மறுக்கமுடியாத வரலாறு
அஞ்சலி: டொமினிக் ஜீவா (1927-2021)
மறுக்கமுடியாத வரலாறு
கருணாகரன்
சூழ்நிலைகளும் சம்பவங்களும் மனிதர்களுடைய வாழ்க்கைப் போக்கை வடிமைப்பதில் பங்களிக்கின்றன என்பதற்கு டொமினிக் ஜீவா (மல்லிகை ஜீவா) வும் உதாரணம். எழுத்தாளராகவும் இலக்கிய இதழாளராகவும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் செயல்பட்டு 2021 ஜனவரியில் மறைந்த ஜீவா, பலவற்றுக்கும் முன்னுதாரணங்கள் உள்ளவர்.
1927இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக், வகுப்பறையில் வைத்துச் சாதியின் பெயரால் அவமதிக்கப்பட்டதால் அவருடைய கல்வி இடையில் நின்றுபோனது. அதுவே
அவருக்கு வைராக்கியத்தைக் கொடுத்து அவரை மறுக்கவே முடியாத ஒரு அடையாளமாக்கியது. பாடசாலையில் மறுக்கப்பட்ட கல்வியைச் சமூகத்தில் பெற்றுக் கொண்டவர் டொமினிக். இதற்குத் தன்னுடைய தந்தையாரின் தொழில் மையத்தை அவர் பயன்படுத்தினார். இங்கேயே இளவயது டொமினிக்கின் இலக்கிய வாசிப்பும் ஆர்வமும் அவரை எழுத்தாளராக்கியது. 1940களிலேயே அவருடைய கதைகள் சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. பின்னர், அன்று இலங்கையின் வடக்கில் செல்வாக்குப் பெற்றிருந்த பொதுவுடமை அரசியலில் டொமினிக்குக்கு ஈடுபாடு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘கொம்யுனிஸ்ற்’ கார்த்திகேசனின் அறிமுகம் டொமினிக்கை இன்னொரு படிக்கு மேலே உயர்த்தியது. இதிலும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது.
தோழர் ப. ஜீவானந்தம், தமிழகத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியினால் இலங்கையில் தலைமறைவு நிலையில் கார்த்திகேசன் வீட்டில் தங்கியிருந்தார். கார்த்திகேசன் வீட்டில் ஜீவானந்தத்தைச் சந்தித்த பின்பு, அவருடைய பாதிப்பினால் டொமினிக் என்ற தன்னுடைய பெயரை டொமினிக் ஜீவா என்றாக்கினார். மேலும் தீவிர இடதுசாரியாக இயங்கியதோடு சரஸ்வதி, தாமரை போன்ற இதழ்களிலும் எழுதவும் தொடங்கினார்.
ஜீவானந்தத்தின் பாதிப்பு ஜீவாவுக்கு இன்னொன்றிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. விளைவாக தாமரையைப்போல இலங்கையில் மல்லிகையை (1966) உருவாக்கினார். பின்னாளில் மல்லிகை ஜீவா என்னுமளவிற்கு அது அவருடைய அடையாளமாகியது.
டொமினிக் ஜீவாவை மூன்று விதமாக நோக்க முடியும். ஒன்று எழுத்தாளராக அவரை மதிப்படுவது. அடிப்படையில் அவர் ஒரு சிறுகதையாளர் என்ற வகையில் அவருடைய கதைகளின் பெறுமானம் எப்படியானது? அவர் எழுதவந்த காலத்திலிருந்து இறுதியாக எழுதிய காலம் வரையில் நிலவிய இலக்கியப் போக்குகளிலும் கதைகளிலும் ஜீவாவின் கதைகளுக்குரிய இடம் என்ன என்பது. இடதுசாரிய அரசியல் ஈடுபாட்டின் விளைவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே ஜீவாவினுடைய கதைகள். அவரும் அதையே சொல்லி வந்திருக்கிறார். எழுத்து தனக்கொரு ஆயுதம் என்று. எனவே அவர் எழுத்தை ஒரு மாறுதலுக்கான அரசியல் நடவடிக்கையின் வடிவமாகவும் விளைவாகவுமே பார்த்திருக்கிறார். ஆகவே அவருடைய கதைகளை அந்த அடிப்படையில் வைத்தே மதிப்பிட முடியும்.
அன்று யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இலங்கையில் வர்க்க விடுதலைக்கான எழுச்சியும் வலுப்பெற்றிருந்த சூழலில் ஜீவாவின் கதைகள் முக்கியமாகக் கருதப்பட்டன. முதலில் இலங்கையின் சாகித்திய மண்டல விருதைப் பெற்றதா ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுப்பு தேர்வாகியிருந்தன. இதை விட ‘சாலையின் திருப்பம்’, ‘பாதுகை’, ‘வாழ்வின் தரிசனங்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வந்திருக்கின்றன. இவற்றோடு பின்னாளில் எழுதிய கதைகளையும் சேர்த்து ‘டொமினிக் ஜீவா சிறுகதைகள்’ என்ற முழுத்தொகுதி வந்துள்ளது. இருந்தாலும் அவருடைய கதைகளின் இலக்கிய மதிப்பீடு என்பது இன்றைய பரந்த இலக்கியப் பரப்பில் பல கேள்விகளை எழுப்பக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஏறக்குறைய அவருடைய சமகாலத்தில் அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெயகாந்தன், எஸ்.பொ, மு. தளையசிங்கம் போன்றோருடைய எழுத்துகளின் தன்மைக்கும் அளவுக்கும் ஜீவாவின் அடையாளமோ பங்களிப்போ எழுத்தில் போதாமையாக உள்ளது என்றே கூற வேண்டும். ஆனாலும் புறக்கணிக்க முடியாத அடையாளம் அவருடையது. இந்த அடையாளமும் ஜீவாவின் சிறப்பான தொடர்பாடலும் 1970, 80, 90, 2000 வரையுமான காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்துக்குமான (முற்போக்கு சார்பான) இலக்கிய ஊடாட்டத்துக்கு வாய்ப்புகளை அளித்தன.
அடுத்தது, அவருடைய மல்லிகை இதழின் பங்களிப்புப் பற்றியது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை வெளிவந்திருக்கிறது. அதுவும் நிறுவன பலமெதுவுமில்லாமல். பிற்படுத்தப்பட்ட சமூகமொன்றிலிருந்த வந்த தனியொரு ஆளின் முயற்சியினால் மட்டும். 400க்கு மேற்பட்ட இதழ்கள். கூடவே மல்லிகைப் பந்தல் என்ற வெளியீடுகள். ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட நூல்கள். தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம் எழுத்தாளர்கள், சமூகப் பங்களிப்பாளர்களை மல்லிகையில் அடையாளப்படுத்தியது என்று ஒரு விரிந்த களத்தை உருவாக்கியிருந்தார் ஜீவா. இது எளிய விசயமல்ல என்பது தமிழ்ச் சூழலைப் புரிந்துகொண்டவர்களுக்குத் தெரியும்.
ஆனால், இந்த நாற்பத்தைந்து ஆண்டுகளிலும் மல்லிகையின் உச்ச பங்களிப்புக் காலம் பத்து ஆண்டுகள் என்றே மதிப்பிடக்கூடியதாக இருக்கும்; குறிப்பாக, 1970களில். கைலாசபதி, கா. சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரத்னா, எம்.ஏ. நுஃமான், சோ. கிருஷ்ணராஜா, சபா. ஜெயராசா எனப் பலருடைய விமர்சனங்களும் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களும் மல்லிகையில் எழுதினார்கள். அது முற்போக்கு இலக்கிய இயக்கமும் மார்க்ஸிய விமர்சனமும் சோசலிஸ யதார்த்தவாதமும் முன்னிலைப்பட்டிருந்த காலம். சமூக நீதியையும் வர்க்க விடுதலையையும் முன்னிறுத்தி எழுதியும் இயங்கியும் வந்த எழுத்தாளர்களும் இலக்கிய இயக்கமும் தீவிரத்தன்மையோடிருந்த சூழலில் இதற்கான களத்தை மல்லிகையே கொடுத்திருந்தது. ஆனாலும் தனியே இடதுநிலைப்பட்ட அரசியலுக்குள் மல்லிகை மட்டுப்பட்டு நிற்கவில்லை. மல்லிகையில் பல்வேறு இலக்கிய போக்குடையோரும் எழுதினர். பின்னாளில் இது மேலும் விரிவடைந்தது. பொதுவுடைமைக் கட்சியில் ஏற்பட்ட உடைவும் பின்னர் எழுச்சியடைந்த தமிழ்த்தேசிய அரசியலும் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டமும் மல்லிகையை வேறு களத்தை நோக்கித் தள்ளின. அதுவரையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கிய ஜீவாவும் மல்லிகையும் 1995 இல் கொழும்புக்கு நகர வேண்டியதாயிற்று. அதற்குப் பின்னர் மல்லிகை எந்தப் போக்கையும் பிரதிபலிக்கவில்லை என்றே சொல்ல முடியும். இதுவும் ஒரு விரிவான சமநிலையான மதிப்பீட்டுக்குரியது.
மூன்றாவது, டொமினிக் ஜீவாவின் அரசியல். இடதுசாரிய அரசியலில், ரஷ்யசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரே ஜீவா. இறுதிவரையிலும் அப்படியே இருந்தார். தமிழர்களின் ஆயுதப்போராட்டம் வலுப்பெற்று அதில் இடதுசாரிகளில் பலரும் ஈர்க்கப்பட்டபோதும் ஜீவா அதில் கரைந்துபோகவில்லை. விடுதலைப்புலிகள் மேலாதிக்கம் பெற்ற சூழலிலும் தன்னடையாளத்துடன் தாக்குப் பிடித்தே நின்றார். இன ஐக்கியம், ஜனநாயகம், சமூக நீதி, தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை ஜீவா எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்கவில்லை. இதுதான் அவரை யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வேறு வழியின்றிக் கொழும்புக்குச் செல்லவைத்தது. பின்னர் கொழும்பிலிருந்து கொண்டே மல்லிகை வெளிவந்தது. பின்னாளில் ஜீவாவின் முழுச் செயற்பாடும் மல்லிகை, ‘மல்லிகைப் பந்தல்’ பதிப்பக வெளியீடுகள் என்ற அளவிலேயே அமைந்தன. அவர் பின்பற்றிய அரசியலின் ஒடுக்கமும் முதுமையும் இலக்கியப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களும் மெல்லமெல்ல மல்லிகையையும் ஜீவாவின் செயற்பாட்டையும் தளர்வு நிலைக்குக் கொண்டுவந்தன. இறுதியில் மல்லிகை நின்றது. 94 வயதில் ஜீவாவும் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.
ஜீவா மறைந்து விட்டார்தான். ஆனாலும் அவருடைய எதிர்ப்புக் குரலும் தாழ்த்தப்பட்டவர் என்று அவரைப் புறக்கணித்த யாழ்ப்பாணத்தின் தெருக்களில் அவர் நிமிர்ந்து நடந்து செல்லும் காட்சியும் அழியாத சித்திரமாகவே நிற்கின்றன. இதைத் தன்னுடைய தன் வரலாற்று நூலான ‘எழுதப்படாத சித்திரத்துக்கு வரையப்படாத ஓவியம்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரலாற்று நூலை இன்னும் நிதானமாக எழுதியிருந்தால், மிகச் சிறப்பானதொரு தன் வரலாற்று வெளிப்பாடாகவும் ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவானதொரு போர்க்குரலாகவும் மாறியிருக்கும். இதேவேளை ‘அனுபவ முத்திரைகள்’, ‘அச்சுத் தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம்’, ‘நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்’, ‘முப்பெரும் நகரங்களில் முப்பது நாட்கள்’ என ரஷ்ய, ஐரோப்பிய அனுபவங்களைக் கொண்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். எல்லாவற்றுக்குமான பங்களிப்புகளுக்காகக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பக் கல்வி வகுப்பறையில் மட்டுமல்ல, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தன்னை அவமதித்ததாகவே ஜீவா கூறியிருக்கிறார். ஜீவாவின் பங்களிப்புக்கென அவருக்கு வழங்கப்பட்ட தகுதி நிலைப் பட்டம் தகுதிக்குறைவாக வழங்கப்பட்ட ஒன்று என ஜீவாவின் கருத்தை ஆதரித்துப் பேசியவர்கள் பலர். இதைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், விவாதங்களை ‘பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்’ என்ற நூலில் கவிஞர் மேமன்கவி தொகுத்திருக்கிறார். ஜீவாவைப்பற்றி மேமன்கவி, திக்குவல்லை கமால், முருகபூபதி ஆகியோர் தனியாக எழுதியிருக்கின்றனர். ஜீவாவின் மறைவுக்குப்பிறகு அவர் குறித்துத் தொடர்ந்து எழுதப்பட்டுவரும் பதிவுகளும் நினைவு கூர்தல்களும் மதிப்பீடுகளும் அவர் எப்போதும் சொல்வதைப்போல வரலாறு அவரை மறுதலிக்கவே முடியாது. நிராகரிக்கப்பட்டவரைச் சரித்திரம் நினைவிற்கொள்ளும் என்பதை நிரூபித்துள்ளன.
மின்னஞ்சல்: poompoom2007@gmail.com