காலச்சுவடு பதிப்பகம் 25 ஆண்டுகள் (1996-2021)
ஓவியம்: ரோஹிணி மணி
25
(1996-2021)
ஆண்டுகள்
இது காலச்சுவடு பதிப்பகத்தின் 25ஆம் ஆண்டு. 1996இல் தொடங்கிய பதிப்பகம் காலத்தின் ஊடேயும் காலத்துடன் உறவாடியும் முன் நகர்ந்தும் தமிழில் முன்னணிப் பதிப்பகமாக இன்று விளங்குகிறது. வெள்ளி விழாத் தருணத்தில் காலச்சுவடு பதிப்பகம் இன்னொரு சாதனைக்கு ஆயத்தமானது. அது காலச்சுவடு இணையதளம். 25ஆம் ஆண்டு நிறைவும் இணையதளத் தொடக்கமும் இரட்டை விழாவாக 25 செப்டம்பர் 2021 அன்று இணையவழியில் கொண்டாடப்பட்டது. கமல்ஹாசன் தொடங்கிவைத்த இணையதள விழாவில் உலகெங்குமுள்ள வாசகர்களும் படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் பதிப்பாளர்களும் பங்கேற்றனர்.
மெய்நிகர் வெளியில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வின் எழுத்துப் பதிவு இங்கே.
அறிமுகம் - சித்ரா பாலசுப்ரமணியம்
(விரிவுரையாளர், ஊடகவியலாளர்)
காலச்சுவடு பதிப்பகத்தின் 25வது ஆண்டு தினம்> இணைய தளத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கும் உங்களை அன்போடு அழைக்கிறோம். மிகப்பெரிய மேடையில் நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில மெய்நிகர் நிகழ்வாக ஆனாலும் மிகச் சிறப்பாக இது நடந்தேறவிருக்கிறது. உலகம் முழுவதுமிருந்து பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பத்மஸ்ரீ கமல்ஹாசன் இணையதளத்தைத் துவக்கிவைக்க இருக்கிறார். இன்னும் பல்வேறு ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
ஒரு பதிப்பகம் என்பது வெறும் புத்தகங்களைப் பதிப்பது மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வரலாற்றோடு சேர்ந்து கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் ‘107 கவிதைகள்’ என்ற பசுவய்யாவின் புத்தகத்தோடு ஆரம்பித்த காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் மிக இனிதாக நீண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல்லாக 25வது ஆண்டு விழாவும் இணையதளத் திறப்புவிழாவும் இனிதே நடந்துகொண்டிருக்கிறது. காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக கண்ணன் அவர்களை வரவேற்புரை வழங்க அன்போடு அழைக்கிறேன்.
வரவேற்புரை - கண்ணன்
(பதிப்பாளர், காலச்சுவடு)
அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய நிகழ்விற்கு உங்கள் எல்லாரையும் அன்புடன் வரவேற்கிறேன். காலச்சுவடு பதிப்பகத்தின் 25ஆம் ஆண்டு என்பது ஒரு முக்கியமான மைல்கல். திரும்பிப்பார்த்து மதிப்பிட ஒரு தருணம். எங்கள் முதல் வெளியீடு 1996இல் வெளிவந்தது. காலச்சுவடுக்காக வாங்கிய முதல் கணினியில் இந்நூலின் பிரதி உள்ளீடு செய்யப்பட்டது. செய்தவர் நாகம். பக்கங்களை வடிவமைத்தது என் மனைவி மைதிலி. பிளாப்பி, மாஸ்டர் போன்ற இன்று வழக்கொழிந்துவிட்ட சொற்களும் தொழில்நுட்பமும் புழங்கிய காலம் அது.
பசுவய்யாவின் ‘107 கவிதைகள்’தான் முதல் நூல். பசுவய்யா என்ற புனைப்பெயரில் சுரா பிரசுரித்த கடைசி நூல் இதுதான். சுராவின் எல்லா கவிதைகளையும் தொகுத்துப் பார்த்தபோது 108 கவிதைகள் இருந்தன. 108 என்ற ஐசுவரியமான எண்ணைத் தலைப்பில் சுரா விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும். எனவே இப்படி ஒரு யோசனையை முன்வைத்தேன். தொகுப்பினுள்ளே 107 கவிதைகள் இருந்தன. பின்னட்டையில் ஒரு கவிதை ‘எஞ்சும் ஒரு கவிதை’ என்ற தலைப்பில் பிரசுரமாயிற்று. அது சுரா அடித்துத் திருத்திய பிரதியாக அமைந்தது.
இப்படி முதல் அட்டையில் திருஷ்டிப் பரிகாரத்துடன் தொடங்கியதாலோ என்னவோ காலச்சுவடு பதிப்பகம் சோடை போகாமல் நடந்துவருகிறது. இன்று ஆயிரம் நூல்களுக்கும் மேல் வெளிவந்துவிட்டன. அதில் குறைந்தது ஐம்பது விழுக்காடு தலைப்புகள் நாங்கள் நினைத்துப் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இன்னும் ஒரு நாற்பது விழுக்காடு நூல்களை வெளியிட்டதில் மகிழ்ச்சிதான். இன்னும் ஒரு எட்டு விழுக்காடு நினைத்து வெட்கப்பட வைப்பவை அல்ல. இந்த 25 ஆண்டுகளில் முதல் 90 சதவிகிதத்துடன் நிறுத்திக்கொள்ளும் அளவுக்கு விவேகம் எங்கள் குழுவுக்கு வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
காலச்சுவடை நாங்கள் தமிழக, இந்திய பதிப்பகமாகக் கருதுவதில்லை. தமிழில் நூல் வெளியிடும் உலகப் பதிப்பகமாகவே கருதிச் செயல்படுகிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நன்றி. முதலில் கமல்ஹாசன் அவர்கள்.
தமிழ்ப் புத்தகப் பண்பாட்டின்மீது கரிசனம் உடைய ஒரு கலைஞர். உயர் நட்சத்திர மதிப்புடைய பன்முக ஆளுமை. கடந்த ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் பெருந்தொற்றின் தாக்கத்தில் தமிழ்ப் புத்தக உலகம் துவண்டிருந்தபோது, அரசியல் பணிகள் மிகுந்திருந்த காலத்தில் தொடர்ந்து தமிழ் நூல்களைத் தனது பரந்த வட்டத்தில் அறிமுகப்படுத்தினார். இதன் தாக்கம் கணிசமானது. அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு நூலும் அடுத்த மாதங்களில் ஒரு பதிப்பு தீரும் அளவுக்கு விற்பனையாயின. அந்தத் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. அவரை இன்றைய நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னர் நண்பர் ஸ்ரீதரனையும் அவருடைய இணையர் வைதேகியையும் நாகர்கோவிலில் சுராவைப் பார்க்கவந்தபோது சந்தித்தேன். எங்கள் துணிக்கடையில் கல்லாப்பெட்டியில் ஒரு பரபரப்பான நாளில் அமர்ந்திருந்தபோது இருவரும் மற்றொரு நண்பருடன் கடைக்குள் நுழைந்தது ஒரு காட்சியாக மனதில் பதிந்திருக்கிறது. இந்தப் பயணியின் வளர்பிறையாகும் பயணத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன். பதவி உயர உயரத் தமிழ் உதிர்ந்துபோவதுதான் வழமை. ஸ்ரீதரன் தனது சீன- தமிழ் நேரடி மொழி பெயர்ப்புகள் வழியாகவும் எழுத்தின் வழியாகவும் இன்னும் ஆழமாகத் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் சமூக மாற்றத்திலும் கால்பதித்து வருகிறார்.
Neeta Gupta is first and foremost a fellow Indian language publisher. She is a friend for over a decade, a well wisher and an active supporter of Kalachuvadu. Neeta ably organised Jaipur Book Mark, which is the hub for publishers inside the Jaipur Book Fair for many years. Neeta has always taken a keen interest in promoting Indian writing . Publishers Exchange which Neeta launched during the first lockdown has been an oasis for Indian language publishers during these parched times.
எண்பதுகளின் இறுதியில் நான் நாகர்கோவிலில் தமிழ் இலக்கிய உலகின் உள்ளடுக்குகளை அறியும் ஆர்வத்துடன் இருக்கையில் முதலில் சந்தித்த எழுத்தாளர் சுரேஷ்தான் என்று நினைக்கிறேன். வேட்கையோடு நூற்றுக்கணக்கான கேள்விகளால் அவரைத் துளைத்தெடுத்திருக்கிறேன். தனது படைப்புலகில் ஆத்மார்த்தமாக இயங்கிவரும் எழுத்தாளர். இன்றுவரை வயது வேறுபாடு இன்றிப் பழகிவருபவர். எந்தப் பிசிறும் இன்றி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் தொடரும் தோழர்.
சிறப்புரைகள் ஆற்ற வந்திருக்கும் ஸ்ரீதரன், நீத்தா குப்தா, சுரேஷ் குமாரஇந்திரஜித் ஆகிய மூவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
I went to Frankfurt book fair first in 2007. I was invited on an amazing program run by the book fair company called the Frankfurt book fair fellowship program. It was a turning point for kalachuvadu. Since my first visit to the Frankfurt fair, Claudia has reminded the Vice President guiding the fair through its many challenges, encouraging publishers from the developing world, securing the position of Frankfurt messe as the largest book fair in the world. I am delighted that she has sent us a message to be shared with you today.
Kalachuvadu has worked with the French book office in New Delhi for over a decade now. Since Christine Cornet took over as attache for books a couple of years ago, our cooperations has intensified further. Christine has taken a special interest not only in promoting French writings but also in promoting Indian and Tamil writings in France.
Linda Oyez is a dear publishing colleague from Malaysia. We have co-exhibited in the South East South Asia collective stand organised by Linda in the Frankfurt book fair for many years.Linda has been a pillar of strength to Kalachuvadu’s many activities in Frankfurt over the years.
Leonard Fernandes is a goan publisher, book seller. He co-founded Publishing Next which is probably the first publishers’ conference in India. PublishingNext has promoted solidarity among Indian publishers for a decade now.
I am delighted to invite Linda, Christine and Leo to this evening’s events.
தமிழ்ப் பதிப்புலகைப் புதிய திணைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையவர் நண்பர் புகழேந்தி. தமிழகப் பதிப்புச்சூழலில் ஆழங்கால் பதித்திருப்பவர். பபாசியின் செயலாளராகச் சென்னை புத்தகச்சந்தையை விரிவுபடுத்தியவர். ‘சிக்ஸ்த் சென்ஸ்’ என்ற ஊக்கமுடைய பதிப்பகத்தின் பதிப்பாளர்.
ஸர்மிளா ஸெய்யித். எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர். வாழ்வின் சவால்களையும் சமூகத்தின் தடைகளையும் கடந்து அவர் மேற்கொண்டு வரும் பயணம் நம் அனைவருக்குமே உத்வேகம் தரவல்லது.
தமிழ்ப்பிரபா. முதல் படைப்புகள் தமிழில் விற்பனையில் சாதனை படைப்பதே இல்லை. இந்நிலையை மீறி வாசகர் கவனத்தை வெளிவந்தவுடனேயே பெற்ற படைப்பு ‘பேட்டை’. நட்சத்திர இயக்குநர் பா. இரஞ்சித்துடன் இணைந்து செயல்பட்டுவருபவர். விரைவில் தமிழ்த் திரையில் பிரபுதேவாவின் வாரிசாகத் தோன்றுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு!
புகழேந்தி, ஸர்மிளா ஸெய்யித், தமிழ்ப்பிரபா ஆகியோரையும் அன்புடன் இந்நிகழ்விற்கு அழைக்கிறேன்.
நண்பர் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை அரவிந்தன் அறிமுகப்படுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னர் அவர் இளம் வழக்கறிஞராக இருந்தபோது சந்தித்தேன். இலக்கிய வாசகனாக சுராவுக்குக் கடிதம் எழுதியிருக்கும் செய்தியை அப்போது பகிர்ந்துகொண்டார். அன்றிலிருந்து காலச்சுவடுக்கு மிகப்பெரும் பக்கபலமாக இருந்தவர். பெருமாள்முருகன் பிரச்சினையில் அவருடைய ஆணித்தரமான பங்களிப்பு பெருமாள்முருகனுக்குப் பெரும் ஊக்கம் தருவதாகவும் சாதகமான தீர்ப்பு பெற அடிப்படையாகவும் அமைந்தது. தமிழ்ச் சமூகத்தின் அதிர்ஷ்டமாகவும் – ஆனால் எங்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் இழப்பாகவும் – சில ஆண்டுகளுக்கும் முன்னர் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருடைய பெயர் சொல்லும் தீர்ப்புகள் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக அமைந்து வருகின்றன. இந்நிகழ்விற்கு அவரை அன்புடன் வரவேற்கிறேன்.
காலச்சுவடு இணையதளம் பற்றிச் சில சொற்கள். பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுத் தட்டிப்போய்க்கொண்டேயிருந்த விஷயம் இது. முதல் ஊரடங்கு தந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மீண்டும் பணியைத் தொடங்கினோம். Tivona Global Technologies நிறுவனத்தின் நண்பர்கள் மூர்த்தியும் தர்மாவும் மிகுந்த கரிசனத்தோடு இப்பணியை முன்னெடுத்து நிறைவேற்றினார்கள். இன்னும் வரும் நாட்களில் இத்தளம் பல முன்னேற்றங்களைக் காணும். இத்தளத்தின் முகப்புச் சித்திரங்களை வடிவமைத்தவர் ஓவியர் ரோஹிணி மணி.
உலகெங்குமிருந்து இந்நிகழ்வில் பங்கேற்கும் நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என் வணக்கம். இந்த இருபத்தைந்து ஆண்டுகாலப் பயணத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
வாழ்த்துரை - கமலா ராமசாமி
சென்னை, பாண்டிச்சேரி, கோவை, பெங்களூர், பம்பாய், தில்லி, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு சுரா செல்லும்போது வாங்கிய புத்தகங்கள், அது தவிர அமெரிக்கா போக ஆரம்பித்த பிறகு ஒரு டாலருக்கும் இரண்டு டாலருக்கும் கிடைக்கும் அருமையான பழைய புத்தகங்கள் என அதற்கென்றே ஒரு பெட்டியை ஒதுக்கி ஒவ்வொரு பயணத்திலும் கொண்டுவந்தவை எனக் கணக்கிலடங்காத புத்தகங்கள்.
ஒவ்வோர் அறையிலும் ஒரு புத்தக அலமாரி. இடம் போதாமலானதால் மாடியில் லைப்ரரி கட்டுவது என்று தீர்மானித்தோம். எங்கள் வீடு எண்பது வருடப் பழைமையான கட்டடம். டபுள் க்ரில் போட்டுப் புத்தகங்களுக்காக உறுதியான அறையை உருவாக்கினோம்.அப்படியாக சுரா மூலமாக உலகம் முழுவதிலுமுள்ள புத்தகங்கள் நாகர்கோவில் வந்துசேர்ந்தன.
புத்தகங்களை வாங்கி வந்தது பெரிய விஷயந்தான் என்றாலும் சுரா அந்தப் புத்தகங்களை எல்லாம் வாசித்தும் இருக்கிறார் என்பது ஆச்சரியந்தரும் காரியந்தான். அதற்கான அடையாளங்கள் புத்தகங்களில் தெரிகிறது. அடிக்குறிப்போ, அடிக்கோடோ, படித்த தேதியோ ஏதோ ஒரு அடையாளம் நூல்களில் தெரிகிறது என்று சுகுமாரன் பேச்சுக்கு நடுவில் சொல்லியிருக்கிறார்.
இன்று அந்த நூலகத்தைச் சுற்றித்தான் காலச்சுவடு அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
காலச்சுவடு இணையதளம் மூலம் இனி கண்ணனின் காலச்சுவடு பதிப்பகப் புத்தகங்கள் விற்பனைக்கு உலகம் முழுவதற்கும் செல்ல இருக்கின்றன. பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்பது சுராவின் நெடுநாளைய கனவு. சுராவும் கிருஷ்ணன் நம்பியும் சாப்பிடும்போதும் டீ வேளையிலும் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது என்பது முதல், மழையில் நனையாமல் ஸ்டாக்கை எங்கு வைப்பது என்பது வரையிலும் கனவு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது என் காதிலும் விழுந்திருக்கிறது.
1988இல்தான் காலச்சுவடு பத்திரிகை தொடங்கினார். முப்பது வருடக் கனவு நனவானது. பத்திரிகைக்குக் காலச்சுவடு என்று பெயரைத் தேர்ந்தெடுத்தது நண்பர் தி.அ. ஸ்ரீனிவாசன். பத்திரிகையை எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பாரதி அச்சகத்தில் அச்சுக் கோர்த்தார்கள். காலாண்டுக்கு ஓர் இதழ் வீதம் இரண்டு வருடங்களில் எட்டு இதழ்கள் கொண்டுவந்தார். அவ்வளவுதான் கொண்டுவர முடிந்தது. எங்கள் வாழ்க்கையிலும் சுதர்சன் ஜவுளிக்கடையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் முளைத்துப் பத்திரிகையை நிறுத்தும்படி ஆகிவிட்டது.
எல்லாருக்குமான பத்திரிகையாய் காலச்சுவடு இருக்க வேண்டும் என்பதில் சுரா உறுதியாக இருந்தார். அந்த எட்டுப் பிரதிகளிலும் அவருடைய படைப்பு குறைவாகவே இருக்கும். கலா அந்த பிரஸ்ஸில்தான் திருமணத்திற்கு முன்னால் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். இன்று காலச்சுவடு புத்தகங்களை உருவாக்கும் பொறுப்பில் அதே கலா இருக்கிறாள்.
“பெரிய சார் நடந்தும் காரிலும் பிறஸ்ஸூக்கு வந்து மேட்டர் வாங்கிட்டுப் போவாங்க. எம்.எஸ். சாரும் ஸ்ரீனிவாசன் சாரும் வந்து இங்கேயே உட்கார்ந்து புரூஃப் பாப்பாங்க. கண்ணன் சாரும் பெங்களூரில் படித்துக்கொண்டிருக்கும்போது விடுமுறைக்கு வந்தால் மேட்டர்களை வாங்கிச்செல்ல வருவார்” என்பவை அவள் நினைவுகள். பிரதியில் தப்புகள் இருந்தால் திரும்பவும் ஆதியிலிருந்தே அச்சு கோக்கணும். மற்றவர்கள், மேட்டரை இருப்பதுபோல் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். காலச்சுவடு பத்திரிகைக்குக் கண்ணும் கருத்துமாய் மெய்ப்புப் பார்ப்பதால் திரும்பத்திரும்ப அச்சு கோர்ப்பதில் அலுப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறாள்.
இரண்டு வருடங்களில் நிறுத்திய காலச்சுவடு 1994இல் கண்ணனால் ஆரம்பிக்கப்பட்டுப் புதுமுளை விட்டது. காலாண்டு இதழாக ஆரம்பித்து இப்போது மாத இதழாக 27ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறது.
கண்ணனின் விடாமுயற்சியால் சிறுகச்சிறுக முன்னேற்றமடைந்து காலச்சுவடு இணையதளம் மூலமாக உலகம் முழுவதற்குமான விற்பனை தொடங்கப்பட்டும் விட்டது.
முன்னர் தரமான பதிப்பகத்தின் மூலம் சுராவின் படைப்புகள் வெளிவந்திருந்தாலும் விற்பனையிலும் வாசகர்களைச் சென்றடைவதிலும் ஏமாற்றம்தான். அவருடைய புத்தகங்களைக் கொண்டுவருவதற்காகக் காலச்சுவடு பதிப்பகம் ஆரம்பித்துப் படிப்படியாக எல்லா எழுத்தாளரின் படைப்புகளும் வெளிவரத் தொடங்கின. காலச்சுவடு இதழும் காலச்சுவடு பதிப்பகமும் அது வெளியிட்ட சுராவின் நூல்களும் எல்லாருடைய கவனத்திற்கும் இலக்கானது. அவ்வாறு ஈர்க்கப்பட்டவர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.
வருடம் 2002ஆக இருக்கலாம். சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஞானக்கூத்தன் சுராவை கமல்ஹாசன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். சுராவை அழைத்துச்சென்றது வீட்டிலுள்ள ஸ்டுடியோ ரூம் என்று நினைவு. பலவருடங்களாகிவிட்டதால், சுரா அப்பொழுது சொன்னது அவ்வளவு துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. அந்த ஸ்டுடியோவில் வைத்துதான் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவரையும் சந்தித்திருக்கிறார். அவர்கள் மூவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, பிரியம், அன்பு போன்றவை சுராவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடம்பரமில்லாத அவர்களுடைய வாழ்க்கையும் மனத்துக்குப் பிடித்தது. அங்கு போய்விட்டுச் சந்தோஷத்துடன், திருப்தியுடன் வந்தது நினைவிருக்கிறது. கமல்ஹாசன் கொடுத்தார் என்று சொல்லி, ‘அன்பே சிவம்’ சினிமாவின் போஸ்டர் கொண்டுவந்தார். அதில் கமலஹாசனின் ஆட்டோகிராப்பும் இருந்தது. அதை உடனேயே ஹால் சுவரில் ஒட்ட வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார். மைதிலியின் உதவியுடன் ஹாலில் ஒட்டவும் செய்தார்.
காலச்சுவடு படிப்படியாக மேல் எழுவதற்கு மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. இதில் காலச்சுவடு பணியாளர்களின் பங்கும் மிக முக்கியமானது. கண்ணனுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறபோதெல்லாம் மைதிலி கணிசமான உதவிகள் செய்து பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறாள். பங்காற்றிய பொறுப்பாசிரியர்களும் மனப்பூர்வமான ஒத்துழைப்புகளைக் கொடுத்து அவர்களாகப் பிரிந்துசெல்லும்போதும் சுமூகமாகவே பிரிந்துசென்றிருக்கிறார்கள்; தொடர்ந்து தொடர்பும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கும் ஆசிரியர் பற்றி எதுவுமே சொல்லத் தேவையில்லை. கண்கூடாகவே அவர் திறமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இன்று காலச்சுவடு இதழும் பதிப்பகமும் தமிழின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது.
இணைப்புரை – சித்ரா பாலசுப்ரமணியம்
சமூகம், வரலாறு என்று சமூகத்தின் பல்வேறு மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடிய பல்வேறு புத்தகங்களைக் காலச்சுவடு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கிளாசிக் வரிசை வழியாக நவீன இலக்கியங்களை மறுபதிப்பு செய்து மிக முக்கியமான பணியையும் காலச்சுவடு ஆற்றிக்கொண்டிருக்கிறது. 25 ஆண்டுகள் பதிப்பு வரலாறு என்பது சாதாரணமானதல்ல. தோன்றி மறையக்கூடிய எவ்வளவோ இடர்ப்பாடுகள் மத்தியில் பதிப்பகங்களை நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
உலக அளவில் தமிழ்மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு தொடர்ந்து காலச்சுவடு பணியாற்றிக்கொண்டிருப்பதை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த வகையில்தான் உலகம் முழுவதிலுமிருந்து பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவிருக்கிறார்கள். காலச்சுவடோடு தங்களுடைய பயணம் எப்படி அமைந்தது, அதில் தாம் பெற்ற அனுபவம் என்னவென்பதையும் அவர்கள் நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த இணையதளம் என்பது காலச்சுவடின் பல்வேறுவகையான வெளியீடுகளை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சிறந்த அமைப்பாகச் செயல்படமுடியும். இனி வரும் காலங்களில் வேறு வேறு வகையில் புத்தகங்களைப் பதிப்பிப்பது, அவற்றை வாசகர்களுக்குக் கொண்டுசெல்வது என்கிற பல விஷயங்களைக் காலச்சுவடு முன்னெடுக்கவிருக்கிறது.
சிறப்புரை - கமல்ஹாசன்
(கலைஞர், செயற்பாட்டாளர்)
வணக்கம். காலச்சுவடு என்ற ஒரு அற்புத முயற்சி இன்னும் தொடர்கிறது என்பதில் என்னைப்போன்ற வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நின்றுபோன பத்திரிகை பற்றி கமலாம்மா சொன்னார்கள். நானும் அதேகாலத்தில் மையம் என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தமுடியாமல் நிறுத்தியிருக்கிறேன். அது சினிமா சம்பந்தப்பட்ட கலைஞனால் நடத்தப்பட்ட பத்திரிகை என்பதால் அந்தச் சாயலில் இருக்கக்கூடாது என்பதற்காக வீம்பாக இருந்தேன். அதில் பலரும் எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி அவர்களிடம் கதைகேட்டு அவரும் எழுதுவதாக இருந்தது. அதற்குள் பத்திரிகை நின்றுவிட்டது. ஆனால் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார், சுஜாதா எழுதியிருக்கிறார். இந்த மாதிரியான பேரெழுத்தாளர்களை என் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது கொஞ்சம் பேராசை என்று தெரிந்தது. அதற்குப் பிறகு அந்த மையம் வேறுவகையில் வளர்ந்து அரசியல் கட்சியாக வளர்ந்திருப்பது வேறு கதை.
இப்போது 96இல் பசுவய்யாவின் 107 கவிதைகளாக துவங்கியது இன்று இன்னமும் நடந்துகொண்டிருக்கும் பத்திரிகையாகவும் அதுவும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் நடந்துகொண்டிருக்கும் பத்திரிகையாகவும் இருப்பது என்னுடைய கனவு நனவான ஓர் உணர்வு. காரணம், எல்லா பதிப்புகளும் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் டிஜிட்டலில் டொமைனில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அதைத் தேடிப் படிக்க முயலும்போது அவர்கள் கையில் ஏதாவது கிட்டும் என்பது என் நம்பிக்கை. தமிழ் எழுத்தாளர்கள் எத்தனைபேரைத் தெரியும் என்று கேட்டால், தமிழர்களுக்குத் தெரியாது. ஆனால் கேரளாவில் போய்க் கேட்டால் கிடுகிடுவென்று வரிசையாகத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்வார்கள். மலையாள எழுத்தாளர்களை அல்ல, தமிழில் மட்டுமே எழுதக்கூடியவர்களைச் சொல்வார்கள். அப்படித் தேடித்தேடிப் படிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. அந்தப் பொறாமை கொஞ்சம் மட்டுப்பட்டதற்கான காரணம், பல நல்ல தமிழ் எழுத்தாளர்களைப் பதிப்பித்த பெருமை உங்களுக்கு உண்டு. தேடித்தேடிச் செய்த ஒரு பணி. தமிழ் அறிஞர்கள் முன்பெல்லாம் ஒவ்வொரு வீடாக ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடிச் சென்று மீட்டெடுத்து, இன்று வாழும் தமிழுக்கு அவர்கள்தான் ஆதாரம் என்று சொல்வதுபோல்.
நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளோடு காலச்சுவடு நீண்ட ஆயுளுடன், நம்மையும் தாண்டிய ஆயுளுடன் அது இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காலச்சுவடு, பல இந்திய மொழிகளிலிருந்தும் பற்பல உலக மொழிகளிலிருந்தும் படைப்புகளைக் கொண்டுவந்து வெளியிட்டிருக்கிறது. இது இன்னொரு திருநெல்வேலிக்காரரின் கனவு. அதை நினைவாக்கிக் கொண்டிருக்கிறது காலச்சுவடு. பப்ளிஷிங் நெக்ஸ்ட் (PublishingNext) பரிசுகளையெல்லாம் குவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தமிழுக்காக வழக்காடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் சிக்கல்கள் போதாதென்று இந்த அரசியல் சிக்கல்கள் எல்லாம் வரும்போதெல்லாம், இப்படித் தோள் கொடுக்கத் துணிவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதற்கெல்லாம் சேர்ந்த ஒரு பாராட்டுவிழாவாகத்தான் நான் இதை நினைக்கிறேன். இந்த விழா ரொம்ப நெகிழ்ச்சியான ஒரு விஷயம்.
சு.ரா அவர்கள், தான் கமல்ஹாசனைச் சந்தித்ததை கமலா அவர்களிடம் ஒரு வாக்கியத்தில் சொல்லியிருக்கலாம். எனக்கு அது வாழ்நாளில் ஒரு சம்பவம். அதற்குக் காரணமானவர் ஞானக்கூத்தன். நானும் அவரும் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஒரு சமயம், அவர், “நீங்கள் கண்டிப்பாக சு.ராவைச் சந்திக்க வேண்டும்” என்று சொன்னார். “எதற்கு” என்று நான் கேட்டேன். “அவர் சினிமாவுக்கு எழுதுவாரா, அது தெரியாதே” என்றும் நான் சொன்னேன். “ இல்லை நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும், நீங்கள் இருவரும் சந்திப்பதை நான் பார்க்க வேண்டும்” என்று சொன்னார். அதைச் செய்தும் காட்டினார். நானும் சு.ராவும் பேசும்போது ஒரு வார்த்தைகூட ஞானக்கூத்தன் குறுக்கே பேசவே இல்லை. நீங்களும் பேசுங்கள் என்று சொன்னதற்கு, “இல்லையில்லை, நீங்கள் இருவரும் பேசுங்கள், அதைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கிறேன்” என்று எங்களை அளவளாவவிட்டு, உரையாடவிட்டு, எங்களோடு தியேட்டரில் பின் சீட்டில் அமர்ந்துகொண்டிருந்தார்.
நானும் சு.ராவும் ஒருவரையொருவர் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தோம். புகைப்படம் எடுக்க வேண்டும் என்றுகூட அன்று எனக்குத் தோன்றவில்லை. அரசியலுக்கு வந்த காரணத்தினாலோ என்னவோ இப்போதெல்லாம் வீடியோ கேமராவுடனேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன். அப்போது எனக்குப் புகைப்படம் எடுக்கத் தோன்றவில்லை. பல கேள்விகளை நான் கேட்டேன். ஒரு குறிப்பு எடுக்கக்கூட எனக்கு அப்போது தோன்றவில்லை. ஒரு திரை எழுத்தாளராக எனக்குப் பல கேள்விகள் இருந்தது அன்று. எப்படி அணுகுகிறீர்கள் உங்கள் கதைகளை? எப்படி ஒரு ஓவியன் தான் பார்த்த காட்சிகளை நுணுக்கிநுணுக்கிச் சின்னக் கோவையாக வரைந்துகொண்டு வீட்டுக்குச் சென்று பிற்பாடு அதை உருவகப்படுத்துவதுபோல், நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்? நீங்கள் எழுதும்போது அது தொடர்பான விஷயங்களை எவ்வளவு வாசிப்பீர்கள் என்றெல்லாம் கேட்டபோது, “நான் சுமாராக வாசிப்பேன், ஆனால் எழுதும்போது வாசிப்பதில்லை”, என்று சொன்னார் சு.ரா. அதை ஒரு பெரிய பாடமாக நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அது நிறைகுடமாக இருப்பவர்கள் சொன்னது. நிரம்பி வழிந்துகொண்டிருக்கும்போது மேலே ஊற்றினால் நம்ம எழுத்தும் சேர்ந்து ஓடிவிடும் என்பதை ரொம்ப அழகாக எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அது எனக்குப் பிரயோஜனமாக இருக்கிறது. அவருடைய நூலகம் பற்றிச் சொன்னார்கள். என்னுடைய நூலகத்துக்கு ஒரு புத்தகத்தை அடையாளமாக வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். வேறு யார் புத்தகத்தையும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. ஞானக்கூத்தன்தான் எனக்கு முதலில் மனதில் வருகிறார். அதனால் அவரைச் சொல்கிறேன். அது அவர்கள் இருவருக்கும் நான் செய்யும் மரியாதை.
நான் ஒரு பேரிழப்புக்கு ஆளானேன். ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் வைத்திருந்த நூலகம் பாதி எரிந்துபோய்விட்டது. இப்பொழுதும் என்னிடம் இருக்கும் - நான் பதின்மூன்று வயது முதல் வாங்கிய புத்தகங்களெல்லாம் கொஞ்சம் கறுத்துப்போய் இருக்கிறது. அந்தத் தீ இன்னமும் அணையவில்லை. அதை அணைப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். இதுவரை நீங்கள் என்னென்ன பதிப்பித்திருக்கிறீர்களோ அவையெல்லாம் என்னுடைய நூலகத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதுதான் ஆகப்பெரிய கொள்முதல் என்று நான் சொல்லவிரும்பவில்லை. முன்னோடியாக நான் இருந்தேன் என்றால், இதே ஆசையுடன் பல வாசகர்கள் தமிழகம் எங்கும் இருக்கிறார்கள், அவர்களும் இதைப்போல் செய்ய வேண்டும், அதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
எனவே ஞானக்கூத்தன் அவர்களின் புத்தகம் முதல் அச்சாரமாகவும் பிற்பாடு வெகுவிரைவில் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்கிவைத்து அழகு பார்க்க வேண்டும், படிக்கவும் வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இப்போது அனந்து அவர்களையும் நினைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே பாரதி, தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, எம்.வி. வெங்கட்ராம், மௌனி, ஆத்மாநாம் போன்ற பலபேர்களை நான் நினைவில் கூற வேண்டும். இவற்றையெல்லாம் என்னைப் படிக்கவைத்து, சிலரைச் சந்திக்கவும் வைத்தவர் அனந்து அவர்கள். அவர் இறந்தபோது அவரது நூலகம் எனதானது. அதில் பாதி எரிந்த கோபம்தான் எனக்கு. இப்போது அதை ஓரளவுக்குச் சரிகட்டலாம் என்ற முனைப்பில் துவங்கியிருக்கிறேன். இந்த முயற்சியும் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.
என்னை இந்த விழாவுக்கு அழைத்துப் பேசச்சொன்னதில் நானே எழுதிப் பதிப்பித்த பெருமை எனக்கு இருக்கிறது. பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் மிகமிக அற்புதமான சந்தோஷம். இதை ஏதோ அவையடக்கத்துக்காகச் சொல்கிறேன் என்று தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள். என்னிடம் கேட்பார்கள், “ஒரு இயக்குநர் ஆகிவிட்டீர்கள், சினிமாவின் உச்சகட்டம் அதுதான், அடுத்தகட்டமாக சினிமாவின் உயர் பதவி என்று எதை நினைக்கிறீர்கள்?” என்று என்னிடம் கேட்கும்போதெல்லாம் உண்மையாக நான் உணர்ந்து சொல்வது, நான் மட்டும் அல்ல, உலகத்தில் இருக்கும் பல பெரிய இயக்குநர்கள் சொல்வது, மீண்டும் ரசிகனாக மாற வேண்டும் என்ற அந்தப் பேராவலைத்தான். அதை எங்கோ இழந்துவிடுகிறோம், படைப்பாளி என்ற கர்வத்தில், அந்த ரசிக்கும் தன்மையை இழந்துவிடுகிறோம். அந்த ரசனை எனக்கு மீள வேண்டும். அனந்துவும் நானும் ஒரு பத்திரிகை நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக, கணையாழிக்கான சந்தாவுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் சொல்வோம். அதே உணர்வுடன் சொல்கிறேன், காலச்சுவடு நீடூழி வாழ வேண்டும். மனமார்ந்த பாராட்டாகத்தான் இதைச் சொல்கிறேன். நம்மையும் தாண்டிக் காலச்சுவடு வாழ வேண்டும். இந்த விழாவில் என்னைப் பேச அழைத்ததற்கு எனக்குப் பெரிய பெருமை. அனந்து இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார், ஞானக்கூத்தன் இருந்திருந்தால் கூத்தாடியிருப்பார். நன்றி, வணக்கம்.
இணைப்புரை - சித்ரா பாலசுப்ரமணியம்
மிக அருமையான, நாங்கள் எதிர்பார்த்ததைப்போன்றே அமைந்த ஒரு உரை. நீங்கள் புத்தகங்களின் காதலர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். இணையத்தில் நீங்கள் எழுதியது ஏதாவது இருக்கிறதா என்று தேடியபோது, ‘தாயம்’ என்ற ஒரு நாவலை 1984இல் எழுதியிருப்பதாக நான் பார்த்தேன். எங்களுடைய கோரிக்கையாக இந்த இடத்தில் நன்றி அறிவித்தலோடு சொல்லலாம் என்று நினைக்கிறோம், ஏராளமான அனுபவங்கள் உங்களுக்கு இருக்கிறது, திரை சார்ந்தும், புத்தகங்கள் சார்ந்தும்! அது வரும் தலைமுறைக்கு உங்களுடைய அடையாளமாகவும் நின்று நிலவும் என்ற கோரிக்கையை நாங்கள் இங்கு வைக்கிறோம். இந்த அவையில் இணையதளத்தைத் திறந்துவைத்துச் சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கமல்ஹாசன்
காலச்சுவடு பதிப்பகத்தின் இணையதளத்தை நான் திறந்துவைக்கிறேன். அனைத்தும் இங்கு தெரிகிறது. மிக அருமை. நீங்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்கள். எனக்கு, பதிலுக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள். தமிழ்த் திரைக்கதைகளை உங்களுக்குச் சிறந்ததாகத் தோன்றுகிறவற்றைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதைகள் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதாகவே நம்புகிறேன். திரைக்கதை என்பது என்ன? நான் எம்.ஏ பட்டயப் படிப்பு தமிழில், ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன், நான் எதற்குத் திரைக்கதைப் பயிற்சிப்பட்டறைக்கு வர வேண்டும் என்று ஒருவர் கேட்டார். அவரிடம் நான் சொன்னது, “ ஷேக்ஸ்பியர் இப்போது வந்தார் என்றால், அவரும் கண்டிப்பாக ஒரு பயிற்சிப் பட்டறைக்கு வர வேண்டும். ஏனென்றால், இது வேறு”. இன்று திரைக்கதை எழுதுவது இருநூறுபேர் வேலைசெய்வதற்கான குறிப்பு. அது மிக முக்கியமான அறிவியல்பூர்வமான ஆவணம். அதை எழுதுவதற்குத் தனித் திறமை வேண்டும். அதற்கு வெறும் எழுத்தும் படிப்பும் போதாது. பொறியியல் படிப்பதைப் போன்றதுதான் அது என்று நம்புகிறேன். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், தமிழில் நல்ல திரைக்கதைகளைக் காலச்சுவடு பதிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
கண்ணன்: கண்டிப்பாக நாங்கள் அதைப் பரிசீலித்துச் செய்கிறோம்.
இணைப்புரை - சித்ரா பாலசுப்ரமணியம்
காலச்சுவடு இணையதளம் உங்கள் கண் முன்னால் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். நூல்கள், எழுத்தாளர்கள், வகைமைகள், சிறப்புத்திட்டங்கள், காலச்சுவடு பற்றிய அறிமுகம் எல்லாம் இருக்கின்றன இதில்.
காலச்சுவடு இணையதளத்தைத் திறந்துவைத்து, இதில் அத்தனை புத்தகங்களையும் தன்னுடைய நூலகத்துக்காக ஒரு பிரதி வாங்குவேன் என்று சொல்லி, அதோடு முக்கியமான திரைக்கதைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த பத்மஸ்ரீ கமலஹாசனுக்குக் காலச்சுவடு சார்பாக நன்றி.
அடுத்து, சிறப்புரை ஆற்றக்கூடிய ஆளுமைகளை அழைக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
முதலில் ஸ்ரீதரன் அவர்கள். இவர் இந்திய அயலுறவுத் துறையின் உயர் அலுவலர். ஆனால் அதைவிட முக்கியமாக, ‘வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’ என்ற புத்தகத்தின் மூலமாகத் தமிழுலகத்தில் நீங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தீர்கள். சீனத்தின் சங்க இலக்கியம் என்று சொல்லக்கூடிய ஏறக்குறைய முப்பத்தைந்து பாடல்களைச் சீன மொழியிலிருந்தே நேரிடையாக மொழிபெயர்த்துக் கொடுத்தீர்கள். அதைவிட உங்களை ஐக்கியா ஸ்ரீதரன் என்றுதான் எனக்கு நினைவிருக்கிறது. உங்களுடைய நாடக விழாக்களுக்கு நான் வந்திருக்கிறேன். குட்டி இளவரசனை நீங்கள் நாடகமாக நடத்தியது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அந்த நாடகப் பயிற்சியின்போது நான் வந்திருக்கிறேன். தீவுத்திடலில் நடந்த அந்த நிகழ்வுகள் உங்களுடைய பெயரைக் கேட்டவுடன் நினைவில் விரிகிறது. உங்களுடைய சமூக வலைத்தளம் மிகவும் வண்ணமயமானது. வாழ்க்கையில் உத்வேகம் ஊட்டக்கூடியது. ஆர்வமும் துடிப்பும் நிறைந்த திரு. ஸ்ரீதரன் அவர்களைச் சிறப்புரை ஆற்றுமாறு அன்போடு வரவேற்கிறோம்.
சிறப்புரை - ஸ்ரீதரன் (பயணி)
(எழுத்தாளர், அயலுறவுத்துறை அலுவலர்)
அனைவருக்கும் வணக்கம்.
நான் பெய்ஜிங்கில், ஹாங்காங்கில், பிஜித் தீவில் ஒரு அரசியல் அதிகாரியாக இருந்திருக்கிறேன், பண்பாட்டு அதிகாரியாக இருந்திருக்கிறேன். அதனால் என் வேலை பற்றிச் சொன்னால், எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியாது. இது எல்லா டிப்ளமாட்டுக்கும் பொருந்தும். டிப்ளமாட்டிக் துறையில் ஒரு தந்திரத்தைப் பின்பற்ற ஆரம்பித்தோம். அதாவது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், நம்முடைய பொழுதுபோக்கு பற்றிச் சொல்வோம். என்னுடைய மூத்த அதிகாரிகள் சிலபேர் இவ்வாறு செய்வதைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்தது.
ஒரு இரவு விருந்தில் ஒருவர் என்னை விசாரித்தபோது, ‘நான் ஸ்ரீதரன், நான் ஒரு டிப்ளமாட், ஒரு எழுத்தாளனும் கூட’ என்று சொன்னேன். உடனே அவர் ‘என்ன எழுதியிருக்கிறீர்கள்’ என்று அடுத்த கேள்வி கேட்டார். இப்போதுதான் என்னுடைய நிஜமான பிரச்சினையே துவங்கியது. நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று ரொம்பச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதை இப்படி சொல்ல வேண்டும், “ சீனாவில் கன்பூசியஸ் என்று ஒருவர் இருந்தார். அவரும் புத்தரும் சமகாலத்தவர்கள். அதாவது 2600 வருடங்களுக்கும் முன்னர். அந்த கன்பூசியஸ் அவருக்கு முன் காலத்திய Book of Songs என்ற ஒரு புத்தகத்தைச் சிறந்த புத்தகம் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை நான் இரண்டு வருடம் சீனாவில் படித்து, ஏழு வருடம் சற்றே சிரமப்பட்டு, அதில் இருக்கும் சில பாடல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அதற்கும் தமிழுக்கும் இருக்கும் உறவு பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன்” என்று சொன்னேன். முதலில் டிப்ளமாட் என்று சொன்னவுடன் அந்தப் பெண்மணியின் புருவம் புழுமாதிரி நெளிந்தது; நான் என்னுடைய புத்தகம் பற்றிச் சொன்னவுடன் அது பாம்புமாதிரி பறந்துவிடும்.
இப்போது யோசித்துப் பாருங்கள், ஒரு சாதாரண இரவு விருந்தில் உரையாடும்போது சொல்லமுடியாத ஒரு விஷயத்தை ஒரு பதிப்பாளரிடம் சொல்லிப் பதிப்பிக்க வேண்டும் என்றால் அது ரொம்ப அசாதாரணமான விஷயம். நான் பெய்ஜிங்கில் இருக்கிறேன், அப்போது புத்தகம் பற்றிய யோசனை வருகிறது. பிஜித்தீவுக்குச் சென்ற பிறகு தீவிரமாக அந்தப் புத்தகம் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஆனால் கண்ணனிடம் தொலைபேசி மூலம் பேசியபோது, கண்ணன் நான் சொன்ன புத்தகத்தின் எழுத்துப்பிரதியைக்கூடப் பார்க்கவில்லை. ‘நீங்கள் அனுப்புங்கள், நான் பதிப்பிக்கிறேன்’ என்று சொன்னார். நான் ஒரு நாடோடி.சென்றமுறை நான் டெல்லியில் இருந்தபோது இந்தப் புத்தகம் வெளியானது. கண்ணனும் நானும் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் அந்த விழாவை ஒருங்கிணைக்கும்போது, ஒரு மாதம் முன்னர்தான் எங்கள் இருவருக்கும் தெரிந்தது, மிகப் பழைமை வாய்ந்த தமிழ் மொழிக்கும் அதே பழைமை வாய்ந்த சீன மொழிக்கும் நடுவில் நேரடியாக மொழிபெயர்ப்பாகிற முதல் நூல் இது, அந்த நூலுக்காக நான் ஏழு வருடம் உழைத்திருக்கிறேன். அப்போதுகூட இது முதல் என்று எனக்குத் தெரியாது. நிறைய பேர் சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பார்கள், நாம் இதைச் செய்யலாம் என்றே நினைத்தேன்.
என்னைப் பொறுத்தவரையில், துப்பார்க்குத் துப்பான விஷயங்களையும் துப்பாக்கி துப்பார்க்குத் துய்க்கும் விஷயமாகவும் மாறும் மழை என்று சொன்னார் வள்ளுவர். அது மாதிரி காலச்சுவடு ஓர் எழுத்தாளனாக என்னை உருவாக்கியது; அதனூடாகவே ஒரு வாசகனாக என்னை வளர்த்தது. இந்த இரண்டிலும் காலச்சுவடுக்கு ஒரு பங்கு இருக்கிறது. இந்தப் புத்தகம் 2012இல் வந்தது. இதற்கும் முன்னர் 2004இல் என்னுடைய முதல் நூல் வெளிவந்தது. ‘சீன மொழி ஒரு அறிமுகம்’ என்ற புத்தகம். கண்ணனுடன் நடத்திய உரையாடல் எனக்கு நினைவிருக்கிறது. சீன மொழியின் சிறப்புக்கூறுகள் என்று சொல்லலாம், இல்லையென்றால் சீன மொழியில் இருக்கிற ரொம்ப சிக்கலான விஷயங்கள் என்றும் சொல்லலாம். சீன மொழியில் அ, ஆ கிடையாது, எழுத்துக்கள் கிடையாது. எடுத்தவுடனயே அணில், ஆடு, இலை என்றுதான் இருக்கும். அணிலை நாம் அ, ணி, ல் என்று பிரிக்கிறோம் இல்லையா, சீன மொழியில் அவ்வாறு செய்யமுடியாது. எடுத்தவுடனேயே அணில் என்றுதான் கற்றுக் கொள்ளமுடியும். அதனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கட்டம் போட்டிருக்கும். இரண்டாவது, சீனமொழி ஒரு டோனல் (Tonal) மொழி என்று சொல்வார்கள். இங்கு நமக்கு காபி வேண்டும் என்று அம்மாவிடம் கேட்கிறோம் என்று சொன்னால், அம்மா காபி கொடும்மா என்று சொல்வோம். எந்தத் தன்மையில் சொன்னாலும் நம் அம்மாதான் வருவார்கள். ஆனால் சீன மொழியில் அம்மா என்று சொன்னால், அம்மா வரமாட்டார்கள். குதிரை வரும், கோபம் வரும், சணல் வரும். ஏனென்றால் எல்லாவற்றுக்கும் மா, மா என்று பயன்படுத்துவார்கள். ஆனால் அதை வேறு வேறு மாதிரி சொல்வார்கள். நாங்கள் சீனமொழி கற்றுக்கொள்ளும்போது கிண்டலாக இந்த விஷயத்தைச் சொல்வோம். ஒரு பாடல் இருக்கிறது, அந்தப் பாடல், “மாமா சீ மா, மாமா மா” என்று போகும். அதாவது அம்மா குதிரையில் போய்க்கொண்டிருக்கிறார்கள், குதிரை ரொம்ப மெதுவாகப் போகிறது, அம்மா குதிரையைத் திட்டினார்கள் என்று எல்லாமே மா என்றே வரும். அந்த மாதிரியான ஒரு மொழி சீன மொழி.
2004இல் இருபது வருடங்களுக்கும் முன்னர் நாங்கள் என்ன செய்தோம் என்றால், சீன மொழிக்கான டோனுக்காக ஒரு தனி எழுத்துரு (Font) இருக்கும். 20 வருடங்களுக்கும் முன்னர் ஒரு தமிழ்ப் புத்தகத்தில் தமிழ் எழுத்துருவும், சீன எழுத்துருவும், டோனுக்கான எழுத்துருவும் இருக்கிறது. அத்தனையும் சேர்ந்து அந்தக் காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டு புத்தகத்தைப் பதிப்பிக்கிறோம். எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி இந்திய மொழிகளிலேயே சீன மொழியை அறிமுகப்படுத்துகிற புத்தகங்கள் அந்தக் காலகட்டத்தில் கிடையாது.அதனால் இப்படிப்பட்ட முதன்மையான விஷயங்கள் செய்யும்போதெல்லாம் கண்ணனிடம் செல்ல எனக்குத் தயக்கமே வந்தது கிடையாது. அப்படி அவரிடம் இதுவரை நான் கேட்டு அவர் செய்யாத விஷயங்கள் என்பதே கிடையாது. அவர் கேட்டு நான் செய்யாத விஷயங்கள் வேண்டுமானால் இருக்கும். இதைத் தமிழ்ச் சூழலில் மட்டுமல்லாமல், இந்தியப் பதிப்புச் சூழலிலேயே முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்.
தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’ நாவலின் கடைசியில் சிந்தாதிரிப்பேட்டையில் பேசுகிற வார்த்தைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சில நாம் பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள். அதற்கான பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருக்கும். இந்த மாதிரியான முக்கியமான விஷயங்களை ரொம்ப அநாயாசமாகக் காலச்சுவடு செய்துகொண்டிருக்கிறது.
இப்படி ஓர் எழுத்தாளனாக நம்பிக்கையோடு காலச்சுவடுக்கு நான் வந்த காரணம் வாசகனாக எனக்கும் அதற்கும் இருக்கும் உறவுதான். அந்த உறவு, கண்ணன் சொன்னமாதிரி, 1987இல் நான், வைதேகி, சந்தர் எல்லாரும் நேராக நாகர்கோவில் போய் இறங்கிவிட்டோம். நேராக நாகர்கோவிலுக்குப் போய், விசாரிக்கும்போது சுதர்சன் டெக்ஸ்டைல்ஸ் கடை கண்ணில் பட்டது. கல்லாவில் ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் சென்று “சென்னையிலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் வாசகர்கள், எங்கே எங்களுடைய எழுத்தாளர் சுந்தர ராமசாமி” என்று கேட்டு எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். கண்ணன் எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டுவிட்டு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஏறக்குறைய 35 ஆண்டுகளாக ஒரு வாசகனாக எனக்கும் காலச்சுவடுக்குமான உறவு வளர்ந்துகொண்டே இருக்கிறது.
என்னுடைய புத்தக அலமாரியில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதப் புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பித்தவைதான். ஒவ்வொரு முறை விடுமுறைக்குச் சென்னைவரும்போதும் வாங்கியவை. காலச்சுவடு பதிப்பித்த மொழிபெயர்ப்பு நூல்களையும் பிற புத்தகங்களையும் அந்தப் புத்தகங்களின் உள்ளே படித்துப் பார்க்கக்கூட எனக்கு நேரம் இருக்காது; வாங்கிக்கொண்டு வெளிநாடு சென்று அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவற்றைப் படிப்பேன். இப்படியாக ஒரு எழுத்தாளனாக, ஒரு வாசகனாக மழை மாதிரி என்னை வளர்த்தது காலச்சுவடு.
என்னைப் பொறுத்தவரை இது காலச்சுவடின் முதல் 25ஆம் ஆண்டுவிழா. ஏனென்றால் கண்ணன் ரொம்பவும் புத்திசாலியான, விழிப்புணர்வு உள்ள பதிப்பாளர். பதிப்பகத்துறையில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. வால்டர் ஐசக்ஸன் என்று ஒரு சிந்தனையாளர் இருக்கிறார்; ஸ்டீவ் ஜாப்ஸ், ஐன்ஸ்டீன் ஆகியோரின் வரலாறுகளை எழுதியவர். நான் அமெரிக்காவில் இருந்தபோது, அவருடைய அலுவலகமும் என்னுடைய தூதரகமும் அருகருகே இருந்தன. அவருடன் உரையாடும்போது அவர் முக்கியமான விஷயம் ஒன்றைச் சொன்னார், வாசகர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது, எழுத்தாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது, பதிப்பாளரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டிருக்கிறது. எந்த இடத்தில் இடைவெளி இருக்கிறது என்று சொன்னால், வாசகர்கள் தாங்கள் தர நினைக்கும் பணத்தை வாங்கும் முறைக்கு ஒரு இடைவெளி இருக்கிறது என்று சொன்னார். விரிவுபடுத்த, அதுபற்றி வலுவாகச் சிந்திக்க, கூர்மைப்படுத்த ஆட்கள் வேண்டும். அடுத்து வரும் பதிப்பாளர்கள் இதை யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்தவகையில் தமிழில் ஏதாவது நடந்தது என்றால் கண்ணன் அதில் முன்னணியில் இருப்பார் என்று எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. காலச்சுவடின் முதல் 25 ஆண்டுக்கும் அடுத்தடுத்த 25 ஆண்டுக்கும் சேர்த்து என்னுடைய வாழ்த்துகள்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்ரமணியம்
மிக்க நன்றி ஸ்ரீதரன். அடுத்து, தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவரான திரு.சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களைச் சிறப்புரை வழங்குமாறு அன்போடு அழைக்கிறோம். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், அறுபதுக்கும் மேற்பட்ட குறுங்கதைகள், இரண்டு புதினங்கள் என்ற நீண்ட எழுத்துப்பயணம் அவருடையது. ‘மறைந்து திரியும் கிழவன்’, ‘மாபெரும் சூதாட்டம்’ போன்ற சிறுகதைத் தொகுதிகளும், ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘கடலும் வண்ணத்துப் பூச்சியும்’ ஆகிய நாவல்களும் மிக முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவை. ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் அதன் நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.
காலச்சுவடுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை அன்போடு அழைக்கிறோம்.
சிறப்புரை - சுரேஷ்குமார் இந்திரஜி்த்
(எழுத்தாளர்)
காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் வெளியீடு எல்லாரும் கூறியபடி பசுவய்யா என்ற சுந்தர ராமசாமி எழுதிய ‘107 கவிதைகள்.’அது 1996 வருடம் வெளிவந்தது. இன்றுவரையில் எவ்வளவு புத்தகங்கள் வந்திருக்கும் என்று கண்ணனிடம் கேட்டேன். ஆயிரம் புத்தகங்களுக்கும் மேல் என்று சொன்னார். அந்தப் புத்தகங்கள் எல்லாமே அறிவுத்துறை சம்பந்தப்பட்டது. ஆய்வுத் துறை சம்பந்தப்பட்டது. படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது.வெறும் சமையல் குறிப்புகளோ அல்லது ஜோதிடக் குறிப்புகளோ அல்லது கார்ட்டூன்களோ இல்லை.
என்னுடைய அவதானிப்பு என்னவென்றால் இன்றைக்குப் புதுமைப்பித்தன் மிக முக்கியமான ஆளுமையாகச் சிறுகதையில் நிறுவப்பட்டுள்ளார். கல்விசார் வட்டத்திலும் சரி, தமிழ் நவீன இலக்கிய உலகிலும் அப்படித்தான். காலச்சுவடு பதிப்பகம் வருவதற்கு முன்பாக புதுமைப்பித்தனுடைய சிறுகதைத் தொகுப்புகள் உதிரிஉதிரியாகக் கிடைத்துக்கொண்டிருந்தன. ஆகஸ்ட் 2000த்தில் ஆ.இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு பதிப்பகம் இருவரும் சேர்ந்து ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ செம்பதிப்பு வெளியிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை வெளியிட்டதற்குப் பின்னர் புதுமைப்பித்தனின் ஆளுமை வேறு மாதிரி மாறிவிட்டது. இன்றைக்கு பாரதியார் கவிதையில் நிலைபெற்றிருக்கிற மாதிரி, சிறுகதையில் புதுமைப்பித்தன் நிலைபெற்றிருக்கிறார்.
காலச்சுவடு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஓரான் பாமுக், கார்சியா மார்க்கேஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோஸ் சரமாகோ ஆகியோருடைய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். இது பெரிய அரிய விஷயம். அந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆங்கிலத்தில் படிக்க முடியாதவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ரேமண்ட் கார்வர் சிறுகதைகளையும் மொழிபெய்ர்த்துத் தந்திருக்கிறார்கள். காம்யூவின் ‘புரட்சியாளன்,’ நீட்ஷேயின் ‘ஜரதுஷ்ட்ரா’, அருந்ததிராயின் ‘God of Small Things’ புத்தகத்தையும் காலச்சுவடு தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அரிய விஷயமாக கருதுகிறேன்.
ஆய்வு நூல்களைப் பொறுத்தவரை சரவணன், ஆ. இரா. வேங்கடாசலபதி, பழ. அதியமான், அ.கா. பெருமாள், தொ. பரமசிவம் ஆகியோருடைய ஆய்வு நூல்களை எல்லாம் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. இதையும் அரிய விஷயமாகக் கருதுகிறேன். இதுபோக தலித் ஆய்வு நூல்கள் மண்ணுக்குக் கீழே இருந்தன. அதுபற்றிய சரியான பார்வையோடு ஆய்வு இல்லாதிருந்த அல்லது அதிகமாக இல்லாதிருந்த சூழ்நிலையில் ஸ்டாலின் ராஜாங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் சேர்ந்து பணியாற்றி நிறைய தலித் ஆய்வு நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இதை அரிய விஷயமாகக் கருதுகிறேன். அதுபோல் பி.ஏ. கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்.’ பளபளப்பான தாளில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இது முக்கியமான விஷயம். நான் ரொம்ப முக்கியமாக சொல்லவேண்டிய மற்றொரு விஷயம் ஈழம் சம்பந்தப்பட்ட இரண்டு புத்தகங்கள். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை பற்றிப் பலபேர் பலவிதமான தங்களுடைய சுய கற்பனைகள் சார்ந்துதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவு காண்கிற மாதிரி பிரான்சிஸ் ஹாரிசன் எழுதிய ‘சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ என்கிற புத்தகம். ஈழத்தில் அந்த முள்ளிவாய்க்கால் உள்ளது உள்ளபடி இரண்டு தரப்பிலும் ஏற்பட்ட கொடூரங்களையும் மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் மிகத் தெளிவாக எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோல ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற புத்தகம். எல்டிடிஇ அமைப்பின் மகளிரணித் தலைவராக இருந்த தமிழினியின் தன்வரலாறு. இந்த இரண்டு புத்தகங்களும் ஈழத்தைத் தெரிந்துகொள்வதற்கான முக்கியமான புத்தகங்கள்.
இன்னொரு குறிப்பிட்ட விஷயம், காலச்சுவடைப் பொறுத்தவரை புத்தகம் இருப்பில் இல்லை (No Stock) என்பதே கிடையாது. இது ஒரு நற்குணம். எல்லாப் பதிப்பகத்துக்கும் இது இருக்குமா என்பது தெரியவில்லை. இணையதளம் தற்காலத்தின் தேவை. புதிய இணையதளம் துவக்கத்தை முக்கிய நிகழ்வாக நான் கருதுகிறேன்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்ரமணியம்
நன்றி. மிகச் சிறப்பாக காலச்சுவடின் பயணத்தை வரலாற்றுரீதியாக அவர்கள் எவ்வளவு முக்கியமான புத்தகங்களைப் பதிப்பித்ததன் மூலமாக எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பதை மிகவும் அழகாக, தரவுகளோடு தெரிவித்தது முக்கியமானது. சிறப்புரை வழங்கியதற்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்ததாகச் சிறப்புரை ஆற்ற நீதா குப்தா அவர்களை வரவேற்கிறோம். நீதா குப்தா யாத்ரா புக்ஸ் பதிப்பகத்தின் பதிப்பாளர். பல்வேறு மொழிகளில் இலக்கியப் படைப்புகளை மொழியாக்கங்கள் மூலமாக விரிவான தளத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான பணியை நீதா குப்தா ஆற்றிவருகிறார். யாத்ரா புக்ஸ் அமைப்பின் பதிப்பாளர், இணை நிறுவனர் பாரதிய அனுவார் பரிஷத் என்னும் காலாண்டிதழின் ஆசிரியர் நீதா குப்தா அவர்கள். ஜெய்பூர் புக் மார்ட் இன் இணை இயக்குநராகவும் செயல்பட்டவர். பப்ளிஷர் எக்ஸ்சேஞ் அமைப்பின் நிறுவனராகவும் இருக்கிறார். Translating Bharath Reading India என்கிற அவருடைய கட்டுரைத் தொகுப்பு குறிப்பிடத்தகுந்தது. தன்னுடைய மதிப்புமிக்க கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளுமாறு நீதா குப்தாவை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்புரை - நீதா குப்தா
(பதிப்பாளர், பப்ளிஷர்ஸ் எக்ஸ்சேஞ்சின் இணை நிறுவனர்)
விரிவான அறிமுகத்துக்கு நன்றி சித்ரா. நான் ஆங்கிலத்தில் பேசப்போகிறேன். எங்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்காததற்குக் கண்ணன் உங்களைக் குற்றம் சாட்டுகிறேன்! அதனால் என்னால் இந்த நிகழ்வில் தமிழில் பேசமுடியவில்லை. காலச்சுவடின் 25 ஆண்டு நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெருமையடைகிறேன். 25 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல். காலச்சுவடு பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள். கடந்த 25 ஆண்டுகளாக இந்திய மொழிப் பதிப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு பதிப்பகம் காலச்சுவடு. பதிப்புத்துறையில் முக்கியமான உடைப்பை ஏற்படுத்தக்கூடிய உங்களின் பணிகளால் தமிழில் மட்டும் அல்ல, தமிழ் அல்லாத பிற மொழிகளில், பிற பிரதேசங்களில் வாசகர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய / முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலும் குறிப்பிடத்தகுந்தது. வாசகருக்குத் தேவையான கதைகளும் கருத்துகளும் எங்கிருந்தாலும் அது தங்குதடையின்றி அனைவரையும் சென்றடைவதற்காக எங்களைப் போன்ற பதிப்பாளர்கள், பதிப்புத் துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்கள், எழுத்தாளர்கள் எனப் பலரிடம் கண்ணன் சுந்தரம் காட்டும் அன்பு முக்கியமானது.
என்னுடைய இந்த வாழ்த்துச் செய்தியின் மையம் அதுதான். என்ன செய்ய வேண்டும், எதைப் பதிப்பிக்க வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வோம். தான் செய்ய நினைப்பதை கண்ணன் செய்யும் முறை, புவியியல் எல்லை கடந்து தன்னுடைய புத்தகங்களை அவர் எடுத்துச் செல்லும்முறை ஆகியவற்றைக் கவனித்தால், மொழிசார்ந்த தடைகளோ, அரசியல் எல்லைகளோ உலகெங்கிலும் இருக்கிற தன்னுடைய வாசகர்களுக்குத் தான் பதிப்பிக்கும் புத்தகங்களை எடுத்துச்செல்வதிலிருந்து காலச்சுவடை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்பது புரியும். கண்ணன் உங்களை எனக்குக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்றுக் காலத்தில் இந்திய மொழிப் பதிப்பாளர்கள் கருத்து பகிர்வு (எக்ஸ்சேஞ்ச் – Publisher’s Exchange) என்னும் ஏற்பாட்டை நாம் ஒருங்கிணைத்தபோது ஏறக்குறைய வாரம் ஒரு முறை நாம் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்த 25 ஆண்டு விழா ஒரு ஆண்டாகத் தள்ளிப்போடப்பட்டது எனக்குத் தெரியும்.
பதிப்பாளர்கள் கருத்துப் பகிர்வில் உள்ள அனைவரும் புரிந்துகொண்டதும், நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தியதும் என்னவென்றால், இந்திய மொழிகளில் உள்ள பதிப்பகத்தினருக்கு ஒரு மேடை அமைப்பதன் அவசியத்தை. நாம் அனைவரும் வளங்களை, பதிப்பகத்துறையில் நிலவும் போக்குகளை, உலகளாவிய சிறந்த நடைமுறைகயைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் Publishing Exchange என்ற அந்த மேடை இருக்கிறது. தார்வாரில் உள்ள ஒரு சிறு பதிப்பாளர் அல்லது சாங்க்லியில் இருக்கும் ஒரு பதிப்பாளர் என இந்திய மொழிசார்ந்த பதிப்புத் துறையில் உள்ள பலரும் நம் கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக்கொண்டிருப்பதால் கிடைக்கும் பலம் சக்திவாய்ந்தது, குறிப்பிடத்தகுந்தது. அந்த மேடைகளில் நீங்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் முக்கியமானவை.
நான் இங்கு குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம் என்னவென்றால், கண்ணன் உங்களின் நகைச்சுவைத் தன்மை, மிகுந்த சிரமமான காலகட்டங்களில்கூட உங்களால் சிரிக்க முடியும். அது எப்படிச் சாத்தியம் என்றால், உங்களிடம் மிகத் தெளிவான இலக்கும் அது பற்றித் தொலைநோக்குப் பார்வையும் இருப்பதால்தான். மிகக் கடினமான சூழல்களையும் எளிதாகக் கடக்கிற, சிரிக்கிற உங்களின் அந்தத் தன்மைதான் இந்த தளத்தில் இயங்கும் பலரைவிட மேலான நிலையில் உங்களை வைத்திருக்கிறது. அதே நேரத்தில் எங்களுக்குப் பக்க பலமாக, தோள்கொடுக்கும் வகையில் செயல்படவும் உங்களால் முடிகிறது. அது பெருமாள்முருகனை சுற்றி எழுந்த சர்ச்களாக இருக்கட்டும், சல்மாவாக இருக்கட்டும் நீங்கள் வளர்த்த, பல அற்புதமான எழுத்தாளர்களின் குரல்களை எங்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள். அவர்களின் மொழிசார்ந்த உரிமைகள் எல்லைகளுக்கப்பால் கடந்து அனைத்து வாசகர்களையும் சென்றடையும் வகையில் உங்கள் செயல்பாடு இருந்தது. உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
தவிர மைதிலி, முகுந்தன், லாவண்யா உள்ளிட்ட அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் காலச்சுவடு குழுவினருக்கும் பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கண்ணன் உங்களை முதலில் நான் பார்த்தது கோவாவில். அதற்கு லியோவுக்கு நன்றி. நண்பர்கள் பலரைப் பார்ப்பது மகிழ்ச்சி. நிச்சயமற்ற இந்தக் காலத்தில் பல புதிய குரல்களைக் கண்டறிந்து எங்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் தொடர வேண்டும் என்று கூறி என்னுடைய வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் கூடுதல் சக்தி கிடைக்க வாழ்த்துகிறேன்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்ரமணியம்
மிக்க நன்றி. காலச்சுவடு என்பதை நீங்கள் உச்சரித்த விதம் மிகவும் அருமை. கண்ணன் அவர்களைப்பற்றி இன்னும் அதிகமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். மீண்டும் நன்றி.
காலச்சுவடோடு தங்கள் அனுபவங்களையும் தங்களுடைய புத்தகங்கள் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை அன்போடு வரவேற்கிறோம். யூடியூப் மூலமாகவும் முகநூல் மூலமாகவும் இணைந்திருக்கக்கூடிய வாசகர்களையும் காலச்சுவடு சார்பாக அன்போடு வரவேற்கிறோம்.
ஓயேஸ் பதிப்பகத்தின் பதிப்பாளர். லிண்டா ஓயேஸ் அவர்களை அன்போடு அழைக்கிறோம். இந்தப் பதிப்பகம் மலேசியாவில் குழந்தைகளுக்கான முக்கியமான பதிப்பகம். மலேசியாவின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக அழகான ஓவியங்களோடு இந்தப் பதிப்பகத்தின் புத்தகங்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. எழுத்தாளர்களையும் குழந்தைகளையும் இணைக்கக்கூடிய பாலமாகவும் கோலாலம்பூரில் ஒயேஸ் புத்தகநிலையத்தை நடத்திவருகிறார் லிண்டா.
பகிர்வுகள் – லிண்டா ஓயேஸ்
(பதிப்பாளர், மலேசியா)
இந்த வாய்ப்புக்கு நன்றி. இந்த நேரத்தில் 25 ஆண்டு நிறைவுக்கும் அற்புதமான இணைய தளத்துக்கும் காலச்சுவடுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முதன்முதலில் கண்ணனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. பிரேங்பர்ட் புக் பேரின் துணைத்தலைவர் கிளாடியா கெய்சர் கண்ணனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அங்கு எங்களுடைய பதிப்பகம் சார்ந்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தக் கிடைத்த இடத்தில் முதலில் கண்ணன் தன்னுடைய பதிப்பகத்தின் சின்னத்தைப் பார்வையில் படும்படிக் கட்டி தொங்கவிட்டது எனக்கு நினைவிருக்கிறது. அது மேலேயிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நான் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக ‘சுபான்’ பதிப்பகத்தின் ஊர்வசி புட்டாலியாவிடம் கண்ணனை அந்தச் சின்னத்தை எடுக்கும்படி கூறமுடியுமா என்று கேட்டேன். ஊர்வசி சிரித்துக்கொண்டே நீங்களே கண்ணனிடம் நேரிடையாகச் சொல்லலாமே என்று கூறினார். நான் இதுவரை சொன்னதில்லை. ஒவ்வோர் ஆண்டும் அந்தச் சின்னம் பரிச்சயமானதாக ஆனது. நான் அதைப் பார்க்க விரும்புவேன். இப்போது எங்களுக்கு என்று பொதுவாக புத்தக ஸ்டாண்ட் இல்லையென்றாலும் எங்களின் நட்பு தொடர்கிறது. காலச்சுவடின் புகழ்பெற்ற எழுத்தாளரான பெருமாள் முருகனையும் கண்ணனையும் நான் கோலாலம்பூரில் விருந்துக்கு அழைத்தேன். நான் பெருமாள் முருகனின் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். காலச்சுவடு பதிப்பில் தமிழின் அற்புதமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறைய இருக்கும். அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. காலச்சுவடின் இன்னும் பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் என்று நம்புகிறேன். எனவே என்னைப்போன்ற பலரால் படிக்கமுடியும். பல ஆண்டுகால வெற்றிகளைக் குவிக்கக் காலச்சுவடை நான் வாழ்த்துகிறேன். உங்களுடைய புத்தகங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து கிளாசிக் என்று சொல்லப்படுகிற சிறந்த புத்தகங்களாக ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்து, என்னைப்போன்ற பலரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிற புத்தகங்களைப்போல வரும் தலைமுறையினரின் வாழ்வைத் தொடும் வகையில் உங்கள் புத்தகங்களும் விளங்க உங்களை வாழ்த்துகிறேன். காலச்சுவடு நீண்ட காலம் இருக்க வேண்டும். வாழ்த்துகள். நன்றி.
இணைப்புரை – சித்ரா பாலசுப்ரமணியம்
எங்களுடன் இணைந்து உங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு லிண்டா ஓயேஸ் அவர்களுக்கு நன்றி. அடுத்ததாக டாக்டர் கிறிஸ்டினா கார்னெட் அவர்களை அழைக்கிறோம். இவர் சீன வரலாறு, பண்பாட்டுத் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் காலச்சுவடு குறித்துப் பகிர்ந்துகொள்வார். இந்தியாவில் வசித்த மூன்று மாதங்களில் அவர் பஞ்சாப், காஷ்மீர், லடாக் போன்ற இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறார். இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்புகளில் பேரார்வம் செலுத்தக்கூடிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர்.
பகிர்வுகள் – கிறிஸ்டினா கார்னெட்
(தலைவர், பிரெஞ்சு புத்தகப் பிரிவு, புது தில்லி)
சித்ராவுக்கு நன்றி. நான் தமிழில் பேசவில்லை என்றாலும், என் பெயரோடு மூன்று மாநிலங்கள் பற்றியும் நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். 1982இல் இந்தியாவுக்கு வந்த என்னுடைய முதல் அனுபவம் மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பதிப்பாளர்கள், திரைத்துறையினர் ஆகியோரோடு நானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காலச்சுவடுக்கு என்னுடைய வாழ்த்துகள். மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போது காலச்சுவடு என்று நான் சரியாகவே உச்சரிக்கிறேன். துவக்கத்தில் இந்தியப் பதிப்பாளர்கள் பிரெஞ்ச் புத்தக அசோசியேசன் ஆகியவற்றிக்கிடையேயான சந்திப்பின்போது என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. பிரஞ்ச் புக் அலுவலகத்தோடு காலச்சுவடின் தொடர்பு பத்தாண்டுகளாக இருக்கிறது. பத்து வருடங்கள், பத்துப் புத்தகங்களுக்கும் மேல். பதினான்கு தலைப்புகள். காலச்சுவடு மிகவும் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிப்பித்திருக்கிறது. ஆல்பர்ட் காம்யு, ஆர்திதே மக்கீன், லே கிளாசியோ உள்ளிட்ட பலர். இந்த நீண்டகால நெருக்கமான உறவு காலச்சுவடு பதிப்பகத்தோடும் கண்ணனோடும் அவர்களோடு நாங்கள் ஒருங்கிணைத்த பல்வேறு நிகழ்ச்சிகளாலும் சாத்தியப்பட்டது. பிரெஞ்ச், இந்தியப் பதிப்புத் துறை பற்றிய நிகழ்ச்சியில் காலச்சுவடும் நாங்களும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். பிரஞ்ச் பதிப்பகங்களின் அசோசியேசன் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி அது. மிகவும் சுவாரசியமான நிகழ்வு. ஏனென்றால் அங்கு இந்தியாவில் உள்ள இந்திய மொழிப் பதிப்பாளர்களின் முக்கியத்துவம் பற்றி எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பிரெஞ்ச் புக் அலுவலகம் காலச்சுவடை இரண்டுமுறை பிரான்சுக்கு அழைத்திருக்கிறது. அது பாரீசில் நடைபெற்ற புத்தகச் சந்தை. கண்ணன், 2022 ஏப்ரலில் நடக்கவிருக்கிற சந்தைக்கும் உங்களை மீண்டும் அழைப்போம் என்று நான் நினைக்கிறேன். ஆந்த்ரே மேக்கின் ‘முன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை’ மொழிபெயர்ப்புக்காகக் காலச்சுவடு பிரான்சு நாட்டின் ‘ரொமேன் ரொலான்’ என்கிற ஒரு விருதையும் பெற்றிருக்கிறது. ஆந்த்ரே மேகின் அவர்களை அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு நான் அழைக்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் டெல்லியில் நடைபெற இருக்கிற புத்தகச் சந்தைக்கு வரமறுக்கிறார்.
நான் ஏன் அடுத்த ஆண்டு என்று குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், 2022 நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆண்டு. நம் அனைவரும் என்று சொன்னால் அது பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமல்ல, அயல்நாட்டுத் தூதர்கள், இருநாடுகளுக்கும் இடையே உரையாடல் நடத்த விரும்புகிறவர்கள் (lovers of interactions) ஆகியோருக்கும் முக்கியமான ஆண்டு. 2022இல் டெல்லியில் நடக்கவிருக்கிற புத்தகச் சந்தையில் பிரான்சு நாடு Guest of Honour. இருபது பிரெஞ்ச் எழுத்தாளர்களையும் சில பதிப்பாளர்களையும் அந்த நிகழ்வுக்கு இந்தியா அழைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். டெல்லியில் மட்டுமல்ல, பிரெஞ்ச் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நான் விரும்புகிறேன். முடிந்தால் அதில் சிலரைத் தமிழ்நாட்டுக்கும் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறேன். பாரீசில் நடக்கவிருக்கிற அடுத்த புத்தகச் சந்தையில் இந்தியா Guest of Honour. இத்தகைய நிகழ்ச்சிகளுக்குக் காலச்சுவடின் யாராவது ஒரு எழுத்தாளரை நாங்கள் அழைக்க விரும்புகிறோம். அது பெருமாள்முருகனாக இருக்கலாம். இந்தியாவின் இத்தகைய Guest of Honour நிகழ்ச்சிக்கான அழைப்பு இரண்டுமுறை தள்ளிப்போடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் புதிய வடிவிலான புத்தகச் சந்தையை நடத்துவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்திய பிரான்ஸ் நாட்டுக்கிடையேயான நட்புரீதியான உறவு துவங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. இருநாடுகளுக்கும் இடையே எழுத்தாளர்களை, பதிப்பாளர்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது முக்கியமானது. இதன்மூலம் 75 ஆண்டுகால நிறைவையும் நாம் கொண்டாடுவோம். பிரெஞ்ச் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிப்பிக்கும் வகையில் இந்திய மொழிகளின் பதிப்பாளர்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம். பிரஞ்ச் புத்தக அலுலகத்தின் முன்னுரிமை இந்தியாவில் உள்ள பிரஞ்ச் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது. ஆனால் அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள இந்திய மொழி எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும்தான். இணையதளத் துவக்கத்துக்காகக் காலச்சுவடுக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
எங்களோடு இணைந்ததற்கு மிக்க நன்றி. இது மகிழ்ச்சியான தருணம். அடுத்ததாக, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக கிளாடியா கெய்சர் அவர்களை அழைக்கிறோம். இவர் சீனாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்தவர். Chinese Studies இல் முதுகலைப் பட்டம் பெற்றவர். சீனா வெளிநாட்டுப் பதிப்பகத்தின் (China Foreign Literature Publishing House) அமைப்பின் ஆசிரியராகவும் பணியாற்றிவர். 1998இல் ஜெர்மனியப் புத்தகத் தகவல் மையத்தை (German Book Information Centre) பெய்ஜிங்கில் அமைத்தவர். 2003இலிருந்து பிராங்க்போர்ட் புக் பேரின் முதுநிலை நிர்வாகியாகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். உங்களின் மதிப்புமிக்க கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அன்புடன் வரவேற்கிறோம்.
பகிர்வுகள் – கிளாடியா கெய்சர்
(துணைத் தலைவர், ஃபிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, ஜெர்மனி)
மாலை வணக்கம். கண்ணன் சுந்தரம் அவர்களுக்கும் பதிப்பகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த 25 ஆண்டு நிறைவுக்கும் இணையதள துவக்கத்துக்கும் வாழ்த்துகள். நான் கிளாடியா கெய்சர். பிராங்க்போர்ட் புக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர், ஆசிய நாடுகள்மீது சிறப்புக் கவனத்தோடு கூடிய எங்கள் நிறுவனம் சார்ந்த வணிக வளர்ச்சிக்கான பொறுப்பாளர். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கண்ணனோடும் காலச்சுவடோடுமான பயணத்தில் இன்றுவரை நானும் ஒரு பங்கு என்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன். உலகம் முழுவதிலும் உள்ள பதிப்பகங்கள் சந்திப்பதற்கான மிகப்பெரிய இடம் பிராங்க்போர்ட் புத்தகச் சந்தை. 1949இலிருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் நகரத்தில் இந்தப் புத்தகச் சந்தை நடக்கும். ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள் நூறு நாடுகளுக்கும் மேலான நாட்டிலிருந்து இந்தச் சந்தையில் பங்குபெறுவார்கள். இந்தச் சந்தைக்கு மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள். அதில் பாதி பேர், புத்தக வணிகம் சார்ந்தவர்கள். எனவே அது ஒரு பெரிய இடம்.
உலகம் முழுவதும் உள்ள பதிப்பகங்களைப்போல, ஒட்டுமொத்த மக்களைப்போல நாங்களும் கொரானோ நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். 2020ஆம் ஆண்டில் அனைவரும் வந்துபோகக்கூடிய அளவில் நேரிடையாகப் புத்தகக் கண்காட்சியை நடத்த முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக ஜெர்மனியில் நிலைமை ஒப்பீட்டு அளவில் சரியானதால் 2021ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் புத்தகக் கண்காட்சியை நேரிடையாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பிராங்க்போர்ட் புத்தக நிறுவனம் புத்தகக் கண்காட்சியை நடத்துவதோடு ஜெர்மனிக்கு வெளியில் வேறுபல செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கிறோம். எனவே 2006இல் இந்தியா ஜெர்மனியின் புத்தகக் கண்காட்சியில் Guest of Honour ஆக இருந்ததற்குப் பிறகு, டெல்லியில் ஜெர்மனி புத்தக அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம்.
நாங்கள் செய்யும் பல வேலைகளிடையே Frankfort Book Felloship Programஐ ஒருங்கிணைக்கிறோம். திறமைவாய்ந்த இளம் பதிப்பாளர்களை ஜெர்மன் பதிப்பகத் துறை சார்ந்து கற்றுக்கொள்ளவும் தமது பதிப்பகத்துறை பற்றிய தகவலை எங்களோடு பரிமாறிக்கொள்ளவும் பிராங்க்போர்ட்க்கு நாங்கள் அழைக்கிறோம். 2007இல் ஒரு இந்திய மொழி ஒரு பதிப்பகங்களிலிருந்து முதன்முதலில் இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிராங்க்போர்ட் வந்தது கண்ணன் சுந்தரம்தான். அன்றிலிருந்து பிராங்போர்ட் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு வருடமும் அவர் கலந்துகொள்கிறார். அதன்மூலம் பல மொழிபெயர்ப்பு உரிமைகளை அவர் பெற்றுள்ளார். ஏறக்குறைய இருபது உலக மொழிகளிலிருந்து காலச்சுவடு மொழிபெயர்த்துள்ளது. காலச்சுவடு பதிப்பித்த புத்தகங்கள் சிலவற்றையும் அந்நிய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியையும் கண்ணனால் செய்ய முடிந்திருக்கிறது. அவற்றுள் பெருமாள்முருகனின் புத்தக மொழிபெயர்ப்பு உரிமை ஜெர்மனி, செக்குடியரசு, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீன நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கண்ணனின் பெரிய வெற்றி. இந்திய மொழிகளின் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட வெளிநாட்டுப் பதிப்பகத்தார்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். ஏனென்றால் இந்திய மொழிகளிலிருந்து மொழி பெயர்ப்பவர்கள் வெளிநாடுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அம்பை, ஸர்மிளா ஸெய்யித், சல்மா போன்ற பிற எழுத்தாளர்களின் புத்தக மொழிபெயர்ப்பு உரிமையையும் இத்தாலி, பிரான்சு, அல்பேனியா போன்ற சர்வதேசப் பதிப்பக நிறுவனங்களுக்கு விற்பதில் கண்ணன் பெரும் பங்காற்றிவருகிறார்.
நான் ஏற்கெனவே சொன்னதைப்போல உலக நாடுகள் பலவற்றிலிருந்து பதிப்பக நிறுவனங்களை இந்தச் சர்வதேச சமூக நிகழ்வுக்கு அழைப்பதில் பிராங்க் போர்ட் புக்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த முயற்சி காலச்சுவடுக்கும் கண்ணனுக்கும் உதவியது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். உலகச் சமூகம் பன்முகத்தன்மை பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய மொழிகளின் இன்னமும் பல எழுத்தாளர்களின் அதிக படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுச் சர்வதேச சமூகத்துக்கு அளிக்கப்படும் என்று நம்புகிறேன். இந்தியாவுக்கு என்று துடிப்பான பண்பாடு இருக்கிறது, பலதரப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழ் அல்லது பிற இந்திய மொழி ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டு நூல்களைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அது என்னால் இயலாத காரியம். எனவே மொழிபெயர்ப்பாளர்களின் கடின உழைப்பையே சார்ந்திருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்களது சாதனைகளுக்காக உங்களை வாழ்த்துகிறேன். நாம் கூடிய விரைவில் நேரில் சந்திப்போம் என்று நம்புகிறேன். இந்தச் சிறப்பு நிகழ்வில் பங்கேற்க வைத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
கிளாடியா கெய்சருக்கு நன்றி. அடுத்ததாக சிக்த்சென்ஸ் பதிப்பகத்தின் பதிப்பாளரும் செயலாளருமான கா.சு. புகழேந்தி அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம் மிக முக்கியமான புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறது. அதன் புத்தக வரிசை மிகவும் பாராட்டுக்குரியதாகவும் வாசகர்களின் வரவேற்பு அபரிமிதமானதாகவும் உள்ளது. பபாசியினுடைய பல பொறுப்புகளில் புகழேந்தி முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்; பணியாற்றியிருக்கிறார். தற்காலத்தில் இருக்கும் சூழலைக் கணக்கில்கொண்டு மெய்நிகர் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்ற பணியை முன்னெடுத்துவருகிறார். பல முக்கியமான முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். அவரை வரவேற்கிறோம்.
பகிர்வுகள் – சிக்த்சென்ஸ் புகழேந்தி
(பதிப்பாளர், சிக்ஸ்த் சென்ஸ். சென்னை)
காலச்சுவடு பதிப்பகத்தின் இணையதளத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி.
காலச்சுவடு தன் இருபத்தைந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. காலச்சுவடு என்றாலே சுந்தர ராமசாமியும் அவர் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’யும் ‘ஜே.ஜே. சில குறிப்பு’களும்தான் நினைவுக்கு வரும்.
படைப்பாளர்கள் வெற்றிகரமாகப் பதிப்புத் தொழிலை நடத்தியதாக வரலாறு இல்லை. சு.ரா அவர்களும் அதற்கு விலக்கல்ல. பதிப்பு, எழுத்துத் துறைகளில் பெரும்பாலும் அடுத்த தலைமுறையினர் கால்பதிப்பதில்லை. அபூர்வமாக அது நிகழும்போது தொழிலை அணுகும் முறையும் பார்வையும் வெவ்வேறானவையாக இருக்கும். மூத்தவர்கள் தலையீட்டால் பல சிக்கல்கள் ஏற்படும்.
என் அப்பா 1968இல் பூங்கொடிப் பதிப்பகத்தைத் தொடங்கியதிலிருந்து அவரோடு இணைந்து பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவத்தால் இதைச் சொல்கிறேன். என் மகன் மூன்றாவது தலைமுறைப் பதிப்பாளர். அவரது பதிப்பு உலகம் குறித்த பார்வை விசாலமானது.
இங்கே கண்ணன் தனித்துவத்துடனும் தொழில்முறை நேர்த்தியுடனும் செயல்பட்டுப் பதிப்புத் துறையில் சாதனைகள் படைத்ததால் அதை அவரிடம் விட்டுவிட்டு சுந்தர ராமசாமியால் தமிழுக்கு அதிக அளவில் பங்களிக்க முடிந்தது.
என் தந்தை பதிப்பாளர் என்பதால் படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், புத்தகங்கள் என்ற வட்டத்திற்குள்தான் எங்கள் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கும். பதிப்புத் தொழில் அதிக நேரத்தைக் கோருகிற ஒரு தொழில். குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவரது அனைத்து முயற்சிகளிலும் துணைவியார் துணைநிற்பது இவருக்கு மிகப்பெரிய பலம். நாகர்கோவில் புத்தகக் காட்சியின்போது அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அப்போதும் வீட்டை ஒட்டியிருந்த காலச்சுவடு அலுவலகத்தில் இருந்தபோதும் தமிழ்ப் பதிப்புலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இத்தொழிலில் தடம்பதிக்க விரும்பும் எண்ணற்ற இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறவராக – பதிப்புத் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறவராக கண்ணன் இருக்கிறார். இத் தொழிலில் இது மிகவும் அபூர்வம்.
பெருந்தொற்றுக் காலத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தின் முரளி கண்ணதாசனும், என் மகன் வானவில் புத்தகாலயம் கார்த்திகேயனும் Virtual Book Fair என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தபோது உற்சாகத்துடன் பாராட்டியதுடன் அது விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான உதவிகளையும் செய்துவருகிறார்.
நான் பபாசியின் செயலாளராக நான்கு ஆண்டுகள் பொறுப்பிலிருந்தபோது சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெறத் தன் தொடர்புகளின் மூலம் உதவினார். காலச்சுவடு பணியும் கண்ணன் பணியும் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
சிக்த்சென்ஸ் புகழேந்திக்கு நன்றி. லியோ பெர்ணான்டஸ் கோவாவைச் சார்ந்தவர். 2006ஆம் ஆண்டு ‘டோகியஸ்’ என்ற இணைய புத்தகக்கடையைத் தொடங்கியவர். ‘சினமோண் டீல்’ பதிப்பகத்தின் உரிமையாளர். படைப்பாக்கத்திறன்மிக்க தொழில்முனைவோர் (Creative Entreprenour) என்ற ஒரு விருதை பிரிட்டிஷ் கவுன்சில் அவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. மிக முக்கியமாக பப்ளிசிங் நெக்ஸ்ட் – Publishing Next என்ற பதிப்புத் துறை சார்ந்த கருத்தரங்கைத் தொடர்ந்து பத்துவருடங்களுக்கும் மேலாக கோவாவில் நடத்திவருகிறார். அவரை வரவேற்கிறோம்.
பகிர்வுகள் – லியோ ஃபெர்னாண்டஸ்
(பதிப்பாளர், பப்ளிஷிங் நெக்ஸ்ட் இணை நிறுவனர், கோவா)
சித்ராவுக்கு நன்றி. கண்ணன், மைதிலிக்கு இந்நிகழ்ச்சியில் பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி. காலச்சுவடு குழுவினருக்கு வாழ்த்துகள். இன்னமும் மேலதிக ஆண்டுகள் இந்தப் பதிப்புத் துறையில் காலச்சுவடு இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கண்ணனையும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பெங்களூரில் நடந்த ஒரு கருத்தரங்கில்தான் முதலில் தெரிந்துகொண்டேன். நான் அங்கு பேச அழைப்பட்டேன். அங்கு கண்ணனும் தமிழ் பதிப்பகத் துறை பற்றிப் பேசினார். அவரது உரையில், தமிழ்ப் பதிப்புத் துறை பற்றிய ஒரு பரந்த பார்வை கிடைத்தது. என்னையும் என் போன்ற மற்றவர்களையும் தமிழ் பதிப்புத் துறைக்குக் கண்ணன் அறிமுகப்படுத்தினார். ஆங்கிலப் பதிப்பகத் துறையில் இருப்பதுபோல காலச்சுவடு எழுத்தாளர்களுடன் முறையான ஒப்பந்தங்களைப் போடுவதும், ராயல்டி தொகையை முறையாகத் தருவதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த முறையை ஆங்கிலப் பதிப்புத் துறையில் மட்டுமே பார்த்திருந்தவர்களுக்கு ஒரு இந்திய மொழிப் பதிப்பாளர் ராயல்டி தொகையை முறையாகத் தருவதைப் பார்ப்பது நல்ல அம்சமாக இருந்தது.
பெங்களூர் கருத்தரங்கு நடந்து சில வருடங்களுக்குப் பிறகு 2011இல் பப்ளிசிங் நெக்ஸ்ட் கருத்தரங்கை நாங்கள் ஒருங்கிணைத்தோம். காப்புரிமை (Copy right) பற்றிப் பேசவருமாறு நாங்கள் கண்ணனை அழைத்தோம். ஒப்பந்தங்களைப் போடும்போதும், உரிமைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும்போதும் காலச்சுவடு எழுத்தாளர்களுக்கு முதலிடம் கொடுப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். இது ஒரு நல்ல வழிகாட்டும் கொள்கையாக இருப்பதை உணர்ந்தேன். நான் கோவாவின் ஒரு சிறிய பகுதியிலிருந்து வருகிறேன். அங்கு அதிகாரப்பூர்வ மொழி கொங்கணி. மேற்குக் கடற்கரைச் பகுதியில் இந்த மொழியைப் பேசுகிறார்கள். இந்தியாவில் வெகுசிலரே பேசும் சில மொழிகளில் கொங்கணியும் ஒன்று. கூடுதல் சிக்கல் என்னவென்றால், அது ஐந்து வகையாக எழுதப்படுகிறது. பல பேச்சுவழக்குகள் உள்ளன. சில நல்ல இலக்கியங்களைக் கொங்கணியில் மொழிபெயர்த்தால் நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று நம்புகிறேன்.
பிராங்போர்ட் புத்தகக் கண்காட்சியில் கண்ணன் கலந்துகொண்டு கருத்துகளை / எழுத்துக்களை பரிமாற்றிக்கொள்ளும் பணியைச் செய்வது பாராட்டுக்குரியது. உயர்ந்த தரமான இலக்கியங்கள் பதிப்பிக்கப்படுவதை உறுதிசெய்யும் அதே நேரத்தில், காலச்சுவடு பதிப்பகம் அட்டைப்பட உருவாக்கம் உள்ளிட்ட புத்தக உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதை அனைவரும் கவனிக்க வேண்டும். இந்தியப் பதிப்பாளர்களில் வெகுசிலரே இவ்வாறு செய்கிறார்கள். குறிப்பாக வெகுசில இந்தி அல்லாத பிற மொழி பதிப்பாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். 2018இல் பப்ளிசிங் நெக்ஸ்ட் கருத்தரங்கில் அந்த ஆண்டின் சிறந்த பதிப்பாளர் என்ற விருதை காலச்சுவடு பெற்றது. மிக உயர்ந்த தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அத்தகைய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்தும் பதிப்பகம் காலச்சுவடு. காலச்சுவடு குழுவினர், கண்ணன், மைதிலிக்குப் பதிப்பகத்துறையில் நீண்டகாலம் நீடிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகிர்வுகள் - தமிழ்ப்பிரபா
(எழுத்தாளர், சென்னை)
காலச்சுவடு பயணத்தில் முத்தாய்ப்பான ஒரு தருணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நான் காலச்சுவடு இதழை ஒரு பத்து வருடங்களாக வாசித்துவருகிறேன்.
விளிம்புநிலை எழுத்துக்களைப் பொறுத்தவரை புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் காலச்சுவடு கொடுக்கிற முக்கியத்துவம் மிகவும் தனித்துவ மானது. பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள், ஈழத்தமிழர்கள் பற்றிய படைப்புகள் தொடர்ந்து புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் காலச்சுவடிலிருந்து வெளிவரும்போது அக்குரல்களுக்கு மிகமுக்கிய மானதொரு இடம் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன்.
காலச்சுவடு பதிப்பிக்கும் புத்தகங்களில் மட்டுமல்லாது காலச்சுவடு மாத இதழிலும் இந்த வகைமை பிரதிபலிக்கும். குறிப்பாக, தலையங்கம். ஒரு பத்திரிகையின் தலையங்கம் அவர்களுடைய அரசியலைத் தீர்மானிப்பது. அந்தவகையில் காலச்சுவடுத் தலையங்கத்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமூகத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தால் அதுகுறித்தான காலச்சுவடின் பார்வை, குறிப்பாக விளிம்பு நிலையினரின் பிரச்சினைகளில் அவர்களுடைய பார்வை என்ன என என்னைத் தொகுத்துக்கொள்வதற்கு நிறையச் சமயங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அரசியல், இலக்கியம், திரைப்படம் எனச் சமூகம்சார்ந்த விஷயங்களில் ஒவ்வொரு வாசகருக்கும் குறிப்பாக, எனக்கும் ஒரு பார்வையை அது அளித்திருக்கிறது.
ஒரு பதிப்பகம் எப்படித் தரமானதாக இருக்க வேண்டும் என்று மற்றப் பதிப்பகங்களுக்குக் காலச்சுவடு முன்னோடியாக உள்ளது. உதாரணமாகப் புத்தக ஆக்கத்திற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை. அந்தப் புத்தகத்தின் அட்டைவடிவமைப்புத் தொடங்கி படைப்பைச் செழுமையாகக் கொண்டுவரச் செய்யும் வேலைகள், அதை எல்லாவித வாசகர்களுக்கும் கொண்டுசேர்க்கிற பணிவரை என அத்தனையையும் தொடர்ந்து செய்கிறார்கள். புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிக்கும்போது இன்பமான ஓர் உணர்வு ஏற்படும் வண்ணம் அந்த நூலாக்கம் அமைந்திருக்கும்.
தங்களிடம் புத்தகம் பதிப்பிக்கும் எழுத்தாளர்களை மட்டுமல்ல அனைத்து எழுத்தாளர்களையும் காலச்சுவடு பதிப்பகம் அணுகுகிற முறை என்னளவில் மரியாதைக்குரிய விஷயமாகவே எண்ணுகிறேன். எனக்குக் கொடுக்கப்படுகிற ராயல்டிதொகையாக இருக்கட்டும், எனது முதல் நாவல் பணிகளிலாகட்டும் அனைத்திலும் அவ்வாறே. நாவல் வெளிவந்த முதல் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் வாசகர்களைச் சந்தித்து உரையாடிக் கையெழுத்து இடச்சொன்னார் கண்ணன். அதைச் சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. மிக நெகிழ்ச்சியான தருணம்.
எனது நாவலைக் காலச்சுவடில் வெளியிட விரும்பியபோது அவர்களுடைய தொடர்பு எண்ணை இணையத்திலிருந்து எடுத்து அழைத்து என் பெயர் பிரபாகரன்; நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்; அதை உங்களால் வெளியிட முடியுமா என்று கேட்டேன். நாவலை அனுப்புங்கள் படித்துவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். இருதரப்புக்கும் முன்பின் அறிமுகமே கிடையாது. இப்படித்தான் ‘பேட்டை’ நாவல் வெளிவந்தது. அதற்கும் முன் ஒருசில பதிப்பகங்களை அணுகியபோது ஏற்பட்ட அனுபவத்தோடு ஒப்பிடும்போது காலச்சுவடு அனுபவத்தை மிக முக்கியமாகக் கருதுகிறேன்.
தமிழிலும் தமிழுக்கு வெளியே உள்ள மொழிகளிலும் ஒரு படைப்பை மிக நேர்த்தியாகக் கொண்டுசேர்க்கிறார்கள். என்னுடைய நாவல் பரவலாக வாசிப்பதற்கும் கிடைப்பதற்கும் நூலின் உள்ளடக்கத்தைத் தாண்டிக் காலச்சுவடும் ஒரு முக்கியக் காரணம். பொதுவாகக் காலச்சுவடு தங்கள் படைப்புகளை ஆங்கிலத்திற்கும் பிறமொழிகளுக்கும் மொழிபெயர்ப்புக்கு அனுப்புவதும் பிற உலக மொழி படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதும் சிறந்த பணியாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
பதிப்பகத்தின் மிகமுக்கியமான அம்சம் ஆய்வுநூல்கள் ஆகும். ஸ்டாலின் ராஜாங்கம், ஆ.இரா. வேங்கடாசலபதி, பழ. அதியமான், அ.கா. பெருமாள் என்று இன்னும் பல ஆய்வாளர்களின் நூல்களைப் பரவலாக வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை மிக விரிவாக ஆய்வுசெய்கிற ஒரு போக்கில் தமிழ்ச் சூழலில் காலச்சுவடு மிக வலுவாகத் தடம் பதித்திருக்கிறது.
காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை காலச்சுவடுக்கு உண்டு. இந்த இணையதளம் செறிவாகத் தொடங்கப்பட்டதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பதிப்பகம் இன்னும் பல முக்கியமான ஆய்வுகளைக் கொண்டுவர வேண்டும். இளம் படைப்பாளிகளுக்கு ஒரு பாதையை வகுத்துத் தர வேண்டும். காலச்சுவடு பதிப்பகத்திடம் நான் வைக்கும் இன்னொரு வேண்டுகோள், இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் சமூகத்திற்கும் புனைவுகள், அபுனைவுகள் என நூல்கள் கொண்டுவருவதுபோலச் சினிமா என்ற பெருங்கலையையொட்டிய நூல்களையும் வெளியிட வேண்டும். சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகளை நூலாக வெளியிட வேண்டும். நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டதை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன். இந்த இருபத்தைந்தாவது ஆண்டில் காலச்சுவடின் பன்முகப்பார்வை எல்லாவிதமான சமூகங்களையும் உள்ளடக்கியதாக எப்போதும்போலத் தொடர வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
காலச்சுவடு எப்படி தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுவதையும் அடக்கியது என்றும், ஆய்வு சார்ந்தும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தும் எப்படி பல்வேறு வகைப்பட்ட குரலை ஒலிக்கும்வகையில் சிறப்பான பணியைச் செய்துகொண்டிருக்கிறது என்ற முக்கியமான புள்ளியை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் தமிழ்பிரபா, உங்களுக்கு எங்கள் நன்றி.
அடுத்ததாக நாம் அழைப்பது எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் அவர்களை. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஊக்கம் தரக்கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரர். காரணம் கட்டுப்பாடுகளையும் அழுத்தங்களையும் எதிர்த்து எழுந்த எழுத்துகள் அவருடையவை. கவிதை, நாவல், கட்டுரை எனப் பல தளங்களில் தம்முடைய செயல்களை விரித்துக்கொண்டிருப்பவர். சமூகச் செயல்பாட்டாளர். எரிமலைக்குழம்பு எடுத்து எழுதுகிறாரோ என்று நாம் நினைக்கக்கூடிய அளவுக்கான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
பகிர்வுகள் – ஸர்மிளா ஸெய்யித்
(எழுத்தாளர், செயற்பாட்டாளர், இஸ்தான்புல்)
நன்றி சித்ரா. அனைவருக்கும் வணக்கம். காலச்சுவடு வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பதில் உண்மையில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன். எழுத்தாளராகத் தன்னை உருவாக்கியதும் வாசகனாக உருவாக்கியதும் காலச்சுவடுதான் என்ற விடயத்தை ஸ்ரீதரன் சொன்னார். அது எனக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன். என்னுடைய பயணத்தில் நான் மிகச்சிறந்த வாசகியாகவோ அதற்கான பின்புலம் கொண்ட சூழலிலிருந்தோ வந்த ஒரு பெண்ணல்ல. காலச்சுவடுடான எனது பயணம் 2012இல் என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பான ‘சிறகுகள் முளைத்த பெண்’ என்ற புத்தகத்திலிருந்து தொடங்கியது. எனக்குக் கிடைத்த ஒருசில புத்தகங்கள் சல்மா, சுகிர்தராணி, அம்பை, அனார் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களாகத்தான் இருந்தன. என்னுடைய புத்தகத்தை நான் பதிப்பிப்பதாக இருந்தாலும் காலச்சுவடு பதிப்பகம் மூலமாகத்தான் அந்தப் புத்தகம் வர வேண்டும் என்று ஆசை இருந்தது. 2011இல் காலச்சுவடு இதழிலிருந்து கிடைத்த ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு என்னுடைய கவிதைகள் சிலவற்றை அனுப்பி இவற்றைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். யாருடைய சிபாரிசும் இல்லாமல், எந்தவிதப் பின்னணியும் இல்லாமல். என்னுடைய மின்னஞ்சல் உள்பெட்டிக்கு வந்த பதில் இன்னமும் என்னிடம் இருக்கின்றது. கவிதைகளைப் பதிப்பிப்பதாக அந்தப் பதில் வந்தது. அன்றிலிருந்துதான் காலச்சுவடுடனான என்னுடைய பயணம் தொடர்ந்திருக்கிறது. இதுவரை இரண்டு நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், ‘உயிர்த்த ஞாயிறு’ என்ற அனுபவப் பதிவு வெளிவந்திருக்கின்றன. இதில் ‘உம்மத்’ நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் நடந்த பல புத்தகத் திருவிழாக்களில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
சொல்லப்போனால் காலச்சுவடுடனான என்னுடைய பயணம் துவங்கியதிலிருந்து அது என்னை நிறைய உயரங்களுக்கு அழைத்துப்போனது மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வாசிப்பை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. நான் முதலாவதாக என்னுடைய ‘உம்மத்’ நாவலை அனுப்பிவைத்தபோது அந்த நாவல் உண்மையாகவே ஒரு பெரிய திருத்தத்தை வேண்டி நின்றது. முதலாவது நாவலை அனுப்பியபோது அதை எனக்கு எப்படி சுட்டிக்காட்டினார்கள் என்பது இன்னமும் நினைவிருக்கிறது. கண்ணன் ‘என் பெயர் சிவப்பு’ நாவலை படித்துப் பார்க்கச்சொல்லி எனக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்திருந்தார். என்னுடைய நாவல் என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நானே புரிந்துகொள்ளச் செய்தது அந்த வாய்ப்பு. எல்லா பதிப்பாளர்களாலும் இவ்வளவு நுணுக்கமாக நுட்பமாக அதனை உணர்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. .
ஒரு படைப்பாளியின் நோக்கம் அவருடைய படைப்பு வாசகர்களுக்குச் சென்று சேர்வதுதான். அதனைக் காலச்சுவடு மிகச்சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. முறையான உடன்படிக்கை போடுவது, ஒவ்வோர் ஆண்டும் ராயல்டியைச் சிறப்பாகச் செலுத்துகின்ற பதிப்பகமாகக் காலச்சுவடு இருக்கின்றது. அதன் பயன்களை நான் பெற்றிருக்கின்றேன். புத்தகங்களின் நேர்த்தி, அதன் வடிவமைப்பு, அட்டைப்படத்துக்குக்கூட நாங்கள் விரும்புகின்ற ஓவியர்களிடமே அதனைத் தந்து அதற்கான செலுத்தவேண்டிய தொகையை அவர்களே செலுத்தி அவ்வளவு நுட்பமாக, கவனம் எடுத்து அழகாக வெளியீடுவரையிலும் கொண்டுசெல்லும் சிறப்பான பணியை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். என்னுடைய ‘சிறகுகள் முளைத்த பெண்’ புத்தகத்துக்கு அறிமுக நிகழ்வு ஒன்றை நான் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தேன். அது தவிர என்னுடைய புத்தகங்களுக்கு எந்த அறிமுக நிகழ்வையும் இதுவரை நான் நடத்தியதில்லை. இன்றுவரை என்னுடைய புத்தகங்களுக்கான அறிமுகக் கூட்டங்கள், விமர்சனக் கூட்டங்கள் வாசகர்களின் கருத்துகளைக் கேட்கக்கூடிய விதமான நிகழ்வுகள் உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் காலச்சுவடு பதிப்பகமே செய்துகொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் இதுவரையில் பதிக்கப்பட்ட என்னுடைய புத்தகங்களுக்கு நான் ஒரு பைசாவும் செலவு செய்ததில்லை. எங்களுக்கு எங்களுடைய, ஒரு எழுத்தாளரின், படைப்பாளியின் பெறுமானம் என்ன என்பதை உணர்த்துகின்ற விதமாகச் செயல்படுகின்ற பதிப்பகமாக, படைப்பாளிக்குத் தரவேண்டிய மரியாதையையும் முழுமையாகத் தருகின்ற பதிப்பகமாகக் காலச்சுவடைப் பார்க்கின்றேன்.
இவை அனைத்தையும்விட ஒரு எழுத்தாளர் சர்ச்சைகளைச் சந்திக்கும்போது அவர்களுடன் நிற்பது, அதற்குரிய தைரியத்தையும் துணிவையும் தருவது, நாங்கள் தனியாக இல்லை என்று உணர்த்துவதை முக்கியமான ஒரு விடயமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. எங்களுக்குத் தெரியும், சல்மா, பெருமாள்முருகன் போன்றோர் எதிர்ப்புகளை எதிர்கொண்ட விதம். நீதிமன்றம்வரை சென்று பெருமாள்முருகனுடைய கருத்துச் சுதந்திரத்துக்காகக் காலச்சுவடு எவ்வாறு இணைந்திருந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அதேபோன்று என்னுடைய சமூகத்திலிருந்து நான் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த காலத்திலும் எல்லாவகையிலும் தனிப்பட்ட ரீதியாகவும், தொழில்முறை ரீதியாகவும் எனக்குத் துணையாக ஒரு பதிப்பகம் நின்றது. பதிப்பகம் என்று இங்கே நான் குறிப்பிடும்போது அது தனிநபர் சார்ந்த ஒன்றல்ல, அது ஒரு குழுச் செயல்பாடு. 2012லிருந்து 2020ஆம் ஆண்டுவரையில் பலமுறை நான் காலச்சுவடு அலுவலகத்துக்குச் சென்றிருக்கின்றேன். கண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கின்றேன். காலச்சுவடு அலுவலகத்தின் அமைப்பு, அதனுடைய நிர்வாக முறைகள், அவர்கள் செயல்படும் முறை, அலுவலர்களின் நலன்களில் காட்டக்கூடிய அக்கறை இவை எல்லாமும் காலச்சுவடு வளர்ச்சியில் பங்காற்றிவரும் விடயம் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.
இவ்வளவு அழகான உறவு எனக்குக் காலச்சுவடுடன் இருந்தாலும்கூடப் பொதுவெளியில் பலவிதமான விமர்சனங்களை நான் சந்திப்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்ற விடயமாக இருக்கின்றது. காலச்சுவடு இந்துத்துவ மேலாதிக்கத்தோடு நடக்கின்ற பதிப்பகம் என்று சொல்லியும் நான் இஸ்லாமியப் பெண்ணாக இருக்கின்றபடியால் இஸ்லாமிய வெறுப்பாக எங்களுடைய உறவைப் பார்க்கின்ற நிலை பொதுச் சூழலில் நான் அடிக்கடி சமூக வலைதளங்களில் எதிர்கொள்கின்ற விடயமாக இருக்கின்றது. அது உண்மையாகவே சுயமரியாதையும் கௌரமும் சுயவிழிப்பும் உள்ள ஒரு பெண்ணான என்னை வெறுப்பதாக, ஒரு பெண் வெறுப்பாகத்தான் நான் பார்க்கின்றேன். நான் முன்பே சொல்லியிருந்ததைப்போல, காலச்சுவடுடனான என்னுடைய உறவு 2012லிருந்துதான் துவங்குகிறது. ஆனால் பெண்ணுரிமைசார்ந்த என்னுடைய செயல்பாடுகளை நான் 2001லேயே தொடங்கிவிட்டேன். எப்பொழுது நான் பத்திரிகைத் துறையில் காலெடுத்து வைத்தேனோ, அப்போதிலிருந்தே ஓர் இஸ்லாமியப் பெண்ணாக, மதக் கலாச்சாரம் உள்ள சமூக அமைப்பிலிருந்து வந்த ஒரு ஊரில் நான் எப்படியாக வாழவிரும்பினேன், எப்படி வளர்ந்தேன் என்பதிலிருந்து என்னுடைய சுயவிழிப்பும் சுயகௌரவமும் அடையாளத்துக்கான அந்தப் பயணம் துவங்குகின்றது.
என்னுடைய படைப்புகள் என்று பார்க்கும்போது ‘உம்மத்’ நாவல், ‘உயிர்த்த ஞாயிறு’ இரண்டுமே சர்ச்சைக்குரிய விடயங்களைப் பேசுகின்ற படைப்புகளாக இருக்கின்றன. உம்மத் நாவல் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுடைய பாடுகளையும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பும் மத அடிப்படைவாதமும் எவ்வாறு பெண்களை ஒடுக்குகின்றது என்பதையும் பேசுகின்ற நாவலாக அது இருக்கின்றது. அதே நேரம் உயிர்த்த ஞாயிறு அனுபவப் பகிர்வு என்பது மத அடிப்படைவாதம் எவ்வாறு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் பெண்களை ஒடுக்குவது, அதனுடைய இயங்குதளம், இயங்கு நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பேசுகின்ற அனுபவப் பகிர்வாக 2019 ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகுள்ள அனுபவங்களின் தொகுப்பாக அப்புத்தகம் இருக்கின்றது. இந்த இரண்டு புத்தகங்களிலும் எடிட்டிங் மிக முக்கியமான பணி. எடிட்டிங்கை நாங்கள் தவிர்க்க முடியாது. இந்தப் புத்தகங்களின் செம்மையாக்கத்தில் என்னுடன் பயணித்தது பதிப்பக ஆசிரியராக அப்போது இருந்த ஷாலினி ஜெயக்குமார், இதழ் ஆசிரியராக இருக்கும் சுகுமாரன் அவர்களையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் என்னுடைய படைப்புகளில் எவ்வாறு எழுத வேண்டும் என்பதிலோ எதை நீக்க வேண்டும் என்பதிலோ எந்தவிதமான திணிப்புகளையும் செய்ததில்லை. நான் எதை எழுத விரும்புகின்றேனோ அதைத்தான் நான் எழுதியிருக்கின்றேன். காலச்சுவடில் புத்தகங்களை மட்டுமல்ல, கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றேன். அவை எல்லாவற்றிலும் திருத்தங்கள் வந்து ஒரு திணிப்பாகவோ கட்டாயமாகவோ ஒருநாளும் இருந்ததில்லை. மிகவும் சுதந்திரமான உணர்வுடன்தான் காலச்சுவடுடன் நான் பயணிக்கின்றேன். தமிழ்ப்பிரபா தன்னுடைய உரையில் மிக அழகாகச் சொன்னதைப்போல விளிம்பு மக்களின் கருத்துகளுக்குக் காலச்சுவடில் எத்தகைய இடம் இருக்கின்றது என்ற அந்த உணர்வு எனக்கு இருக்கின்றது. அதனால்தான் காலச்சுவடு பதிப்பகத்தோடு தொடர்ந்து பயணிக்க முடிகின்றது என்று நினைக்கின்றேன். இந்த முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் எனக்கும் பேச வாய்ப்பளித்ததற்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
நன்றி ஸர்மிளா ஸெய்யித். மனம் திறந்த பேச்சு. எப்படி எழுத்துக்களில் தீப்பொறி பறக்குமோ அப்படியே பேச்சிலும் பறந்தது. காலச்சுவடுடன் உங்களுக்கு இருக்கும் உறவை மனம் திறந்து எங்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள். நன்றி.
உயர்மிகு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களை அன்போடு அழைக்கிறோம். சிவில் உரிமைகள்சார்ந்த வழக்குகள் பலவற்றை வழக்கறிஞராக இருந்தபோது அவர் முன்னெடுத்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரைப் பிரிவில் கூடுதல் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதைவிட முக்கியமாக அவர் மிகச்சிறந்த வாசகர். புத்தகங்களின் ஆர்வலர். பல புத்தகங்களையும் படித்துவிட்டுப் புத்தக ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதைப் பலபேர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புத்தக ஆர்வலரை இந்த நிகழ்ச்சியில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நிறைவுரை – ஜி.ஆர். சுவாமிநாதன்
(உயர் நீதிமன்ற நீதிபதி, மதுரை)
அனைவருக்கும் என்னுடைய இனிய வணக்கங்கள். நீதிபதிகள் பிரபலங்கள் அல்ல. டார்ச் லைட் அடித்துத்தான் எங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் பிரபலமாக வேண்டும் என்கிற சபலமும் எங்களுக்கு வந்துவிடக்கூடாது; ஏனென்றால் எங்களுடைய பணி அது மாதிரியானது. அதனால் ஒரு சுய அறிமுகம் கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். நான் நீதிபதியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் என்னுள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நிலையான தன்மை இருக்கிறது. என்னவென்றால், என்னுடைய நீதிமன்றத்தில் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக எந்த வழக்கு வந்தாலும் அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஆறாம் அறிவு அவசியம் கிடையாது.
ஆறே ஆறு உதாரணங்களைச் சொல்கிறேன். ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல் கட்சித் தொண்டர்களைக் குரங்குகளாகச் சித்திரிக்கிறார். அவர்கள்மீது, அந்தப் பத்திரிக்கைமீது குற்றவியல் வழக்கு பாய்கிறது. என்னுடைய நீதிமன்றத்துக்கு அந்த வழக்கு வந்தபோது, ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு மற்றவர்களை அப்படிக் கேலியாகச் சித்திரிக்க, கண்டிக்க அடிப்படை உரிமை (Right to lampoon others) இருக்கிறது என்று தீர்ப்பு சொன்னேன். சந்தியா ரவிசங்கர் என்கிற ஒரு பத்திரிகையாளர் ஒரு புலனாய்வுக் கட்டுரையை எழுதுகிறார். வி.வி.மினரல்ஸ் என்கிற ஸ்தாபனம் அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தபோது ஒரு பத்திரிகையாளரின் உரிமை எந்த அளவுக்குப் போகலாம், அதை நீதிமன்றம் எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். கி. ராஜநாராயணன், மாபெரும் எழுத்தாளர், அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பிரயோகிக்கப்பட்டபோது அதை ரத்து செய்திருக்கிறேன். எல்லாவற்றையும்விட நான் தனிப்பட்ட முறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, சிஏஏவை ஆதரிக்கிறவன். ஆனால் சட்டத்தைக் கண்டிப்பதற்கு எப்பொழுதெல்லாம் என்னுடைய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருக்கிறார்களோ அதற்கான அத்தனை மனுக்களையும் அனுமதித்திருக்கிறேன். பிறகு, போன கொரானா காலத்தில் தப்லீக் ஜமாத் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள்மீது வழக்குபோட்டு, கைது செய்தபோது அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து அவர்கள் தங்களின் தாய்நாட்டுக்கு திரும்பப் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். திருநங்கைகளின் திருமண உரிமையை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு பிரயாணத்தில் தொடர்ச்சியாக நான் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் கண்ணன்தான். இதை நான் ரொம்பப் பெருமையாகவும் சந்தோஷத்துடனும் நன்றியோடு பகிர்ந்துகொள்வேன். ஏனென்றால் பெருமாள்முருகனுக்கு ‘மாதொருபாகன்’ பிரச்சினை வந்தபோது அவருடன் என்னை அனுப்பிவைத்தார். அந்த அனுபவம் இருக்கிறது இல்லையா, அந்த அடித்தளம்தான் என்னுடைய நீதி சார்ந்த பார்வையை நெறிப்படுத்தியது என்று வலிமையாக நம்புகிறேன். காலச்சுவடின் 25 ஆண்டு நிறைவு விழாவில் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பெரிய பெரிய பதிப்பக ஸ்தாபனங்கள்கூட மத அடிப்படைவாதிகள் முன்னால் மண்டியிட்டுவிடுவார்கள்; மண்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் காலச்சுவடும் கண்ணனும் எவ்வளவு உறுதியாக நின்றார்கள் என்று எனக்குத்தான் தெரியும். ஒரு எழுத்தாளனாகத் ‘தான் மரித்துவிட்டேன்’ என்று சொன்னபிறகு நான் மறுபடியும் உயிர்த்தெழுந்தேன் என்று சொன்னதற்கு கண்ணன் கொடுத்த அந்த ஆதரவுதான் மிகப்பெரியது என்று நான் நம்புகிறேன். காலச்சுவடின் இந்த ஒட்டுமொத்தப் பயணத்தின் பெருமைப்படத்தக்க தருணம் என்றால் பெருமாள்முருகன் சம்பவத்தைச் சொல்வேன்.
இரண்டாவதாக, நான் சொல்லவிரும்புவது கண்ணனின் கறாரான சமரசமற்ற போக்கு. உதாரணத்துக்கு எனக்கு ஒரு கவிஞரை ரொம்பப் பிடிக்கும். அவர்மேல் இருக்கும் அன்பினால் அவரது அடுத்த புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கண்ணனுக்கு போன் செய்தேன். “கண்ணன், இந்தக் கவிஞரின் இந்தப் புத்தகத்தை நீங்கள் பதிப்பிக்க வேண்டும், அதற்கான பதிப்புக் கட்டணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னேன். கண்ணனுக்கும் எனக்கும் 25 வருட நட்பு. அந்த உரிமையில் இயல்பாகப் பேசினேன். ஆனால் அவ்வளவு பெரிய நண்பராக இருந்தாலும் கூட கண்ணன் என்ன சொன்னார் என்றால், “ஜிஆர்எஸ் அந்தப் பிரதியை எங்களுக்கு அனுப்பிவையுங்கள், அதை நாங்கள் பார்க்கிறோம், பதிப்பிக்கத் தக்கதா என்று சிந்திக்கிறோம். மற்றவர் சிபாரிசு நன்கொடை செய்யும் பதிப்பில் (Sponsered Publishing) எங்களுக்கு நம்பிக்கையில்லை. சில குறிப்பிட்ட பிரதிகளை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்தவிதத்தில் எங்களை நீங்கள் ஆதரிக்கலாம். மற்றபடி Sponsered Publication-ஐ நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று சொன்னார். இது என்னைப் பாதித்தது. ஆனால் சிறிது நேரம் பொறுத்துத்தான் எனக்கு உறைத்தது. இது அவரது சமரசமற்ற போக்கு. அதற்கு நான் தலைவணங்க வேண்டும் என்று தோன்றியது.
மூன்றாவது, குடும்பமே நட்பான தோழமையான அணுகுமுறை. கமலாம்மாவாக இருக்கட்டும், மைதிலி, குழந்தைகளான முகுந்தன் யாராக இருந்தாலும் ஒரு நட்புரீதியான அணுகுமுறை. பின்னோக்கிப் பார்க்கும்போது 1996இல் நான் யாருக்கும் தெரியாத வழக்கறிஞர். பதினைந்து பைசா தபால் கார்டில் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் போடுகிறேன், அவர் எழுத்தைப் பாராட்டி. ஆனால் அவர் ஒரே வாரத்தில் எனக்கு இன்லேண்ட் கடிதம் ஒன்றை அனுப்பினார். “நீங்கள் என்னைப் பாராட்டி எழுதியதற்கு நன்றி. உங்களுடைய கடிதம் என்னை ஊக்கப்படுத்தியது,” என்று எழுதினார். எவ்வளவு பெரிய உச்சபட்ச எழுத்தாளர் எனக்கு அப்படி ஒரு கடிதம் போட்டார். [ஸர்மிளாஜி, போன வாரம் தமிழ் இந்துவில் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருந்தீர்கள். உங்களின் மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் போட்டேன். நீங்கள் பதிலே போடவில்லை. உங்களைக் காலை வாருவதாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் பதிவு செய்கிறேன். சித்ராஜி சொன்னார்கள் இல்லையா நான் எதைப் படித்தாலும் பாராட்டிச் சந்தோஷப்பட்டுக் கடிதம் போடுவேன் என்று. கடைசியாகக் கடிதம் போட்டது உங்களுக்குத்தான். உங்கள் மேல் எனக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதற்கான ஒரு பதிவாக நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.] நான்காவதாக, சிறப்பானதற்கான கண்ணனின் வேட்கை / தேடுதல். எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும் ஒரு குழந்தையைப்போல மடியில்வைத்து ஒவ்வொரு பக்கத்தையும் தடவ வேண்டும் போன்ற ஒரு உணர்வு நமக்குக் கிடைக்கும். புத்தகம் சிறப்பான முறையில் வர வேண்டும் என்ற கண்ணனின் துடிப்பு. உதாரணத்துக்கு நான் யாரையும் குறைவாகச் சொல்லவில்லை. உவேசா புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். அதுவரை வந்த பதிப்புகளையும் காலச்சுவடு கொண்டுவந்த பதிப்பையும் பார்த்தாலே வித்தியாசம் நமக்குத் தெரியும்.
ஒவ்வொரு புத்தகத்தையும் மக்களிடம் சந்தைப்படுத்தும் வகையில் இணையதளத்தைத் துவக்குகிறார்கள். மக்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கில் நிறைய விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை காலச்சுவடுக்கு நாம் காட்டக்கூடிய ஆதரவு தமிழுக்குக் காட்டக்கூடிய ஆதரவு என்று நம்புகிறேன். நாம் அத்தனை பேரும், அதைச் செய்யணும். தமிழக அரசாங்கம் காலச்சுவடின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் ஒட்டுமொத்தப் புத்தகங்களும் தன்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைப்போன்று அரசாங்கமும் நினைக்க வேண்டும். நாம் எல்லாரும் இதைச் செய்ய வேண்டும். இது மிகப்பெரிய நிகழ்வு. எனக்கு முன்னர் பேசியவர்கள் சொன்னதைப்போல இதைப்போன்ற பலப்பல நிகழ்வுகள் நடக்கத்தான் போகின்றன. நம் வாழ்வைத் தாண்டியும் காலச்சுவடு பயணிக்கும். இந்த மாதிரியான ஒருநிகழ்வில் என்னை அழைத்ததையே நான் மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன். நன்றி வணக்கம்.
இணைப்புரை – சித்ரா பாலசுப்பிரமணியம்
மிகவும் நன்றி. நீங்கள் எவ்வளவு ஆர்வமாகப் புத்தகங்களைப் படிக்கிறீர்களோ அதே அளவுக்கு ஆர்வமாகப் புத்தகங்களைப்பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் பேசுவது அருமையான உணர்வு. நீங்கள் விரைவில் பிரபலமாக வேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம். புத்தகங்களைப் பற்றிப் பேசுவதால் நீங்கள் பிரபலமாக வேண்டும் என்கிற எங்களின் ஆர்வத்தையும் நாங்கள் தெரியப்படுத்துகிறோம். விழாவின் நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறோம். இந்த நிகழ்வு இணையவழியில் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துணைபேர்களுக்கும் காலச்சுவடு சார்பான எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கமலா ராமசாமி அனுபவப் பூர்வமாக தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர்களுக்கு நன்றி. இணையதளத்தைத் திறந்துவைத்து அத்தனை புத்தகங்களையும் ஒரு பிரதி வாங்கித் தீக்கிரையான தன்னுடைய நூலகத்தை நிரப்பப்போகிறேன் என்று கமல் மிக வாத்சல்யத்தோடு சொன்னார். அதற்கு நன்றி.
சிறப்புரை நல்கியவர்களுக்கும், காலச்சுவடு பற்றிய பல அற்புதமான பதிவுகளையும் காலச்சுவடிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் காலச்சுவடுடனான தங்களின் அனுபவங்கள் எப்படி இருந்தது, ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையோடு கூடிய (Professional) பதிப்பமாக அது எப்படி செயல்படுகிறது என்பதையும் பதிப்பகம் சார்ந்தும் மனிதர்களோடு கொள்ளும் உறவு சார்ந்தும் கண்ணனின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதையும் காலச்சுவடு எப்படி குறுக்குவெட்டுத் தோற்றத்தோடு சமூகத்தின் அத்தனை உணர்வுகளையும் பல்வேறு காலமாற்றத்துக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக எப்படி விளங்குகிறது என்பதையும், உலகியல் ரீதியாகத் தமிழிலிருந்து கொண்டு சேர்ப்பதைப்பற்றி உலகெங்கிலும் இருந்து ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளின் பல்வேறு பதிப்பாளர்கள் காலச்சுவடு பற்றிய தங்களின் அனுபவங்களையும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் அத்துணைபேருக்கும் நன்றி. மிக முக்கியமாக, உணர்வுபூர்வமான தன்னுடைய உரையை மனம் திறந்து கொஞ்சம்கூட ஒளிவுமறைவில்லாமல் நம்மோடு பகிர்ந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கும் எங்களது நன்றி. இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு தொழில்நுட்ப உதவி செய்த தர்மா அவர்களுக்கு நன்றிகள். இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடக்க ஏராளமானபேர்கள் வேலை செய்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனைபேருக்கும் காலச்சுவடின் சார்பாக எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். லாவண்யா, மைதிலி ஆகியோருக்கும் எங்களுடைய நன்றி. வாசகர்கள் இல்லையென்றால் பதிப்பகத்தின் வெற்றி இல்லை. இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற முகநூல் வழியாகவும் யூ டியூப் வழியாகவும் கண்டுகளித்த அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எங்களின் நன்றி.
நன்றியுரை – மைதிலி
இந்த நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட சித்ரா பாலசுப்பிரமணியம் மிக முக்கியமான நபர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் விரிவுரையாளராகப் பயணித்தவர். தற்போது ஊடகவியலாளராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். மிக நல்ல ஒரு தொகுப்பாளராக இன்று இந்த முக்கியமான நிகழ்வுக்கு மிக அழகாக, மிக யதார்ததமாகத் தொகுத்துக் கொடுத்ததற்கு கண்ணன் சார்பிலும் காலச்சுவடு சார்பிலும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.