கல்வித்துறைக் குழப்பங்கள்
தலையங்கம்
கல்வித்துறைக் குழப்பங்கள்
கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல துறைகளில் கல்வித்துறை மிகவும் முக்கியமானது. நாட்டின் எதிர்காலமான சிறுவர்களும் பதின்வயதினரும் தொடர்புடையது கல்வித்துறை. இன்றைய அசாதாரணமான சூழலில் மாணவர்களின் நலன்சார்ந்து திட்டமிடுவதும் வழிகாட்டுவதும் மக்கள்நல அரசின் கடமை. ஆனால் அரசு தனியார் நலன் சார்ந்தே சிந்திக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. பத்தாம் வகுப்புத் தேர்வு தொடர்பாகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் இழுபறி நிலை நீடித்தது. தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி நாளொரு செய்தி. மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பித் தவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என அரசு முனைப்பு காட்டியமைக்குக் காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள்தான்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்றாலும் அதை வைத்துத்தான் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை நடக்கும். மதிப்பெண்ணுக்கு ஏற்ப மாணவர்களிடம் பெறும் நன்கொடைத் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தேர்வே நடக்கவில்லையென்றால் எதைவைத்து நன்கொடை பெற முடியும்? அந்த நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தேர்வு நடத்துவதுபற்றித் தொடர்ந்து குழப்பமான முடிவுகளை அரசு எடுத்துக்கொண்டிருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வை ரத்து செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேர்வை ரத்து செய்த பிறகு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களின் மதிப்பெண்ணைக் கணக்கிடலாம் என்று வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் போலி ஆவணங்கள் மூலமாகத் தம் மாணவர்களின் மதிப்பெண்களை மிகுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கும் ஓரிடம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில்தான் தனியார் பள்ளிகள் மதிப்பெண் மோசடியில் ஈடுபடுகின்றன. அரசு அதைக் கண்டும் காணாமல் இருக்கின்றது. அதேபோலப் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் இன்னும் சில நடக்காமல் இருக்கின்றன. அவற்றைக் குறித்துத் தெளிவில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சில தேர்வுகள் நடக்காத நிலையில் எவ்விதம் தேர்வு முடிவுகளை வெளியிடப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.
பல தனியார் பள்ளிகள் தம் வருமானத்தை இழக்க மனமில்லாமல் இணைய வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாலர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரைக்குமே இவ்வகுப்புகள் நடக்கின்றன. பல மாணவர்கள் அன்றாடம் பல மணி நேரம் இவ்வகுப்புகளில் அமர வேண்டிய மனச்சங்கடத்தில் இருக்கிறார்கள். இணைய வழித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இவற்றால் சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுவது பற்றிக் குறைந்தபட்ச அக்கறையோ புள்ளிவிவரச் சேகரிப்போ நடவடிக்கையோ இல்லை. இவை அனைத்தும் பெற்றோர்களிடம் பணம் கறக்கச் செய்யும் செயல்களே. பேரிடர் காலத்திலும் தம் லாபத்தை இழக்க விரும்பாத தனியாரின் சுரண்டல் இது. இச்சந்தர்ப்பத்தில் இணையவழி வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது தொடர்பான சிந்தனையே எழுந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் அரசு பள்ளிக்கூடங்களில் சமூகத்தின் அடித்தட்டு மாணவர்கள் பயின்று வருவதை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த மாணவர்கள் இணைய வசதிகளைப் பெறுவது சுலபமானதன்று. அது ஏழைப் பெற்றோர்களுக்குக் கூடுதலான சுமையை ஏற்றுவதாக இருக்கும். இந்த வசதியின்மையும் இயலாமையும் சேரும்போது மாணவர்களின் மத்தியில் சமச்சீரான தன்மை இல்லாதுபோகும்.
உயர்கல்வியில் கலைக்கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இன்னும் பருவத் தேர்வுகளே நடைபெறவில்லை. அவை நடக்குமா நடக்காதா என்பதைப் பற்றியும் தெளிவில்லை. இப்போது ஐம்பது சதவீத ஊழியர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிலையில் விவாதங்கள் நடத்திப் பருவத் தேர்வுகள் தொடர்பான முடிவுகளை அறிவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது எனத் தெரியவில்லை. மார்ச் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த பருவத்திற்கான பாடங்கள் முடித்தல், அக மதிப்பீட்டுத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளே நடைபெறவில்லை. தம் கல்வி தொடர்பாக அரசு என்ன நிலை எடுக்கும் என்பது பற்றி மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பருவத் தேர்வு ரத்து என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நடக்கும் என்றும் குழப்பமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
கொரோனா காலகட்டம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும் என்று உறுதியாகத் தெரிகிறது. ஆகவே தேர்வு நடத்துவது சாத்தியமில்லை. இச்சூழலில் கல்வியாளர்களின் கருத்தைக் கேட்டு அரசு தெளிவான முடிவை எடுத்து அறிவிப்பதில் ஏன் சுணக்கம் என்பது தெரியவில்லை. இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பினாலும் கடந்த பருவத்தின் வேலைகள் பாக்கியிருக்கும். அவற்றைச் சரி செய்து முடித்துப் புதிய பருவத்தைத் தொடங்குவது எளிதல்ல. முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் முடியவே மூன்று மாதங்கள் தேவைப்படும். கொரோனா காலகட்டத்தில் ஒரு பருவத்தையோ ஒரு கல்வியாண்டையோ முழுமையாக நீக்கிவிடுவது குறித்துக்கூட அரசு பரிசீலிக்கலாம். பல்வேறு குழப்பங்களுக்கிடையே மாணவர்களைத் தவிக்கச் செய்வதால் நேரும் மன நெருக்கடிகளைவிட ஓராண்டையோ ஒரு பருவத்தையோ கல்வியிலிருந்து அகற்றிவிடுவது பெரிதல்ல. பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து தெளிவான முடிவெடுத்து அரசு அறிவித்தால் அதற்கேற்பத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு மாணவர்கள் நிம்மதி அடைவர்.
ஆனால் அரசு கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் தவிர பெற்றோர் தரப்பு, ஆசிரியர் தரப்பு, கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எந்தத்தரப்புடனும் விவாதிப்பதாகத் தெரியவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களின் செல்வாக்கு மிகுதியும் ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் நிதிக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்களிக்கின்றன என்பதும் அரசியல்வாதிகள் பலருக்குச் சொந்தமாகக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். அதனால் அரசின் முடிவுகள் தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் சார்ந்து இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. பேரிடர் காலத்தில் மக்கள் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்து அறிவித்தல் முக்கியமானது. அது மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகும். அப்போதுதான் மக்கள் குழப்பம் இல்லாமல் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.
இன்னும் நெருக்கடி முற்றிய பின்னர் முடிவெடுத்து அறிவிப்பதை விடுத்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கல்வித்துறையின் ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் ஆராய்ந்து அரசு முடிவுகளைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் நேரும் சமூகப் பதற்றம் அந்த இடரினால் மட்டும் ஏற்படுவதல்ல. தம் எதிர்கால வாழ்வைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் பதற்றமே மிகுதி. அப்பதற்றம் தணிந்தால் பேரிடரை எதிர்கொள்வது மக்களுக்கு எளிதாக இருக்கும். அவ்வகையில் கல்வித்துறைப் பிரச்சினைகளை அரசு நோக்க வேண்டும்