கடிதங்கள்
கடிதங்கள்
காலச்சுவடு சற்றே தாமதமாகத்தான் அஞ்சலில் கிடைத்தது. வந்த சமயத்தில் நான் வேறொரு எழுத்து வேலையில் மூழ்கியிருந்ததால் படிக்காமலேயே மேசையில் வைத்திருந்தேன். இன்று காலைதான் பிரித்துப் படித்தேன். நர்மதா ராமலிங்கம் பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையை விரும்பிப் படித்தேன். உங்கள் சந்திப்புகளையும் நட்பார்ந்த உரையாடல்களையும் விவரித்துச் செல்லும் போக்கில் திரு.ராமலிங்கம் பற்றிய நினைவுகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். நினைவு சார்ந்தும் நட்பு சார்ந்தும் இருப்பதாலேயே அக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. மறைந்துபோன ஒருவரைத் தராசுத்தட்டில் நிறுத்தி மதிப்பிடும் ஆய்வுக்கட்டுரைகளையே வழக்கமாகப் படிக்க நேர்ந்த கண்களுக்கு உங்கள் கட்டுரை மனத்துக்கு இதமாக இருந்தது. உண்மையிலேயே இக்கட்டுரை அவரை வரலாற்றில் நிறுத்திவைக்கிறது. நர்மதா பதிப்பித்த எல்லாவகை நூல்களிலும் ஒருவகைமாதிரி என்வசம் இருக்கிறது. ஜே.கே.யின் நாட்குறிப்பு, அசோகமித்திரன் தொகுப்பு, விட்டல்ராவ் நாவல், வாழ்விலே சில உன்னதங்கள், திருக்குறள் என அடுக்கிக்கொண்டே செல்லலாம். திலகவதியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த நோபெல் பரிசுபெற்ற ஆசிரியர்களின் கதைகள் அடங்கிய இரு தொகுதிகள் (கடைத்தெருவில் ஞானி, எட்டுத்திசையிலிருந்து ஏழு கதைகள்) என நிறைய சொல்லலாம். இன்றளவும் அதன் வடிவமைப்பில் ஒரு குறையும் இல்லாமல் அதே மேனியில் இருக்கிறது. நிறம் கூட மங்கவில்லை. அவருடைய சிரத்தையையும் அர்ப்பணிப்புணர்வையும் பற்றி விட்டல்ராவ் பலமுறை சொல்லியிருக்கிறார். நான் அவரோடு பழகியதில்லை. ஆனால் விட்டல்ராவ் அவருடைய மாண்புகளைப்பற்றி சொல்லிச்சொல்லி எனக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கியிருந்தார். அந்தச் சித்திரத்தையே நான் உங்கள் எழுத்திலும் கண்டேன். என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
(ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு அனுப்பிய மின்னஞ்சல்)
‘தமிழரை வியக்க வைத்த’ ஆய்வறிஞர் தொ. பரமசிவன் பற்றிய பத்து அஞ்சலிக் கட்டுரைகளும் பிப்ரவரி இதழுக்கு மிகப்பெரிய மகுடம் சூட்டியிருக்கின்றன. இதற்கு முன்பும், உ.வே.சா., ஐராவதம் மகாதேவன் போன்ற சான்றோர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அவ்வப்போது காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன. இருப்பினும், இந்தப் பத்து ஆய்வுக் கட்டுரையாளர்களும் தொ.ப. என்ற பேராளுமையினது ‘உள்ளும் புறமும்’ உள்ளுந்தோறும் உவகையூட்டும் கருத்தாய்வுக் களஞ்சியங்களால் வாசகர்களைப் பிரமிக்க வைத்துள்ளனர்; ஆய்வு நோக்கில் மிக நுட்பமாகவும், உளந்தோய்ந்தும் படைத்துள்ளனர்.
பொதுவாக ஆய்வுகள் என்பன கல்வெட்டுகள், செப்பேடுகள், சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், பெரும் இலக்கியப் படைப்புகள், தனிமனித ஆளுமைகள் பற்றியும் சமூக அரசியல், அறிவியல், பொருளியல் சார்ந்த புதிய, பழைய தத்துவங்களைப் பற்றியுமாகவே இருக்கும். ஆனால் தொ.ப. ஆய்வுகளின் மையப்பொருளாக மக்களின் வாழ்வியலும், சமூகத்தையும் மனிதனையும் வாசித்தறிந்துகொள்ளும் தன்மையும் மேலோங்கி இருந்ததே அவரின் தனிச்சிறப்பாகும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
களந்தை பீர்முகம்மது எழுதியுள்ள ‘வித்தை’ சிறுகதை எனக்கு ஏற்படுத்திய அனுபவம் சக வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது. மாதவன் தன் மதினிபற்றிக் கூறுவதைக் கதையில் வருபவர் (கதைசொல்லி எனக்கூற விருப்பம் இல்லை, அவருக்கு ஆதவன் எனப் பெயரிடுகிறேன்) எவ்வளவு ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் கேட்டாரோ அதற்குச் சற்றும் குறையாதவையே என் ஆர்வமும் எதிர்பார்ப்பும்.
இலக்கியங்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சொல்லை ‘மார்பகம்’ என்று ஆதவன் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ‘கனத்த முலை பாய்’ என்று மாதவன் சொன்னதைக்கூறி அவன் காட்டிய சைஸ் அவர் மட்டுமே காண முடிந்ததால் என் கற்பனை விரிகிறது. அச்சொற்களின் ஈர்ப்பு என்னை அவனுடைய பேச்சைக் கேட்கத் தூண்டுகிறது.
எப்படியோ ஒரு வழியாய் மாதவனுடன் அவனுடைய வீட்டுக்குச் சென்ற ஆதவனுடன் நானும் உருவமற்றவனாகச் சென்றேன். எப்பேர்ப்பட்ட ஆவல்! எத்தனையோ வகைகளில் முன் திட்டமிடலும் தயாரிப்புகளும் இருந்தாலும் ஆதவனோடு சேர்ந்து நானும் கற்பனை செய்துவைத்த பேரழகைக் காணமுடியாத வருத்தம் எனக்குக் கூடுதலாக!
திருட்டுத்தனமாக அழகை ரசிப்பதற்கு வயது ஒரு தடையில்லைதான். ‘குரல் அமுதம்’ என ஆதவன் கூறியது எனக்குள் தேன்சுவையாய் இறங்கியது. காமச்சுவை என்பது எக்காலத்துக்கும் எவரைவிட்டும் நீங்காதென்பதை வாசகன் என்ற அளவில் ஒப்புக்கொள்வது பெரிய தவறல்ல. அதையெல்லாம் தாண்டி நிகழ்வுகளை நகர்த்துவதுதான் கதையின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாகிறது.
உன்னதமான கதையின் உச்சம் தொடும் நான்கு வரிகளில் நான்கு வாக்கியங்கள்! கதை சொல்லி என் நெஞ்சையும் கண்களையும் ஈரமாக்கிவிட்டார். “நேற்றுத் தற்செயலாகக் கணக்குப் பார்த்தேன்...” கதையின் தொடக்கத்தை நினைத்துப் பார்த்தால், வாழ்வின் பயன் என்னவென்பதை முடிவில் கூறி என்னை அசைத்துவிட்டார் கதைசொல்லி.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு 626132
பேரா. வேதசகாய குமாரின் நினைவேந்தலில், ‘சிஜே மறுபடியும் மரித்துவிட்டார்’ என்ற தலைப்பு முற்றிலும் சரி. 1978 காலகட்டத்தில் குமார், ராஜமார்த்தாண்டன், கிருஷ்ணசாமி, திருமால் இந்திரசிங் ஆகியவர்களோடு சிஜேயின் ஆய்வு மாணவன் என்ற தகுதியில் நானும் கலந்ததுண்டு. குமாரை நாங்கள் ‘வேதம்’ என்றுதான் சிநேகத்தோடு விளிப்போம். பிற ஆசிரியர்கள் போல் அவர் கட்டணம் செலுத்திக் கருத்தரங்குகளுக்குக் கட்டுரையுடன் ஒருபோதும் சென்றதில்லை. அத்தகைய கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளை அவர் வாந்தி, மாதமுறை என்று பரவலாக விமர்சிப்பார். அவரது எழுத்து, வாய்த் திறனாய்வுகள் கனகச்சிதமாகச் செதுக்கி மினுக்கிய கருத்தரித்த கூர் சொல்வெட்டுகளாகவே இருக்கும்.
நூல்களைப் புரட்டாமல் வெறுமனே ‘டப்பா அடியாக’ வகுப்பெடுக்கும் ஆசிரியர்களைப் பெரும் கூலிக்குச் சிறு வார்த்தைத் தொழில் செய்யும் வேலையாட்கள் என்று வெளிப்படையாகவே கூறுவார். நான் துறைத் தலைவராகவும் முதல்வராகவும் இருந்த காலகட்டத்தில் நெருங்கிய ஆத்ம நண்பராக இருந்தும் அவர் எதையும் தமக்காகக் கேட்டுப் பெறாதது வியப்பிற்குரியதாகும். நூலக வளர்ச்சிக்காகவும் குமரி, இடுக்கி ஜில்லா ஏழை மாணவர்களுக்கு கெஸ்ட் லெக்சரர் வேலைக்காவும் மட்டுமே அவர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகப் பரோபகாரியான வேதசகாய குமாரின் இழப்பு பலரைப்போல் எனது நெஞ்சையும் நெருடச்செய்கின்றது.
திருமலர் மீரான்பிள்ளை
திருவனந்தபுரம்
பாரதியின் உயிர் பெற்ற தமிழர் பாட்டு
ஒரு மேலதிக விளக்கம்
காலச்சுவடு ஜனவரி இதழில் வெளிவந்த பாரதியின் உயிர் பெற்ற தமிழர் பாட்டு பதிப்புக் குழறுபடிகள் பற்றிய எனது குறிப்புக்கு பிப்ரவரி இதழில் (254) வெளிவந்துள்ள பழ அதியமானின் விளக்கம் தொடர்பாக இச்சிறு குறிப்பை எழுதுகிறேன்.
“273 பாடல்களைக் கண்ணழித்து, சந்தி பிரித்து, அருஞ்சொற்களுடன் பதிப்பித்த” பழ அதியமானின் பதிப்பில் ஒரே பாட்டில் தவறைக் கண்டுபிடித்துச் சொல்லுவதல்ல எனது நோக்கம். தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுப் பதிப்பில் உள்ள மிக மோசமான ஒரு தவறைச் சுட்டிக்காட்டுவதே அதன் நோக்கம். அது அதிகாரபூர்வமான பதிப்பு என்ற அடிப்படையில் பழ அதியமான் போன்ற ஆய்வாளர்கூட அதனால் தவறிழைக்க நேர்ந்துவிட்டதை இறுதியில் குறிப்பிட்டுள்ளேன். அதற்குத்தான் அதியமான் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். எனது கட்டுரை 1987இல் வெளிவந்த முதல் பதிப்பை அடிப்படையாகக்கொண்டது.தமிழ்ப் பல்கலைக்கழகம் சில திருத்தங்களுடன் 1989இல் இரண்டாம் பதிப்பையும், 2001இல் திருத்திய மூன்றாம் பதிப்பையும் வெளியிட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆயினும், அவை என் பார்வைக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அப்பதிப்புகள் பற்றி சீனி விசுவநாதன் கால வரிசையில் பாரதிபாடல்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் இடம்பெறும் பின்வரும் குறிப்புகள் சாதகமானவை அல்ல.
“திருத்திய மூன்றாம் பதிப்பு வெளிவந்த நிலையிலும், முன்னைய இரு பதிப்புகளிலும் இடம்பெற்றிருந்த எண்ணற்ற அச்சுப்பிழைகள், கருத்துப் பிழைகள், காலப் பிழைகள், வரலாற்றுப் பிழைகள், முன்னுக்குப் பின் முரண்பட்ட செய்திக் குறிப்புகள் களையப்படவில்லை. ஆம், திருத்தப் பெறாமலே அவை நீங்கா இடம்பெற்றுவிட்டன.”
“என்ன மாற்றங்கள், திருத்தங்கள் ஏன் - எதற்காகச் செய்யப்பட்டன என்பதற்கான விளக்கத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்ட நூற்பதிப்புத் துறையிலும் புலமைத் துறையிலும் விளக்கம் பெற்ற பேராசிரியர் முனைவர் ம.ரா.போ. குருசாமியும் எந்தவொரு குறிப்பையும் பதிவுசெய்யவில்லை” இதுதான் திருத்திய பதிப்பின் நிலையென்றால் அதைத் தேடிப்பெறவேண்டிய தேவை என்ன?
இருந்தாலும் காலச்சுவடு இதழில் எனது கட்டுரை வெளிவந்த பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் மூலம் திருத்திய மூன்றாம் பதிப்புக்குத் துணைவேந்தர் கதிர் மகாதேவன் அவர்கள் எழுதிய முன்னுரையையும் குறிப்பிட்ட பாடல் இடம்பெற்றுள்ள பக்கங்களையும் நிழற்படப் பிரதியாகப் பெற்றுப் படித்தேன். பிரச்சினைக்குரிய இரண்டு கண்ணிகளும் ஏனையவர்களின் பதிப்புகளில் உள்ளதுபோல் திருத்தப்பட்டுள்ளன. ஆனால் முதல் பதிப்பில் இடம்பெற்ற கோளாறுகள் எப்படி, ஏன் நிகழ்ந்தன? ஏன் அப்படி அடிக்குறிப்புகள் எழுத நேர்ந்தன? என்பது பற்றிய விளக்கம் எதுவும் இல்லை.
இந்தப் பின்னணியில்தான் “திருத்திய மூன்றாம் பதிப்பை நான்தான் பார்க்கவில்லை. நுஃமான் அவர்களாவது பார்த்துவிட்டு எழுதியிருக்கலாம்” என்று பழ அதியமான் எழுதியிருப்பதைப் பார்க்கவேண்டும். என்மீது குற்றம் சுமத்துவதுபோன்ற ஒரு தொனி அவரது குறிப்பில் உள்ளது. திருத்திய மூன்றாம் பதிப்பு அதியமானின் வாசற்படியில் இருக்கிறது. நான் கடல் கடந்து வேறு ஒரு நாட்டில் இருக்கிறேன். அவரே பார்க்க முயலாததை நான் பார்த்திருக்க முடியாதுதான்.
மூன்றாம் பதிப்பை மட்டும் நான் பார்த்திருந்தால் இந்தக் கட்டுரை எழுத நேர்ந்திருக்காது. முதல் பதிப்பைப் பார்த்தபின், திருத்திய மூன்றாம் பதிப்பை நான் பார்த்திருந்தாலும் எனது கருத்து மாறியிருக்காது. முதல் பதிப்பில் ஏன் இத்தகைய குழறுபடிகளைப் பதிப்பாசிரியர் செய்தார்? ஏன் அதை நியாயப்படுத்தி அடிக்குறிப்புகள் எழுதினார்? பின் ஏன் அவற்றை மாற்றிக்கொண்டார்? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. “273பாடல்களை கண்ணழித்து, சந்தி பிரித்து” பதிப்பித்த பழ அதியமானுக்கு சிதைக்கப்பட்ட இந்த இரண்டு கண்ணிகளிலும் உள்ள யாப்புக் கோளாறுகள் ஏன் தென்படவில்லை? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. சுத்தப் பதிப்பு என் நோக்கம் இல்லை என்பது பதிலாகுமா? அவர் தவறு நடந்திருப்பதை ஏற்றுக்கொண்டார். அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார். அது போதும்.
எம்.ஏ. நுஃமான்
காலச்சுவடு 254வது இதழில் இடம்பெற்ற
அருந்ததி ராயின் நாவல் பகுதியில் இடம்பெற்றுள்ள - ‘மூஸா யெஸ்வியை அவனுடைய மனைவியும் மகளும் நல்லடக்கம் செய்தபோது பார்த்தவர்கள் எல்லாரும் அவன் எவ்வளவு அமைதியாகக் காணப்பட்டான் என்பதை விசேஷமாக கவனித்தார்கள்.’ - இந்த வாக்கியம் பிழைபட அச்சாகியுள்ளது. அது –
‘அவனுடைய மனைவியும் மகளும் நல்லடக்கம் செய்யப்பட்டபோது மூஸா யெஸ்வியைப் பார்த்தவர்கள் எல்லோரும் அவன் எவ்வளவு அமைதியாகக் காணப்பட்டான் என்பதை விசேஷமாகக் கவனித்திருந்தார்கள்.’ - இவ்வாறு அமைய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதே பிழை ‘பெருமகிழ்வின் பேரவை’ அச்சுப் பிரதியிலும் (பக்கம்: 326) இடம்பெற்றுள்ளது. (மின் நூலில் திருத்தப்பட்டுள்ளது.) இது மொழிபெயர்ப்பாளரால் ஏற்பட்ட பிழை அல்ல. நூல் உருவாக்கத்தில் ஊடுருவிய பிழை. வருத்தம் தெரிவிக்கிறோம். அடுத்தப் பதிப்பில் திருத்தப்படும்.
- பதிப்பாளர்