தானுமானவள்
புத்தகப் பகுதி
தானுமானவள்
(கவிதைகள்)
சல்மா
ரூ. 125
பயணம்
எங்கு செல்ல
என்கிற கேள்வியில்லை
எதற்காகப் புறப்படவேண்டும்
துளி வருத்தமில்லை
யாரைச் சேர என
ஒரு யோசனையுமில்லை
போகிறேன் என்பதே
போதுமானது
பயணத்தில்
அருகிலிருந்த
பருக்கள் காய்த்த முகத்தவனை
நகரத்து நடைபாதையில்
ஈ மொய்த்துக் கிடந்த தொழுநோயாளியை
மனதிலிருத்தி
எத்தனை காலமென நினைவில்லை
கடந்தே வராமல் நின்றிருந்த பொழுதுகள்
என்ன செய்ய
இந்த மனதை இந்த வாழ்வை.
அம்மாவின் விருப்பம்
அம்மாவைப் பிரிந்து
விடுதிக்குச் செல்லவிருக்கிற
குட்டிப் பையனின் பயணம்
அதிகாலையில் துவங்கிவிடுகிறது
முந்தைய நாளின்
மாலையிலேயே
மர அலமாரிக்குள்
அவிழ்த்துவைத்துப் பத்திரப்படுத்துகிறான்
சிரிப்பை,
சில்லறைக் குறும்பை
உடைந்த பொம்மைகளை
பழுதடைந்த வாகனங்களை
கடந்த சில நாட்களாய்
தான் கொண்டுவந்து சேர்த்திருந்த
கிராமத்துத் தெருக்களை.
உறக்கம் இன்னும் கலையாத
அவனது கண்கள்
வீட்டின் உள்ளறைக்குள்
தெருவின் முரட்டு இருளுக்குள்
திரிய
மற்றொரு நாளை அம்மாவிடம்
யாசிக்கக்
காத்திருக்கிறதோ என்னவோ?
அவிழ்த்துவைத்த பின்னும்
அவனது கடைவாயோரம் மிஞ்சியிருக்கிற
சிரிப்பைக் கண்ணுற்றபடி
யோசிக்கிறாள் அம்மா
என்றாலும்
நேற்றுஅதிகாலையில்
வீட்டுத் தோட்டத்தில்
கூட்டிலிருந்து பறவைகளை
விரட்டியடித்த அந்தக் குரலை
எறும்புகள் மொய்த்துவிடாதபடிக்கு
எங்கே பத்திரமாக
ஒளித்துவைத்திருக்கிறான்
என்பதை அறிந்துகொள்ள
மிகவும் விரும்புகிறாள் அம்மா.
இடைவெளி
விடுதியில் தங்கிப் படிக்கிற மகனைக்
காண விரும்பிய
எனது தவிப்பை
மறுத்துச் செல்கிறான்
காப்பாளன்
திறக்க மறுத்த ஆளுயரக் கேட்டில்
தலை சாய்த்து
மகன் தெரிவானாவெனக்
கண்களால் துழாவுகிறேன்
மகனுக்கும் எனக்குமிடையே
மிச்சமாகப் போனால்
பத்திருபது அடி தூரமும்
சில கொன்றை மரங்களும்
மட்டும்தான் இருக்கும்
விடுதியின் நீளச் சுவரின்
மேலாகப் பறந்துகொண்டிருக்கிறது
வெண்ணிறப் பறவையொன்று
சலிப்புடன்
அருகாமைக் குளத்திடம்
பார்வையைத் திருப்பியவள்
அலர்ந்து கிடந்த
அல்லிகளைப் பார்க்கிறேன்
மலர்களைப் பார்க்க
என்னைப் போலவே
என் மகனுக்கும் பிடிக்கும்
என்றாலும்
இன்றிவை மனதில் பதிய மறுத்து
வாட்டமுறுகின்றன
கரையில் நின்றிருந்த
பெண்ணொருத்தி
அடம்பிடிக்கிற அவளின்
சிறு மகளைத் திடுமெனக்
குளத்து நீரில் வீசி எறிகிறாள்
அதிர்ச்சியில் உறைந்த எனது தாய்மையை
தண்ணீரிலிருந்து
எழுந்துவரும்
சிறுமியின் அழுகுரல்
துளைக்கிறது.
உடலைப் பேசவிடுவோம்
என்னை உடலாக நம்புகிற
உங்களிடம் எனதுடல் சற்றுப் பேசட்டும்
என் மனதின் நுட்பங்களைக்
கேட்க விருப்பமில்லாத
உங்களது செவிகளிடத்தில்
அது உரக்கப் பேசட்டும்
தன்னைப் பிரகனப்படுத்துவதற்கான
வலியோடு அது பேசட்டும்
வளர்ந்த பருவத்தில்
வீடுகளுள் தன்னைப் பதுக்கிய
ஒரு காலத்தின் போராட்டத்தை
அது பேசட்டும்.
தன் வெளிர் நிறம் மங்கிய
கழிப்பறைப் பீங்கானில்
சிவந்த ஒரு பட்டுத் துணியென
சிந்திய முதல் தீட்டினை
மொடமொடத்த பழந்துணியில்
ஒற்றியெடுத்த துன்பத்தை
அது பேசட்டும்
நளினங்களையும் அலங்காரங்களையும்
யுகங்களாகப் பேண நேர்ந்த
அவலத்தை அது பேசட்டும்
ஊறத் துவங்கிய
உடலின் காமத்தையும் காதலையும்
தனக்குள்ளேயே
ஒளித்துவைத்த உறுதியை
அது பேசட்டும்
யார் என்றறியா
யாரோ ஒருவனின் காமத்திற்குப்
படுக்கையில் தங்கிய கொடுந்துயரை
அது பேசட்டும்
சிசுக்களைப் பெற்றும்
கருக்களை அழித்தும்
புரையேறிய கருப்பையில்
கசியும் வெட்டையின்
துர்வாடையை
முட்டியில் தேங்கிய
மாதவிடாய் வலியை
அது பேசட்டும்
மூடர்கள் வன்புணர்வது உடலை மட்டுமல்ல
ஓயாத இயற்கையை
அதன் சீற்றத்தைச் சுமந்துகொண்டிருக்கும்
ஓர் ஆயுதத்தை.
தனித்த ஒற்றைப்பெண்
ஒற்றை தனிப்பெண்
வசிப்பதற்கான வீடுகள்
இந் நகரில்
இன்னும் கட்டப்படவில்லை
அவள்சொல்கிற உண்மைகள்
பொய்களாக மாறிவிடுவதால்
அவர்கள் பொய்கள் சொல்ல
பழகிக்கொள்கிறார்கள்
அவளது அண்டை வீடுகளில்
கதவுகள் எஃகினால் செய்யப்பட்டவை
எத்தகைய சந்தர்ப்பத்திலும்
நெகிழ்ந்து கொடுக்காதவை
கருணை அற்றவை
அவள் வசிக்கும்
தெருவில் உள்ள
மனிதர்களின் அழுக்கடைந்த
மூளைகளில்
அவளை
குடியேற்றிக்கொள்கிறார்கள்
அவள்வீட்டிற்கு வரும்
எலக்ட்ரீசியனும்
கேபிள் டிவிக்காரனும்
அதீத பகட்டினை
வெளியில் காட்டிக்
கொள்கிறார்கள்.
அவளின் படுக்கையறை குறித்து
புனையப்பட்ட கதைகளுக்காக
காத்திருக்கும் காதுகளுக்கு
தெருவில் பஞ்சம் ஏதுமில்லை
தனித்திருந்து வாழும் பெண்கள்
கற்பனைகளுக்கும்
நிஜத்திற்குமிடையேயான
வெளியில்
மர்மங்களோடு வாழப்
பழகிக்கொள்கிறார்கள்