மகா மதுரகவி
இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் கூட்டு முயற்சி ‘பொருநை,’ அதன் ஒரு பகுதியே காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ‘பொருநை பக்கங்கள்.’ தமிழின் மகத்தான படைப்பாளிகளைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பக்கங்களின் குறிக்கோள்.
இந்த இதழில் இடம்பெறுபவர் மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதர்.
பகுதி ஒருங்கிணைப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
படங்கள்: பி.ஆர். ராஜன்
மகா மதுரகவி
நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் படைப்பாளிகள், அறிஞர்கள் சிலரது நூல்களை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் இருந்த இரு பெயர்கள் அதிகம் கவனம் பெறாதவை. ஒன்று வீ.வே. முருகேச பாகவதர் (1897- - 1974), மற்றொருவர் சங்கர வள்ளிநாயகம். காலச்சுவடு இதழின் பொருநை பக்கங்களில் முருகேச பாகவதர் இடம்பெறுவதற்கு இதுவோர் காரணம்.
முருகேச பாகவதர் மரபான வடிவத்தில் இயங்கிய அரசியல் கவிஞர். தமிழ்நாட்டு வரலாற்றின் இன்றியமையாத காலக்கட்டத்தில் ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக இயங்கியவர்.
அவரை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இப்பகுதி அமைந்திருக்கிறது.
முருகேச பாகவதருடைய கவிதைகள் முறையாகவும் முழுமையாகவும் தொகுக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நூல்களாக வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்புகள் இரண்டைப் பேராசிரியர் க. ஜெயபாலன் அண்மையில் கொணர்ந்திருக்கிறார். இதழ்களில் வெளியாகி தொகுக்கப்படாத கவிதைகளும் இருக்கின்றன. அவற்றை திரட்டி அவரின் மொத்த வரலாற்றோடு அமையும் தொகுப்பு தேவை. அவரை முழுமையாக மதிப்பிட அவை உதவும்.
முருகேச பாகவதர் நூல்களின் அட்டைபடங்களையும் கட்டுரையையும் தந்த பேராசிரியர் க. ஜெயபாலன், பாகவதரின் தமிழமுதம் நூலை அளித்த அவர் பேத்தி பேராசிரியர் புனிதவதி, இப்போது கட்டுரை தந்த எழுத்தாளர் கல்யாணராமன் ஆகியோருக்கு நன்றி.