உற்றுழி உதவுக உறுபொருள் வழங்குக
உற்றுழி உதவுக உறுபொருள் வழங்குக
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியதைத் தொடர்ந்து தமிழகம்வாழ் அகதிகள் குறித்த உரையாடல் மீண்டும் வலுப்பெற்றிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 28.08.2021 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அகதிகளுக்குச் சில நலத்திட்ட உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அகதிகளிடையே எதிர்பார்ப்பையும் அவர்களது மறுவாழ்வில் அக்கறை கொண்டவர்களிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய வீடுகள் கட்டுதல், குடிநீர்- மின்சார வசதிகளை ஏற்படுத்துதல், கல்விக்கான உதவித்தொகையை அதிகரித்தல், மாதாந்தரப் பணக்கொடையை உயர்த்துதல் உள்ளிட்ட பத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
குடும்பத் தலைவருக்கு 1990இல் மாதம் ஒன்றுக்கு 144 ரூபாயாக இருந்த பணக்கொடை 288 ரூபாயாகவும் பின்னர் 400 ரூபாயாகவும் முன் காலங்களில் உயர்த்தப்பட்டது. கடைசியாக 2011இல் இந்தத் தொகை குடும்பத் தலைவருக்கு மாதத்துக்கு ஒருமுறை ஆயிரம், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 750, 12 வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கு 400 ரூபாய் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பு இந்தத் தொகையை ரூ1500/-, 1000/-, 500/- ஆக உயர்த்துவதாகத் தற்போதைய அரசு அறிவித்திருக்கிறது.
அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவற்றில் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர், உயரதிகாரிகள், அகதிகள் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்துதல், இலவச எரிவாயு இணைப்பு வழங்குதல் ஆகிய இரண்டையும் தவிர்த்து ஏனையவை அகதிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் ஆகும். அவற்றையே இன்று உயர்த்தியும் விரிவுபடுத்தியும் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
முப்பதாண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் முகாம்வாழ் தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ஆண்டுதோறும் அகதிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இரு கட்சி அரசுகளும் சமூகநலத் திட்டங்கள், தேர்தல் கால இலவச அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக அகதிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கின்றன. ஆனால் இந்தமுறை முதல்வரின் அகதிகளுக்கான நலத்திட்டங்களும் வாக்குறுதிகளும் திமுக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான நிலைப்பாடும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
2009 இலங்கைப் போர் முடிவின்போது திமுகவிற்கு ஏற்பட்ட அவப்பெயரை ஓரளவேனும் அரசியல்ரீதியாகச் சமன்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒரு வாய்ப்பாகவும் இதைக் கருதலாம். மேலும் நீண்டகாலமாகச் செயற்படும் அகதி முகாம்களை இனிமேலும் திறந்துவைத்திருக்கமுடியாத புறச்சூழலும் உருவாகியிருக்கிறது.
முகாம்வாழ் தமிழர்களுக்கு இன்று வழங்கப்பட்டிருக்கும் / விரிவுபடுத்தப்பட்ட சலுகைகளைவிடக் குடியுரிமையே அம்மக்களுக்கு முதன்மையானது. நீண்ட காலக் காத்திருப்பு , கண்காணிப்புக்கு உட்பட்ட நிலமற்ற வாழ்வு, தொழில் - சமூகப் பாதுகாப்பின்மை, அலக்கழிவு என மிகுந்த அவதிகளுக்கிடையில் நிரந்தரமற்ற மனநிலையில் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் விருப்பம் குடியுரிமை பெறுவதே. இலங்கைக்குத் திரும்பும்பட்சத்தில் அவர்களுக்காக எவ்விதமான மறுவாழ்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லாததையும் அறிந்திருக்கிறார்கள். வசதி வாய்ப்புகள் இருப்பவர்கள் நாடு திரும்பிய நிலையில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 29,500 நாடற்றவர்களும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அகதிகளும் நாடு திரும்பித் துன்பத்துக்குள்ளாக விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு இந்தியக் குடியுரிமை பெறுவதே.
சிறப்பு முகாம் நீங்கலாக 106 முகாம்களில் 18,969 குடும்பங்களைச் சேர்ந்த 58,677 அகதிகளும் முகாம்களுக்கு வெளியே 13,540 குடும்பங்களைச் சேர்ந்த 34,087 அகதிகளும் வாழ்கிறார்கள். 2009 போர் முடிவுக்குப் பிறகு 2020வரை 10,541 அகதிகள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.
மண்டபம், கொட்டப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் - சிறிமாவோ, சாஸ்திரி ஒப்பந்தப்படி வந்தவர்கள் உட்பட - இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுமார் 29,500பேர் இன்றும் அடைபட்டிருக்கிறார்கள். குடியுரிமைக்காக நீதிமன்றங்களில் இவர்கள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்கள் இந்திய குடியுரிமைக்குத் தகுதியானவர்களாக இருந்தும் சட்டவிரோதக் குடியேறிகள் என்று காரணம்காட்டி ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க மறுத்துவருகிறது. அகதிகளுக்கான தனிச் சட்டங்கள் இல்லாத காரணத்தால் இந்தப் பிரச்சினையில் சட்டக் குழப்பங்களும் ஏற்படுகின்றன. மாநில அரசு அகதிகளைப் பாதுகாக்கும், பராமரிக்கும்; ஆனால் குடியுரிமைப் பிரச்சினையை மட்டும் ஒன்றிய அரசே முடிவுசெய்ய முடியும்.
கொட்டப்பட்டு முகாமில் வசிப்பவர்கள் சார்பாக அறுபத்து ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு ரிட் மனுவைச் சமர்ப்பித்திருந்தனர். தாங்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மனுதாரர்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயங்களைக் கரிசனத்துடன் ஏற்றுக்கொண்டார். கடலுக்கும் கரைக்கும் நடுவில் தடுமாறும் அவர்களது நிலையைத் திரிசங்கு சொர்க்கத்தின் நிலையுடன் ஒப்பிட்டதுடன் அந்த சொர்க்கம் உண்மையில் நரகமாக இருக்கும் நிலையையும் சுட்டிக் காட்டினார். குடியுரிமை அளிப்பது அரசின் முடிவைச் சார்ந்தது, அதில் நீதிமன்றம் குறுக்கிடுவதற்கில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். எனினும் அவர்களது அவல நிலையைக் கருத்தில் கொண்டு அகதிகள் அனைவரும் குடியுரிமை பெற உதவுமாறு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சட்டப்பூர்வமான குடியேற்றக்காரர்களான அகதிகள் அரசுக்குப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விவரங்கள் பதினாறு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அகதிகள் குடியுரிமைப் பிரச்சினையில் இந்த அறிவுறுத்தல் முக்கியமானது.
எனினும் குடியுரிமை அளிக்கப்படச் சில முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. குறிப்பாக பாஜக தலைமையிலான அரசு இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க விருப்பமில்லை என்றும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அதனைக் கொடுக்கமுடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்திச் சொல்லிவருகிறது. குடியுரிமைச் சட்டத்திருத்த வரைவு தொடர்பாக அக்கட்சி கைக்கொண்டிருக்கும் நிலைப்பாடு தீவிரமான போராட்டங்களுக்கும் பெருமளவிலான விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
அகதிகள் நாடு திரும்புவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், இந்தியக் குடியுரிமையே பெரும்பாலான அகதிகளின் விருப்பமாக உள்ளது. வெளித்தோற்றத்தாலும் சட்டரீதியாகவும் அகதிகளாக அறியப்பட்டாலும், அம்மக்களின் உட்பிரிவுகளையும் கவனத்தில் கொண்டு, நாடற்றவர்களாக இருப்பவர்களுக்கும் பூர்வீக இந்தியர்களான நாடற்றவர்களுக்கும் குடியுரிமைச் சட்டத்தில் அதிக வாய்ப்புள்ளது. அதன்படி அவர்களுக்கு முதலில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களில் தமிழகத்தினரை மணந்துகொண்டவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு முறையாகக் குடியுரிமை வழங்கினாலே முகாம்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும்மேல் குறைக்கலாம். தொடர்ந்து ஏனையவர்களுக்கும் இலங்கை திரும்ப விரும்புவோர் / விரும்பாதோர் என்ற முறையில் அவர்களுக்கும் முன்னுரிமை கற்பித்துக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.
1983முதல் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்தனர். ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகளாக அரசின் அக்கறையின்மைக்கும் அவ்வப்போதான அரச வன்முறைகளுக்கும் இடையில் முகாம்களில், தற்காலிகக் குடிசைகளில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்திய அரசியலமைப்பின்படி இவர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். உண்மையில் இவர்கள் ஒரே மொழியையும் ஒரே பண்பாட்டையும் கொண்ட அயல்நாட்டைச் சேர்ந்த மக்கள். இரு கட்சிகளின் அரசுகளும் இவர்கள்பால் சற்றுக் கரிசனத்துடனும் அக்கறையுடனும் நடந்துகொண்டன. ஆனால் ஒன்றிய அரசு அகதிகள் தொடர்பான கொள்கையையும் அதற்குரிய சட்ட விதிகளையும் இந்தியாவின் பல்லின ஜனநாயக மரபையும் மனிதாபிமான நோக்கையும் முன்னிருத்தியே உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக இதுவரை அதிகாரத்திலிருந்த ஒன்றிய அரசுகளின் நோக்கு ஒற்றைமையப்பட்ட அதிகாரத்தையும் மதச்சார்பிலான அரசியலையும் முன்னெடுப்பதாகவே இருந்துவந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 108 முகாம்களும் இரண்டு சிறப்பு முகாம்களும் கண்காணிப்புக் கூடாரங்களாக இயங்கிவருகின்றன. பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படும் பிற நாட்டினர் வருடக்கணக்காக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்; முறையாக விசாரிக்கப்பட வேண்டும்; தாமதமில்லாமல் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்; குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள் விரைவில் விடுதலை பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்; இவை அரசின் முக்கியக் கடமைகள்.
நலத்திட்டங்களை விரிவுபடுத்துவதும் பின்னணியிலுள்ள தடைகள் நீக்கப்பட்டு முகாம் மேலாண்மை அமைப்பு வலுப்படுத்தப்படுவதும் நலத்திட்ட அறிவிப்புகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பு உருவாக்கப்படுவதும் அவசியமானதே. அதேசமயம், அதிகாரிகள் கொடுப்பதை வாங்கும் இடத்தில்தான் ஓட்டுரிமையற்ற அகதிகள் இருக்கிறார்கள்; இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தற்காலிக வீடுகளுக்குப் பதிலாக அரசுடைமை நிலத்தில் சமத்துவபுரம் போன்ற நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்குவதும் அவசியம். அம்மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் சமூகநீதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை உறுதிசெய்தல், தொழிற்கல்வி - படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் தொடர்கல்விக்குத் துணைபுரியும் ஏற்பாடுகள் ஆகியவற்றை உறுதிசெய்தும் நடைமுறைப்படுத்தியும் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது மக்கள் நல அரசி்ன் இன்றியமையாத ஒரு பணியாகும்.