எப்போது அகதிகள் இலங்கைக்குத் திரும்புவார்கள்?
புத்தகப் பகுதி
எப்போது அகதிகள் இலங்கைக்குத் திரும்புவார்கள்?
அகதியின் துயரம்
(ஆய்வு நூல்)
வி. சூரியநாராயண்
தமிழில்: பெர்னார்ட் சந்திரா
ரூ. 160
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும்
வி. சூரியநாராயணின் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி
அகதிப் பிரச்சினை எப்போதுமே சிக்கலாகத் தோன்றினாலும் தீர்வு காணப்பட முடியாதது அல்ல. நமது அனுபவத்தில் இதற்கு இரண்டு அடிப்படை முன் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன. அகதிப் பிரச்சினை உருவாவதற்கான காரணிகளைக் களைந்து அமைதியை உருவாக்கும் அரசியல் தீர்க்கமும் அமைதிக்கு அழுத்தம் தந்து உறுதி செய்யும் சர்வதேச மனஉறுதியும்தாம் தேவை. அமைதியை உறுதி செய்வதென்பது சண்டைகளிலிருந்து மீண்டுவந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் நீதி, மனித உரிமைகள் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து வாழ்வாதார முன்னேற்றம் பெறுவதாகும்.
- சடாகோ ஒகாதா.
‘எவ்வளவு காலம் நாங்கள் இன்னொருவர் நிலத்தில் வாழ்வது?’ சில ஆண்டுகளுக்கு முன் தமிழீழ அரசவைக் கவிஞர் காசி ஆனந்தன் பாடியது: ‘கிளியும் மரங்கொத்தியும் தங்கள் கூடுகளுக்குச் சென்றுவிடும். ஆனால் தமிழ் அகதிகள் யாம் செல்ல முடியாது’.
வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போற்றும் காசி ஆனந்தன், தமிழ்நாட்டில் வாழ்கிறார்; சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற அரசியலில் ஈடுபாடு கொண்டவர். தமிழீழ விடுதலை வேட்கையாளர்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் நான்காம் ஈழப் போரில் இலங்கை இராணுவத்தின் கை ஓங்கியது. புலிகள் அழிக்கப்பட்டார்கள். பிரபாகரன் உட்படப் பெரும்பாலான புலித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அத்தோடு மிகத் துயரமான ஒரு பின்விளைவையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழர்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்குமான போராட்டம் பல பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதுதான் அது.
இலங்கை அரசு போருக்குப்பின் உள்நாட்டில் ஆயிரக்கணக்கில் சிதறிப்போனவர்களை மறுவாழ்வுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியது. போர் நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடந்தது. இராணுவத்தின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுத் தீவிர பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட்டு நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முதலில் கிழக்கு மாகாணம் பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, வடக்கு மாகாணமும் மக்கள் வசிக்கத்தகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர், போருக்குப் பிறகும் பல ஆண்டுகளாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசின் முன்னுரிமை என்றார். தமிழ்நாட்டிலிருக்கும் அகதிகளைத் திருப்பிக்கொண்டுவருவது பிறகு மேற்கொள்ளப்படும் எனச் சொன்னார்.
அகதிகளைத் திருப்பியனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள்
அகதிகளைத் திரும்பச் செய்வதில் தமிழக அரசு, சென்னையிலுள்ள இலங்கையின் துணை ஹைகமிஷன், சென்னையிலும் கொழும்பிலுமிருக்கும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் அதிகாரிகள், அமைப்புகள் அகதிகள் நாடு திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். சென்னையிலுள்ள இலங்கை ஹைகமிஷன் அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவது, திருமண, பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற சேவைகளை விரைவுபடுத்தியிருக்கின்றனர். இந்திய அரசாங்கம் ‘வெளிச் செல்லும் அனுமதிச் சீட்டு’ வழங்கும் பணியை மாநில அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறது. ஐ.நா உயர் ஆணையம் சென்னையிலிருந்து கொழும்புக்கு, திருச்சியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் விமானக் கட்டணத்தையும் 50 கிலோ எடை சுமைக் கட்டணத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆணையம் உள்ளூர்ப் பயணச் செலவுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 750 வீதம் தருகிறது. கொழும்பில் உள்ள ஆணைய அதிகாரிகள் அகதிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கின்றனர். அவ்வாறான ஊர்கள் பாதுகாப்பான பகுதிகள்தானா என்பதை ஆணைய அதிகாரிகள் உறுதி செய்துகொள்கின்றனர். இயல்பாகவே அகதிகள் திரும்பிச்சென்றது கிழக்குப் பிராந்தியப் பகுதிகளுக்குத்தான். பின்னர் வடக்குப் பகுதிகளும் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டன.
திரும்பிச்சென்றவர் சிறுதுளியே
அகதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டபோதும் அகதிகள் திரும்பிச்செல்வது சொற்ப அளவிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. UNHCRஇன் சென்னை அலுவலகத்தின் 2002 முதல் 2018 வரையிலான ஆண்டுகளுக்கான திரும்பிச்சென்றவர்களின் புள்ளிவிவரங்கள் (இந்த அமைப்பின் பணிகள் 2002இல் தொடங்கின) கீழ்க்காணும் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
அகதிகளுடன் நான் பேசியபோது அறிந்துகொண்ட ஒரு விஷயம், இலங்கையில் நிலமோ பிற வாழ்வாதார வழிகளோ இருக்கின்றவர்கள் மட்டுமே திரும்பிச்செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான அகதிகள் நிலமற்ற தொழிலாளர்களாதலால் வேலைவாய்ப்பு, சொந்த வீடு இல்லாதவர்களும் இலங்கைக்குப் போக விரும்பவில்லை.
ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் (OfERR) இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்குமிடையே கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டால் அகதிகள் திரும்பிச்செல்வது அதிகரிக்கக்கூடும் எனக் கருதுகிறது. அகதிகளின் பார்வையில், கப்பலில்தான் உடைமைகளையெல்லாம் செலவில்லாமல் கொண்டு செல்ல முடியும். 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பின் இந்திய அரசு இதை அனுமதித்திருந்தது. அச்சமயம் சந்தர்ப்பவாத வியாபாரிகள் அகதிகளுக்குச் சிறிய கமிஷன் தந்து ஏராளமான லுங்கிகளை அவர்கள் வழியாக இலங்கைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தியாவில் தங்கியிருக்கும்போது அகதிகள் பல பொருட்களை - அலமாரிகள், மேசைகள், நாற்காலிகள், மின்விசிறிகள், சைக்கிள்கள் இப்படிப் பல - சேர்த்துவைத்துள்ளனர். இவற்றை அவர்கள் இலங்கைக்குக் கொண்டுசெல்ல விரும்புகின்றனர். அவற்றை இங்கு விற்றுவிடுவது சுலபம். ஆனால் மறுபடியும் இலங்கையில் அவற்றை வாங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லை. கப்பல் போக்குவரத்து போவதற்கு ஏதுவாக அமைந்தாலும், அகதிகளின் மறுபெயர்ச்சி சொந்த ஊரில் அவர்கள் தங்குவதற்கான இருப்பிட வாய்ப்பையும் வேலைவாய்ப்பையும் சார்ந்ததாகவே இருக்கிறது. அகதிகள் இலங்கையிலுள்ள தமது உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதால் அங்கு வீட்டுவசதியும் வேலைவாய்ப்பும் குறைவு எனத் தெரிந்துவைத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டுச் சூழல்
அகதிகள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கியிருப்பதற்கு இங்கிருக்கும் இணக்கமான சூழலும் காரணமாக இருக்கிறது. அரசோ எதிர்க்கட்சிகளோ அகதிகள் திரும்புவதைப் பிரச்சினையாக்கவில்லை. அவ்வப்போது சில கட்சிகள் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று சொல்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அகதிகளுக்கு என்னென்ன உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டும் என்பதுபற்றி விவாதங்கள் எழுகின்றனவே தவிர அகதிகளை உருவாக்கிய இலங்கை அரசு செய்ய வேண்டியதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இப்போதைய முக்கியத் தேவையானது இலங்கை அரசு வேலைவாய்ப்புகள் குறித்த முறையான கணிப்புகளைச் செய்து அதற்கேற்றாற்போல் இந்திய முகாம்களில் அகதிகளுக்குப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகும். அகதிகளுக்குத் தச்சுவேலை, கட்டடவேலை, மின் பழுதுபார்ப்பு, கம்பி நடுவது, மருத்துவ உதவியாளர் போன்றவற்றில் திறனை ஏற்படுத்தி அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச்செல்லும்போது வேலை செய்து பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்குள் குவிந்தவர்களுக்கு இங்கு 50 ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விப்புலங்களிலும் தங்குமிடங்களிலும் ஒதுக்கீடு உரிமை வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்னுதாரணத்தை இலங்கை அரசும் பின்பற்றலாம்.
இந்தியாவின் முன்னாள் தோல்விகளையும் இலங்கை கணக்கிலெடுத்துக்கொள்ளலாம். 1964இல் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தான பின் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்குவந்து இந்தியக் குடியுரிமை பெறுவார்கள் என்பதை இந்தியா கணித்திருக்க வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் 1968இல் தொடங்கி ஜூலை 1983 வரை தொடர்ந்தது. இந்தியா அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து ஆற்றலுள்ள குடிமக்களாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது துயரமான வரலாறு. ஒரு சிறு அளவிலானவர்களுக்கு அரசு தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளித்ததைத் தவிர ஏறத்தாழ 80 சதவிகிதத்தினருக்குத் தொழில்கள் தொடங்க ரூ. 50,000 மட்டும் கடனாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு எந்தவிதமான தொழில் முன்னனுபவமும் திறமையும் இருக்கவில்லை. அவர்களின் தொழில்கள் நசிந்துபோய்ப் பெரும்பாலானோர் நீலகிரியிலும் கொடைக்கானலிலும் அடிமைத் தொழிலாளிகளானார்கள். வந்தவர்களுக்குக் கசப்பான வறுமையாயிற்று. ‘நான்கு காற்பகுதி’களில் டி.எஸ். எலியட் சொல்வதுபோல, ‘எங்களுக்கு அனுபவம் ஏற்பட்டது. ஆனால் அதன் பொருளைத் தவறவிட்டுவிட்டோம்’ என்று வரலாறு நம்மைச் சுட்டிக்காட்ட விட்டுவிடலாகாது.
தமிழ்நாட்டின் போட்டி அரசியலும் அகதிகள் மீதான தாக்கமும்
நான்காவது ஈழப் போர் உச்சத்தின்போது தமிழ்நாட்டில் திமுக அதிகாரத்திலும் மத்திய ஆட்சியில் பங்கும் வகித்தது. முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டு, அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற அவர் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்பதாகும். அவரது அரைநாள் உண்ணாவிரதம் உட்பட அவரது செயல்பாடுகள் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றவில்லை.
போர் முடிந்தபிறகு தனது கவுரவத்தை மீட்பதற்காக அகதிகளின் அவலத்தில் அசாதாரணமான ஈடுபாட்டை திமுக காட்டியது. அண்ணாவின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருணாநிதி, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். குடியுரிமை வழங்குவதில் இருக்கும் ஏகப்பட்ட சிக்கல்களைச் சுட்டிக்காட்டியபோது, அவர் கோரிக்கையை மாற்றி ‘நிரந்தர வாசிகள்’ என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கோரினார்.
அகதிகளில் ஒரு பகுதியினரின் உணர்வுகள் இந்தியா டுடே தமிழ் இதழில் கே. சச்சிதானந்தன் வெளியிட்ட ஒரு கட்டுரையில் பிரதிபலிக்கிறது.
எப்போது அகதிகள் இலங்கைக்குத் திரும்புவார்கள்? எங்களுக்கு இந்தியக் குடியுரிமையும் வேண்டாம். இரட்டைக் குடியுரிமையும் வேண்டாம். நாங்கள் விரும்புவதெல்லாம் நேபாளிகளுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் அதே அந்தஸ்துதான். அப்போது நாங்கள் இந்தியாவுக்குள் சுதந்திரமாக எங்கும் செல்லவோ உயர்கல்வி பயிலவோ விரும்புகிற வேலைகளைச் செய்யவோ முடியும்.
சச்சிதானந்தன் சொல்லத் தவறிய உண்மை எதுவென்றால், நேபாளிகள் இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாம் நேபாளத்தில் இருக்கும் இந்தியர்களும் அனுபவிக்கிறார்கள் என்பதைத்தான். இலங்கை அரசு இந்தியர்களுக்கு இதேபோன்ற உரிமைகளை மறு ஈடாக வழங்குமா? அது ‘சூரியன் மேற்கே உதிக்கும் என்ற எதிர்பார்ப்பதைப் போன்றது.’
முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் விவகாரம் இந்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் இதில் முன்னேற்றம் இருப்பதாகத் தகவல் இல்லை.
கருணாநிதி தனது சில சகாக்களை அகதி முகாம்களுக்கு அனுப்பி அவர்களுடன் பேசி அங்குள்ள உண்மை நிலவரத்தைத் தனக்கு அளித்திடப் பணித்தார். அவர் எஸ்.சி. சந்திரஹாசனையும் (OfERR) சச்சிதானந்தத்தையும் சந்தித்துப் பேசினார். பிறகு முதல்வர் அகதி முகாம்கள் மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடியை அறிவித்தார்.
OfERRஇன் நிறுவனர் எஸ்.சி. சந்திரஹாசன் இலங்கைக்குத் திரும்பிச்சென்ற 10,000 அகதிகள் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், இது பிற அகதிகளைச் சீக்கிரமாக அங்கு போவதற்கு ஊக்குவிக்கும் எனவும் கருதுகிறார். அகதிகள் தங்கள் உடைமைகளை எல்லாம் கொண்டுசெல்வதற்கு வசதியாக இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தகுந்த உதவிகளோடு படிப்படியாக அகதிகள் இலங்கை திரும்புவதற்கு வழி செய்யும் வகையில் இரு நாடுகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டாக வேண்டுமென்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சந்திரஹாசன் மேலும் கூறுகிறார்:
தங்கள் வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொள்ள வேலை வாய்ப்புகளும் முழு பாதுகாப்பும் உள்ளது. தங்கள் நிலங்களைப் பெற்றுக்கொள்ளலாம்; வேலை தேடிக்கொள்ளலாம்; எல்லாவற்றிற்கும் மேலாக தம் சொந்த நாட்டில் முழுமையான குடிமக்களாக வாழும் திருப்தியை அடையலாம்.
சந்திரஹாசன் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவற்றின் தாராளமான உதவிகளுக்கும் நன்றி கூறும்போது:
இந்தியாவும் தமிழ்நாடும் எங்களைக் கவனித்துக்கொண்டன. அதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆனால் வளமையான வாழ்வைக் கனவு கண்டு ஆஸ்திரேலியா போன்ற தூர நாடுகளுக்குச் செல்வதற்கு அபாயகரமான படகுகளில் அனுப்பிவைக்கும் கடத்தல் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகளுக்கு இரையாகாமல் தப்பிக்க நாங்கள் தாமதமின்றி எங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும்,
என்கிறார்.
சந்திரஹாசன் வெளிப்படுத்தும் நம்பிக்கையை விவரமறிந்த இந்தியப் பத்திரிகையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கையிலிருந்து கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஆர்.கே. இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறார்:
2015இல் திரும்பிச்சென்ற 315 அகதிக் குடும்பங்களின் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. அவர்கள் நிலைமை உண்மையாகவே மோசமாக உள்ளது. பலர் உறவினர்களோடும் நண்பர்களோடும் தங்கி, தமது வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள் என வடக்குப் பிராந்தியச் சூழ்நிலையைக் கண்காணிக்கும் அதிகாரி கூறுகிறார். ஏதாவது சிறப்பான வாழ்வைக் கண்டடைந்த குடும்பம் உண்டா என்றால் அவர் இல்லை என்ற பதிலையே தருகிறார். மாறாக, திரும்பிச்சென்ற அகதிகள் மறுபடியும் இந்தியாவுக்கே வர விரும்புவது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இலங்கைக்குத் திரும்பிச்சென்ற சில அகதிகள் சட்ட விரோதமான முறையில் மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபடியும் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டு முகாம்களில் அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் வந்திருக்கின்றனர். ஆனால் இது நடைமுறையிலுள்ள விதிகளின்படிச் சாத்தியமில்லாதது. எனவே அவர்கள் முகாம்களுக்கு வெளியே தங்கி, தினக் கூலிகளாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மிகவும் எளிமையான தீர்வுகளைப் பொதுப்படையாக முன்வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 1983ஆம் ஆண்டிலிருந்து தனது அக்கறையில் இருப்பவர்களாக அகதிகளைப் பாவிக்கும் சந்திரஹாசனின் பார்வையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அகதிகளுக்குள் வெவ்வேறு பார்வைகள் இருக்கின்றன. இலங்கைக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும். இந்தியக் குடியுரிமையை நாடும் மலையகத் தமிழர்களுக்கு என்ன செய்வது? இந்தப் பிரச்சினை 1955ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியமைத்திருக்கும் இந்தியாவின் தற்போதைய முடிவின் அடிப்படையில் மிகவும் சிக்கலாக மாறியிருக்கிறது.