தனித்தலையும் நட்சத்திரம்
கதை
தனித்தலையும் நட்சத்திரம்
கார்த்திக் பாலசுப்ரமணியன்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
தூரிகையால் தொட்டுவைத்த கருப்பு மசியெனப் புள்ளியாய்த் தொடங்கி மெதுவாகப் பற்றிப் படர்ந்து பரவியது இருள். இன்னதெனப் பிரித்தறிய இயலா வண்ணம் இருளின் ரேகைகள் எங்கெங்கும் வியாபித்திருந்தன. ஆள் விழுங்கும் கருமையில் அவள் எதையோ தேடிச் சலித்துக்கொண்டிருந்தாள். மலரினும் மெல்லிய அவளின் பாதங்கள் இரண்டும் தரையில் பாவியிருக்கவில்லை. வெளிச்சக் கீற்றில் தறிக்கெட்டு அலையும் சிறுதுகளென அவள் மிதந்துகொண்டிருந்தாள். முடியெது அடியெது என்று அடையாளம் காணவியலாததொரு தனித்த வெளி. முடிவில்லாமல் அவளின் தேடல் நீண்டுகொண்டிருந்தது