கடிதங்கள்
கடிதங்கள்
தமிழக, கேரளத் தேர்தல்கள் பற்றிய கட்டுரைகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
தமிழகம், திராவிட மண். நீதிக் கட்சிக்குப் பிறகு திராவிடர் கழகம், அதிலிருந்தும் திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மக்களால் இது உணரப்பட்டது. திமுகவுக்கும்முன் ஆரியத்துக்கு எதிரான சூத்திர எழுச்சியாகவே திராவிடம் கணிக்கப்பட்டது. தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது சிறுதெய்வ வழிபாடு திராவிட மண்ணின் ஆதிப் பண்பாடு என்று, தரவுகளைத் திரட்டி நிரூபித்தனர் திராவிடச் சிந்தனையாளர்கள். அத்தோடு திராவிடம் என்ற இனவியலும் தமிழ் என்ற மொழித் தரவும் ஒன்றோடு ஒன்று பிரிக்கமுடியாமல் பிணைந்தவை என்றும் பிரச்சாரம் செய்தனர். மொழி, மண் சார்ந்த இந்தப் பழைமைப் பெருமிதம், வழித் தோன்றல்களின் குருதியிலும் மனசிலும் படிந்துவிட்ட தருணத்தில்தான் பாஜக தனது மதவாதக் கால்களைத் தமிழ்மண்ணில் பதியமிட முயன்றது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் இந்துத்துவா செயல்திட்டத்தை மட்டுமே நாடு முழுவதும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என மக்கள் புரிந்துகொண்டிருந்த சூழலில் தேர்தலில் குதித்துத் தன்னை நிலைநிறுத்த முயன்றது. நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவே ஆகும். ஆட்சி அமைப்போம் என 100% நம்பியிருந்த மேற்கு வங்கத்தில் முந்தைய நிலமையைவிட அதிக சீட்டுகள் கிடைத்திருந்தாலும் தோல்விதான்.
ஏகபத்தினி விரதன் ராமன் என்பதையும் கோபியர்களின் நாயகன் கிருஷ்ணன் என்பதையும் தென்னாட்டவர்கள் ரசனை சார்ந்த சங்கதியாகப் பார்த்தார்களே தவிர பூஜிக்கும் புனிதமாய்க் கைக்கொள்ளவில்லை. ‘ராம ராஜ்யம்’ என்ற ஆன்மீக, அரசியல் உள்ளடக்கம் அண்ணல் காந்தியடிகளால் முன்வைக்கப்பட்டபோது வட நாட்டார் அளவுக்குத் தென்னாட்டவர்களை அது ஈர்க்கவில்லை. இந்தப் பாரம்பரியப் பண்புகள்தான் இன்றுவரை பாஜக தமிழ்நிலத்தில் கால்பதிக்க முடியாமல் இருக்கக் காரணம்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு அதிக சீட்டுகள் ஒதுக்கப்படாதது உண்மை. அனால் அதை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பாஜக வரக்கூடாது என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாய் இருந்தது. பாஜக அதிகாரத்துக்கு வந்தால் வாழ்வுரிமை பறிபோகும் என்று வரலாற்றுரீதியாகப் புரிந்துவைத்திருந்தார்கள். அரசியல் பிரநிதித்துவத்தைவிட வாழ்க்கை முக்கியம் எனக் கருதினார்கள்.
கேரளத் தேர்தலில் அனைத்துப் பெண்களும் ஐயப்ப தரிசனம் செய்யலாம் என்று நீதிமன்றம் வழங்கிய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம் பாஜகவினர் களத்தில் இறங்கிப் போராடியதும் சட்டத்துக்கு ஆதரவாகக் களம்கண்ட பெண்கள்மீது ஆட்சியதிகாரம் கைவசம் இல்லாதபோதே வன்முறையை ஏவியதும் மலையாளப் பெண்கள் மத்தியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தின. அதே வேளையில் முதல்வர் பிணராயி விஜயன் தன் மகளை ஓர் இஸ்லாமியருக்குத் திருமணம் செய்துவைத்தார் என்பது நேர்மறை விளைவை ஏற்படுத்தி இடது முன்னணியின் வெற்றிக்கு வழிகோலியது; அல்லது பாஜகவின் தோல்விக்கு அடியுரமிட்டது.
இப்படியாகக் கேரளத்திலும் தமிழகத்திலும் பாஜக தோற்கடிக்கப் பட்டிருப்பது முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.
சீருடையான்
தேனி
‘வரலாற்றில் பெயர் நிலைக்க...’ மகிழ்ச்சி அளிக்கும் தலையங்கம். அதே நேரத்தில், சார்பற்ற நடுநிலைத் தலையங்கம். பாராட்டுகள். கருணாநிதி மகன் என்ற அளவிலேயே அரசியல் தலைவராக அறியப்பட்டிருந்த ஸ்டாலின், அரசியல் வியூகம், நிர்வாகத் திறமை, தந்தையை மிஞ்சிய சாணக்கியம், தற்புகழ் துறந்த உயர்ந்த நிலைப்பாடு, மாநில முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, எதிர்க் கட்சிகளையும் அரவணைக்கும் நளினமான நிர்வாகம் எனப் பன்முகம்கொண்ட சிறந்த முன்மாதிரி தலைவராக இப்போது அறியப்படுகிறார்.
இது பலரும் எதிர்பார்த்திராத திருப்பம் என்று நினைக்கிறேன். அரசியல் பாலபாடம் படிக்க வேண்டிய அரசியல் மாணவர் என்றே பலரும் எடைபோட்டிருந்த நிலையில், ‘இல்லை; நான் அரசியல் ஆராய்ச்சியாளன்’ என்பதைத் தம் திட்டங்களாலும் நடவடிக்கைகளாலும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.
துறைசார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றே அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்; என்றாலும் நிபுணர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களை இனம் கண்டு ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுய அறிவு தேவை என்பதை மறுக்க முடியாது.
செயல்திறன் மிக்க அதிகாரி இறையன்பு போன்றவர்கள் முந்தைய ஆட்சியிலும் இருக்கத்தானே செய்தார்கள்! எல்லாவற்றையும்விட, வீண் பந்தாக்களை ஸ்டாலின் புறக்கணித்துவருவது அவரது மதிப்பைக் கூட்டியுள்ளது.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை
களந்தையாரின் ‘இதுதான் முதல் களம்’ கட்டுரை வாசித்தேன். தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், கேரளத்தில் குறிப்பிடத்தகுந்த வாக்குச் சதவீதம், மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்கள் பாஜக பெற்றுள்ள நிலையில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலவில்லை.
கால்நூற்றாண்டுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகளின் பெரும் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் தோழர்களின் இன்றைய நிலை என்ன? கேரளத்தில் இது போன்ற வாக்குச் சதவீதம் அவர்களால் எவ்வாறு பெற முடிந்தது? பெரியார் மண்ணில் அக்கட்சியின் குரல் ஒலிப்பது எங்ஙனம் நிகழ்ந்தது?
இருபெரும் கட்சிகள் வலுவாகக் காலூன்றி இருக்கும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தன்னை வளர்த்துக்கொள்வதும், மற்றொரு கட்சியை அழிக்க எண்ணுவதும் அவர்களின் ரகசியமான அல்ல, நேரடியான அணுகுமுறையாகவே உள்ளது.
அவ்வகையில் தமிழகத் திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை முதலில் நிர்மூலமாக்கவே பாஜக முயலும். சிலகாலம் கழிந்தபின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டபின் அடுத்த பரிமாணம் துவங்கும்.
தமிழகத்தில் பாஜகவிற்குப் போட்டியிட இருபது இடங்கள் அளிக்கப்பட்டமையே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலை அக்கட்சியின் வளர்ச்சியன்றி வேறென்ன? தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஊடகங்களில் பேசிய மம்தா பானர்ஜி பாஜக பெற்றுள்ள இடங்களை கம்யூனிஸ்டுகள் வென்றிருந்தால்கூட நான் மகிழ்ந்திருப்பேன் என்று வெளியிட்ட கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது.
இனி அம்மாநிலத்தில் வரக்கூடிய தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவே வலுவான போட்டியாளர் என்ற பிம்பம்தான் வாக்காளர்கள் மனங்களில் எழும். கம்யூனிஸ்ட்களின் வீழ்ச்சி அவர்களுக்கு மட்டுமன்றி, ஜனநாயகத்திற்கும் மக்களுக்குமான வீழ்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது.
பிணராயி விஜயன் கேரளத்தில் ஈட்டியிருக்கும் வெற்றி பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. இந்துத்துவச் சக்திகள் எவ்வகையிலும் தலைதூக்கிவிடாமல் அவர் தொடர்ச்சியாக, உறுதியாகச் செயல்பட்டாக வேண்டும்.
‘அஞ்சலி’ என்ற தலைப்பில் பல்வேறு பேராளுமைகளது பிரமிப்பூட்டும் சாதனைகளை காலச்சுவடு தொடர்ந்து பொதுப்பார்வைக்குக் கொண்டுவருகிறது. இவ்வாறான கட்டுரைகள் வெளியிடப்படாமல் போனால் வாசகர்களுக்கும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் அது பெரும் இழப்பாகவே போய்விடும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
ஜூன் தலையங்கம் தமிழ்நாடு அரசின் புதிய ஆட்சிக்கு வரலாற்றில் பெயர் நிலைக்க வாழ்த்தியிருக்கிறீர்கள். தலையங்கம் தனிச் சிறப்பு. செயல்திறம் மிக்க நேர்மையாளர்கள் என்று பெயர் வாங்கியுள்ள வெ. இறையன்பு, த. உதயச்சந்திரன், உமாநாத், எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோருக்கு முக்கியமான பொறுப்புகளைத் தந்திருப்பது புதிய ஆட்சியின் நேரிய நிர்வாகத்தின் முன்னோட்டமாக விளங்குகிறது என்ற தங்களின் கண்ணோட்டம் நன்று.
இந்தியாவில் ஒற்றைக்கட்சி அரசியலை உருவாக்குகின்ற முனைப்பு, எதிர்க்கட்சி எதுவும் இருத்தலாகாது என்ற ஒற்றைப் பார்வை, ஜனநாயகக் கட்டமைப்புக்குள்ளேயே சர்வாதிகார அழுத்தத்தை உண்டாக்குகின்ற போக்கு இவ்வாறான நாட்டின் இன்றைய நிலையில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத் தன்னாட்சி என்ற திமுகவின் முழக்கத்தை மீண்டும் முன்எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
களந்தை பீர்முகம்மது எழுதியுள்ள ‘இதுதான் முதல் களம்’ கட்டுரையைத் தமிழ்நாட்டிலுள்ள ஜமாத்துகள் அனைத்தும் துண்டுப் பிரசுரமாகத் தங்கள் மக்களிடையே வழங்க வேண்டும். ஊடகங்களின் இஸ்லாமிய வன்மம் குறித்து மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.
காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், அதன் சிறப்புத் தகுதிகளை நீக்கியதோடு, அதை ஓர் உப்புக் கல்லுக்கும் பெறாத ஒன்றியப் பிரதேசம் எனச் சுருக்கியது இந்திய இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை மணிதானே!
எவ்வித நீதி நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாத, முட்டாள்தனமான, முரட்டுத்தனமான அகில இந்திய பாஜக தலைமை எந்த மாநிலத்திலும் தன் இஸ்லாமிய வெறுப்பு அரசியலைத் தளர்த்திக்கொள்ளப் போவதில்லை.தமிழ்நாட்டில் தொன்றுதொட்டுக் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் பங்கு பெற்று வருகின்றனர். அவ்வெண்ணிக்கை இன்னும் அதிகமாக வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் சட்டமன்ற உறுப்பினராகிச் செயல்படுவது இஸ்லாமியர்கள் அக்கட்சியில் மேலும் ஏராளமானோர் சேர்ந்து புத்துணர்ச்சி பெற வழிவகுக்கும். பரந்துபட்ட இஸ்லாமிய எழுச்சிக்குப் பாதை அமைப்பதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கும்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
1987 கேரளா சட்டமன்றத் தேர்தலில் ஈ.கே.நாயனார் திருக்கரிப்பூர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்று இடது ஜனநாயக முன்னணியால் ஏகமனதாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாறு இவ்வாறிருக்க, ஜூன் 2021 இதழில் ‘தணியாத கனல்’ என்ற கட்டுரையில் கட்சிப் பூசல்களும் குழுச் சண்டைகளும் காரணமாக கௌரியம்மாவுக்குப் பதிலாக “1987 தேர்தலில் போட்டியிடாத ஈ.கே.நாயனார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று பதிவு செய்யப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.
சுஜித்
அருமனை
(தகவல் பிழைக்கு வருந்துகிறோம் - பொறுப்பாசிரியர்)
அஞ்சலி
எம். வெங்கடேசன்
2005 இலிருந்து 2015 வரை காலச்சுவடு இணையதளத்தை வடிவ மைத்துப் பராமரித்தவர். காலச்சுவடு இதழின் இணையம் தொடர்பான தகவல்களை எந்நேரம் கேட்டாலும் நேர்த்தியாகச் சொல்லித்தரும் பக்குவம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். 09.05.2021 அன்று உடல் நலக்குறைவால் அவர் மறைந்தார்.
அன்னாருக்குக் காலச்சுவடின் அஞ்சலி.