யானைகளின் கலைஞன்
மலேசியாவின் புகழ்பெற்ற ஓவியர் முகமது யூசோப் இஸ்மாயில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி காலமானார். யூசோப் காஜா என்றே பரவலாக அழைக்கப்பட்டுவந்த இவரது ஓவியங்களும் சுவர்சித்திரங்களும் சிலை நிறுவலாக்கங்களும் (installations) வரைபடங்களும் சிறார் ஓவியநூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
பிப்ரவரி 10, 1954 இல் நெக்ரி ஸெம்பிலான் பகுதியில் உள்ள ஜோஹோல் என்ற சிற்றூரில் பிறந்தவர் யூசோப் காஜா; இளம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதில் நாட்டம் கொண்டிருந்தார். 1970களின் மத்தியில் சிங்கப்பூரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து யூசோப் காஜாவின் ஓவியப் பயணம் வேகமெடுத்தது. மிக எளிமையான, நாட்டார் கலையம்சங்களோடு கூடிய இவரது ஓவியங்களில் வெளிப்படும் இயல்பான மனிதத்தன்மை காரணமாக அவை அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்தன.
யானைகள்தான் யூசோப் காஜாவின் அபிமான ஓவியத் தேர்வுகள். விதம்விதமான, வண்ணமயமான யானைகளைத் தனது காலம் முடியும்வரை தீட்டினார். இந்த யானை ஓவியங்கள் மலேசிய கலை, கலாச்சார வெளியின் பகுதியாக இப்போது மாறியிருக்கின்றன.
“சில ஜென் மாஸ்டர்கள் ஒரேயொரு புல்லை வரைவதற்கு நாற்பது வருடங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் யானைகளை வரைவதில் சலிப்பு ஏற்படும்வரை வரைந்துகொண்டுதான் இருப்பேன். இருபது வருடங்களாக வரைந்து வந்தாலும் இன்னும் சலிப்பு உண்டாகவில்லை,” என்பவர், தன் ஓவியங்களைப்பற்றிக் கூறும்போது, “நான் வரையும் யானைகள் யதார்த்தச் சித்திரங்கள் அல்ல. என் கற்பனையில் யானையைப் பலவடிவங்களில் பல அம்சங்களோடு காண்கிறேன். ஆனால் அவையெல்லாமே மனிதர்களோடு தொடர்புகொண்டிருப்பவைதான்,” என்கிறார். வலுவான சமூக உறவுப்பிணைப்பையும்,சமூக அக்கறையையும், வன உயிர்களின் பாதுகாப்பையும், சுற்றுச்சுழல் பாதுகாப்பையும் இவரது ஓவியங்கள் கருப்பொருட்களாகக் கொண்டிருக்கின்றன.
சிறுவர்களுக்கான ஓவியப்பயிற்சி முகாம்களையும் நிகழ்ச்சிகளையும் ஆர்வத்தோடு நடத்திவந்த இவரது ஓவியக்கூடத்தில் இவரது பிரசித்திபெற்ற யானை ஓவியங்களோடு ‘தாயும் சேயும்’ ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இவரது ‘The Real Elephant’ நூலுக்காக ‘சிறந்த சிறார் ஓவிய நூல் விருது’ மலேசியாவின் தேசிய நூற்கழகத்தால் வழங்கப்பட்டது. இதே நூலுக்கு Noma Concours Grand Prix விருதும் கிடைத்துள்ளது. பஹாஸா மலேசிய மொழியில் வெளிவந்த இந்நூல் இப்போது ஜப்பானிய,கொரிய மொழிகளிலும் பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழில்: ஜி. குப்புசாமி
நன்றி: thestar.com