எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்?
ஆஸாதி
(கட்டுரைகள்)
அருந்ததி ராய்
தமிழில்: ஜி. குப்புசாமி
ரூ. 200
இந்தப் புத்தகத்துக்கான தலைப்பை என்னுடைய யு.கே. பதிப்பாளரான சைமன் பிராஸரோடு ஆலோசித்துக்கொண்டிருக்கையில், அவர் ஆஸாதி என்ற சொல்லை நினைக்கும்போது எனக்குத் தோன்றுவது என்ன என்று கேட்டார். ஒரு கணமும் தயங்காமல், “ஒரு நாவல்” என்று நான் சொன்ன பதில் என்னையே வியப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் ஓர் எழுத்தாளர் எந்தளவுக்குச் சிக்கலாக இருக்க விரும்புகிறாரோ, அந்தளவுக்குச் சொற்கள், மொழிகள், காலம் ஆகியவற்றின் வழியாக, சமுதாயங்களின், இனங்களின், அரசியலின் நடுவே பயணிக்கும் சுதந்திரத்தை ஒரு நாவல் அவருக்கு அளிக்கிறது. ஒரு நாவல் முழுக்கச் சிக்கலானதாகவும், பல அடுக்குகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அது தெளிவற்றதாக, தளர்வானதாக, தொடர்பற்றதாக இருப்பதல்ல. ஒரு நாவல் என்பது என்னைப் பொறுத்தவரை பொறுப்புடன் கூடிய சுதந்திரம். நிஜமான, தளைகள் அற்ற ஆஸாதி - சுதந்திரம். இத்தொகுப்பில் உள்ள சில கட்டுரைகள் ஒரு நாவலாசிரியரின் பார்வையிலிருந்தும், அவருடைய நாவல்களில் முழுப்பரப்பிலிருந்தும் எடுத்து எழுதப்பட்டவை. அவற்றில் சில கட்டுரைகள் புனைவு என்பது எப்படி உலகத்தோடு இணைந்து, பின் உலகமாகவே மாறிவிடுகிறது என்பதைப் பற்றியவை. எல்லா கட்டுரைகளும் இருநூறு வருட காலம்போல இந்தியாவில் தோன்றவைத்த 2018லிருந்து 2020 வரையிலான இரண்டு வருடங்களில் எழுதப்பட்டவை.
இரண்டு வருடங்கள் இந்தியாவுக்கு இருநூறு வருடங்களாகக் கழிந்த காலகட்டம். கோவிட்-19 பெருந்தொற்று நம்மிடையே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. நமது உலகம் ஒரு நுழைவாயிலைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் காலகட்டம் இது. நாம் திரும்பிவருவதற்கு வாய்ப்பில்லாத இடத்துக்குப் பயணப்பட்டுவிட்டோம். திரும்பிவர நேர்ந்தாலும் கடந்தகாலச் சமுதாய, அரசியல், பொருளாதார, இலட்சியவாதத் தளங்களில் சில மிகக் கடுமையாக சிதைவுற்றிருக்கப் போகிறது. இத்தொகுப்பின் கடைசிக் கட்டுரை அதைப்பற்றியதுதான். கொரோனா வைரஸ் தன்னோடு ஆஸாதி பற்றிய மிகப் பயங்கரமான புரிதலையும் சேர்த்துக் கொண்டுவந்திருக்கிறது. அது சர்வதேச எல்லைகளை அர்த்தமற்றதாக்கிவிட்டு, மொத்த மக்கட் தொகையையும் சிறைப்படுத்தி, நவீன உலகை இதற்குமுன் கண்டிராத வகையில் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இதுவரை நாம் வாழ்ந்துவந்த வாழ்க்கையின் மீது வேறுவிதமானதொரு வெளிச்சத்தைக் கவிய வைத்திருக்கிறது. எதை வணங்குவது, எதை ஒதுக்கித் தள்ளுவது என்பது போன்ற நமது நவீன சமுதாயங்களைக் கட்டமைத்த மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்த நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது. இந்த நுழைவாயிலைக் கடந்து வேறொருவிதமான உலகுக்குள் நாம் நுழையும்போது எவற்றையெல்லாம் நம்மோடு எடுத்துச்சொல்ல வேண்டும், எவற்றையெல்லாம் விட்டுச்செல்ல வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்வு செய்ய நமக்கு எப்போதும் வாய்ப்பிருக்கும் என்று சொல்லமுடியாது; அதைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பது ஒரு தேர்வாக இருக்கவும் முடியாது. இதைப்பற்றிச் சிந்திப்பதற்கு, நம்மைவிட்டு விலகிச்சென்றுவிட்ட உலகத்தைப் பற்றியும், இந்த பூமிக்கு நாம் செய்திருக்கும் அட்டூழியங்களைப் பற்றியும், சக மனிதர்களிடையே நிலவும் அநீதிகளைக் கேள்வி கேட்காமல் நாம் ஒப்புக்கொண்டிருப்பதைப் பற்றியும் ஆழமான புரிதல்கள் தேவைப்படுகின்றன. இக்கட்டுரைகளில் ஒன்றைத் தவிர மற்றவை இப்பெருந்தொற்று நம்மைப் பீடிப்பதற்கு முன் எழுதப்பட்டவை. இச் சிதைவுகளை எதிர்கொள்வதற்கு இவை ஏதோவொரு சிறிய விதத்தில் நமக்கு உதவக்கூடும். வேறு எதுவாக இல்லாமற்போனாலும், நம்மை ஏதோவொரு அநாமதேய இடத்துக்குக் கூட்டிச்செல்லும் விமானம் பறக்கத் தொடங்குவதற்குமுன் ஓர் உருவக ஓடுதளத்தில் காத்திருக்கும் வரலாற்றுத் தருணத்தை இக்கட்டுரைகள் பதிவு செய்திருக்கின்றன. எதிர்கால வரலாற்றாய்வாளர்களின் கல்விப்புல ஆய்வுகளுக்கு இவை பயன்படக்கூடும்.
முதல் கட்டுரை இலக்கிய மொழிபெயர்ப்பு பற்றிய W.G.ஸீபால்ட் உரை. ஜூன் 2018ல் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தில் இவ்வுரையை நிகழ்த்தினேன். இது முக்கியமாக இந்துஸ்தானி என்ற பெயரில் நாம் அறிந்திருந்த ஒரு மொழி எப்படி இரண்டு மொழிகளாக, இரண்டு லிபிகளில் தனித்தனியாக அபத்தமாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய உரை. இவ்விரு மொழிகளும் இந்தி என்றும் உருது என்றும் (இந்தியை இந்துக்களோடும், உருதுவை முஸ்லிம்களோடும் இணைத்து) நியாயமற்ற வகையில் பெயரிடப்பட்டு, தற்போதைய செயல்திட்டமான இந்து தேசியவாதத்துக்கான முன்னறிவிப்பாக நூறு வருடங்களுக்கு முன்பே செயல்படத் தொடங்கியிருக்கிறது.
எம்மில் பெரும்பாலோர் 2018 ஆம் வருடம்தான் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து தேசியவாதக் கட்சியின் ஆட்சிக்குக் கடைசி வருடமாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தோம். இத்தொகுப்பின் ஆரம்பக் கட்டுரைகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. 2019ஆம் வருடப் பொதுத் தேர்தல் நெருங்கி வந்தபோது, கருத்துக்கணிப்புகள் மோடிக்கும் அவரது கட்சிக்கும் மக்களிடையே செல்வாக்குப் பெருமளவில் சரிந்திருப்பதைக் காட்டின. இது மிகவும் அபாயகரமான நிலை என்று அப்போது எங்களுக்குத் தோன்றியது. நாட்டின் மனப்போக்கை மாற்றுவதற்காக நிச்சயமாக ஒரு நாடகத் தாக்குதலோ அல்லது யுத்தமோகூட நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ‘அபாயகரமான ஜனநாயகச் சூழலில் தேர்தல் காலம்’ (3, செப்டம்பர் 2018) என்ற கட்டுரையில் வேறு பல விஷயங்களோடு எங்களுடைய அச்சம் வெளிப்படுகிறது. எல்லோரும் மூச்சை அடக்கிக்கொண்டு காத்திருந்தோம். பொதுத் தேர்தலுக்குச் சில வாரங்கள் இருக்கும்போது, பிப்ரவரி 2019ல் அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. கஷ்மீரில் ஒரு மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் நாற்பது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடகத் தாக்குதலோ அல்லது உண்மையான தாக்குதலோ, நிகழ்த்தப்பட்ட காலத்திட்ட அமைப்பு மிகத் துல்லியமாக இருந்தது. மோடியும் பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் வெற்றி பெற்றனர்.
பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையில், இந்தியா அடையாளம் தெரியாத அளவுக்கு இப்போது மாறிவிட்டிருப்பதை இந்நூலின் கட்டுரை வரிசையில் பார்க்க முடியும். அரசமைப்புச் சட்டம் உருவகித்திருந்த மதச்சார்பற்ற, நாட்டின் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய குடியரசு என்பது அரைகுறையாகச் சாத்தியப்பட்டிருந்தாலும், அது முழுமையாக நிறைவேறிவிடுமென்று நம்மில் பலர் கனவுகண்டு கொண்டிருந்தோம் (அந்த நம்பிக்கையை இப்போதும் முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை என்பதை இக்கட்டுரைகள் சொல்கின்றன). ஆனால் இப்போது அஸ்திவாரமே அசையத் தொடங்கியிருக்கிறது. பாஸிஸத்தின் கட்டமைப்பு நம் முகத்துக்கெதிரே முறைத்துப் பார்க்கிறது. பெருந்தொற்று தன் பங்குக்கு இந்தச் செயல்திட்டத்தை விரைவாக்கிக்கொண்டு வருகிறது. ஆனால் இப்போதும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறோம்.
நான் இந்த முன்னுரையை அமெரிக்க ஜனாதிபதியும் அவருடைய குடும்பத்தினரும் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த பிப்ரவரி 2020, கடைசி வாரத்தில் எழுதத் தொடங்கினேன். அதனால் இதுவும் சிதைவுகளுக்குக்கிடையே பெருந்தொற்றின் நுழைவாயிலைக் கடந்து வரவேண்டியிருந்தது. இந்தியாவில் கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்டது ஜனவரி 30ஆம் தேதி. அரசு உட்பட யாரும் அதை அப்போது பொருட்படுத்தவில்லை. அதற்குக் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு முன்புதான் ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்துச் செய்யப்பட்டு, எந்தச் செய்தியும் அங்கு உள்ளே செல்லாமலும், வெளியே வராமலும் முற்றுகையிடப்பட்டிருந்தது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகப் பலராலும் கருதப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் லட்சக்கணக்கான போராட்டக்காரர்களை வீதிகளுக்கு வரவழைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியிருந்தது. ஒரு பொதுக்கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மோடியும் தானும் இருக்கும் படம் அச்சிட்ட முகக்கவசத்தை அணிந்துகொண்டு பேசினார். அவர்களும் இந்தியர்களும் இணைந்து கிரிக்கெட் ஆடுவதாகவும், தீபாவளி கொண்டாடுவதாகவும், பாலிவுட் திரைப்படங்களைத் தயாரிப்பதாகவும் இந்தியர்களிடம் தெரிவித்தார். நம்மைப்பற்றிய தகவல்களை அவரிடமிருந்து அறிந்துகொண்டதில் மகிழ்ச்சியடைந்தோம். பேச்சுக்கு இடையில் மூன்று பில்லியன் மதிப்பிலான MH-60 ஹெலிகாப்டர்களை நமக்கு விற்றார். ஒரு பொதுமேடையில் இந்தியா இப்படி அவமானப்படுத்தப்பட்டது மிகவும் அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.
ட்ரம்ப் தில்லியில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கும், அவர் மோடியுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்திய ஹைதராபாத் இல்லத்துக்கும் சற்று அருகில்தான் தில்லி எரிந்துகொண்டிருந்தது. நகரின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு முன்பிருந்தே வன்முறை வெடிக்கப் போவதன் சமிக்ஞைகள் தெரிந்து கொண்டிருந்தன. புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் பெண்களை அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே விரட்டிக் கொண்டிருந்தார்கள். தாக்குதல் தொடங்கியதும் முஸ்லிம்களும் திருப்பித் தாக்கினார்கள். ஒரு காவலர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். குண்டு காயத்துடன் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இணையத்தில் பயங்கர காணொளிக் காட்சிகள் வெளிவந்தன. அதில் ஒன்றில் சில முஸ்லிம் இளைஞர்கள் அடிப்பட்டுக் கீழே விழுந்திருக்கிறார்கள். அவர்களைச் சுற்றிச் சீருடை அணிந்த காவலர்கள் நின்றுகொண்டு அவர்களைத் தேசியகீதம் பாடிக் காட்டச் சொல்லி அடிக்கிறார்கள் (அந்த இளைஞர்களின் ஃபைஸான் என்பவர் பிறகு இறந்து போனார். The Huffington Post அவர் எப்படி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதை விவரித்து முதுகுத்தண்டைச்
சில்லிட வைக்கும் கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு போலீஸ்காரர் அவருடைய தொண்டைக்குள் லத்தியை செருகியிருக்கிறார்.)
அவரை சுற்றி நடந்துகொண்டிருந்த பயங்கரச் சம்பவங்களைப் பற்றி ட்ரம்ப் எதுவும் பேசவில்லை. அதற்குப் பதிலாக நரேந்திர மோடிக்கு ‘தேசப்பிதா’ என்ற பட்டத்தைச் சூட்டினார். சமீபகாலம் வரை அது காந்தியின் பட்டப்பெயராக இருந்தது. நான் காந்தி அபிமானி அல்ல. ஆனாலும் அவருக்கு இந்த இழுக்கு நேர்ந்திருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது.
ட்ரம்ப் கிளம்பிச்சென்ற பிறகு வன்முறைகள் மேலும் பலநாட்களுக்குத் தொடர்ந்தன. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரை இழந்தார்கள். 300 பேருக்கு மேல் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகள் முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு, காவல்துறையையும் பாராட்டினார். வேறுசில அரசியல்வாதிகள் முஸ்லிம்களே வன்முறையைத் தூண்டியதாகவும், தம்மைத்தாமே தாக்கிக்கொண்டு தமது கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்துக் கொண்டதாகவும், தமது சடலங்களைத் தெருவோர சாக்கடைகளில் அவர்களே எறிந்துகொண்டதாகவும் கைகொட்டி ஏளனச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்த தொண்டர்களின் நடுவே பேசினார்கள். முக்கிய ஊடகங்கள் இந்த வன்முறையை இந்து - முஸ்லிம் ‘கலவரம்’ என்றே சித்தரிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தன. இதை ‘கலவரம்’ என்று நான் சொல்லமாட்டேன். முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதமேந்திய பாஸிஸ்ட் கும்பலால் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட இனப்படுகொலை என்பேன்.
சாக்கடைச் சகதியிலிருந்து மேலும் சடலங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கையில், இந்திய அரசு வைரஸ் பற்றிய அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியது. மார்ச் 24ஆம் தேதி நாடு தழுவிய பொது முடக்கத்தை மோடி அறிவித்தபோது இந்தியா தனது பயங்கர ரகசியங்களை மொத்த உலகமும் பார்க்கும்படியாக வெளிப்படுத்தியது.
எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?
உலகம் மறு உருவாக்கமடைந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் உறுதி.
நூல் முன்னுரையிலிருந்து