இணையில்லா ஆல்ஆகி
இணையில்லா ஆல்ஆகி
இன்றைக் கரைநூ றியம்பும் ஆண்டின்முன்
குன்றம் வளர்ந்ததுபோல் கொள்கை வளர்ப்பதற்கே
அன்னை தமிழகத்தின் அறிஞர் திரு.வி.க.
சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தான்கண்டார்
வித்திற்கு நாளும் விழிநீரும் செந்நீரும்
சத்தாகப் பாய்ச்சிச் சந்ததமும் வளர்த்தார்கள்!
இன்றந்த முயற்சி இணையில்லா ஆல்ஆகி
மன்றம் வளர்ந்து மாவீரர் பலகண்டு
குன்றாய்க் கோபுரமாய்க் கொடிகட்டி வானுயர்ந்து
நன்றாய்ச் செழித்ததனை நாமின்று காண்கின்றோம்!
இந்த நிழல்தருவை ஈடில் நிறுவனத்தை
அந்நாளில் பாடேற்று வளர்த்தோர் அளவற்றோர்
உத்தமராம் எங்கள் உயர்வாடியா பெசன்ட்அம்மை
சித்த உடல்தூய்மை சேர்டாக்டர் அருண்டேல் மற்றும்
பேர்திகழ் கேசவப்பிள்ளை பெருந்தகைநம் செல்வபதி
கீர்த்திநிறை ராமாஞ்சலு கெழுதகைபக் கிரிசாமி
ஆர்த்தெழும் அரும்படைக்கோர் அஞ்சாத வீரநெஞ்சர்
பார்த்தன் அந்தோணிப்பிள்ளை பகர்கோ விந்தசாமி
சிந்தனைசிற்பி சிவராவ் ஈ.எல்.-ஐயர் (காம்ரேட்)
நம் ஆர். வெங்கடராமன் நடேச நாயகர் மற்றும்
அன்பு சக்கரைசெட்டி அரும் சேஷாச்சலஐயர்
இன்பகுண நலஅன்பர் இன்னும் பலருண்டு!
கொள்ளைச் சுரண்டல்மனக் கொடுங்கோலரான அந்த
வெள்ளையர்தம் ஆட்சியிலே வீர முரசொலித்தும்,
அடக்கு முறைகளெனும் அனலிடையே நமைத்தள்ளிச்
சுடநேர்ந்த காலத்தும் சுதந்திரத்திற் காகத்தமை
அற்பணித்து மனத்தாலும் அருமெழுத்துப் பேச்சாலும்
நற்பணியே ஆற்றிவந்த நல்லவர்கள் மத்தியிலே
கற்பகத்தைப் போன்றவராம் கன்னித் தமிழ்முனிவன்
விற்பன்னர் தேசபக்தன் வீரநவ சக்திதனை
வான மழைசொரியும் வண்ணம் உணர்ச்சிதனை
தேனில் நனைத்தெடுத்துத் தெளித்த பெரும்புலவன்!
அனைபோன்ற பாட்டாளர்க் கருமருந்து! வாய்த்த
என்னைப் போன்ற பல்லோரை ஈர்த்த தமிழ்க்கற்றதம்
தனக்காக வாழாமல் தமிழ்க்கென்றே வாழ்ந்தவர்காண்
கனவினிலும் பதவிபட்டம் கருதாத கருணைஉள்ளம்
திருப்பெயர் உரைக்க சிலிர்க்கும் உடல்உயிரும்
திரு.வி.க. கிளர்ந்தெழுந்தார்! செயற்கரிய செயமுனைந்தார்!
1918ஆம் ஆண்டு உருவான சென்னை தொழிலாளர் சங்கத்தின் பொன்விழா 1968ஆம் ஆண்டு நடந்தது. பொன்விழா கவியரங்கில் பாகவதர் கவிதை வாசித்தார். அக்கவியரங்கக் கவிதையின் ஒரு பகுதியே இக்கவிதை. இப்பகுதியில் தொழிற்சங்கம் உருவான வரலாறும் பங்கெடுத்த ஆளுமைகளின் பெயரும் இடம்பெற்றுள்ளன.
நன்றி: மகாமதுர கவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களும் சில கவிதைகளும் நூல்.
- பேரா. முனைவர். க. ஜெயபாலன் (பூங்குயில் பதிப்பகம், வந்தவாசி, 2010)