இயற்கையும் எழுத்தும்
மா. கிருஷ்ணன் (1912 - 1996)
இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் கூட்டு முயற்சி ‘பொருநை;’ அதன் ஒரு பகுதியே காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ‘பொருநை பக்கங்கள்.’ தமிழின் மகத்தான படைப்பாளிகளைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பக்கங்களின் குறிக்கோள்.
இந்த இதழில் இடம்பெறுபவர்
காட்டுயிர்களின் காதலர் மா. கிருஷ்ணன்.
பகுதி ஒருங்கிணைப்பு: தியடோர் பாஸ்கரன்
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com
படங்கள்: மா. கிருஷ்ணன்
“அறிவாற்றலும் மனிதநேயமும் கலைநுட்பமும் மிக்க இவரை வெளிநாட்டு விஞ்ஞானிகள் போற்றுகின்றார்கள். ஆனால் தமிழகம் இவரைப்போன்ற உத்தமர்களை மதிப்பதில்லை. இவருடன் நான் பழகிய மிகச்சொற்பமான நாட்களிலேயே, இவர் எத்தனை உன்னதமான மனிதர் என்பதை உணரும் வாய்ப்புக் கிடைத்தது. இனி என்றும் நாம் காணமுடியாத ஓர் அபூர்வ தலைமுறையைச் சேர்ந்த இவருக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்.”
அ. மாதவையா (1890- - 1925) என்ற நூலில் ராஜ் கௌதமன்.
ஆங்கிலத்தில் எழுதி, நாட்டின் தலைசிறந்த இயற்கையியலாளர் என்று புகழ்பெற்ற மா. கிருஷ்ணன், 1930ஆம் ஆண்டுகளில் எழுத ஆரம்பித்தபோது தமிழில்தான் எழுதினார். தமிழின் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ. மாதவையாவின் மகன் இவர். சென்னையில் அவர் வளர்ந்த வீடு, எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலிருக்கும் (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) ‘பெருங்குளம் ஹவுஸ்’, தமிழ் இலக்கியவாணர்கள் கூடும் இடமாக இருந்தது. உ.வே. சாமிநாத அய்யர், மு. கதிரேசஞ் செட்டியார், மு. ராகவையங்கார் முதலியோர் கிருஷ்ணனின் தந்தையாரைச் சந்திக்க அங்கு வருவது வழக்கம். அரசுப் பணியிலிருந்து ஐம்பதுவயதிலேயே விருப்ப ஓய்வுபெற்ற மாதவையா, பெருங்குளம் ஹவுஸில் ‘ஆசிரியர் அச்சுப் பிரசுராலயம் புஸ்தக சாலை’ என்ற பதிப்பகத்தை நிறுவி, இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த காலமது. இத்தகைய சூழலில்தான் கிருஷ்ணனின் இளமைக் காலம் அமைந்தது. (ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அருகேயுள்ள இவ்வீட்டில் A. Madhaviah எனும் பெயர்ப்பலகை இன்றும் காணப்படுகிறது.)
மாதவையா தம்பதியின் எட்டுக் குழந்தைகளில் கடைசியாக 30 ஜூன் 1912இல் கிருஷ்ணன் பிறந்தார். இவருக்குத் தந்தையுடன் மிக நெருக்கம். காலை நேரத்தில் தந்தையுடன் நீண்ட தூரம் நடந்து செல்வது, குதிரைச் சவாரி செய்வது, ஒன்றாகவே சாப்பிடுவது, அவருக்கு அருகேயே தூங்குவது என்று அன்றாட வாழ்வில் இவர்களுடைய பிணைப்பு வெளிப்பட்டது. தந்தையின் இலக்கிய ஈடுபாடும் இவரைத் தொற்றிக்கொண்டது. தந்தையோடு வெளிப்புறங்களில் அலைந்தபோது இவருக்குப் புறவுலகில், இயற்கையில் ஈடுபாடு ஏற்பட்டது.
1931இல் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தாவரவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். இந்தத் துறையில் பேராசிரியராயிருந்த பி.எப்.ஃபைசன் (P.F. Fyson 1877 - 1947) களஆய்வின் நுணுக்கங்களைக் கிருஷ்ணனுக்குக் கற்றுத் தந்தார். இயற்கையியலில் ஃபைசனைத் தன் குருவாகக் கொண்டார். திருமதி டாரத்தி ஃபைசன் (1886 - 1969) ஓவியக்கலையில் கிருஷ்ணனுக்குப் பயிற்சியளித்தார். பி.ஏ. படிப்பைத் தொடர்ந்து எம்.ஏ. படித்தபின் 1936இல் சட்டப்படிப்பையும் சென்னையில் முடித்தார் கிருஷ்ணன். ஆனால் வக்கீலாகப் பணியாற்றவில்லை. 1937இல் பெங்களூரை சேர்ந்த இந்துமதியைத் திருமணம் செய்துகொண்டார்.
1937 - 42ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் வசித்த கிருஷ்ணன் முதலில் ஒரு பதிப்பகத்திலும், பின்னர் சென்னை கலைப் பள்ளியிலும், மக்கள் தொடர்பு அலுவலராக அகில இந்திய வானொலியிலும் பணியாற்றினார். இந்தக் காலத்திலும், பின்னர் சண்டூர் சமஸ்தானத்தில் வேலைபார்த்தபோதும் அவரது கதைகளும் கட்டுரைகளுடன் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாயின.
1937இல் மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1942இல் கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகேயுள்ள சண்டூர் சமஸ்தானத்தில் வேலை கிடைத்தது. அங்கு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். சண்டூரில் அவர் செய்த வேலை பன்முகம் கொண்டதாக அமைந்தது. பள்ளி ஆசிரியர், நீதிபதி, மக்கள் தொடர்பு அதிகாரி, கடைசியாக மன்னருக்கு அரசியல் செயலர் எனப் பணியாற்றினார். பாறைக் குன்றுகளால் சூழப்பட்ட சண்டூர் பள்ளத்தாக்கின் நடுவே ஓடியது துங்கபத்ரை. சுற்றியிருந்த காடுகளில் காட்டுயிர்களை அவதானிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பு, அன்றாடப் பணியின் அயர்வை நீக்கியது. வீட்டிலிருக்கும் வேளைகளில் ஆடு வளர்த்தார்; பந்தயப் புறாக்களை வைத்திருந்தார். சில புறாக்களைக் கடிதம்கொண்டுசெல்லவும் பழக்கிவைத்திருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சண்டூர் சமஸ்தானம் சென்னை மாகாணத்துடன் இணைக்கப் பட்டது. அரசுப்பணியில் சேர வந்த வாய்ப்பைத் தவிர்த்து எழுதுவது, புகைப்படமெடுப்பது ஆகியவற்றின் மூலமே வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்தார். 1949இல் சண்டூரை விட்டு சென்னைக்குக் குடியேறிப், பெருங்குளம் இல்லத்தில் வசித்துவந்தார். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் Statesman நாளிதழில் My Country Note Book என்ற மாதமிருமுறைத் தொடரை 1950 முதல் எழுதலானார். இத்தொடரில் கடைசிக் கட்டுரை அவர் இறந்து சிலநாட்கள் கழித்து அச்சேறியது. (இந்தியாவின் மிக அதிக காலம் வெளியான பத்தி என்ற பெருமை இதற்கு உண்டு.)
மா. கிருஷ்ணன் இந்திய வனவிலங்கு வாரியத்தில் (Indian Board for Wildlife) முப்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்தார். 1968இல் இந்திய நாட்டுப் பாலூட்டிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள இவருக்கு ஜவகர்லால் நேரு ஆய்வு நல்கை வழங்கப்பட்டது. 1969இல் இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. புலிகளைக் காக்க 1970இல் நிறுவப்பட்ட Project Tiger திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். 1995இல் ஐக்கிய நாடு சுற்றுச்சூழல் கழகம் தெரிந்தெடுத்த ‘உலக ஐந்நூற்றுவர்’ என்ற தொகுப்பிற்கு நியமிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். (இந்துமதி - கிருஷ்ணன் தம்பதியரின் ஒரே மகன் ஹரிகிருஷ்ணன். இவர் தமிழ்நாட்டின் தலைமை வனத்துறைப் பாதுகாவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.)
1939முதல் 1941வரை வெளிவந்த சில்பஸ்ரீ என்ற இதழில் தமிழ் அறிஞர்களான வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை முதலியோர் எழுதிவந்த சமயத்தில் இந்தப் பத்திரிகை கிருஷ்ணனின் எழுத்துகளுக்கு இடமளித்தது. முதலில் கிருஷ்ணன் சிறுகதைகள்தான் எழுதினார். தன் இயற்பெயரிலும், ‘கண்ணன்’ என்ற புனைபெயரிலும் தன்னுடைய சிறுகதைகளை இயற்கையியல் பின்னணியில் எழுதினார். பந்தயப் புறாக்கள், நாய்கள், தாவரங்கள் அவருடைய கதைகளில் பாத்திரங்களாக அமைந்தன. (மாதவையாவின்ஆறுபிள்ளைகளில் இன்னொருவரான மா. அனந்த நாராயணன் தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்றவராவார். இவர்கள் அனைவரும் சிறுகதைகள் எழுதினார்கள். இந்த அறுவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘முன்னிலா’ என்ற தலைப்பில் 1944இல் தினமணி வெளியீடாக வெளிவந்தது.)
கிருஷ்ணனின் கதைகளைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன், காட்டுயிர்களைப் பற்றித் தழிழில் எழுத வேண்டுமென்று அவரை ஊக்குவித்தார். கலைமகள் இதழில் கிருஷ்ணனின் கட்டுரைகள் பல வெளியாயின. பின்னர் கல்கி இதழிலும் எழுதினார். தமது கல்லூரித் தோழர் பெரியசாமி தூரனின் அழைப்பின்பேரில் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்ற உயிரினங்கள் பற்றி மிக அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை அவர் எழுதினார்.
அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் கிருஷ்ணன்தான். அன்றைய சூழலில், தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் இயற்கை பற்றியோ காட்டுயிர் பற்றியோ யாரும் அக்கறை காட்டி எழுதவில்லை. சுற்றுச்சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லாத காலகட்டத்தில் கிருஷ்ணன் அவை பற்றி எழுதினார். அதுமட்டுமல்லாமல், அன்று காட்டுயிர் பற்றி எழுதிக்கொண்டிருந்தவர்களில் துப்பாக்கி தூக்கி வேட்டையாடாத இயற்கைவாதியான கிருஷ்ணன் தனித்து நின்றார். காட்டுயிர்கள் மனிதனின் பொழுதுபோக்கிற்கானவை அல்ல என்பது அவர் வாதம்.
1957வரை தமிழில் காட்டுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் எழுதினார். ஒவ்வொரு கட்டுரையுடன் அவர் வரைந்த கோட்டோவியம் ஒன்றும் இடம்பெற்றது. கட்டுரையின் சாராம்சத்தைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோல இவ்வோவியங்கள் அமைந்தன. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னையிலுள்ள கலை, கைவினைப் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றிய அனுபவம் அவரது ஓவியத் திறமைக்கு நல்ல அடித்தளமாக அமைந்திருந்தது. சில்பஸ்ரீயில் வெளியான மற்ற சில எழுத்தாளர்களின் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் கிருஷ்ணன் ஓவியங்கள் வரைந்ததுண்டு. முதலில் Z என்று இந்த ஓவியங்களில் கையெழுத்திட்டவர், பின்னர் MK என்று கையெழுத்திடலானார். Z என்ற புனைபெயரில் சில கட்டுரைகளையும் இவர் இந்து நாளிதழில் எழுதியதுண்டு.
கிருஷ்ணனுக்குத் தமிழ் செவ்விலக்கியத்தில் நல்ல பயிற்சி உண்டு. பல இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சத்திமுத்தப் புலவர் எழுதிய “நாராய், நாராய்...” பாடலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் நேர்த்தி இவரது திறமைக்குச் சான்று. இயற்கை சார்ந்த கட்டுரைகளில் பண்டை இலக்கியத்திலிருந்து சான்றுகள் காட்டுவார். சல்லடை போன்ற அமைப்புடைய தன் அலகால் பூநாரை ஏரிகளில் இரைதேடுவதை விளக்கச் சங்கப்பாடல் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார். சமகால இலக்கியத்திலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவருடைய நண்பர் தி. ஜானகிராமன் எழுதிய ‘அம்மா வந்தாள்’ நாவலை The sins of Appu’s Mother என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இல்லஸ்ட்ரேடட் வீக்லி யில் தொடர்ந்து வெளியிட்டார். பின்னர் இது ஒரு நூலாகவும் வெளிவந்தது. 1995இல் ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ என்ற துப்பறியும் நாவலை எழுதினார்.
கிருஷ்ணன் தமிழில் விளையாட்டாகச் சில கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் அவை பிரசுரமாகவில்லை. வால்பாறைக்கருகே உள்ள வனத்துறையைச் சார்ந்த தங்கும் விடுதியொன்றிலுள்ள விருந்தினர் புத்தகத்தில் கிருஷ்ணன் தம் கைப்பட எழுதிய பாடல் ஒன்றைப் படித்தேன். அந்த விடுதியின் காப்பாளர் தங்கவேலு என்பவர் ஒரு பிரபல இயற்கை வரலாற்றியலாளரிடம் பேசுகிறோம் என்றறியாமல், சுற்றியுள்ள காட்டில் நான்கு வகையான புலிகள் உண்டு என்று கூறி, ஒவ்வொன்றையும் விவரிக்க ஆரம்பித்திருக்கிறார். இதைக் கேட்ட கிருஷ்ணன், அந்தக் குறிப்பேட்டில் பின்வருமாறு எழுதிவைத்தார்:
படிப்பில்லையானாலும் பார்த்தும் பல்லாண்டு பகுத்தறிவின்
அடிப்படியாக அறிந்தவை யெத்தனை - அத்தனையும்
படிப்படியாகப் பிறர்க்குப் பயனூட்டும் தங்கவேலு
கொடிப்புலி கண்ட குருவே நீ வாழி கொழுந்துவிட்டே.
அங்கிருந்து டாப்ஸ்லிப் என்னுமிடத்திற்குச் சென்றார். அங்கு பன்னீர் செல்வம் என்ற வனஅதிகாரி வரையாடு இருக்குமிடத்தைக் கண்டு, கிருஷ்ணனை மாலையில் அழைத்துப் போவதாகக் கூறினார்; ஆனால் வரவில்லை. அவருக்குக் கிருஷ்ணன் ஒரு வெண்பா எழுதி அனுப்பிவைத்தார்.
வரையாடு வருவதையும் வாராததையுமறிந்து சொல்ல
உரையாடிச் சென்றேன் உமதிடத்தில் - திரையாடும்
பேசும்படம் பார்க்கப் பேசாது சென்றுவிட்டீர்
ஏசும் படியா னேனே!
கிருஷ்ணன் தமிழில் இலக்கியக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியிருந்தாலும் இயற்கை வரலாறு சார்ந்த கட்டுரைகளே அதிகம்; முக்கியமும்கூட. இத்தகைய கட்டுரைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு 1950இல் எழுதிய ‘நாயக்கர்சேரி நாய்கள்.’ ஆங்கில எழுத்தாளர்கள் ஜேம்ஸ் தர்பர், பி.ஜி. வோடோஸ் நாய்களை வர்ணிக்கும் நடையை இது ஞாபகப்படுத்துகிறது. கிருஷ்ணனுக்கு வோடோஸ்ஸின் எழுத்தில் மிக்க அபிமானம் உண்டு. எளிய நடையில் காட்டுயிர்சார்ந்த கருதுகோள்களைத் தெளிவாக விளக்குவது கிருஷ்ணனின் திறமை. ஊடே நகைச்சுவையும் சன்னமாக இழையோடும்.
1954 - 1961 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தில், கிருஷ்ணனின் காட்டுயிர் சார்ந்த கட்டுரைகள் பல இடம்பெற்றன. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் புகழக்கத்திலிருக்கும் சரியான தமிழ்ப் பெயர்களை இவர் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. அவருடைய களப்பணி அனுபவத்தைச் சார்ந்தே அவரின் கட்டுரைகள் அமைந்திருந்தன. மற்றொருவர் நோக்கையோ கண்டுபிடிப்பையோ அவர் எழுதவில்லை. காட்டுயிர்களின் வாழ்முறையைத் துல்லியமாக, எளிய தமிழில் விவரிக்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய பாரம்பரிய ஞானத்தின் வெளிப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அறிவியல்சார்ந்த கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்குகிறார்.
தமிழில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளும் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் வெளியிடப்பட்டாலும், காட்டுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் எழுதப்படுபவை மிகக் குறைவு. வெகுஅரிதாகக் காட்டுயிர்ப் பேணல் பற்றிய கட்டுரை இரண்டொன்றைக் காண முடிந்தாலும், இயற்கையியல்சார்ந்த நூல்களைக் காண முடிவதில்லை. பிரிட்டிஷ் அரசு காலத்தில் பிரபல வேட்டைக்காரராயிருந்த ஜிம் கார்பெட்டின் நூல்கள் சில மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இன்றைய அச்சு ஊடகங்களில் காட்டுயிர் பற்றிய சில செய்திக்குறிப்புகள் வந்தாலும், அவற்றின் பெயர்கள், கலைச்சொற்கள் ஆகியவற்றில் பெருங்குழப்பத்தையே காணமுடிகிறது. சாதாரணமாக மாலைவேளைகளில் காணக்கூடிய கூகை என்ற ஆந்தையை ஒரு நாளிதழ் ‘விநோதப் பறவை பிடிபட்டது’ என்று தலைப்பிட்டு எழுதுகிறது. அழுங்கு என்று கிராமப்புறத்தில் அழைக்கப்படும் சிறுவிலங்கு ஒன்றின் படத்தை வெளியிட்டு ‘எறும்புத்தின்னி’ என்று அதன் ஆங்கிலப் பெயரான ant - eater என்பதன் மொழியாக்கத்தை வெளியிட்டது மற்றொரு நாளேடு.
அண்மையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலிலும் இல்லாத பெயர்களைக் கற்பித்தெழுதி மேலும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்கள். மலைமுகடுகளில் வாழும் வரையாடு என்ற விலங்கிற்கு, ‘நீலகிரி காட்டாடு’ என்று பெயர் சூட்டிவிட்டார் மொழிபெயர்ப்பாளர். பற்பல பறவை, விலங்குப் பெயர்களுக்கும் இதே கதிதான் - ‘அருவி’ என்பது ‘நீர்வீழ்ச்சி’ என்றாகிவிட்டது போல! நல்லவேளையாகத் தாவரங்களின் பெயர்கள் மறக்கப்படவில்லை. சித்த மருத்துவர்களால் அவை பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் உயிரினங்களின் தமிழ்ப் பெயர்கள் மெல்ல மறைந்து வருகின்றன.
காட்டுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பேணல் இவைபற்றிய கலைச் சொற்கள் தமிழில் வளராதது, இப்பொருள் பற்றி நம்மிடையே எந்தவொரு விழிப்புணர்வும் ஏற்படாததைக் காட்டுகிறது. இதன் விளைவாகத் தமிழ் வாசகர்களிடையே காட்டுயிர்களையும் அவற்றைப் பேணுதலையும் குறித்த ஆர்வம் உருவாகவில்லை. நம்நாட்டில் பல்வேறுவகையான வாழிடங்கள் - மலைத்தொடர்கள், கடற்கரை, மழைக்காடுகள், நதிகள், பாலைவனம், புதர்க்காடு, ஏரிகள் என இருந்தும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளின் சொல்லாடல் இன்னும் உருவாகவில்லை. தற்காலத் தமிழ் இலக்கிய உலகம் ஒரு புதிய உத்வேகத்துடன் இயங்கினாலும் பசுமை இலக்கியம் தமிழில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. வயற்புறங்களிலும் காடுகளிலும் காணப்படும் உயிரினங்கள் பற்றிய நாட்டுப்புற மக்களின் பட்டறிவு, பதிவு செய்யப்படாமல் மறைந்து வருகிறது. இந்த அறிவும் அதுசார்ந்த சொற்களும் மீட்கப்பட்டுப் புழக்கத்திற்கு வர வேண்டும். பறவைகள், விலங்கினம் இவற்றின் பாரம்பரியத் தமிழ்ப் பெயர்களை மறந்துவிட்டோம். இத்தகைய பின்புலத்தில் மா. கிருஷ்ணனின் கட்டுரைகளை நாம் காண வேண்டும். எழுத்தையே வாழ்க்கைக்குரிய ஊதியம் தரும் தொழிலாக மா. கிருஷ்ணன் மேற்கொள்ள முடிவுசெய்தபோது தமிழில் இது சாத்தியம் இல்லையென்று ஆங்கிலத்திலேயே எழுத முற்பட்டதைத் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பென்று சொல்லாமல் இருக்க முடியாது.
1970இல் ஏற்பட்ட எண்ணெய்ப் பற்றாக்குறை, சுற்றுச்சூழலைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. 1972இல் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த உச்சி மாநாடு, அனைத்து நாடுகளின் கவனத்தையும் சுற்றுச்சூழல் மீதும் கானுயிர் மீதும் திருப்பியது. இதன் விளைவாகக் கானுயிர் அக்கறை நம் நாட்டில் ஒரு பேரலையாக எழுந்தது. கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972இல் இயற்றப்பட்டது. 1976இல் புலிகள் செயல் திட்டம் செயலாக்கப்பட்டது. வேட்டையாடும் கொடிய பழக்கம் 1991இல் தடை செய்யப்பட்டது. கானுயிரியல், சூழலியல் என்னும் புதிய துறைகள் அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்தன. உத்திராஞ்சல் மாநிலத்தில் டேராடூன் நகரில் இந்தியக் கானுயிர் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. பல புதிய சரணாலயங்களும் தேசியப் பூங்காக்களும் தோற்றுவிக்கப்பட்டன.
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கானுயிர்ப் பாதுகாப்பின் மீதான ஆர்வம் பல நடவடிக்கைகளில் பிரதிபலிக்கப்படுவதை நாம் காணலாம். இதைச் சார்ந்த சுற்றுச்சூழல் இயக்கமும் தன்னைப் பலவிதங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில் காட்டுயிர்ப் பாதுகாப்பிற்கு மட்டும் ஏறக்குறைய நாற்பது தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன. கேரளத்தில் சுற்றுச்சூழல் சமன்பாடு, கானுயிர்ப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இத்துறைக்கெனத் தனிப் பத்திரிகைகளும் உண்டு. வெகுசனப் பத்திரிகைகளும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டுத் தமக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்திக்கொள்ளுகின்றன. புற உலகைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஒரு தீவிரச் சொல்லாடல் அங்கே இருப்பதை நாம் காணலாம். கன்னடத்திலும் மலையாளத்திலும் சுற்றுச்சூழலுக்குரிய கலைச்சொற்களும் கருதுகோள்களும் முன்பே புழக்கத்தில் இருந்தன.
தமிழ்நாட்டில் கானுயிர் நூல்களோ சொல்லாடல்களோ உருவாகவில்லை. பத்திரிகைகளும் கானுயிருக்கு இடம் ஒதுக்குவதில்லை. செய்திகளை வெளியிட்டாலும் அவை மிகவும் அந்நியப்படுத்தப்பட்ட தொனியிலேயே இருக்கின்றன. சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு, உயிரியல் ஆகிய துறைகளைச் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உரிய கலைச்சொற்கள் இன்னும் உருவாகவில்லை. நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்களிலும் விலங்குகள், பறவைகள் பற்றி வரும் குறிப்புகள் நமக்கிருக்கும் அறியாமையையும் உதாசீனத்தையும் காட்டுகின்றன.
இந்தப் பின்னணியில் கிருஷ்ணனின் கட்டுரைகளை நாம் அணுக வேண்டும். 1940களிலும் 50களிலும் எளிய தமிழில் கானுயிர், இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதி, சூழலியல் சார்ந்த கருதுகோள்களை அவர் விளக்க முற்பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நம்நாட்டிலோ அல்லது உலகளவிலோகூடத் தோன்றியிருக்கவில்லை. வேட்டை இலக்கியங்களைப் படித்து மகிழ்ந்துகொண்டிருந்த காலமது. அவருடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம் கண்டுகொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம். மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும், புலி அழிவின் விளிம்பிலிருப்பது பற்றியும் இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்து பற்றியும் ஒரு தீர்க்கதரிசி போல் எழுதினார்.
பறவைகளின் மீதான ஆர்வம் என்னுள் துளிர்விட்டபோது (1962) நான் மா. கிருஷ்ணனைச் சந்தித்தேன். அன்று ஏற்பட்ட நட்பு அவர் மறையும்வரை தொடர்ந்தது. மா. கிருஷ்ணன் என் வாழ்வின் ஒரு முக்கியப் பாதிப்பு. அவருடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. வெளிமாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருடன் செலவிட ஒரு மாலை நேரத்தை ஒதுக்குவதுண்டு. மொட்டை மாடியில், சாய்வு இருக்கையில் அமர்ந்தபடி மணிக்கணக்காகப் பேசுவார். 1996இல் ஜனவரி மாதம் அவரைக் காணச் சென்றேன். அன்று அவர் படுத்துக்கொண்டே பேசியது என் நெஞ்சை அழுத்தியது. நான் அகமதாபாத் சென்ற சில வாரங்களில் அவர் இறந்த செய்தி கிடைத்தது.
(1996இல் எழுதப்பட்டது.)