன. ஆனால் தோப்பிலைப் பற்றியும் இந்த வீட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே” என வருத்தப்பட்டார்.
தேங்காய்ப் பட்டணம் பற்றி அறியாதவர்களுக்குத் தோப்பிலின் கைபிடித்து உலாவரும் வாய்ப்பைத் தந்திருக்கிறது இந்நூல். தோப்பிலின் மூளையிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் தேங்காய்ப் பட்டணம் நிறைந்திருந்ததுபோலும். அதன் பூகோளவியல், சமூகவியல், வரலாறு, உணவு, கலை என அனைத்தையும் கதை சொல்வதுபோலச் சொல்கிறார். அவருக்கு மட்டும் எப்படி அத்தனை கதைகள் தெரிந்திருக்கிறதென்று வியப்பாக உள்ளது. தன்னுடைய பிறந்தநாள் குறித்துக்கூட அவரிடம் கதை இருக்கிறது. ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை சொல்கிறார்; ஒவ்வொரு மனிதருக்கும் கதை சொல்கிறார். ஒரு சான்று:
“கிராமத்தில் ஜேப்பில் (சட்டைப்பை) மை புரண்ட சட்டை அணிந்து, அதில் பேனா குத்திக்கொண்டு திரியும் சிலரைப் பார்க்கலாம். லீக்கடிக்கும் பேனாவாக இருப்பதால் ஜேப்பில் எப்போதும் மை புரண்டிருக்கும். எழுதப்படிக்கத் தெரியாத பெண்களுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதையும் வந்த கடிதங்களை வாசித்துக் கொடுப்பதையும் பணியாகக் கொண்டவர்கள் இவர்கள்.” (ப - 26)
ஒஸாமார்கள் (நாவிதர்கள்) பற்றிச் சொல்லும் கதையை நாம் பலமுறை கேட்டிருந்தாலும் சுவாரசியமாகவே உள்ளது. ஊர்க்கதைகளோடு இணைத்துத் தன்னுடைய வரலாற்றையும் சேர்த்தே சொல்கிறார். அக்கால இஸ்லாமியர்கள் பலரைப் போலவே தன் தந்தைக்கிருந்த ஆங்கிலக் கல்வி எதிர்ப்பு, பெரும் இன்னல்களுக்கிடையில் மலையாளக் கல்வியில் பட்டம் பெற்றது, குடும்ப வறுமை, ‘கடலோர கிராமத்தின் கதை’க்கு உருவான எதிர்ப்பு, வைக்கம் பஷீர் மீதான மரியாதை. சு.ரா, கி.ரா. உடனான நட்பு என நீரோட்டம் போன்ற நடையில் சொல்லிச் செல்கிறார்.
இந்நூல் தோப்பிலின் இரு கட்டுரைகள், இரு நேர்காணல்கள், தோப்பில் மனைவி, முதல் மகன், மருமகள் ஆகியோரின் நேர்காணல், இரண்டாம் மகனின் நினைவுப்பகிர்வு ஆகியவை அடங்கியது. இரண்டாம் கட்டுரை ‘மாப்பிள்ளைப் பாட்டுகள்’ பற்றியது. மலையாளமும் அரபும் கலந்த மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர் தமிழும் அரபும் கலந்த மாப்பிள்ளைப் பாட்டுதான் என்பது வியப்பாக இருந்தது. மாப்பிள்ளைப் பாட்டுகளின் தொடக்கக்கால வரலாற்றிலிருந்து சமகால வரலாறு வரை மொத்தமாய்ச் சொல்கிறார், ‘மாப்பிள்ளை’ என்ற சொல்லாடலுக்கான கதையோடு.
முதல் நேர்காணல் சந்திரிகா மலையாள இதழில் வெளிவந்த நீண்ட நேர்காணலின் மொழிபெயர்ப்பு. மலையாள இதழுக்கான நேர்காணல் என்பதால் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் போலிருக்கிறது. குறிப்பாக பெருமாள்முருகன் குறித்த கேள்விக்கு தோப்பிலின் பதில் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ தமிழில் வெளியான நூலொன்றின் (‘மஞ்சக் குலம் மாலா’) பாதிப்பில் எழுதப்பட்டதென்பதும் வியப்பாகவே இருந்தது.
தோப்பிலின் இறுதி நாட்களில் உறவினர்களின் மனநிலை; முதல் மகன் கூடவே இருந்தது; இரண்டாம் மகன் இறுதிவரை வர முடியாமல் போனது; தோப்பிலின் நிறைவேறாத கடைசி ஆசை போன்ற வலிகள் குடும்பத்தினரையும் தாண்டி நமக்கும் பரவுகிறது.
நூலாக்கத்தில் செம்மையாக்கம் முதன்மையான பணியென்பதை பலரும் உணர்வதில்லை என்பதற்கு இந்நூலும் ஒரு சான்று.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com
மதிப்புரை
தோப்பிலும் தோப்பிலைப் பற்றியும்
சிவராஜ் பாரதி
தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும்
தோப்பில் முகம்மது மீரான்
(ப-ர்): இர. பிரபா
எதிர் வெளியீடு
96, நியுஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642 002
பக். 120
ரூ. 130
தோப்பில் முஹம்மது மீரான் மறைந்து சில மாதங்கள் கழித்து அவரது தேங்காய்ப் பட்டணத்து இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு குடியிருந்தவர், “தேங்காய்ப் பட்டணம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு யூடியூப் வலைக்காட்சியில் நிறையக் காணொளிகள் இருக்கின்றன. ஆனால் தோப்பிலைப் பற்றியும் இந்த வீட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே” என வருத்தப்பட்டார்.
தேங்காய்ப் பட்டணம் பற்றி அறியாதவர்களுக்குத் தோப்பிலின் கைபிடித்து உலாவரும் வாய்ப்பைத் தந்திருக்கிறது இந்நூல். தோப்பிலின் மூளையிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் தேங்காய்ப் பட்டணம் நிறைந்திருந்ததுபோலும். அதன் பூகோளவியல், சமூகவியல், வரலாறு, உணவு, கலை என அனைத்தையும் கதை சொல்வதுபோலச் சொல்கிறார். அவருக்கு மட்டும் எப்படி அத்தனை கதைகள் தெரிந்திருக்கிறதென்று வியப்பாக உள்ளது. தன்னுடைய பிறந்தநாள் குறித்துக்கூட அவரிடம் கதை இருக்கிறது. ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை சொல்கிறார்; ஒவ்வொரு மனிதருக்கும் கதை சொல்கிறார். ஒரு சான்று:
“கிராமத்தில் ஜேப்பில் (சட்டைப்பை) மை புரண்ட சட்டை அணிந்து, அதில் பேனா குத்திக்கொண்டு திரியும் சிலரைப் பார்க்கலாம். லீக்கடிக்கும் பேனாவாக இருப்பதால் ஜேப்பில் எப்போதும் மை புரண்டிருக்கும். எழுதப்படிக்கத் தெரியாத பெண்களுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதையும் வந்த கடிதங்களை வாசித்துக் கொடுப்பதையும் பணியாகக் கொண்டவர்கள் இவர்கள்.” (ப - 26)
ஒஸாமார்கள் (நாவிதர்கள்) பற்றிச் சொல்லும் கதையை நாம் பலமுறை கேட்டிருந்தாலும் சுவாரசியமாகவே உள்ளது. ஊர்க்கதைகளோடு இணைத்துத் தன்னுடைய வரலாற்றையும் சேர்த்தே சொல்கிறார். அக்கால இஸ்லாமியர்கள் பலரைப் போலவே தன் தந்தைக்கிருந்த ஆங்கிலக் கல்வி எதிர்ப்பு, பெரும் இன்னல்களுக்கிடையில் மலையாளக் கல்வியில் பட்டம் பெற்றது, குடும்ப வறுமை, ‘கடலோர கிராமத்தின் கதை’க்கு உருவான எதிர்ப்பு, வைக்கம் பஷீர் மீதான மரியாதை. சு.ரா, கி.ரா. உடனான நட்பு என நீரோட்டம் போன்ற நடையில் சொல்லிச் செல்கிறார்.
இந்நூல் தோப்பிலின் இரு கட்டுரைகள், இரு நேர்காணல்கள், தோப்பில் மனைவி, முதல் மகன், மருமகள் ஆகியோரின் நேர்காணல், இரண்டாம் மகனின் நினைவுப்பகிர்வு ஆகியவை அடங்கியது. இரண்டாம் கட்டுரை ‘மாப்பிள்ளைப் பாட்டுகள்’ பற்றியது. மலையாளமும் அரபும் கலந்த மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர் தமிழும் அரபும் கலந்த மாப்பிள்ளைப் பாட்டுதான் என்பது வியப்பாக இருந்தது. மாப்பிள்ளைப் பாட்டுகளின் தொடக்கக்கால வரலாற்றிலிருந்து சமகால வரலாறு வரை மொத்தமாய்ச் சொல்கிறார், ‘மாப்பிள்ளை’ என்ற சொல்லாடலுக்கான கதையோடு.
முதல் நேர்காணல் சந்திரிகா மலையாள இதழில் வெளிவந்த நீண்ட நேர்காணலின் மொழிபெயர்ப்பு. மலையாள இதழுக்கான நேர்காணல் என்பதால் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் போலிருக்கிறது. குறிப்பாக பெருமாள்முருகன் குறித்த கேள்விக்கு தோப்பிலின் பதில் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ தமிழில் வெளியான நூலொன்றின் (‘மஞ்சக் குலம் மாலா’) பாதிப்பில் எழுதப்பட்டதென்பதும் வியப்பாகவே இருந்தது.
தோப்பிலின் இறுதி நாட்களில் உறவினர்களின் மனநிலை; முதல் மகன் கூடவே இருந்தது; இரண்டாம் மகன் இறுதிவரை வர முடியாமல் போனது; தோப்பிலின் நிறைவேறாத கடைசி ஆசை போன்ற வலிகள் குடும்பத்தினரையும் தாண்டி நமக்கும் பரவுகிறது.
நூலாக்கத்தில் செம்மையாக்கம் முதன்மையான பணியென்பதை பலரும் உணர்வதில்லை என்பதற்கு இந்நூலும் ஒரு சான்று.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com