கவிதை
இதய கீதம்
நாடிக்குழாய் வைத்து நன்றாகக்
கேட்டு விட்டும்,
‘ரீரிக்...ரிரிக்....ரிக்’ என அங்கோர்
மின் கருவி
பாடிக்குறிக்கும் குறிப்பு ஒன்றைப்
பார்த்து விட்டும்,
மூடிக் கிடக்கும் அறையுள்
முடுக்கிய ஓர்
காணாஒளியின் கதிர் நிழலைக்
கண்டு விட்டும்,
வாழ் நாளைப் பற்றி வரையறைகள்
கூறுகிறார்:
“தூங்குகையிலோ துணைவி
உடன் சரிந்து
வாங்கில் அமர்ந்து கதைவளர்க்கும்
வேளையிலோ,
ஒன்றைக் குறித்து, அக் குறித்த
ஒரு செயலைச்
சென்று தொடங்கச் சிறுபொழுது
முன்னரோ
நின்றுவிடநேரலாகும்
இதயம்!” என்றார்:
நன்றாகச் சொன்னர்! நமனே
குறித்துக் கொள்.
“சப்பென்றுணவு சலித்தால்,
சலிக்கட்டும்;
உப்பை இனிமேல் ஒதுக்கி
விடும்!” என்றார்.
ஐயகோ, ஏற்றேன், “அரிய
முயற்சிகளை
வை ஓர் புறத்தே; வருந்திப்
பெரும்பணியில்
ஈடுபடாதே; இரவு
துயில் குறைத்தல்
கூடாது!” கொஞ்சம் நினைப்பைக்
குறுக்கு!” என்று
பட்டியலை நீட்டிப் பளீர் என்று
எதிர் எறிந்தால்
தொட்ட தொழிலைத் தொடரா
தொழிவதோ?
இம்மாநிலத்தே இறவாது
பல்லாண்டு
சும்மா கிடந்து சுகமாய்
இருப்பதிலும்,
கொண்டு வா பார்ப்போம் கொலை எருமை
பூட்டிய நின்
வண்டியினை எனது வாசலுக்கு!
நான் இங்கே
சூழ்வேன்; சுழல்வேன்; சுமப்பேன்
சுவைத்திருப்பேன்;
வாழ்வேன் மடியும்வரை.
1968
புள்ளி அளவில் ஒரு பூச்சி
புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்தபின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல,
மனம்
ஒத்திருந்த வேளை!
ஒழுங்காக அச்சடித்த
வெள்ளைத்தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய்ப் பிசகாகப் போட்டகாற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்துவிட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு.
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
‘தாயே!’ என அழுத
சத்தமுமே கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம்கூட ஓடி இருக்கவில்லை.
காட்டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்தது போல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய்பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது.
தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை.
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
1962
சிறுகதை என்பது செட்டான புதிய இலக்கிய வடிவமாகும். சிறிய கவிதைகள் சிலவற்றை அவற்றின் பாங்கிலே வடிக்க நான் விரும்பியதால் கிடைத்தவை இத் தொகையிலே உள்ளன.
நவீன வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியன நவீன உரிப்பொருளைக் கையாண்ட வேளை கவிதை மட்டும் பழைய பொருள் மரபைப் பற்றியே சுழன்றமையால் அருகிவரும் கலை எனக் கருதுமாறாயிற்று. நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசியமாகும்.
தனிச் சொற்களின் வளர்ச்சியின் அடுத்த நிலையே வாக்கியம் என்பதுபோல, வசனத்தின் அடுத்த உயர் நிலையே செய்யுள் ஆகும். நீளக் குறைவாலும், பார்வையின் அகலம் இன்மையாலும் சுவைஞர்களை முழுமையாக ஆட்கொள்ள முடியாத சிறுகதையினது அமைப்பைக் கவிதையாகச் செய்யுளில் வார்க்கும்போது நிறைவுற்ற இலக்கிய வடிவம் ஒன்று தோன்றுதல் கூடும்.
சிறுகதை இரு பரிமாணப்பொருள்; ஆனால், அதன் பாங்கில் அமைந்த கவிதை முப்பரிமாண அமைப்பை ஒத்து மிளிரலாம்.
மஹாகவி 21.5.1969