காலச்சுவடில் என் எழுத்து
[கட்டுரை]
காலச்சுவடில் என் எழுத்து
ஆர். சிவகுமார்
‘காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக்கொண்ட காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரை தரமாகத் தர இது முயலும். சிந்தனைகளின் சமூகப் பெறுமானம் பற்றியும் கலைகளின் கலைப் பெறுமானம் பற்றியும் அது கவலை கொண்டிருக்கும். இன்றைய நிலையில் அயல்நாட்டுச் சிந்தனைகளும் படைப்புகளும் நம்மைப் பாதிப்பதைப் பார்க்கிலும் நவீன இந்தியச் சிந்தனைகளும் படைப்புகளும் இயற்கையாகவும் சுலபமாகவும் நம்மைப் பாதிக்கும் என்று காலச்சுவடு நம்புகிறது.’
இவை ஜனவரி 1988இல் வெளியான முதல் இதழ்த் தலையங்கத்தின் சில வரிகள். Kalachchuvadu – A Tamil Quarterly of Ideas and Arts என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு இதழாசிரியர் சுந்தர ராமசாமியின் விருப்பத்தைச் சொல்கிறது. படைப்பிலக்கியம் அன்றி இந்தியச் சிந்தனையாளர்களான எம்.என். ராய், எம். கோவிந்தன் போன்றோரின் ராடிக்கல் ஹுமனிஸம், ராம் மனோகர் லோகியாவின் சோசலிசம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து விவாதிக்க சு.ரா. விரும்பினார். 1960கள் தொடங்கிச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ராய், கோவிந்தன் ஆகியோரின் சிந்தனைகளை அவர் கவனப்படுத்தினார். மார்க்சிய அரசதிகாரத்தின் கொடுமைகளால் அந்நியப்பட்ட மனிதநேயம்மிக்க ஒரு படைப்பிலக்கியவாதியின் மனம், அச்சிந்தனையாளர்களை நாடியது இயல்பானதே.
கவிதை எழுதுவது ஒரு வேலை அல்ல என்று சொல்லி ‘நீ ஒரு சமூக ஒட்டுண்ணி’ என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி சோவியத் அரசு கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி (1940-96)க்கு ஐந்தாண்டுக் கடும் உடலுழைப்புத் தண்டனையை அளித்தது. 24 வயதில் அவர் எதிர்கொண்ட விசாரணை புகழ்பெற்ற ஓர் இலக்கிய ஆவணம். கவிதை எழுதுவதும் அதை மொழிபெயர்ப்பு செய்வதும் ஒரு தொழில்தான் என்று வாதிட்டும் அவர் கடும் உழைப்புத் தண்டனைக்கு ஆளானார். உடல் சார்ந்த உழைப்பை அவர் ஜீவனத்துக்காக மேற்கொள்ளவே செய்தார். ‘இரண்டு வேலைகளுக்கிடையே இருந்த காலத்தில் கவிதை எழுதினேன், அதுவும் தொழில்தான்’ என்று அவர் சொன்னதை விசாரணை மன்றம் ஏற்கவில்லை. உலக அளவில் கிளம்பிய அறிவுலக எதிர்ப்பால் ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.தன்னையே நாடுகடத்திக்கொள்ள தரப்பட்ட ‘கடுமையான அறிவுரை’யால் 1972இல் கவி ஆடனின் உதவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். 1987இல் நோபல் பரிசு பெற்றார்.
அப்போது அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள் என் மொழிபெயர்ப்பில் இதழ் 3இல் (ஜூலை-செப்டம்பர் 1988) ‘கவிதையின் அரசியல்’ என்ற தலைப்பில் வெளியாயின. ‘லெனின் படித்தவர்; ஸ்டாலின் படித்தவர்; அதேபோல் ஹிட்லரும். மா-சே-துங்கைப் பொறுத்தவரை கவிதைகூட எழுதியிருக்கிறார். இவர்கள் எல்லாரிடமும் காணப்படும் பொது அம்சம் என்னவென்றால், இவர்கள் படித்த புத்தகங்களின் பட்டியலின் நீளத்தைவிட இவர்களால் தாக்கப்பட்டவர்களின் பட்டியலின் நீளம் அதிகம்.’ ‘மொழியினுடைய வாழும் விதி கவிஞன்தான்; அல்லது என் நேசத்துக்குரிய ஆடன் சொன்னபடி, கவிஞனால்தான் மொழி வாழ்கிறது.’ இந்த இரண்டு கூற்றுகளும் அவர் பேச்சின் சாரத்தைச் சொல்லும்.
சிறுபிராயத்தில் எனக்கு அறிமுகமான எழுத்தாளர் பெயர்களில் முதன்மையானது டி.கே.சி (சிதம்பரநாத முதலியார் 1881-1954). அவரின் நகைச்சுவை உணர்வுக்கு இணையாகச் சொல்ல தமிழில் உள்ளவர்கள் ஒரு சிலரே. அருந்தமிழ்க் கவிதையின் ‘உணர்ச்சி’யை அனுபவிக்கத் தெரியாமல் அதைத் தம் புலமையால் சிதைக்கும் தமிழ் ஸ்காலர்களை அவரளவுக்குக் கேலி செய்தவர் வேறெவரும் இல்லை. ‘ரசிகமணி கடிதங்கள்’ (தொகுப்பு: எஸ். மகராஜன்), ‘இதய ஒலி’ (கட்டுரைத் தொகுதி) என்ற இரண்டையும் படித்தபோது உண்டான திக்குமுக்காடலில் அவர் குறித்த ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். சுகுமாரன் அதை சு.ரா.வின் பார்வைக்குக் கொண்டுபோனார். அதைப் படித்துவிட்டு 26.7.88 தேதியிட்டு சு.ரா. எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்:
‘நீங்கள் எழுதிய டி.கே.சி. பற்றிய கட்டுரை படித்தேன். ஒரு கலை ஆளுமையுடன் இணக்கமான உறவுகொண்டு எழுதியிருக்கிறீர்கள். நான் பெரிதும் பிரசுரிக்க விரும்பும் விதமான கட்டுரை இது. இருப்பினும் ஒரு சில விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
1. இலக்கிய ஆராய்ச்சிக்கு எதிரான டி.கே.சி.யின் மனோபாவம். ஆதார வலுக்கள் அற்ற கருத்துகளை அவர் போஷிப்பது. 2. கம்பனின் பாடல்களில் திருத்தங்களை எவ்வித ஆராய்ச்சியுமின்றி. . . அவர் செய்திருப்பது. 3. மதிப்பீடுகளில் மிகையான தன்மை. தனக்குப் பிடித்தமான கவிதைகள், பிடித்தமான நண்பர்கள், கல்கியின் தமிழ் நடை, தமிழ்ப் பண்பாடு சார்ந்த உவகைகள். இந்த ஆஹா, ஓஹோ பின்னர் டி.கே.சி. குழுவினரால் ஒரு போலிப் பண்பாடாகப் பரப்பப்பட்டது. ஒருவிதத்தில் இது உண்மை சார்ந்த மதிப்பீட்டுக்கு எதிரான தொனி கொண்டது.’
டி.கே.சி.யின் ‘கம்பர் தரும் ராமாயணம்’ குறித்த எஸ். வையாபுரிப் பிள்ளையின் மதிப்புரை இடம்பெற்றுள்ள பின்னவரின் ‘கம்பன் காவியம்’ என்ற நூலை சு.ரா. படிக்கச் சொல்கிறார் (எண் 2). கட்டுரையை மறுபரிசீலனை செய்து டி.கே.சி.யின் சில பாதகமான பகுதிகள் சார்ந்த என்விமர்சனத்தையும் இணைத்து அதனை முழுமைப்படுத்தித் தர வேண்டுமென்று பெரிதும் விரும்புவதாகக் குறிப்பிடுகிறார். பிள்ளையின் நூல் கிடைக்காததை ஒரு சாக்காக வைத்துக் கட்டுரையை அப்படியே விட்டுவிட்டு அடுத்த காரியத்துக்குப் போய்விட்டேன். சு.ரா. என்மீது வைத்த நம்பிக்கையைப் பொய்ப்பித்துவிட்டேன். புதுமைப்பித்தனையோ ந. பிச்ச மூர்த்தியையோ கண்டு சொல்ல முடியாத டி.கே.சி.யின் குறையை என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
கடிதத்தின் நிறைவுப் பகுதி சு.ரா.வின் பெருந்தன்மையையும் அகந்தையின்மையையும் காட்டுகிறது. சூழல்மீது அக்கறைகொண்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவரால் மட்டுமே இப்படி சொல்ல முடியும். ‘நான் டி.கே.சி. மீது மிகுந்த மதிப்பு கொண்டவன். டி.கே.சி. பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையை (சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்) – நீங்கள் படித்ததில்லை என்றால் – படித்துப் பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ இலக்கிய வட்டத்தில் 1964இல் அவர் எழுதிய கட்டுரை – ‘டி.கே.சி: ஒரு கலை நோக்கு’ - அது. ‘காற்றில் கலந்த பேரோசை’ (1998)யில் அதைப் படித்தேன். நான் மிக விரும்பும் சு.ரா.வின் கட்டுரைகளில் ஒன்று. ‘செய்யுள்களிலிருந்து கவிதைகளைப் பொறுக்கும் காரியத்தை’ப் புலவர்களின் கொடுங்கோல் சாம்ராஜ்யத்தில் துணிச்சலாகச் செய்தவர் டி.கே.சி. என்பதை அக்கட்டுரை விவரிக்கிறது. தயக்கத்தோடு ஒரு ஒப்பிடல். சு.ரா.வோடு என்னை நெருக்கம் கூட்டிய பொது ஆளுமைகளில் டி.கே.சி.யும் ஒருவர். Stylistics நோக்கில் சு.ரா.வின் நடையை ஆராய்பவர் டி.கே.சி.யை அங்கங்கே தொட்டுச் செல்லவேண்டி வரும். காலச்சுவடில் வராத கட்டுரை அதன் ஆசிரியரின் பொறுப்புணர்வை எனக்குக் காட்டிய கதை எனக்கு முக்கியம் என்பதால் இவ்வளவும்.
எட்டு இதழ்கள் வெளியான நிலையில் ஒன்பதாவது இதழைச் சிறப்பிதழ் / ஆண்டுமலர் (295 பக்கங்கள் ) என்று பெயரிட்டு டிசம்பர் 1991இல் சு.ரா. வெளியிட்டார். இதழ் இனி தொடர்ந்து வெளிவருமா என்ற நிச்சயமற்ற சூழலில், வந்த படைப்புகள் பலவும் இடம்பெற்ற இதழ் அது. அமெரிக்கக் கவி கார்ல் சேன்பர்க் எழுதிய ‘மகிழ்ச்சி’ என்ற கவிதை என் மொழிபெயர்ப்பில் அதில் வெளியானது. இதழின் மறுதோன்றலுக்குப் பிறகு இடாலோ கால்வினோவின் ‘ஒரு மனைவியின் சாகசம்’ (1997) கான்ரட் எய்க்கினின் ‘மௌனப்பனி, ரகசியப்பனி’ (1999), காஃப்காவின் ‘வாளியில் பயணம் செய்கிறவன்’ (2013) ஆகிய கதைகள் என் மொழிபெயர்ப்பில் வெளியாயின. மற்ற இருவரும் தமிழ் வாசகர்களுக்கு அந்த நாளில் அறிமுகமானவர்கள். அவர்கள் என் தேர்வு. கான்ரட் எய்க்கின் ஓர் அமெரிக்கக் கவிஞர் என்ற அளவில் எனக்கு லேசான அறிமுகம் உண்டு. அவர் புனைவெழுத்தாளர் என்பதை அறியேன். அவர் கண்ணனின் தேர்வு என்று இப்போது அறிகிறேன். இளைஞர்களுக்குக் கனவுலகம் பிரேமைக்குரியதாக இருப்பது இயல்புதான். எய்க்கின் தமிழுக்கு வந்தது அதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். மிகப் பிரபலமான அந்த நீண்டகனவுக் கதை உள்ளிட்ட வேறுசில மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் நூலாக வெளியிட்டபோது அதுவே தலைப்புக் கதையானது. ‘பிறமொழிக் கதைகள்’ என்ற தலைப்பில் 2002இல் யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியிட்ட என் தொகுப்பிலும் அது உண்டு. இந்தத் தொகுப்புக்கு சு.ரா. காலச்சுவடில் எழுதிய மதிப்புரையில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளில் சீரான தன்மை இல்லாததைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது போதாமை, அளவில் கூடுதல்-குறைச்சல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக எய்க்கின் பற்றியது. அப்போது தகவல்களைத் திரட்ட இயலாத சூழல். 2017இல் வெளியான ‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ என்ற தொகுப்பில் தான் அக்குறைகளைச் சரிசெய்தேன். கான்ரட் எய்க்கின் பற்றிய பழைய குறிப்பில் ‘பெற்றோரின் கோர மரணத்துக்குப் பின்’ என்றொரு சொற்றொடர் வரும். அந்தக் ‘கோரம்’ சாதாரண கோரம் அல்ல. அறுவை சிகிச்சை நிபுணரான எய்க்கினின் தந்தை, எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் மூர்க்கமாகித் தன் மனைவியைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டு மாய்த்துக்கொண்டார். இறந்த உடல்களைப் பார்த்த எய்க்கினுக்கு வயது பதினொன்று. இந்தச் சம்பவம் எய்க்கினின் புனைவுலகைப் பாதித்திருப்பதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்த மதிப்புரை / குறிப்பு தொடர்பான கடிதம் ஒன்றில் ‘நீங்கள் மேலும் சிறப்பான மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டுமென்று விரும்புகிறேன். என்னால் ஏதும் உதவிகள் செய்ய முடியும் என்று நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள்’ என்று சு.ரா. குறிப்பிட்டிருந்தார்.
அவ்வப்போது சில கட்டுரைகளைக் காலச்சுவடுக்காக மொழிபெயர்த்திருந்தாலும் ஒருசில என் மதிப்புக்குரியவை. அம்பேத்கர் நூற்றாண்டை (1991-92) ஒட்டி சென்னைப் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்தில் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அம்பேத்கர் குறித்துப் பேசியதை நேரிடையாகக் கேட்டேன். அதுவரை அவரை எழுத்தில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு அவர் உரை காதில் தேனாகப் பாய்ந்தது. அப்சரஸ் கூட்டத்தின் வசியம் அவருடைய ஆங்கிலத்துக்கு இணையாகாது. தில்லியில் ஏதோ ஓர் உயர்நிலைக்கூட்டம். அம்பேத்கர் தேநீர்க் குவளையைக் கையில் எடுத்தால் மற்றவர்கள் தங்களுடையதை மேஜையில் வைத்துவிடுவார்களாம். அவர் மேஜையில் வைத்தால் தங்கள் குவளையைக் கையிலெடுப்பார்களாம். அவருடைய குவளைக்கு சம அந்தஸ்து கொடுத்துவிடக்கூடாது என்பதன் வெளிப்பாடு அது. அந்த உரையெல்லாம் தமிழுக்கு வந்திருக்க வேண்டியது. அதைப் பல்கலைக்கழகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது பேதைமை. அவரை அழைத்ததே பெரிய விஷயம். அதே காலகட்டத்தில், அப்போது தில்லிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் தற்போது ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் பேராசிரியராகவும் உள்ள உபேந்திர பக்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘விடுதலை என்ற நீதி: பாபாசாகேப் அம்பேத்கரின் கொடையும் தொலைநோக்கும்’ என்ற தலைப்பில் உரையாற்றியிருக்கிறார். அதன் பிரதி எம்.எஸ்.எஸ். பாண்டியன் வழியாகக் காலச்சுவடுக்குக் கிடைக்க, என் மொழிபெயர்ப்பில் 2002ஆம் ஆண்டு (இதழ் 39) வெளியானது. சற்று நீண்ட எழுத்துப் படிவமான அதன் முதல் பகுதியில் அம்பேத்கரின் வாழ்வனுபவத்தின் ஏழு நிலைகளை விவரிக்கிறார்: தலித், ஆழ்ந்த புலமையின் முன்மாதிரி, பத்திரிகையாளர், காந்திக்கு முந்தைய செயல்வீரர், காந்தீயமாதல், அரசமைப்புச் சட்ட நிபுணர், இந்து மதத்தைத் துறத்தல். சுயராஜ்யம் என்பது பிரிட்டிஷாரிடமிருந்து கைமாறும் அதிகாரமல்ல, அது நீதிசார்ந்த, நியாயம் சார்ந்த விடுதலையாக ஆதிசூத்திரர்களுக்கு இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அப்படி நிகழவில்லை என்பதைக் காணவும் செய்தார். அம்பேத்கர் சார்ந்த வெளியீடுகளும் ஆய்வுகளும் இந்த உரைகள் நிகழ்ந்த பிறகு நிறைய நடந்திருந்தாலும் அன்றைய சூழலில் முக்கியத்துவம் மிகுந்தவை இவை.
1999இல் நியூயார்க் டைம்ஸில் வெளியான உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரையான ‘நாகரிகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்,’ என் மொழிபெயர்ப்பில் 2000இல் (இதழ் 28) வெளியானது. கி.பி. 1000வரை பஞ்சத்தாலும் கொள்ளை நோய்களாலும் ஐரோப்பிய ஜனத்தொகை கணிசமாகக் குறைந்த நிலையில் (கி.பி. 950இல் 1-2 கோடி பேர்தான்) கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் 6-7 கோடியாக உயர்ந்ததாம். மக்களைக் காப்பாற்றியவை பீன்ஸும் பிற பயறு வகைகளும்தாம் என்கிறார் ஈகோ. இடைநிலைக் காலத்தில் இறைச்சி செல்வந்தர்களுக்கானதாக இருந்திருக்கிறது. சோகை பிடித்த, குள்ளமான மக்கள் திரள் இருந்திருக்கிறது. பீன்ஸும் பயறுகளும் கொடுத்த புரோட்டினால் ஐரோப்பியர்கள் ஆரோக்கியமானவர்களாக மாறியிருக்கிறார்கள். இரண்டாவது ஆயிரமாண்டின் மகத்தான கண்டுபிடிப்புகள் தொலைக்காட்சியோ மைக்ரோ சில்லோ கிடையாது, பீன்ஸ்தான் என்கிறார் ஈகோ. சாதாரணம் எனத் தோன்றும் ஒரு காய்வகை மேற்குலகையே காப்பாற்றியது பெரிய விஷயம்தான். அதை ஈகோ போன்ற இடைக்காலம் குறித்த ஆராய்ச்சியாளர் சொல்லும்போது அதற்குக் கூடுதல் கனம் கிடைக்கிறது.
உணவு மேஜைப் பணியாளர், பாலியல் தொழிலாளி, டிராம் நடத்துநர் என்று தொடங்கி கவிஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர், மூன்று கிராமி விருதுகள் பெற்ற பாடகி என்று பரிணமித்து பில் க்ளின்டனின் பதவியேற்பின்போது On the Pulse of Morning என்ற தன் கவிதையை வாசிக்கும் நிலையை அடைந்த ஆப்பிரிக்க - அமெரிக்கக் கவியான மாயா ஆஞ்சலு மறைந்தபோது (2014) அவர் குறித்த அஞ்சலிக் கட்டுரையை எழுதி அவருடைய நான்கு கவிதைகளையும் மொழிபெயர்த்தேன்.என் மொழிபெயர்ப்புகளில் என் பிரத்யேக நேசத்துக்குரிய அவை ‘அசாதாரணப் பெண்’ணின் பெருமிதத்தையும் ‘கூண்டுப் பறவை’யின் ஏக்கங்களையும் ‘அகதர்ம’த்தோடு பாடுபவை.
அக்டோபர் 2018இல் பள்ளிக் கல்வி தொடர்பான சிறப்பிதழை வெளியிட்ட காலச்சுவடு ஜூலை 2019இல் உயர்கல்வி பற்றிய சிறப்புப் பகுதியைப் பிரசுரித்தபோது ஆசிரியப்பணி தந்த நிறைவையும் குறைவையும் எழுதக் கேட்டார்கள். எனக்குக் கிடைத்த அனுபவங்களைச் சுதந்திரமாக எழுதினேன். சிலர் பாராட்ட, சிலர் மனம் வருந்த என்று கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. எனக்குக் கிடைத்த உண்மையான நல்லாசிரியர்கள், சிறந்த சக ஆசிரியர்கள், பிடித்த மாணவர்கள் என்று பலரையும் நினைவுகூரக் கிடைத்த அந்த வாய்ப்பை அவ்வுலகத்தின் கீழ்மையான மறுபக்கத்தையும் காட்டப் பயன்படுத்திக்கொண்டது திருப்தியைத் தந்தது. அரசு கல்லூரி மாணவர்கள், தமிழாசிரியர்கள், பொதுவாக ஆசிரியர்கள் ஆகியோர் குறித்த என் மனப்பதிவுகளைப் பகிர்ந்துகொள்ள பெருமாள் முருகனின் நூலான ‘மனதில் நிற்கும் மாணவர்க’ளுக்கு நான் எழுதிய அணிந்துரை வாய்ப்பாக அமைந்தது.
காலச்சுவடு பதிப்பகம் என் இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டுள்ளது: சோஃபியின் உலகம் (2011), வசை மண் (2018). முன்னது மேற்கத்திய தத்துவத்தின் வரலாற்றைப் புனைவாகச் சொல்லும் மிகப் பிரபலமான நார்வேஜிய நாவல். ஆசிரியர் யொஸ்டைன் கார்டெர். மொழிபெயர்க்க ஒன்றரை ஆண்டுகள் பிடித்த சவால் பொதிந்த பிரதி. கதைக்குள் ஒரு கதை. அந்தக் கதைக்குள் தத்துவத்தின் கதை. மூன்று அடுக்குகள். கலைச்சொற்களுக்குப் பலதையும் தேட வேண்டியிருந்தது. தெளிவைக் கூட்ட அவ்வப்போது முன்னும் பின்னுமாகப் போய்ச் சொற்களை மாற்றினேன். இறுதி வடிவில் சுகுமாரன் ஓரிரு திருத்தங்களைச் சொன்னார். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்தது. நல்லி-திசை எட்டும் விருதும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அங்கமான தமிழ்ப் பேராயத்தின் விருதும் அதற்குக் கிடைத்தன. உண்மையில் இந்நாவலின் பகுதிகள் பாடப்புத்தகங்களுக்கு உரியவை. இரண்டாவது நாவல் 1945-47 காலகட்டத்தில் எழுதப்பட்டு 1949இல் ஒரு தினசரியில் தொடராக வந்த ஐரிஷ் படைப்பு. நவீன ஐரிஷ் இலக்கியத்தின் தொடக்கமாகக் கருதப்படும் இந்நாவலின் ஆசிரியர் மார்ட்டீன் ஓ’கைன். பாத்திரங்கள் அனைத்தும் புதையுண்டிருக்கும் பிரேதங்கள். உயிருடன் இருந்தபோது நடந்த சண்டைகள் கல்லறைக்குள்ளும் தொடரும் வினோதம். இருபதாம் நூற்றாண்டு மத்தியின் ஐரிஷ் கிராமப்புற வாழ்க்கையின் துல்லியப் பதிவை இதில் காணலாம். வசைகளும் கொச்சை வழக்குகளும் விடுத்த சவாலால் இந்த நாவல் ஆங்கிலத்துக்கு வந்ததே 2015இல் ஒன்றும் 2016இல் ஒன்றுமாக வெளியான இரண்டு மொழிபெயர்ப்புகளால்தான். நான் தேர்ந்தெடுத்த ஆங்கிலப் பிரதி 2015இல் வெளியானது. சோஃபியின் உலகம் கொடுத்தது கருத்தியல் சவால்; இது கொடுத்தது மொழியியல் சவால். வசையியல் சவால் என்றும் சொல்லலாம்! இதற்கு கிருஷ்ணமூர்த்தி எழுதிய மதிப்புரை காலச்சுவடிலேயே வந்தது. நண்பர் சங்கரசுப்ரமணியம் முகநூலில் பொறுப்பான ஒரு மதிப்புரை எழுதினார். நிலவும் சூழலில் இதற்குமேல் எதிர்பார்ப்பது விவேகமல்ல. என் மொழிபெயர்ப்பில் ஸ்நேகா வெளியீடாக வந்த காஃப்காவின் ‘உருமாற்றம்’ குறுநாவலுக்கு 2000இல் சல்மா காலச்சுவடில் மதிப்புரை எழுதியது நினைவுக்கு வருகிறது. மார்ட்டீன் ஓ’கைனின் 1969இல் வெளியான இன்னொரு நாவலான ‘அந்த நாளின் கசடுகளை’யும் மொழிபெயர்த்துள்ளேன். காலச்சுவடு வெளியீடாக அது விரைவில் வரவுள்ளது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2019இல்தான் வெளியானது. நவீன, பின்நவீனக் கதையாடலின் கலவையாக அது இருக்கும். தன் சர்வதேசத் தொடர்புகளைக் கண்ணன் ஆக்கபூர்வமாகக் கையாள்வதற்கு இது ஒரு சான்று.
காலச்சுவடு பதிப்பகத்துக்காகப் பிறர் செய்த மொழிபெயர்ப்புகளைச் சரிபார்த்தல் / உடன் பணியாற்றல் / மேலாய்வு செய்தல் என்று பலவகைப் பாத்திரங்களை ஏற்றிருக்கிறேன். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தனித்த பாணியைப் பின்பற்றுவதைக் காண்கிறேன். அதில் என் இடையீடு இருக்காது. பொதுவாக இந்த வேலைகளை ஆலோசனை சொல்லும் நடைமுறையாகவே பார்க்கிறேன். சமயங்களில் சோர்வூட்டும் பயிற்சியாக இருந்தாலும் அதிலிருந்து கற்கும் வாய்ப்பைப் பெறவும் செய்கிறேன். என் மனதில் தோன்றும் சொற்களைவிட, வாக்கிய அமைப்பைவிட மேலானவற்றைப் பிறரிடம் காணும்போது மகிழ்கிறேன். குறிப்பாக சுகுமாரன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்றிருக்கிறேன். சுகுமாரனோடு முன்காலத்தில் நேரிலும் பின் மின்னஞ்சலிலும், யுவனோடு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பல மணி நேரம் சேர்ந்து உட்கார்ந்தும் பணிசெய்திருக்கிறேன். ஜி. குப்புசாமி எந்தக் காற்றானாலும் பறக்கும்பறவை. சிறகுகளில் என்னையும் ஏற்றிக்கொள்வார். சாகசம் காட்டி இலக்கை அடைந்துவிடுவார்.மொழிபெயர்ப்பு ஒரு தொடரியக்கச் செயல்பாடு என்றால் அது நாள்பட மேலும் உறுதியாகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அதை முடித்துக்கொள்ள வேண்டியுள்ளதே.
நாம் சொல்வதற்கும் மேலாகவே புரிந்துகொண்டு அச்சுப் பிரதியைச் செம்மையாகத் தயாரிக்கும் கலா, ஜெபா போன்றோருக்குப் பாராட்டையும் பத்திரிகை / பதிப்பகத் தொடர்பில் சௌக்கியம் கூட்டும் நண்பர்கள் முத்து, அய்யாசாமி ஆகியோருக்கு நன்றியையும் தெரிவிப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் என் கடமை.
மின்னஞ்சல்: sivaranajan51@yahoo.co.in