தமிழும் அறபும்
தொல்காப்பியமும் அல்--கிதாப்பும்
(ஆய்வு நூல்)
த. சுந்தரராஜ்
ரூ. 325
ஒரு மொழியின் இலக்கணத்தை இன்னொரு மொழியின் இலக்கணத்தோடு ஒப்பிட்டுக் காணும்போது மட்டுமே இரு மொழிகளின் தனித் தன்மையையும், அவை புலப்படுத்தும் மொழிப் பொதுமைச் சிறப்பையும் அறிவியல்பூர்வமாக நிறுவ முடியும். குறிப்பாக, வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிடையே மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஒப்பாய்வு (descriptive comparison) தனித்துவம் மிக்கது. இவ்வாய்வில் எட்டப்படும் தீர்வுகள், வரலாற்று ஒப்புமை மொழியாய்வில் குறிப்பிட்ட மொழி சார்ந்த சில இலக்கண முடிவுகளுக்கு அகச்சான்றுகளாகும் வாய்ப்பு அரிதல்ல. த. சுந்தரராஜ் உலகச் செவ்வியல் மொழிகளான தமிழ் மொழியின் தொல்காப்பியத்தையும் அறபு மொழியின் அல்-கிதாப்பையும் ஒப்பிட்டு, இவற்றிடையே நிலவும் பல மொழியியல் ஒற்றுமைகளை வரலாற்று ஒப்புமை மொழியாய்வில் நிலைநாட்ட உதவுகின்ற இலக்கண அகச்சான்றுகளாகக் கண்டடைகிறார். இவ்வகச்சான்றுகள் அறபு மொழி சார்ந்த செமிட்டிக் மொழிக்குடும்பத்திற்கும் தமிழ் மொழி சார்ந்த திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இடையேயுள்ள மொழி உறவை வலுப்படுத்தியுள்ளன. இருமொழிப் புலமையும் ஆழமான இலக்கண அறிவும் இன்றி இம்முயற்சி சாத்தியமன்று. ‘தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்’ என்னும் நூலைத் தமிழ் இலக்கண உலகிற்குத் தந்துள்ள த. சுந்தரராஜுக்கு முதற்கண் பாராட்டுக்கள்.
தமிழில் நமக்குக் கிடைக்கும் முதலாவது இலக்கணம் தொல்காப்பியம். அதைப்போலவே அறபு மொழியின் முதலாவது இலக்கணம் ஸீபவைஹி என்பார் இயற்றிய அல்-கிதாப்பு. தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தையது அல்-கிதாப்பு. இரு இலக்கணங்களுமே மிகத் தொன்மையான மொழிமரபு உடையன. தமிழ் இலக்கண ஆய்வில் தொல்காப்பியம் முதன்மை இடத்தைப் பெறுவது போலவே அறபு இலக்கண ஆய்வில் முதன்மை இடம்பெறுகிறது அல்-கிதாப்பு. எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண மரபு சார்ந்தது தொல்காப்பியம். அல்-கிதாப்பு தொடரனியல், உருபனியல், ஒலியியல் என்னும் முப்பிரிவு உடையது. இவ்விரு இலக்கணங்களிலும் காணும் ஒலியியலை மட்டும் தற்கால மொழியியல் நோக்கில் ஆழமான ஒப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளார் த. சுந்தரராஜ்.
இந்திய இலக்கண மரபைப் பெரிதும் போற்றும் இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த அறபு மொழியியலறிஞர்கள் சமஸ்கிருத இலக்கண மரபிற்கும் அறபு இலக்கண மரபிற்குமுள்ள பல ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர். இவற்றுள் அறபு ஒலியியல் விளக்கத்தின்மீது சமஸ்கிருத ஒலியியல் விளக்கத்தின் தாக்கம் சுட்டிக்காட்டத்தக்கது. ஒலியியலைப் பொறுத்தவரையில் தமிழ் இலக்கணமரபும் சமஸ்கிருத இலக்கண மரபோடு நெருங்கிய தொடர்புடையது. எனவே, இவற்றிடையே காணும் ஒற்றுமை தமிழ் - அறபு உறவைக் காணும் முயற்சிக்கு ஒரு மொழியியல் ஆய்வாளரைத் தூண்டுவது வியப்பன்று. மொழிகளிடையே காணும் ஒற்றுமை வேற்றுமைகளுக்கு அப்பால் இலக்கண உருவாக்கத்தில் மரபிலக்கணிகளின் அணுகுமுறைகளுக்கு இடையே யுள்ள ஒற்றுமை வேற்றுமை களும் இத்தகைய ஆய்வுகளின்போது இனங்காணத் தக்கனவாகும். தொல்காப்பியரின் அணுகுமுறைக்கும் அல்-கிதாப்பின் நூலாசிரியரான ஸீபவைஹியின் அணுகுமுறைக்கும் இடையேயுள்ள ஒற்றுமை இலக்கண உருவாக்கத்தில் இரு இலக்கணிகளின் ஒருமித்த சிந்தனைப்போக்கை உணர்த்துவதாக த.சுந்தரராஜ் குறிப்பிடுகிறார். இப்போக்கிலேயே தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விவரிக்கிறார். இவ்வாய்வு நெறிமுறையில் இருமொழி இலக்கணங்களிலும் ஒலியியலை ஒப்பிட்டுக்காட்டும் விளக்கமுறை ஒப்புமை இலக்கணவியலாய்வுக்குப் புதிது.
மொழியியலார் வரையறுத்துள்ள கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரூ, அறபு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள் சமஸ்கிருத இலக்கண மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப்பின் பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பிட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை ‘தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்’ என்னும் இந்நூலுக்கு உண்டு. மத்திய அரசு நிறுவியுள்ள செவ்வியல் மொழி நிறுவனங்கள் இது போன்ற விளக்கமுறை ஒப்பாய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாகத் தத்தம் மொழியல்லாத பிற செவ்வியல் மொழிகளைக் கற்கும்/கற்பிக்கும்
வாய்ப்பையும் வசதியையும் இந்நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும். அதன்வழித் தமிழ் இலக்கண மரபை மொழிப் பொதுமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்கும் ஆய்வுநெறிமுறை சார்ந்த முயற்சிகள் முதன்மை பெற வேண்டும். த. சுந்தரராஜ், இக்கோட்பாட்டாய்வுக்கு இந்நூலில் முக்கியத்துவம் தருகிறார். இதன்மூலம் தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் பொதுவான பொதுமைக்கூறுகள் தமிழ் - அறபு இலக்கண உறவை வலுப்படுத்தியுள்ளன என்னும் அவரது கணிப்பு, விளக்கமுறை இலக்கண ஒப்பாய்விற்குப் புதிய ஒளி பாய்ச்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தொல்காப்பியத்தைவிட ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டது அல்-கிதாப்பு. தமிழ் இலக்கிய, இலக்கணச் சிந்தனைகள் அறபு நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என்னும் கருத்தை அறுதியிட்டுக் கூறுவதற்குத் தொல்பொருள், கல்வெட்டு, இலக்கியம் சார்ந்த ஆதாரங்கள் மிகச் சிறிய அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில், இவ்வொற்றுமைகளை அறபுக்கும் தமிழுக்கும் இடையிலான இலக்கண- மொழியியல் உறவிற்கு இலக்கண நூல்களிலிருந்து கிடைக்கும் அகச்சான்றுகளாகக் கருதலாம்”
எனத் தமிழ் - அறபு என்னும் இரு செவ்வியல் மொழிகளிடையே காணும் உறவை அறிவியல் நோக்கில் நிறுவும் இந்நூல், இவற்றின் வரலாற்று ஒப்புமை ஆய்வுக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளது.
தமிழ் சார்ந்த திராவிட மொழிக்குடும்பத்திற்கும் அறபு மொழி சார்ந்த செமிட்டிக் மொழிக்குடும்பத்திற்கும் இடையே யுள்ள இலக்கண உறவை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டும் வரலாற்று ஒப்பாய்வுக்கு இந்நூல் தக்க சான்றுகளுடன் கூடுதல் வளம் சேர்த்திருக்கிறது என்றால் மிகையில்லை. ஒலியியலுடன் தொடங்கியுள்ள இவ்வாய்வு பிற இலக்கணக் கூறுகளுக்கும் விரிவடைந்து முழுமைபெறும்போது இருபெரும் மொழிக்குடும்பங்களிடையே காணும் உறவில் தமிழின் தொன்மையை அறிவியல்பூர்வமாக நிலைநாட்டும் வாய்ப்புப் பெருகும். முக்கியமாகப் பழந்தமிழ் நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்குமுள்ள உறவை இவ்விருமொழி ஒப்பாய்வு வழி உறுதிசெய்ய முடியும்.
தமிழ் வேறு; சமஸ்கிருதம் வேறு, தமிழ் வேறு; கிரேக்கம் வேறு, தமிழ் வேறு; சீனம் வேறு எனத் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள உறவுகளை முற்றிலுமாக மறுக்கும் தனித்தமிழ் மனப்பாங்கு மாற வேண்டும். இந்நூல், தமிழுக்கும் செமிட்டிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த அறபுக்கும் இடையிலான மொழி உறவு சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமான உறவை உறுதிப்படுத்தித் தமிழின் தொன்மையை நிறுவியுள்ளது. விளக்கமுறை அடிப்படையிலான இத்தகைய மரபிலக்கண ஒப்பாய்வுகள் தமிழும் சீனமும், தமிழும் ஹீப்ரூவும், தமிழும் இலத்தீனுமாக இனி விரிவடைய வேண்டும்.
தமிழ் இலக்கணவியல் ஆய்வு வரலாற்றில் சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இம்மாற்றங்களில் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆய்வாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ் இலக்கணத்தைப் பிற செவ்வியல் இலக்கணங்களுடன் ஒப்பிட்டு ஆயும் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில் தமிழ் இலக்கணமரபோடு பிற செவ்வியல் இலக்கணமரபுகளை ஒப்பிட்டுக் காணும் ஆய்வுநெறிமுறைக்கு த. சுந்தரராஜின் இவ்வொப்பாய்வு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இம்மாதிரியில் இன்னும் பல ஆய்வுகள் பல்கி நூலாக்கம் பெற வேண்டும். இவ்வாய்வுகள் மூலம் உலகளாவிய நிலையில் பல்வேறு இலக்கணச் சிந்தனைப்பள்ளிகளின் வரலாறும், கோட்பாட்டு வளர்ச்சி பற்றிய முழுமையான அறிவும் பெறத்தக்க ஆய்வுச்சூழல் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெறுமானால் அதுவே இந்நூலின் முழு வெற்றியாகும்.
நூல் முன்னுரையிலிருந்து