போராடாமல் நீதி கிடைக்காது
போராடாமல் நீதி கிடைக்காது
மொழிபெயர்ப்பும் தொகுப்பும்
கா. கிருஷ்ணவேணி
பாதிக்கப்பட்ட பெண்களையும் உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல் வைரமுத்துமீதான ‘மீடூ’ குற்றச்சாட்டுக்களின் விளைவுகளை விரிவாக அலசுகிறது.
தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கோவா செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. இதுகுறித்த சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கும்போது கேரளக் கவிஞர் ஓ.என்.வி. குரூப் பெயரிலான விருதுக்கு வைரமுத்துவை அம் மையம் தேர்ந்தெடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இது விவாதிக்கப்பட்டது.
கேரளத் திரைத் துறையைச் சேர்ந்த பெண்களால் தொடங்கப்பட்ட சினிமா பெண்கள் கூட்டமைப்பு (Women in Cinema Collective) பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு இத்தகைய விருதை அளிப்பதற்கு வெளிப்படையாகக் கண்டனம் செய்தது. மேலும் பல தரப்பினரிடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் வந்த நிலையில் விருதுக் குழு முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வைரமுத்து அந்த விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்தார்!
இதுபற்றிக் கேள்வி எழுந்தபோது, ஓஎன்வி குருப் விருது தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் “ஒருவரை விருதுக்குத் தேர்வு செய்யும்போது அவரது தனிப்பட்ட நடத்தை குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியாது” என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் விருது அறிவிப்பை அடுத்து வைரமுத்துவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுப் பாராட்டு தெரிவித்திருந்தார். கேரள முதல்வர் பிணராயி விஜயன் இந்த விருதை வழங்கும் ஓஎன்வி கலாச்சார மையத்தின் (ONV Cultural Academy) தலைமைப் புரவலர்.
இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த சூழலில் ஊடகவியலாளர் பர்க்கா தத், இதைக்குறித்து ஒரு விவாத நிகழ்ச்சியைத் தன்னுடைய ‘மோஜோ ஸ்டோரி யூட்யூப்’ அலைவரிசையில் ஒருங்கிணைத்திருந்தார்.
வைரமுத்துவின் மீது பாலியல் அத்துமீறல் குற்றம்சாட்டித் தமிழகத்தில் மீடூ இயக்கத்துக்குப் பரவலான கவனம் கிடைக்கச் செய்தவரான திரையிசைப் பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபதா, நடிகை பார்வதி திருவோத்து, எழுத்தாளர் மீனா கந்தசாமி, சின்மயியைத் தொடர்ந்து வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டை முன்வைத்த பாடகி புவனா சேஷன், கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டார்கள். விவாதத்தில் பேசப்பட்ட முக்கியக் கருத்துகளின் தொகுப்பை இங்கே தருகிறோம்.
வைரமுத்துவுக்கு எதிராக இதுவரை பதினேழு பெண்கள் பாலியல் ரீதியாகப் புகார் அளித்தும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவருக்கான அங்கீகாரங்களும் ஆதரவும் பொதுவெளியில் பெருகியிருக்கின்றன. அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் நம் சமூகத்தில் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்றிய இந்தக் கலந்துரையாடல் உதவும்.
•
சின்மயி ஸ்ரீபதா
சின்மயி: நான் முதன்முதலில் வைரமுத்துவால் அவரது வீட்டிலுள்ள அலுவலக அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். அப்போது முதல் என்னால் முடிந்த வகையில் என்னை அவரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். நான் மட்டும் தனியாக அவர் இருக்கும் இடத்துக்குச் செல்லக்கூடாது என்பதை உறுதியாகக் கடைப்பிடித்தேன். அவர் அறைக்குள் போகும்போது யாரையாவது உடன் அழைத்துச்செல்வது வழக்கம். சிலரிடம் அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார், அதனால் அவர் அறைக்குச் செல்லும்போது துணைக்கு வாருங்கள் என்று சொல்லி அழைத்துப்போவேன். சிலரிடம் அவரிடம் நான் பாதுகாப்பாக உணரவில்லை, அதனால் என்னோடு வாருங்கள் என்று சொல்லியோ அல்லது எந்தக் காரணத்தையும் சொல்லாமலோ அழைத்துப் போவேன். ஒரு காகிதத்தில் கையெழுத்து வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காகவெல்லாம் என்னைத் தனது அறைக்கு வரச் சொல்வார். ஏறக்குறைய என்னுடைய பதினைந்து வயதிலிருந்தே என்னை அவருக்குத் தெரியும்.
என்னுடைய நம்பிக்கையைப் பெற்றதோடு அல்லாமல் என் அம்மா உள்ளிட்டோரையும் அவர் எனக்குத் தந்தையைப் போன்றவர் என்று நம்பவைத்துவிட்டார். திடீரென்று ஒருநாள் என்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார். முத்தம் கொடுத்தார். 2005இல் அது நடந்தது. அதன் பிறகு நான் என்னால் முடிந்தவற்றைச் செய்தேன். என் அம்மாவிடம் தெரிவித்தேன். 2006இல் பதினேழு வயதாக இருக்கும்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால், இதுபற்றி நாம் வெளியில் சொன்னால் யாராவது நம்புவார்களா? இதற்கு எதிராகச் சட்டங்கள் ஏதேனும் உள்ளனவா? எப்படி இதை வெளியே சொல்வது? சொன்ன பிறகு என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாங்கள் அப்போது வாடகை வீட்டில் இருந்துவந்தோம். என் அம்மா விவாகரத்தானவர். எங்களுக்கு வீட்டில் பெரிய ஆதரவு எதுவும் இல்லை. சமூகம் சார்ந்து, வேலை சார்ந்து நீண்டகாலப் பாதிப்புகள் என்னென்னவாக இருக்கும் என்ற கேள்வி இருந்தது. தற்போது என்னுடைய 34ஆவது வயதில் நான் ஒரு திறமையான பாடகி என்று நிறுவப்பட்டுள்ளேன். இப்போது வெளியே வந்து நடந்ததைச் சொன்னபோது எல்லாரும் என்னை ஒன்றுமில்லாமல் ஆக்க வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பாடகராக என் பயணத்தைத் தொடங்கியிருந்த அந்தக் காலத்தில் வெளியே சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். இப்போது புவனா சேஷனுக்கு நடந்ததுதான் எனக்கும் அப்போது நடந்திருக்கும்.
வைரமுத்து என்கிற கவிஞரால் தனக்கு நேர்ந்தது என்ன என்று புவனா சொல்லியிருக்கிறார். வைரமுத்து தனக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுக்களை ஒன்றும் இல்லாமல் செய்வதற்குத் தன்னுடைய அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்துவார். அவர் சார்ந்த மாபெரும் ஆடம்பர நிகழ்ச்சிகளில் முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் கலந்துகொள்வார்கள்.
பர்க்கா தத்: அத்தகைய ஒரு நிகழ்வை நாம் இப்போதும் பார்க்கிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரமுத்துவைச் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். அவருக்கு விருது வழங்குவதாக அறிவித்த கேரள இலக்கிய அமைப்பின் புரவலர்களுள் கேரள முதல்வர் பிணராயி விஜயனும் ஒருவர். வைரமுத்துமீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்று தெரிகிறது. இதையெல்லாம் தாண்டி எது உங்களின் அமைதியை உடைத்தது சின்மயி? எது இதுபற்றி வெளியே பேசவைத்தது?
பர்கா தத்
சின்மயி: மீடூ இயக்கத்தின்போது ஊடகவியலாளர் சந்தியா மேனன் இத்தகைய சம்பவங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பிற பாடகிகள் தங்களின் பாதிப்பு பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். சந்தியா மேனனும் வைரமுத்துவால் தான் பாதிக்கப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார். அப்போது நானும் அவரிடம் எனக்கு நேர்ந்ததைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் என் பெயர் வெளியில் தெரியக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது; இப்போதும் பயம்தான். வைரமுத்து என்ற இந்த மனிதரின் செல்வாக்கு கற்பனைக்கு அப்பாற்பட்டது. எனவே சந்தியா என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு நேர்ந்த சம்பவங்கள் பற்றிப் பொதுவெளியில் பகிர்ந்தார். மேலும் சிலரின் பாதிப்பு குறித்தும் அவர் பகிர்ந்திருந்தார். இப்படி நிறையப் பேர் பகிர்ந்துகொள்வதைப் பார்த்த பிறகு மற்றவர்களைச் சொல்லவைத்துவிட்டு நான் மட்டும் சொல்லவில்லை என்ற எண்ணம் என் மனத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே வெளிப்படையாக எனக்கு நடந்தவற்றைப் பொதுவெளியில் பகிர ஆரம்பித்தேன்.
ஆனால் அதற்கும் முன்பாகவே சென்னையில் வசிக்கும் ஓர் இயக்குநர் மூலம் பேசி, தான் மன்னிப்புக் கேட்க விரும்புவதாகவும் கூறி என்னை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்க வைக்க முயன்றார் வைரமுத்து. அதே சமயம் பலர் என்னைத் தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்தவற்றைப் பேசும்படி வேண்டிக்கொண்டார்கள்.
தமிழ்த் திரைப்படத் துறை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு (FEFSI-பெப்ஸி) மூலமாகத்தான் இயங்குகிறது. இதன் கீழ்தான் 24 சங்கங்கள் இயங்குகின்றன. திரைத் துறையில் பணியாற்ற வேண்டுமென்றால் இதில் உறுப்பினராக இருப்பது கட்டாயம். இசைக் கலைஞர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால் பாடகியாக இயங்குவதற்கு அதில் உறுப்பினராவது கட்டாயம் இல்லை. அதே சமயம் டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் டப்பிங் கலைஞராகச் செயல்பட முடியாது. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் அப்போதைய தலைவர் ராதாரவி. அப்போது அவர் திமுகவில் இருந்தார். இப்போதும் அவர்தான் தலைவர். நான் சங்க உறுப்பினர் சந்தாவான 90 ரூபாயைச் செலுத்தவில்லை என்று அவர் காரணம் காட்டி என்னைச் சங்கத்திலிருந்து வெளியேற்றினார். நான் டப்பிங் பேசிக் கிடைத்த ஊதியத்திலிருந்து சங்கம் பத்து சதவீதத்தை வரியாகப் பிடித்ததே லட்சக்கணக்கில் இருக்கும். பெப்சியால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களோடு மட்டும்தான் திரைத்துறையினர் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை பெப்சி அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பியது. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் வேறு ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருப்பார். இப்படி இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவை. நான் நீக்கப்பட்டதும் சக டப்பிங் கலைஞர்கள் மெளனம் காத்ததற்கு இதுதான் காரணம்.
என்னுடைய தடைக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியிருந்தாலும் என்னை டப்பிங் பேச அழைத்தால் ராதாரவி உள்ளிட்ட சிலரின் கேள்விகளுக்குத் தயாரிப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும். ஒரு படத்தை முடித்து வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கும்போது என்னை டப்பிங் பேச அழைத்து அதனால் ஏற்படும் சிக்கலைச் சந்திக்கத் தயாரிப்பாளர்கள் விரும்பமாட்டார்கள்.
தமிழ்நாட்டில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுரீதியானது. திரைத்துறையிலிருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். அரசியல்வாதிகள் பலர் திரைத்துறையைத் தாங்கள் பிரபலமாவதற்குப் பயன்படுத்திக்கொள்வதும் நடக்கிறது. அதனால் நாங்கள் போராடுகிற இந்த வழக்கு தனித்துவமானது. இதனால்தான் இந்த விவகாரத்தில் என்னைத் தடை செய்வது, கூட்டாக அவமானப்படுத்துவது போன்றவை நடக்கின்றன. எங்களுக்கு எதிரான வசைச் சொற்களும் நம்பமுடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன.
பர்க்கா தத்: இந்த நேரத்தில் உங்களுக்கும் புவனாவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இத்தகைய நிகழ்வுகளில் பேசும்போது மீண்டும் மீண்டும் உங்களுக்கு நடந்தவற்றை நினைவுகூர வேண்டியிருக்கிறது. நீங்கள் மீண்டும் அந்தக் கணங்களுக்குச் சென்றுவருகிறீர்கள். நீங்கள் உங்கள் இருவருக்காக மட்டும் பேசவில்லை. வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பதினேழு பெண்களுக்காகவும் பேசுகிறீர்கள். பல பெண்களால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். நடந்த சம்பவங்கள் பற்றி உங்களிடம் மீண்டும் கேட்பதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய பலவற்றை நாம் புரிந்துகொள்ள முடியாது.
புவனா: 1990களின் பிற்பகுதியில் நான் பின்னணிப் பாடகியாக முயற்சி செய்யத் தொடங்கியபோது எனக்கு இந்தச் சம்பவம் நடந்தது. எனக்கு அப்போது 20 வயது. இந்த நபர் (வைரமுத்து) நேரடியாக என்னை மிரட்டினார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் என்னுடைய பணிசார்ந்த வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவேன் என்று மிரட்டினார். “எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கையும் பணரீதியான செல்வாக்கையும் பற்றி உனக்குத் தெரியாது. இதைப் பற்றி வெளியில் சொன்னாலோ, எனக்கு இணங்கவில்லை என்றாலோ பின்னணிப் பாடகியாக உன்னால் வளரவே முடியாது” என்றார். நான் பழமைக் கண்ணோட்டம் கொண்ட குடும்பப் பின்னணியிலிருந்து வந்ததாலும், எனக்கு வெளியுலகம் அவ்வளவாகத் தெரியாததாலும் என் வயதின் காரணமாகவும் நானும் என் குடும்பத்தினரும் பயந்து பின்வாங்கி விட்டோம்.
சின்மயி தனக்கு நடந்ததை வெளிப்படுத்திய பிறகு, அவர் மீதான அவதூறுகளையும் வசைகளையும் பார்த்துத் தான் நான் எனக்கு நடந்ததை வெளியில் சொல்ல நினைத்தேன். சின்மயிதான் என்னைப் பேசவைத்தார் என்று சொல்ல வேண்டும். அவருடைய துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்
தமிழ்த் திரைத்துறையிலிருந்து வைரமுத்துவுக்கு எதிராக எந்த ஒரு குரலும் வரவில்லை. பலரும் அவரை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். மனிதர்கள் என்றால் தவறு செய்வார்கள், இருபது வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்கிறீர்களே என்றெல்லாம் பலர் என்னிடம் சொல்கிறார்கள். எனக்குப் பாதிப்பு நடந்து ஏறக்குறைய 20, 22 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதெல்லாம் அந்த மனிதரைத் திரையில் பார்க்கிறேனோ, அவரைப் பற்றிய செய்திகளைப் பற்றிப் படிக்கிறேனோ அப்போதெல்லாம் என் வயிற்றில் அருவருப்பின் அமிலம் சுரக்கிறது. பல ஆண்டுகளாக எனக்கு ஏற்பட்ட காயத்தின் ரணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறேன். அது ஆறவே இல்லை. இப்போதும் நான் பேசவில்லையென்றால் என் குடும்பத்திலும் பொதுவெளியிலும் என்னைச் சுற்றியுமிருக்கிற பெண் குழந்தைகளை யார் காப்பாற்றுவது? இப்போதும் பேசவில்லை என்றால் எப்போது?
பர்க்கா தத்: வலியைச் சுமந்துகொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். நான் பத்து வயதில் என் உறவினர் ஒருவரால் பாலியல்ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டேன். அந்தச் சம்பவத்தை முழுவதுமாக மறக்க முயன்று பெருமளவுக்கு வெற்றியும் பெற்றேன். ஆனால் அந்த நபர் அப்போது தலைக்குப் பயன்படுத்திய எண்ணெய்யின் வாசனை என்னை இப்போதும் துரத்திக்கொண்டிருக்கிறது. நாம் இவ்வாறான காயங்களைச் சுமந்துகொண்டே இருக்கிறோம். அது நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் நம்மைப் பயமுறுத்துகிறது; துரத்திக்கொண்டிருக்கிறது.
புவனா சேஷன்
புவனா: பின்னணிப் பாடகியாக உயர வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் என் சுயமரியாதையை விலையாகக் கொடுத்து என் கனவை நனவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. அந்தச் சம்பவத்தால் அந்தக் கனவை நனவாக்கும் பயணத்தை நான் கைவிட வேண்டியிருந்தது. அதனால் ஏற்பட்ட கோபமும் கசப்பும் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை. இப்போதும் அது பெரும் வலியைத் தந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய பாதிப்புகளை வெளியில் சொல்பவரின் சமூக அடையாளம், அரசியல் சார்பு, மதம், சாதி போன்றவற்றுக்கு ஏற்பப் பொது எதிர்வினை இருக்கிறது. என் கோபத்தை, வலியை யாரும் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. என் குடும்பப் பெயரை வைத்து நான் குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியில், மதத்தில் பிறந்ததினால் என்னுடைய கௌரவம் காக்கப்படக் கூடாதா? கௌரவம் அனைவருக்கும் பொதுதான். நம்முடைய அடுத்த தலைமுறைப் பெண் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்தியைத் தருகிறோம்? அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான வெளியைத் தருகிறோமா? அவர்கள் கனவை நிறைவேற்றுவதற்கான வெளியைத் தருகிறோமா?
பார்வதி திருவோத்து
பார்வதி: எங்கள் சகபயணியான நடிகை ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்குள்ளானது எங்களை மிகவும் காயப்படுத்தியது. நாங்கள் 2017இல் ஒரு வாட்ஸ்அப் குழுவாக இணைந்தோம். அந்த நடிகை நான்கு வருடங்களாக இன்னமும் அந்த வழக்கைக் கடுமையான போராட்டத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருந்தவர்கள்கூட இப்போது குற்றம்சாட்டப்பட்டவரோடு இணைந்து செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். அதைப் பகிர்கிறார்கள். அந்த நபரின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் சாட்சிகள் பிறழ்வதையும் அவருடைய நண்பர்களே பயத்தின் காரணமாகப் பிறழ்சாட்சிகளாக மாறுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதை எதிர்த்துக் குரல் கொடுத்த எங்களில் சிலருக்கு விதிக்கப்பட்ட தடை அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பிரமாண்ட செல்வாக்குக்குச் சான்றாகும்.
‘சினிமா பெண்கள் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்கள் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. எங்கள் தொழில் வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் அடகு வைத்தே இதைச் செய்து வருகிறோம். சினிமா பெண்கள் கூட்டமைப்பில் உள்ள எங்கள் வாழ்க்கை 2017க்கு முன், 2017க்குப் பின் என்று மாறிப்போனது.
ஓஎன்வி மலையாளச் சமூகத்துக்கு அளித்த பங்களிப்பு முக்கியமானது. அவர் எங்கள் மனத்துக்கு நெருக்கமானவர். பெருமைக்குரிய அடையாளம். அவர் பெயரால் அளிக்கப்படும் விருது சின்மயி உள்ளிட்ட பதினேழு பெண்களால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்மீது குற்றம்சாட்டியவர்கள் வெளிப்படையாக இழிவு படுத்தப்படுகிறார்கள். ஓஎன்வி விருதுக் குழு இதை அனுமதிக்கிறது. கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த வாதத்தை வைத்து அவர்கள் தப்பித்துக்கொள்ளக் கூடாது என்று உறுதிப்படுத்த விரும்பினோம். ஏனென்றால் கலை, மேடையேறி விருது வாங்கப்போவதில்லை; கலைஞர்தான் வாங்கப் போகிறார். இந்த எதிர்ப்பு நீர்த்துப்போக அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம். புவனாவுக்காகவும் சின்மயிக்காகவும் எங்களால் பேச முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எங்கள் நிலத்துக்கு இது வருவதை அனுமதிக்கக் கூடாது.
நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எங்கள் குரலை முடக்க எல்லா முயற்சிகளும் நடக்கின்றன. இதற்கெதிராக சினிமா பெண்கள் கூட்டமைப்பைத் தொடங்கியபோது பத்திரிகையாளர் சந்திப்போ பேட்டியோ கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேலேயிருந்து சரிசெய்ய வேண்டும் என்று விரும்பினோம். மேலும் அரசின் உதவி தேவை என்று உணர்ந்தோம். முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அவர் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழுவை மலையாளத் திரைத்துறை பற்றி, குறிப்பாகப் பெண்களின் நிலை பற்றியும் பணிச் சூழல்களையும் பற்றியும் ஆய்வுசெய்வதற்காக அமைத்தார். ஹேமா குழு தனது ஆய்வை முடித்து அறிக்கையை அரசிடம் அளித்த பிறகும் அதன் பரிந்துரைகள் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. நாங்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் மீடூ இயக்கம் தொடங்கிய உடனேயே மகாராஷ்டிரப் பெண்கள் ஆணையம், மும்பையில் உள்ள முக்கியமான சங்கங்கள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றாமல் இருந்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிக்கை அனுப்பியது. அங்கு பெண்கள் ஆணையத்தின் அறிக்கைக்குப் பலன் இருந்தது. இங்கு எங்கள் மாநிலத்தில் நாங்கள் அதற்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘அம்மா’ உள்ளிட்ட கேரள திரைத் துறைச் சங்கங்கள் எங்களுக்கு அந்தச் சட்டம் தேவையில்லை என்று வாதிடுகின்றன. அவை எங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கின்றன. 2017இல் பாதிக்கப்பட்ட எங்களது சக நடிகை தைரியமாகப் போராடவில்லையென்றால் எங்களுக்கு இந்தத் தைரியம் வந்திருக்காது. இப்போது இது வாழ்வா சாவா பிரச்சினை போன்றது. நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
பர்க்கா தத்: ஆண்கள் பலரும் இதுபற்றிப் பேச வேண்டாம் என்றிருக்கும் போது இது பற்றிப் பேசும் டி.எம் கிருஷ்ணா தன்னுடைய் கருத்தை இப்போது பகிர்ந்துகொள்வார்.
டி.எம். கிருஷ்ணா: சின்மயி, புவனாவின் தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். அவர்களுக்காக மட்டுமில்லை; இது பற்றிப் பேசாத அனைத்துப் பெண்களுக்காகவும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். மேலும் அத்தகைய பெண்கள் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்திருந்தால் இப்போது சின்மயிக்கும் பிறருக்கும் நடப்பது கூடுதலாக நடந்திருக்கும். பன்மடங்காக இருக்கும். அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற முற்போக்காளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளியிடமிருந்து வந்த சொற்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம் போன்றவற்றில் பொதுவெளியில் மாறுபட்டு இயங்குபவர்கள்கூடத் தன்னுடைய வீடு அல்லது குடும்பம் என்று வந்தால் முற்றிலும் வேறாக இயங்குவதைக் காணமுடிகிறது. அவர்கள் மனநிலை ஆண்களைப் பாதுகாப்பதாகவே பெரும்பாலும் இருக்கிறது. இது தீவிரமான பண்பாட்டுப் பிரச்சினை.
இந்த அமைப்பால் வன்முறை இயல்பானதாக ஆக்கப்பட்டுள்ளது. சின்மயிக்கும் புவனாவுக்கும் நடந்தவற்றின் அடித்தளத்தில் அத்தகைய வன்முறை உள்ளது. கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்றால் அது தார்மீக நீதிநெறியிலிருந்து தப்பிப்பதே ஆகும். இத்தகைய கலைஞர்களின் நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களின் கதி என்ன? ஒட்டுமொத்தச் சமூகமும் இவ்வாறு உள்ளது. ஆண்கள் தங்களுக்குள்ளாக இந்த ஆணாதிக்க / வன்முறைப் பண்பாடு பற்றிச் சிந்திக்காமல், தங்களை இத்தகைய மனப்போக்குக்கு உட்படுத்தாமல் இருப்பார்களேயானால், இத்தகைய வன்முறை இயல்பாகிவிடும். சின்மயிமீது இணையத்தில் நிகழ்த்தப்படும் தாக்குதல் நம் சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் வன்முறையின் வெளிப்பாடுதான்.
கண்ணதாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து. தமிழ் சினிமாப் பாடல்களை வேறுதளத்துக்குக் கொண்டுசென்றதில் இவரது பங்கு அதிகம். திமுகவுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக இருப்பவராகப் பார்க்கப்படுபவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அந்தக் கட்சியினரோடு இவருக்கு நெருக்கம் அதிகம். மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருபக்கம் பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது. மறுபக்கம் பதினேழு பெண்களைப் பாலியல்ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் வைரமுத்துவைப் பாராட்டுகிறது. இது ஒரு முரண்பாடு.
அவர்மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை புகார் வேண்டும் என்று கேட்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டில் இருப்பதைப்போல இருக்கிறது. பாலியல் துனபுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் எல்லாம் எதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன? எம்ஜே அக்பர் வழக்கில் காவல்துறை புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் அளிக்காமல் இருப்பதை ஒரு சாக்காகப் பயன்படுத்தக் கூடாது.
பர்க்கா தத்: மீனா, உங்கள்மீது நிகழ்த்தப்பட்ட குடும்ப வன்முறை குறித்து நீங்கள் வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். மற்றப் பெண்கள் பாதிக்கப்படும்போது அதைக் குறித்துக் குரலெழுப்பும் பெண்களெல்லாம் தாமும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் மட்டுமே நாம் இது குறித்துப் பேசவில்லை. ஆனால் எல்லாவிதமான வன்முறையும் அதிகாரமும் அதன் துஷ்பிரயோகமும்தான் அல்லவா? இது குறித்துப் பேச முடியுமா?
மீனா கந்தசாமி
மீனா கந்தசாமி: வைரமுத்து ஏறக்குறைய முப்பதாண்டுகளாகத் தமிழ்த் திரைத் துறையில் பாடல்கள் எழுதி வந்துள்ளார். அவரது சாதி ஆதிக்கச் சொல்லாடல் கொண்ட பாடல்களுக்காக இந்தச் சாதி இந்து தமிழ்ச் சமூகம் அவரை விமர்சித்ததில்லை. இப்போது அவர்மீது சின்மயி உள்ளிட்ட பதினேழு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.
அவரது பல பாடல்கள் சாதியப் பெருமை பேசுவதாக உள்ளன. அவரது ஆதிக்க சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பல வரிகளை அவர் எழுதியுள்ளார். ஆதிக்கச் சாதி ஆண் தன்மையை, விஷத்தன்மை கொண்ட சாதி மேலாதிக்கத்தை விதந்தோதும் விதத்திலேயே அவரது பல பாடல்கள் உள்ளன. இது ஒருவகையில் சனாதனத்தின் வடிவம். சனாதனத்தை ஏதோ ஒருவகையில் உயர்த்திப் பிடிக்கும் ஒருவர் எப்படிப் போற்றுதலுக்குரிய நபராக இருக்க முடியும்?
பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தமிழ்ப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் கவிதைகளைப் படிப்பது நம்மில் பலருக்குப் பிடித்தமான செயல். இந்த இரண்டும் அவரின் குணாம்சத்தின் இரண்டு பக்கங்கள். ஆனால் வைரமுத்து சிறந்த கவிஞரா? அவரது சமீபத்திய பாடல் ஒன்று பள்ளி மாணவி தன்னைவிட வயதில் மூத்த ஆணைப் புளங்காகிதம் அடைந்து பாடும்வகையில் உள்ளது. இங்கு குழந்தைகள், குழந்தைகளாகப் பாவிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை என்பதற்கும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் வயதுவந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்பதற்கும் காரணம் இருக்கிறது. இதெல்லாம் அவரைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கண்ணாடி.
திமுகவுக்கும் வைரமுத்துவுக்கும் இருக்கும் நெருக்கத்தை முன்வைத்துப் பிராமணர் x பிராமணரல்லாதார் விவகாரமாக இதைப் பேசுகிறார்கள். இந்தக் குழுவில் பிராமணர் அல்லாத பெண்ணாக இருக்கக்கூடிய (சின்மயி, புவனா, கிருஷ்ணாவின் சாதி எனக்குத் தெரியும். பார்வதி பற்றித் தெரியவில்லை) நான் சொல்வது என்னவென்றால் பிராமணப் பெண், பிராமணர் அல்லாத பெண் என்ற பிரிவு இப்போது வேண்டாம். அந்த விவாதத்துக்குள் இப்போது நாம் போக வேண்டாம். வைரமுத்து இந்த அரசியலைத் தந்திரமாகக் கையாளுகிறார். பாதிக்கப்பட்ட பெண்களை அவதூறு செய்வதற்கும் தன்னைப் பாதிக்கப்பட்டவராக முன்னிறுத்திக்கொள்வதற்கும் இந்த அரசியலை அவர் கையாள்கிறார். அவர் எப்போதுமே பிராமணியத்துக்கு எதிராக எதுவும் சொன்னதில்லை. திராவிடக் கருத்துக்களுக்காக எதுவும் செய்ததில்லை, தன்னுடைய சொந்த சாதிப் பெருமையைப் பேசியதைத் தவிர. பிராமணச் சதித்திட்டத்தால் பாதிக்கப்பட்டவராகத் தன்னை மிக எளிதாகக் கட்டமைத்துக்கொள்கிறார். நாம் போர்க்குணம்மிக்க பெரியாரிஸ்டாக இருக்கலாம், கம்யூனிஸ்ட்டாக இருக்கலாம். ஆனாலும் நாம் சின்மயி, புவனா உள்ளிட்ட பெண்களின் பக்கம் நிற்கலாம்.
திமுகவின் பின் ஒளிந்துகொள்கிற நேரத்தில் வைரமுத்து திமுகவுக்காக என்ன செய்துள்ளார் என்று திமுக திரும்பிப் பார்க்க வேண்டும். வைரமுத்துவால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனும்போது ஏன் திமுக அவரோடு இப்போது இணைந்து தங்கள் பேரைக் கெடுத்துக் கொள்கிறார்கள்?
பர்க்கா தத்: வைரமுத்து சாதிக்குப் பின் ஒளிந்து கொள்கிறார் என்கிறார் மீனா. நீங்கள் எழுதிய புத்தகம் சாதியவாதிகளின் கண்டனத்துக்குள்ளானது. அப்படி ஒரு நூலின் ஆசிரியராக இதுபற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
டி.எம். கிருஷ்ணா
டி.எம் கிருஷ்ணா: நான் மீனாவுடன் முழுமையாக உடன்படுகிறேன். வைரமுத்து இதுவரை சாதி குறித்த எந்த ஒரு நேர்மறையான உரையாடலையும் பொதுவெளியில் நிகழ்த்தியதில்லை. சாதிய ரீதியிலான வன்முறை நிகழ்ந்தபோது ஒருமுறைகூட அதுகுறித்து எதுவும் எழுதியதில்லை, பேசியதில்லை. பாடல்களில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்திரிப்பது, சாதியப் பெருமை பேசுவது என்பதை வைரமுத்து மட்டுமல்ல, திரைத்துறையில் பலரும் செய்துள்ளார்கள். பிராமணர் அல்லாதவர் என்ற போர்வையில் அவர் ஒளிந்துகொள்கிறார். அவர் பெண்கள் பற்றிய தவறான கருத்துடையவர், ஆண்மையச் சிந்தனை கொண்டவர். சாதிய மனப்பான்மை உடையவர், பாலியல்ரீதியாகப் பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர். அத்தோடு அவர் சாதியவாதியும்கூட.
பர்க்கா தத்: பார்வதி, நடிகர் திலீப் வழக்குமுதல் புவனா,சின்மயி சந்திக்கும் பிரச்சினைவரை இவற்றுக்கெல்லாம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா ?
பார்வதி: தருண் தேஜ்பால் வழக்கில் வந்த தீர்ப்பும் நீதிபதிகள் சொன்ன கருத்துகளும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் பெண்களின் உணர்வு என்ன, அத்தகைய வன்முறையால் அவர்களுக்கு என்ன நேர்கிறது, அது எவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைக் குலைக்கிறது என்கிற உரையாடல்கள் அதிக அளவில் பொதுவெளியில் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. எந்த ஒருவரையும் அளவுக்கு அதிகமாகக் கொண்டாடும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.
ஓஎன்வி அகாதெமி நடுவர் குழு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை.
மீனா: ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொல்வது பரபரப்புக்காக அல்ல. சின்மயி, புவனா, பார்வதி, டிஎம் கிருஷ்ணா ஆகியார் கலைஞர்கள். இத்தகைய விஷயத்தை வெளியில் சொல்வதும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அவர்களது கலையிலிருந்து அவர்களைத் திசை திருப்பும். இருந்தாலும் இத்தகைய சம்பவங்கள் யாருக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் முதல் நோக்கமாக இருக்கும். பாலியல் துன்புறுத்தல் துளியும் சகித்துக்கொள்ளப்படாத சூழலை உருவாக்கவே அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
கிருஷ்ணா: வைரமுத்து மட்டுமல்ல. பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இளம்பெண்கள்மீது நிகழ்த்திய பாலியல் அத்துமீறல்களின் ஆதாரங்களைத் திரட்டிப் பொதுவெளியில் முன்வைத்திருந்தார் சின்மயி. ஏறக்குறைய மூன்றுஆண்டுகள் ஆகிவிட்டன. பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட ஆணை ஆதரிப்பது இங்கு கலாச்சாரமாக இருக்கிறது. இத்தகைய தவறுகளைச் செய்பவர்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை, புரியவில்லை என்பதல்ல. இவ்வாறு நடந்துகொள்வது பரவாயில்லை, அது பெரிய தவறில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இதில் மாற்றம் நிகழ வேண்டுமானால் அது பள்ளிகளில் தொடங்க வேண்டும். சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் நாம் எதைப் பகிர்ந்துகொள்ளலாம், எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது நமது எல்லைகள் என்ன என்பது பற்றிக் கற்றுத்தர வேண்டும். ஆண்கள் இதைப் பேசுவதை நிறுத்திக்கொண்டு, பெண்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
பர்க்கா தத்: நாம் இந்த நேரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்னும் தலித் பெண்ணை நினைவுகூர வேண்டும். அவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அவர் தைரியமாக நீதிமன்றத்துக்குச் சென்றபோதுதான் விசாகா வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியது. அதிலிருந்துதான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் வந்தது. பன்வாரி தேவிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
புவனா: கேரள சினிமா பெண்கள் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்காகவும் பேசுகிறது. அதற்காக என் நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வைரமுத்துவுக்கு விருது கிடைத்திருப்பது குறித்து தமிழ்நாடு அரசு பெருமைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. எனக்கு நடந்ததைப் பற்றிச் சொன்னதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்று தெரியும். ஆனால் நமது மகள்களுக்காக, அவர்கள் கனவு காண்பதற்காக, அவர்கள் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக நான் இப்போது பேசுகிறேன்.
சின்மயி: கேரளப் பெண்கள் கூட்டமைப்பிலிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு நான் எதிர்பாராதது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். என் வழக்கைப் பொறுத்தவரை எனக்குப் பெரிதாக நம்பிக்கை எதுவும் இல்லை. பலர் நான் இன்னமும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று என்னை மிரட்டுகிறார்கள். அரசியல் தொடர்பு மட்டும் அல்ல; திரைத் துறையிலும் யாரும் அவருக்கு எதிராகப் பேசவில்லை. குறைந்தபட்சம் என் புகார்களை விசாரிக்க ஓர் அமைப்பு வேண்டும் என்றுகூட யாரும் பேசுவதில்லை. நான் முன்புபோல என் பணிகளுக்குத் திரும்புவேனா இல்லையா என்பதுபற்றி எனக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் என் போராட்டத்தைத் தொடருவேன். எனக்கு வேறு எந்த வாய்ப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.
பர்க்கா தத்: பெண்கள் ஏன் தங்களுக்கு நடந்தவற்றை உடனே வெளியே சொல்வதில்லை என்று நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுபவர்கள் பெண்கள் வெளியே சொன்னவுடன் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அவர்கள் ஆண்டுக்கணக்கில் நீதிக்காகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதும் அதற்காக அவர்களுக்கு நேரும் தனிப்பட்ட இழப்புகளும் தெரிவதில்லை. பன்வாரி தேவி, தெஹல்கா வழக்கில் புகார் அளித்த பெண், நடிகர் திலீப்பால் பாதிக்கப்பட்ட நடிகை போன்றவர்களுக்கு என்ன நீதி கிடைத்து விட்டது?
சின்மயி போன்ற பெண்களுக்கு எங்களைப் போன்ற பெண்கள், ஆண்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
நன்றி: மோஜோ ஸ்டோரி யூட்யூப் அலைவரிசை (https://www.youtube.com/watch?v=ZN5wpspa0O8)
[பர்கா தத் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வை காலச்சுவடில் பதிவு செய்ய அனைவரிடத்திலிருந்தும் அனுமதி பெற்றுத்தந்த டி.எம். கிருஷ்ணாவுக்கு நன்றி. - ஆசிரியர்]