சுரா பக்கங்கள்
சுரா பக்கங்கள்
ஓவியம்: றஷ்மி
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
30.10.86
அன்புள்ள வேங்கடாசலபதி,
உங்கள் 25.10.86 கடிதம் நேற்றுக் கிடைத்தது.
சமீபத்தில் உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
நீங்கள் கல்லூரி மாணவராக இருக்கும் இந்தச் சிறுவயதிலேயே பண்டைத் தமிழ் இலக்கியத்திலும் இன்றையத் தமிழிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதும், மன உழைப்பையும் உடல் உழைப்பையும் வற்புறுத்தும் - இளைய தலைமுறை முற்றாகப் புறக்கணித்திருக்கும் -ஆராய்ச்சியை நீங்கள் தேர்ந்தெடுத்து இருப்பதும், உண்மையைப் பதிவுசெய்வதில் நீங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றும், கருத்து வேற்றுமைகளை வெளிப்படையாக வைத்துக்கொள்ளும் நாகரிகத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பதும், சகமனிதன்மீது இயற்கையாகப் படரும் உங்கள் அன்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. உங்களுடைய உன்னத உணர்வுகளையும் ஆர்வங்களையும் மிகச் சீராக நீங்கள் வளர்த்திக்கொண்டு வந்தீர்கள் என்றால் தமிழுக்கு மிகப் பெரிய நன்கொடைகளை நீங்கள் அளிக்க முடியும்.
வ.உ.சி. பற்றிய ஆராய்ச்சி நூலை நீங்கள் மிகச் சிறப்பாக எழுதி வெளியிட வேண்டும். அத்துடன் வள்ளலார், பாரதி, பாரதிதாசன், பெரியார், அண்ணா போன்ற பல சரித்திர புருஷர்களைப் பற்றி, ஆராய்ச்சி உண்மைகளில் சிறிதும் நாட்டமற்ற நம் ‘பிரபலங்கள்’ மிகையாகவும், எளிய முயற்சிகளில் கிடைக்கும் சிறிய தகவல்களைக் கூட ஆராயாமலும், தங்கள் விருப்பத்திற்கேற்றபடியும், தங்களுடைய சமூக ஸ்தானங்களை வளர்த்திக்கொள்ள துணைபோகும் விதத்திலும் நிறைய பொய்களையும் புரட்டுக்களையுமே தந்திருக்கிறார்கள். இங்கு வரலாறு என்பது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசியல் மனோபாவத்தில் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. இவர்கள் சம்பந்தப்பட்ட உண்மைகளை நீங்கள் அறிந்து, அவற்றைச் சிறிதும் தயங்காமல் வெளிப்படுத்தி, சரித்திர உண்மைகளை நேர் செய்ய வேண்டும்.
போலி பிம்பங்கள் சகல துறைகளிலும் உடைந்து, உண்மையைப் பிரதிபலிக்கும் அளவுக்கே சிந்தனையாளர்கள் மதிப்புப் பெறும் கலாச்சாரத்தை உருவாக்க முயல வேண்டும். இதுபோன்ற ஒரு நாகரிகத்தை உருவாக்குவதில் நீங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்க முடியும்.
நாம் இன்னும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு நிறையவே ஏற்படும். நீங்கள் தெற்கே எப்போது வர நேர்ந்தாலும் என்னைச் சந்திக்க வேண்டும்.
பால்ராஜ் கென்னடி1யின் திருமணமும், ‘வீடு’ வெளியீட்டு விழாவும் மிக நன்றாக நடந்தன.
தமிழில் வணிகப் பத்திரிகைகளுக்கு மாறான ஒரு கலாசாரத்தை உருவாக்க இன்று பல பத்திரிகைகளும் முயன்று வருகின்றன. இப் பத்திரிகைகளோடு நீங்கள் தொடர்பு கொண்டு இவற்றின் வளர்ச்சிக்கு உங்களாலான உதவிகளைச் செய்யலாமே. மனோ2வை உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னீர்கள். ‘இனி’3யை உருவாக்குவதிலும் அச்சேற்றுவதிலும் நீங்கள் அதிக அளவில் அவருடன் ஒத்துழைக்கலாமே.
அன்புடன்,
சுரா
1. பால்ராஜ் கென்னடி…: இலக்கிய அன்பர் பால்ராஜ் கென்னடியின் திருமணம் நாகர்கோயிலில் நடந்தபோது ‘வீடு’ என்ற இலக்கியத் தொகுப்பு வெளியானது.
2. மனோ: எஸ்.வி. ராஜதுரை; 3. ‘இனி’: எஸ்.வி.ஆர். நடத்திவந்த மாத இதழ்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
7.7.1987
அன்புள்ள வேங்கடாசலபதி,
உங்கள் 27.6.87 கடிதம்.
‘பாலம்’1 கிடைத்தது. மதிப்புரையும் மொழிபெயர்ப்பும் படித்தேன்.
தென்னாப்பிரிக்கா வெள்ளையர் நூல் குறிப்புரை பற்றி அதிகம் சொல்ல இல்லை. அந்த நூலை நான் படிக்காததால் உங்கள் மதிப்புரையை மதிப்புரை செய்ய இயலாது. தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாவனை சிறிதும் இல்லை. உங்கள் இளமையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இவை முக்கியமான விஷயங்கள்.
மொழிபெயர்ப்பு பற்றி நிறையச் சொல்லலாம். சாவகாசம் குறைவு என்பதால் தவளைப் பாய்ச்சலாக சில விஷயங்களைச் சொல்கிறேன். மூலக் கவிதை – இப்போது ஒப்பிட்டுப் பார்க்கவில்லை - என்றாலும் எனக்கு நன்றாகப் பரிச்சயமானது. கவிஞர் நா. சுகுமாரன் இக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
உங்கள் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது. கவிதைமேல் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு, ஆங்கிலத்திலும் தமிழிலும் உங்கள் பிடிப்பு, மொழிபெயர்ப்பதில் உங்கள் சிரத்தை, ஆர்வம் இவை நன்றாக வெளிப்படுகின்றன.
தவிர்க்க முடியாத நிலைகளில் பழந்தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நான் எதிர் அல்ல. இருப்பினும் கவிதையை இன்றைய மனிதனின் பேச்சுக்குப் பக்கம், முடிந்த மட்டும், தமிழின் அமைதிக்கு வில்லங்கம் இல்லாமல் கொண்டுவர வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை. அப்போது ‘வருகின்றாய்’ என்பது ‘வருகிறாய்’ என்று இருந்தால் மட்டும் போதும். ‘முயல்கின்றேன்’-‘முயல்கிறேன்’. ‘மோதுகின்றது’- ‘மோதுகிறது’. இவ்வாறு முழுக்க பார்த்துக்கொள்ளுங்கள்…
பழைய பிரயோகங்களை நான் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு உதாரணம் ‘தென் புலத்து’ என்ற சொற்றொடர். இங்கு இது மிக வலுவாக அமைகிறது. ‘பயம்’ என்பதற்குப் பதிலாக ‘அச்சம்’ மற்றொரு உதாரணம். ‘துயர்மிகு’ என்பது மிக நன்றாக வந்திருக்கிறது.
மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இன்றைய உலகத்துக் கவிதைகளில் தரமான ஒரு பகுதியை நீங்கள் தமிழுக்கு அளித்துவிட்டால் அது ஒன்றே உங்களை நினைத்துப் பெருமைப்பட எனக்குக் காரணமாக அமைந்துவிடும். நீங்களோ இதற்கு மேலும் பல சாதிக்கக்கூடிய ஆற்றலுடன் இருக்கிறீர்கள்.
என் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சுரா
1. ஈரோஸ் சார்பான ‘பாலம்’ மே 1987 இதழில் சலபதியின் பங்களிப்பாக Waiting: The Whites in South Africa என்ற நூலுக்கு மதிப்புரையும், பாப்லோ நெரூடா கவிதைகளின் மொழிபெயர்ப்பும் வெளிவந்தன.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
17.3.88
அன்புள்ள வெங்கடாசலபதி,
‘எக்னாமிகல் அன்ட் பொலிட்டிக்கல்’ இதழில் ராமானுஜம்1 பற்றி நீங்கள் எழுதியிருக்கும் குறிப்பைப் படித்தேன். உங்கள் முயற்சியும் ஆர்வமும், உண்மைகளை வெளியே கொண்டுவருவதில் நீங்கள் காட்டும் சிரத்தையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. திறம்பட எழுதப்பட்டிருக்கும் இதுபோன்ற குறிப்பைத் தமிழ் இதழ்களில் வெளியிட வாய்ப்பில்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
அன்புடன்,
சுரா
1. சீனிவாச ராமானுஜன் கணக்குத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கண்டெடுத்து சலபதி எழுதிய கட்டுரை பற்றிய கடிதம்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஆகஸ்ட் 25, 1991
அன்புள்ள வேங்கடாசலபதி,
வணக்கம், உங்கள் 20.8.91 கடிதம்.
உங்கள் உடல்நிலை நன்றாகத் தேறி வருவதும் ஆய்வுப்பணியில் நீங்கள் மும்முரமாக ஈடுபட்டு நிற்பதும் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றன.
தட்டச்சிலிருந்த தன் நீண்ட கட்டுரை ஒன்றை தொ.மு.சி. என்னிடம் படிக்கத் தந்தார். (நெல்லை மாநாட்டில் இக்கட்டுரை படிக்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது.) இதற்கு முன்னால் சொல்லாத சில உண்மைகளை இதில் சொல்கிறார். இன்னும் சொல்ல வேண்டிய உண்மைகளும் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றையேனும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். உண்மைகளைச் சொல்வதற்கு அவர்கள் தேர்வுகொள்ளும் நேரங்கள் எனக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. நேற்றையத் தலைமையை நம்பியது போலவே இன்றையத் தலைமையை நம்புவதும் அதிருப்தி தரும் விஷயம். நாம் நேரில் பேசும் அளவுக்கு விரிவான விஷயங்கள் இவை. எங்கும் உண்மையில்லை என்பது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
செப்டம்பர் மாதம் முதல் தேதி சிங்கப்பூர் போய்விட்டு 10ஆம் தேதி ஊர் திரும்புகிறேன். அங்கு ஒரு எழுத்தாளர் கூட்டம்.
காலச்சுவடு அச்சேற்றம் நடந்துகொண்டிருக்கிறது.
அன்பான வாழ்த்துக்களுடன்,
சுரா
1990 செப்டம்பரில் நெல்லையில் நடந்த தமிழக முற்போக்கு இலக்கியத்தின் அரை நூற்றாண்டு பற்றிய கருத்தரங்கில் தொ.மு.சி. வாசித்த நீண்ட வழிகாட்டி உரைபற்றிக் கடிதம்.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
4.12.92
அன்புள்ள வேங்கடாசலபதி,
வணக்கம். உங்கள் 26.11.92 கடிதம். உங்கள் பயணம் பயனுள்ளதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. தென்காசி சென்று டி.கே.சி.யின் பேரன் தீப. நடராஜனை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது நடக்காமற் போயிற்று.
உங்களுடன் விவாதித்தது எனக்கும் கண்ணனுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்தது. நாங்கள் இங்கு ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறுபட்ட பின்னணிகளிலிருந்தும் அந்தப் பின்னணிசார்ந்த அனுபவங்களிலிருந்தும் கலாச்சார வேற்றுமைகளிலிருந்தும் எங்களிடம் உருவாகாத கருத்துக்கள் எப்படி உருவாகி வருகின்றன என்பதை அறிந்துகொள்வது எங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கோபதாபங்கள் இல்லாமல் இருந்தால் மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கிறவர்கள் கூட கூடி விவாதித்துத் தங்கள் முடிவுகளைச் சுயப்பரிசோதனை செய்துகொள்ள முடியும். அதற்கு ஏற்ற சூழல் தமிழில் இன்று அதிகம் இல்லை என்பதால் சிந்தனை தேக்கம் பெற்றுக் கிடக்கிறது.
இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாகவே இருக்கிறோம்.
சென்னை வந்தால் அவசியம் உங்களைச் சந்திப்பேன்.
நெய்தல் கிருஷ்ணன் உங்கள் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அன்புடன்,
சுரா