வாழ்க்கையின் துல்லிய ஆவணம்
புத்தகப் பகுதி
வாழ்க்கையின் துல்லிய ஆவணம்
மனதில் நிற்கும் மாணவர்கள்
(கட்டுரைகள்)
பெருமாள்முருகன்
ரூ. 240
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் பெருமாள்முருகனின் நூலுக்கு ஆர். சிவக்குமார் எழுதிய அணிந்துரையிலிருந்து...
கல்விப் புலம் சார்ந்த அறிஞர் ஒருவரைக் கௌரவிக்கும் வகையில் அவருடைய பங்களிப்பைப் பற்றிச் சக ஆசிரியர்களோ மாணவர்களோ எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அவ்வறிஞரின் வாழ்நாளில் வெளியாகும் நூலுக்கு Fes tschrift என்று பெயர். இது ஜெர்மன் மொழிச் சொல். ஆங்கிலத்தில் அதற்கு நிகரான சொல் இல்லாததால் அதே வடிவில் ஆங்கிலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. நண்பர் பெருமாள்முருகனின் மாணவர்கள் சிலர் சில ஆண்டுகளுக்கு முன் அப்படியான ஒரு நூலை ‘எங்கள் ஐயா’ என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். தமிழ்க் கல்விப்புலச் சூழலில் அப்படி ஒரு நூல் வருவது மிக அரிது. ஒன்றிரண்டு வந்திருக்கலாம். இப்போது களம் மாறியுள்ளது. மாணவர்கள் சிலரோடு தனக்குண்டான சுவாரசியமான அனுபவங்களைக் குறித்து முருகன் எழுதியுள்ள ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ என்னும் இந்த நூல் தமிழ் அறிவுலகத்தில் அதன் வகையில் முதல் நூல். எனவே வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இவ்வகை நூலுக்கு இன்னும் தமிழிலோ ஆங்கிலத்திலோ துறைச்சொல் பிறக்கவில்லை.
ஆசிரியப் பணியில் இரண்டு வசீகரங்கள் உண்டு. பணிக்காலம் முழுக்க இளமையும் குறும்புத்தனமும் நிரம்பி வழியும் மாணவர்களோடு வாழலாம். நம் மனத்தையும் இளமையாக வைத்துக்கொள்ளலாம். இதன் காரணமாகவே ஆசிரியர்களுக்கு நீண்ட ஆயுள் உத்திரவாதம். அடுத்து, கிடைக்கும் அதீத ஓய்வு. படிக்கலாம், எழுதலாம், பிரயாணம் போகலாம், குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடலாம். மாணவர்களுடைய குழந்தைகளின் திருமணத்துக்குக்கூட அழைப்பு வரும். தலைமுறை தாண்டி உறவு நீளும். வேறு பணிகளில் உள்ளவர்களுக்கு இவை சாத்தியமே இல்லை.
ஆசிரியப் பணியை அறப்பணி என்று எல்லாரும் சொல்கிறார்கள். பழங்காலக் குருகுலக் கல்வியை வேண்டுமானால் அப்படி அழைப்பது பொருத்தமாக இருக்கலாம். நம் சூழலில் அனேகமாக அந்த ஏற்பாட்டின் கடைசி இணை மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் உ.வே.சா.வுமாக இருக்கலாம். அப்பணிக்கென்று ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதே அது ஒரு தொழில் என்று ஆகிவிட்டது. தொழில் என்பது இழிசொல் அல்ல. தொழில் என்னும்போது அதைச் செய்வதற்கான தகுதிகளை அது கோரும். அதை professional ஆகச் செய்ய வேண்டும் என்று பொருள். அதாவது உரிய தகுதியோடு, ஒழுங்கோடு, மனமார்ந்து அதைச் செய்ய வேண்டும். ஆசிரியத் தொழிலில் இது மட்டும் போதாது. தொடர்ந்த கற்றல், மாணவர்கள்மீது கல்வியையும் தாண்டிய அக்கறை போன்றவை வேண்டும். வகுப்பறையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இதைச் செய்ய ஆசிரியர், குறிப்பாக இலக்கிய ஆசிரியர், மெய்ப்பாடுகளில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். இவற்றை அடைந்தவர் அல்லது அடைய உளமார முயல்பவரே நல்ல ஆசிரியர். கொழுத்த ஊதியம் வாங்கிக்கொண்டு அறப்பணி என்ற பதத்தைக் கவசமாகக் கொண்டு அறமற்ற காரியங்களைச் செய்பவர்களை ‘மக்கட் பதடி’யென ஒதுக்கிவிடலாம். ஈடுபாடு இல்லாதவர்கள் இந்தப் பணியைத் தேர்ந்தெடுக்கவே கூடாது. கெடுவாய்ப்பாக, நம் சமூக நிலை அதற்கு உகந்ததாக இல்லை.
பொதுவாகக் கல்லூரி ஆசிரியர்களை மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம். பாடத்திட்டத்தில் உள்ளதை மட்டும் சாதுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகிறவர்கள் முதல் வகை. இவர்கள் மாணவர்களை வகுப்புக்கு வெளியே பார்த்தால் புன்னகை பூப்பது அபூர்வம். உள்ளே அதைவிட அபூர்வம். இரண்டாவது வகையினர் வகுப்பைத் தாண்டி மாணவர்களோடு லேசான நட்பு காட்டுவார்கள். மாணவர்கள் கேட்டால் மட்டுமே பாடம் தாண்டிச் சில வார்த்தைகள் பேசுவார்கள். கடைசி வகையினர் வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களைத் தோழமையுடன் நடத்தி அக்கறையுடன் பாடமும் அதைத் தாண்டியும் கற்பிப்பார்கள். முருகன் இந்த மூன்றாம் பிரிவில் இருப்பதால்தான் இப்படி ஒரு நூலை எழுத முடிந்திருக்கிறது.
அவருடைய பல அனுபவங்கள் மொழி ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் பிற துறை ஆசிரியர்களுக்கும் பயனுள்ளவையாக இருப்பது கூடுதல் விசேஷம். ஆசிரியர்கள் சிலர் எப்போதும் வகுப்பறைக்குள்ளும் வளாகத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஓர் அதிகாரச் செங்கோலையும் எல்லாம் தமக்குத் தெரியும் என்ற மமதையையும் தூக்கிக்கொண்டு வளைய வருவார்கள். மாணவர் அறிவுப் பிச்சையை யாசகம் கேட்கும் அடிமை என்ற மனோபாவம் அவர்களுக்கு இருக்கும். மாணவரிடமிருந்தும் நாம் கற்கலாம் என்பதே அவர்களுக்குத் தோன்றாது. தன் மாணவர்களிடமிருந்து கற்கும் வாய்ப்பை முருகன் நிராகரிப்பதே இல்லை.
என் அனுபவமாக ஒரு சம்பவம். பணிக்கு வந்து ஐந்தாண்டுகள் கழித்து (1982) ஆங்கில ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி ஒன்றைச் சென்னையில் மேற்கொண்டேன். அரசு மகளிர் கல்லூரி ஒன்றுதான் மையம். மாதிரிக் கற்பித்தல் வகுப்பை நடத்துவதும் பயிற்சியின் ஒரு பகுதி. அது முதலாண்டு ஆங்கில இலக்கிய வகுப்பு. Einsteinஇன் பெயரை உச்சரிக்க வேண்டிவந்தது. நான் ‘ஐன்ஸ்டின்’ என்று உச்சரித்தவுடன் முதல் பெஞ்ச் மாணவி ஒருவர் எழுந்து, ‘you mean ஐன்ஸ்டைன்?’ என்றார். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு அன்று மாலையே உச்சரிப்பு அகராதியைப் பார்த்து அந்த மாணவி சொல்வதுதான் சரி என்று உணர்ந்து என்னைத் திருத்திக்கொண்டேன். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால் மொழி ஆசிரியர்க்கு இது மிக முக்கியம். முதல் வாய்ப்பிலேயே கற்றுக்கொள்ளவோ திருத்திக்கொள்ளவோ வேண்டும்.
கல்லூரித் தமிழாசிரியர்கள் எப்பவும் என் பிரத்தியேகக் கவனத்துக்கு ஆளாகிறவர்கள். அவர்களில் நெருங்கிய நண்பர்கள் பலருண்டு. என்ன, நவீனத்துவத்துக்கு உள்ளே வர - வாழ்க்கையிலும் சரி, இலக்கியத்திலும் சரி -தயங்குவார்கள். ஏதோ ஒரு மனத்தடை இருக்கும். நான் பல ஆண்டுகள் பணியாற்றிய கல்லூரியில் மாணவிகள் பாவாடை, தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. முதல் எதிர்ப்பு தமிழாசிரியர்களிடமிருந்துதான் வந்தது. இப்படிக்கூட நடந்ததா என்று இன்று அது விசித்திரமாகத் தோன்றலாம். கயல்கள் நீந்தும் நீரோடைகளும் மான்கள் மேயும் சோலைகளும் சூழக் குடில்களே வகுப்பறைகளாக இருந்தால் அவர்களில் சிலர் மகிழக்கூடும். (உண்மையில் அப்படியிருந்தால் மிக ரம்மியமாக இருக்கும் என்பது வேறு விஷயம்!) முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இது. தற்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.
முருகன் எப்போதுமே விதிவிலக்கானவர். உள், வெளி மாற்றங்களை மிக இயல்பாகச் செரித்துக்கொண்டு அவற்றோடு பயணிக்கும் மனோபாவம் கொண்டவர். இத்தனைக்கும் உடையிலும் நடையிலும் அவர் நவீன மோஸ்தரைக் கடைப்பிடிப்பவர் என்று சொல்ல முடியாது. மாணவர்களின் ஆடை, தலைமுடியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்காமல், அவற்றைக் கேலி செய்துகொண்டே மேலே போய்விடுகிறார். செல்பேசியில் பாடங்களின் pdf வடிவத்தைச் சேமிக்கலாம் என்பதை மாணவனிடமிருந்தே கற்று வகுப்பறையில் நடைமுறைப்படுத்துகிறார். நூலைப் படித்து முடித்தவுடன் இரண்டு அம்சங்கள் என்னைக் கவர்ந்தன. பெருமாள் முருகன் பிரபல தமிழ் எழுத்தாளர். ஓரிரண்டு மறைமுகக் குறிப்புகள் தவிர, அவையும் மாணவர் சார்ந்தவையே. எங்குமே தன் பிரபலத்தை, தன் படைப்புகளை அவர் காட்டிக்கொள்வதே இல்லை. முழுக்க முழுக்கப் பெ. முருகன் என்ற கல்லூரித் தமிழாசிரியர்தான் நூலில் வெளிப்படுகிறார். அடுத்து, ‘எங்கள் ஐயா’ நூலில் கட்டுரைகள் எழுதிய மாணவர்களைக் குறித்து இந்நூலில் பேசுவதே இல்லை. வேண்டுமென்றே அவர்களைத் தவிர்த்திருக்கிறார். காரணம் வெளிப்படையானது.
தொடக்கத்திலிருந்தே முருகன் கிராமப்புற, சிறுநகர அரசு கல்லூரிகளிலேயே பணியாற்றி வருகிறார். இங்கே படிப்பவர்கள் விளிம்பு நிலையினர். வறுமையின் கோர முகம் குழந்தைப் பருவத்திலிருந்தே இவர்களுக்கு மிகப் பரிச்சயமானது. முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வருகிறவர்கள். அநேகமாக மாணவர்கள் அனைவருமே பகுதி நேர அல்லது இரவுப் பணி செய்தே தம் கல்விக் கட்டணத்தையும் பிற செலவுகளையும் ஈடுகட்டுகிறவர்கள். தொழிலாளி - மாணவர்கள் என்றே இவர்களை அழைக்கலாம். நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரிப் பக்கத்து மாணவர்கள் சிலர் கல்லுரிப் பருவத்திலேயே திருமணமும் செய்துகொள்வார்கள். மாணவிகள் கல்லூரிக்கு வருவதே பெரும் சாதனை. இவர்களில் சிலரும் மாலைவேளைகளில், விடுமுறை நாள்களில் வயல்வேலை செய்பவர்கள்தாம். இப்படியான குழுவினரோடு முருகன் வாழும் வாழ்க்கையே இந்நூல்.
இவருமே இப்படியான பின்புலம் கொண்டவர் என்பதால் அவர்களின் நிலையை நன்கு புரிந்துகொண்டவர். அவர்களில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொள்வதால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் உண்மையான அக்கறையுடன் மேற்கொள்கிறார். பட்டப் படிப்பை முடிக்கத் தூண்டுதல், மேற்படிப்புக்குத் திசைகாட்டுதல் என்ற இரண்டு தளங்களிலும் அவர்களுக்கு வழித்துணையாக இருக்கிறார். இவற்றையெல்லாம் அவர் ஏதோ இறுக்கமான முகத்துடன் மூடிய தனி அறையில் உட்கார்ந்துகொண்டு செய்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். கேலியும் கிண்டலுமாக, அவர்களையும் தன்னைக் கேலி செய்ய அனுமதித்து, தேவைப்படின் கண்டிப்புக் காட்டி அவர்களைப் புதுப்புது வெளிகளுக்கு அனுப்புகிறார். தாழ்வு மனப்பான்மை, கூட்டுக்குள் வாழும் வாழ்க்கை இரண்டிலுமிருந்து அவர்களை வெளியேற்றிப் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறார்.
இந்தத் தன்னம்பிக்கையைத் தூண்டியும் சீண்டியும் கொடுக்கிறார். மூன்றுவிதங்களில் இதைச் செய்கிறார். மாணவர்களின் தனித் திறன்களைத் தெரிந்துகொண்டு இலக்கிய மன்ற, ஆய்வுக் கூட்டச் செயல்பாடுகள் சார்ந்து பொறுப்புகள் கொடுத்தும் அவற்றில் பங்கேற்கச் செய்தும் அவர்களின் ஆளுமையை வெளிப்பட வைத்தல்; மொழித் திறன் கொண்டவர்களை மெய்ப்புப் பார்த்தல், ஊடகப் பணிகள் போன்றவற்றுக்குத் தயார்ப்படுத்துதல்; சிறந்த கல்வி நிலையங்களை அறிமுகப்படுத்திப் பட்டமேற்படிப்புக்கு அனுப்புதல் என்பவை அவை. எளிமையும் அன்பும் வெளிப்பட அவர்களையும் அவர்கள் பெற்றோரையும் மதித்துத் தன் எதிரே உட்கார வைத்துக் கல்லூரியில் சேர்ப்பதில் தொடங்குகிறது இந்தப் பயணம். வழக்கத்துக்கு மாறான இந்தத் தொடக்கம் நாளடைவில் நெருக்கம் கூடி நட்பும் தோழமையுமாக வளர்ந்து வாழ்நாள் உறவாவதை இந்நூலின் பல கட்டுரைகள் விவரிக்கின்றன.
இலக்கிய மன்றப் போட்டிகளில் ஒன்றாக நாட்டுப்புறப் பாடல் பாடுவது இடம்பெறுகிறது. ஆனால் அது திரைப்படத்தில்கூட வந்திருக்கக்கூடாது என்பது விதி. ஏற்கெனவே நாடக ஆக்கங்களில் திறமையும் படைப்பூக்கமும் கொண்ட சின்னதுரை மிகுந்த தயக்கத்துடன் ‘ஒப்பாரிப் பாடலைப் பாடலாமா?’ என்று கேட்க அவரை மேடையேற்றுகிறார்கள். பையிலிருந்த தாவணி ஒன்றை இடுப்பில் சுற்றி முனையைத் தலையில் முக்காடாகப் போட்டுப் பாடத் தொடங்குகிறார். மண்டியிட்டு அமர்ந்து உடலை முன்னும் பின்னுமாக அசைத்து, மூக்கைச் சிந்தி, மாரில் அடித்துக்கொண்டு
அரச மரமிருக்க அரச மரமிருக்கஅரக்காடு நெவுலிருக்க அரக்காடு நெவுலிருக்க
என்று ஓங்கிக் குரலெடுத்துப் பாடப் பாடக் கூட்டமே கைக்குட்டையை எடுத்துக் கண்ணீரைத் துடைக்கிறது. முதல் பரிசு அவருக்கென்பதைச் சொல்லத் தேவையில்லை. அவரைப் பல்கலைக்கழக நாடகத் துறை ஏதாவதொன்றில் (புதுச்சேரி, தஞ்சாவூர்) சேர்த்துத் தேர்ந்த நாடகக் கலைஞனாக ஆக்கத் திட்டமிடுகிறார் முருகன். ஆனால் ஆங்கிலம் என்னும் அரக்கனின் கோரப் பிடியில் சிக்கி (ஒரே ஒரு தாள்தான் நிலுவை) இளங்கலையை முடிக்க முடியாமல் டாஸ்மாக்கில் விற்பனையாளராகிவிட்டார். ‘பெரும் கலைஞனாக வந்திருக்க வேண்டிய ஒருவன் டாஸ்மாக்கில் பாட்டிலை எடுத்துக்கொடுத்து விற்பனை செய்யும் காட்சியை யாரால் கற்பனை செய்ய முடியும்?’
கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் சிலர் லட்சியங்களை மனத்தில் ஏந்திக்கொண்டிருப்பார்கள். எல்லா மாணவிகளிடமும் பேதமில்லாமல் தோழமையுடன், நட்புடன், சிலர் காதலுடன்கூட பழகுவார்கள். ஆனால் பின்னாளில் திருமணம் என்று வரும்போது சுய சாதியிலிருந்தே இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் எவ்விதமான புரட்சிகரச் சித்தாந்தமோ கோட்பாட்டுப் பின்புலமோ இல்லாமல் காதல் என்னும் பேரன்பு வழிநடத்த முருகனின் முன்னாள் மாணவர் ஒருவர் விவாகரத்து பெற்று ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை அறிந்து அவர்களுக்குத் தன் வீட்டை வாடகைக்குக் கொடுக்கிறார். இன்னொரு முன்னாள் மாணவர் முனைவர் பட்ட ஆய்வின்போது சந்தித்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சக ஆய்வு மாணவியைத் திருமணம் செய்துகொள்கிறார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த அவர் இனித் தன் கிராமத்தில் வசிக்க முடியாது என்பதையும் முருகனிடம் சொல்கிறார். இந்த இரண்டு பேரும் சாதனை செய்துவிட்ட மமதை எதுவும் இல்லாமல் மிக இயல்பாக அன்பு ஒன்றே வழிநடத்த வாழ்கிறார்கள் என்கிறார் முருகன்.
மாணவர்களின் பெயர்களை நினைவில் கொள்ள தனித்த கவனம் கொள்கிறார். பெயரைச் சொல்லி ஒரு மாணவனை அழைப்பதில் அவனுக்கு உண்டாகும் உணர்வு சொல்லில் அடங்காது. கல்விப் புலங்களில் பெயரில்தான் எல்லாம் இருக்கிறது. பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதே ஆடம்பரம் என்று நினைத்தோ அசட்டை காரணமாகவோ அதைச் செய்யாமல் விடும் எளிய சமூகம் உண்டு. காரணப் பெயர்களாகப் ‘பெரியவன்,’ ‘சின்னவன்’ என்று அக்குழந்தைகளுக்குப் பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் உள்ளதை முருகன் குறிப்பிடுகிறார். சிலி நாட்டு எழுத்தாளரான இசபெல் அயந்தே எழுதிய ‘இரண்டு வார்த்தைகள்’ என்ற சிறுகதையில் அதன் பிரதான பெண் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘குழந்தைகளுக்குச் சூட்டப் பெயர்கள்கூட இல்லாத ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தவள்’ என்று ஒரு வரி வரும். எனவே இந்த எளிய மாணவர்களுக்குத் தம் பெயரை ஆசிரியர் நினைவில் வைத்திருக்கிறார் என்பது எத்தனை மகிழ்ச்சி தரும்! ஆசிரியர்கள் சிலர் எண்களை வைத்தே, மாணவர்களைக் காவலர்கள் போலவோ சிறைக்கைதிகள் போலவோ கருதி, வருகையைப் பதிவு செய்வார்கள். அத்தனை இளக்காரம் அல்லது அகங்காரம்.
இவர் தனியாக வீட்டில் வசிக்கும்போதெல்லாம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரோடு இணைந்த commune வாழ்க்கையாக அது உருவெடுக்கிறது. உழைப்பும் உணவும் எல்லாருடைய பொறுப்பும் துய்ப்பும். உணவுத் தயாரிப்பைக் கொண்டாட்டமாக முன்னெடுக்கிறார்கள். மாணவர் குடும்பங்களின் சுக துக்கங்களிலும் பங்கெடுக்கிறார். அவர்களுடைய மிக எளிய குடும்பங்களோடு தங்கி அளவளாவுகிறார். அறுநூறு ரூபாய் இல்லாததால் கல்லூரிப் படிப்பை இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போட வேண்டிய நிலையிலிருக்கும் ஏழைத் தந்தையையும் மகனையும் பார்க்கும் காட்சி அதிர்ச்சியளிக்கக்கூடியது. பெற்றோரின் ஏழ்மையைப் புரிந்துகொள்ளும் சிறுவனையும் அவன் புரிந்துகொண்டான் என்பதை அறிந்துகொள்ளும் பெற்றோரையும்விட அதிகமான துயரம் வேறேது மனித வாழ்க்கையில்?
அரசு கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி என்ற பிற்பகல் வகுப்பால் கூடுதலாகப் பலருக்கும் கற்க வாய்ப்பு உண்டாகிறது. சேர்க்கையின்போது வயது வரம்பில் தளர்ச்சி காட்டுவார்கள். அப்படித் தமிழ் இலக்கிய வகுப்பில் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு மற்றவரைவிட 4, 5 வயது கூடுதல். உடையிலும் உடல் மொழியிலும் அசட்டை. சட்டையில் மேல் பட்டன் இரண்டைப் போடுவதில்லை. உள்ளே பனியனும் அணிவதில்லை. பிற பதின்பருவ மாணவர்க்குரிய தயக்கம், கூச்சம் கிடையாது. வகுப்பில் கேள்விகள் கேட்கிறார். ஊக்கம் கொடுத்ததில் பாடங்களில் சிறிது சிறிதாக ஆர்வம் உண்டாகிறது. முருகனின் இயல்பான மறுபக்கம் வேலை செய்யத் தொடங்குகிறது. விசாரிக்கிறார். அப்பா கிடையாது. அம்மாவும் தங்கையும் உண்டு. கல்லூரிக்கு அருகிலேயே உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார்.
அந்த வேலையில் பல மணி நேரம் தணலில் வேக வேண்டும். சட்டையெல்லாம் அணிய முடியாது. சக மாணவர்கள் சாப்பிடும் நேரத்தில் இவர் புரோட்டா போடும் காட்சியைக் கற்பனை செய்யுங்கள். அவர்கள் முன்னிலையில் முதலாளி, கோபாலகிருஷ்ணனின் சுயமரியாதையைச் சீண்ட வேலையை விட்டுவிடுகிறார். தொலைபேசிக் கம்பி போட குழி தோண்டிச் சம்பாதிக்கிறார். சேமித்த ஆறாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்குக் கட்டுகிறார். தமிழ் மாணவனுக்கு அது எதற்கு? வந்த கோபத்தில் முருகன் திட்டி அனுப்பிவிடுகிறார். புறக்கணிப்பும் ஒருவகைத் தூண்டுதலே என்கிறார். இப்போது கோபாலகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் ஆசிரியர். ஆசிரியரின் உடல்மொழியோடு புரோட்டா மாஸ்டரின் உடல்மொழியும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறதாம். சாதனை என்பது இதுதான்.
எளிய குடும்பங்களிலிருந்து அரசு கல்லூரிகளுக்கு வரும் பெண்கள் பொதுவெளியைப் பயன்படுத்துவது அரிது. பயம், தயக்கமெல்லாம் இருக்கும். அவர்களுக்குச் சில பொறுப்புகள் கொடுத்துத் தன்னம்பிக்கையை வளர்க்கிறார். இலக்கிய மன்றத்தில் கட்டுரை வாசிக்க, விவாதங்களில் பங்கேற்க ஊக்குவிக்கிறார். ஒரு மாணவியைத் தமிழ் இலக்கிய மன்றச் செயலர் பதவித் தேர்தலில் நிற்க உற்சாகப்படுத்த அவர் வெற்றியும் பெறுகிறார். அடுத்து, கல்லூரி மாணவர் பேரவையின் செயலர் பதவிக்குத் தமிழ் இலக்கிய மாணவி ஒருவரை இவரும் மாணவர்களுமாக முன்னிறுத்த அவர் வேட்பாளராகிறார். இதுமாதிரி பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களும் இருப்பார்கள். ஆளும் கட்சியினரும் அவர்கள் ஆதரவு பெற்ற மாணவர்களும் இந்தப் பெண்ணுக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தாலும் அவர் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதில்லை. அவர் குழுவினர் பிரச்சாரம் செய்யாமல் விடுகின்றனர். வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இருப்பதே ஒரு முன்னேற்றம்தானே.
மனனம் செய்தல், அதை எழுதிக் காட்டுதல் போன்ற கட்டாயப் பயிற்சிகளை மாணவர்களுக்குக் கொடுக்கிறார். இவை இலக்கியத் துறை மாணவர்களுக்கு மிக முக்கியம். பாடல் வரிகளை, உரைநடைப் பத்திகளை மனதில் வைத்துத் தேவைப்படும்போது ஒப்பித்தல் ஆசிரியர்களுக்குப் பெரிய பலம். இலக்கியத் துறை மாணவர்களில் பலரும் ஆசிரியர்களாவதுதானே நிகழ்கிறது. மூன்றாமாண்டின் சங்க இலக்கிய வகுப்பில் குறுந்தொகையின் பத்துப் பாடல்களை எல்லாரையும் மனனம் செய்யவைக்கிறார். முதுகலைப் படிப்புக்கான நேர்காணலில் பல்கலைக்கழகத் துறைத்தலைவர், ‘ஏதாவது ஒரு சங்கப் பாடலைச் சொல்’ என்று கேட்க இவர் மாணவர் பத்து குறுந்தொகைப் பாடல்களைச் சொல்ல அவருக்கு உடனே இடம் கிடைக்கிறது. சிறியது என்று நினைப்பது பெரிய பயனைக் கொடுக்கும்.
மாணவர்கள் பலருக்கும் ஆங்கிலப் பாடம், பட்டம் பெறுவதற்குப் பெரும் தடைக் கல்லாக இருப்பதை நூல் அடிக்கடி சுட்டுகிறது. ஆங்கிலத்தில் நிலுவை விழுந்து உரிய காலத்தில் முடிக்க இயலவில்லையென்றால் மேற்படிப்புக்குப் போவதில் இடைவெளி ஏற்படுகிறது. அப்போது என்னென்னவோ நடந்து மேற்படிப்பு கனவாகப் போய் வாழ்க்கையே திசை மாறிவிடுகிறது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு ஆங்கிலக் கதை இருக்கும் என்கிறார் முருகன். இது பற்றி ஆங்கில ஆசிரியர் என்ற முறையில் வருந்துகிறேன். நானும் அதற்குச்் சாட்சிதான். வேறு முதன்மைப் பாடங்களைப் படிப்பவர்களை விடவும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்துக் கூடுதல் அச்சமும் அதனாலேயே புறக்கணிப்பும் உண்டு. ஆசிரியர் பற்றாக்குறை ஒரு கூடுதல் காரணம். அந்நியக் கலாச்சாரம் சார்ந்த பாடங்கள் இன்னொரு பீதி. பாடத்தோடு சேர்ந்து உளவியல் ஆலோசனையும் வழங்க வேண்டும். கொஞ்சம் முயன்றால் தேறிவிடலாம்.
பெங்களூருப் பல்கலைக்கழகக் கன்னடத் துறை பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஆங்கில, ஐரோப்பிய, கிரேக்க இலக்கியங்களைக் கன்னட மொழிபெயர்ப்பில் படிக்கிறார்களாம். இவை தொடர்பான பார்வை நூல்களை ஆங்கிலத்தில் படித்தாக வேண்டும். இந்த வகையில் இலக்கியம், விமர்சனம் தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களாவது அவர்களுக்கு அறிமுகமாகும். குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழிகளின் இலக்கியம் படிப்பவர்கள் எளிமையான வகையில் இலக்கியம் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு தேர்வு எழுதுகிறார்களாம். இம்மாதிரி ஏதாவது ஒரு முயற்சி தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் செய்தாக வேண்டும். அதனால் பார்வை விசாலமும் வரும். இந்த ஆங்கிலச் சோகத் தொடரில் விதிவிலக்கான ஒரு உட்கதையில் நிலுவைத் தாள்களை உரிய காலத்தில் (அதாவது, மூன்றாமாண்டில் ஒரே முயற்சியில் நான்கு நிலுவைத் தாள்களிலும் தேறி) ‘துவம்சம்’ செய்த நந்தகுமார் பிரதான பாத்திரம். எம்.ஏ., எம்.ஃபில். எல்லாம் தேறிப் பல்கலைக்கழக இளநிலை ஆய்வாளர் நல்கையும் பெற்று முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் பணி கிடைக்கவே அதற்கு மாறியிருக்கிறார்.
மாணவர்கள் கண்கொண்டு வாழ்க்கையைப் பார்க்கும் முருகன், ‘ஓட்டுதல்,’ ‘கடலை போடுதல்,’ ‘கலாய்த்தல்,’ போன்ற அவர்களுடைய சமகால வார்த்தைப் பிரயோகங்களைத் தயக்கமில்லாமல் பயன்படுத்துகிறார். கிண்டல் மூலம் அவர்களோடு நெருங்குவது அவருடைய பாணி. முருகனுடைய பேச்சு மொழியும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் பேச்சு மொழியும் ஒன்றாக இருப்பது நெருக்கத்தைக் கூட்டும் ஒரு அனுகூலம். உடலுழைப்பு, சிறுதொழில் சார்ந்த சித்திரங்கள் பல நூல் முழுதும் காணக் கிடைக்கின்றன.
1990கள் தொடங்கி 2020 வரையிலான வறிய, கிராமப்புற அரசு கல்லூரி மாணவர்களுடைய வாழ்க்கையின் துல்லிய ஆவணமாக இந்நூலைப் பார்க்கிறேன். நண்பர் பெருமாள்முருகன் ஒரு நல்ல ஆசிரியர் என்பது எனக்கு முன்பே தெரியும். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு அவர் ஒரு லட்சிய ஆசிரியர் என்ற வகையில் மாணவர்களுக்குத் தோழராக, நண்பராக, சகோதரராக, அப்பாவாக இருந்து உன்னத சேவைகளைச் செய்கிறார் என்பதை அறிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்நூலுக்கு நான் அணிந்துரை எழுத வேண்டும் என்று விரும்பிய அவருக்கு என் நன்றியும் அன்பும்.