சாமிநாதனும் சிவகுருநாதனும் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம்
காலச்சுவடு ஏப்ரல் 2022 இதழில் பெருமாள்முருகன் ‘சாமிநாதனும் சிவகுருநாதனும்’ என்ற கட்டுரை எழுதியிருந்தார். அதில் உ.வே.சாவின் பெயர்மாற்றம் பற்றிய பீடிகையில் உ.வே.சா.வின் “குலதெய்வம் பெருமாள்; பெயர்களும் பெருமாள் நாமம். ஆனால் சிவ வழிபாட்டையும் சைவ வழிபாட்டு நெறிமுறைகளையுமே அவர் குடும்பத்தினர் கடைப்பிடித்தனர். பெயரில் வைணவம்; நடைமுறையில் சைவம். இந்த மாற்றத்தின் காரணம் ஆய்வுக்குரியது” (அழுத்தம் எனது) எனக் குறிப்பிடுகிறார்.
முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம்: ஸ்மார்த்தம் சுத்தச் சைவமல்ல, வைணவமுமல்ல. தென்னிந்திய பிராமணர்களில் ஆதிசங்கரைப் பின்பற்றுவோரை ஸ்மார்த்தர்கள் என்றும் ராமானுஜரைப் பின்பற்றுபவர்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றும் மத்வரைப் பின்பற்றுபவரை மாத்வர்கள் என்றும் பிரிப்பார்கள். இவர்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் பொதுவாக தூய வைஷ்ணவர்கள்; பெயர், வழிபாடு இரண்டிலும். மாத்வர்களிலும் தூய வைஷ்ணவர்கள் உண்டு.
ஸ்மார்த்தர்கள், சூரியன் சிவன் விஷ்ணு அம்மன் கணபதி ஆகிய ஐவரை வழிபடும் பஞ்சாயத சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். விஷ்ணு சகஸ்ரநாமம், ருத்ரம் இரண்டையும் இவர்கள் பாராயணம் செய்வார்கள். சந்தியாவந்தனத்தின்போதும் பிற சடங்குகளின்போதும் செய்யும் சுத்தியான ஆசமனத்தில் இவர்கள் உச்சரிப்பது விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களையே. இதைப் பற்றி, பிராமண சம்பிரதாயங்களை நன்கு அறிந்த காஞ்சி மட மூத்த மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சொல்வதைப் பார்ப்போம்:
‘சைவர்கள், வைஷ்ணவர்கள் என்பவர்களில் பூரண சைவர்கள், பூரண வைஷ்ணவர்கள் சிலர் இருக்கிறார்கள். அதாவது லிங்காயத்துகள் பூரண சைவர்கள்; ராமனுஜ ஸம்பிரதாயத்தை அனுஷ்டிப்பவர்களில் ஸாதாரண வைஷ்ணவர்கள் சிலர் இருவகைக் கோயில்களுக்கும் போகிறவர்களாக இருக்கலா மாயினும் அவர்களுடைய ஆசார்ய புருஷர்கள் சிவாலயத்துக்குப் போக வேண்டியதில்லையென்றும், சிவ புராணங்களைக் கேட்க வேண்டியதில்லை யென்றும் சொல்வார்கள். வீரசைவர்கள் விஷ்ணுகோயிலுக்குப் போக வேண்டியதில்லையென்றும் விஷ்ணுபுராணங்களைக் கேட்க வேண்டியதில்லையென்றும் சொல்வார்கள். இவ்விருவருக்கும் மத்தியிலிருக்கும் நாம் - அதாவது ஸ்மார்த்த பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள் – எல்லோரும் இரண்டு பக்தியும் செய்கிறோம்.
விபூதி இட்டுக்கொண்டும் விஷ்ணு கோவிலுக்குப் போவார்கள். வீர சைவர்கள், வீர வைஷ்ணவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் இரண்டும் பொது. விபூதி தாரணம் செய்துகொண்டு ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, ராதா கல்யாணம் முதலியன கொண்டாடுவார்கள். விபூதி ருத்திராக்ஷம் தரித்திருப்பினும் அவர்களுக்கு விஷ்ணுபக்தி அதிகம். விபூதி ருத்ராக்ஷம் பரம்பரைச் சின்னம். அவர்களுடைய ஸொந்த பக்தி விஷ்ணு பக்தி. சிலர் ஊர்த்துவபுண்டரம் போட்டுக்கொள்வார்கள். ஆனால் சிவ பக்தி செய்வார்கள். இவைகளைத் தவிர கர்மானுஷ்டானங்கள் பொது” (‘சிவ விஷ்ணு அபேதம்- ஆசார்யர் 50 அரிய உபன்யாஸங்கள்’ – கலைமகள் வெளியீடு -1936).
இனி உ.வே.சா.வின் குடும்பத்திற்கு வருவோம். பெருமாள்முருகன் ‘குடும்பத்தினர்’ என்று குறிப்பிடுவது எவரை என்று புரியவில்லை. ‘என் சரித்திர’த்தின்படி உ.வே.சா.வின் தந்தைவழி முன்னோர்கள் வைணவ வழிபாட்டையும் வழிபாட்டு நெறிமுறைகளையுமே கடைப்பிடித்தனர் என்பது தெரிகிறது; இந்தக் குடும்பங்களிலுள்ள ஆண் பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈர வஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அப்படி எடுத்த அரிசியை வீட்டிற்குக் கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம் (‘என் சரித்திரம்’ – ப.சரவணன் பதிப்பு- பக்.43).
இந்தப் பத்திக்கு முன்பத்தியை மேற்கோள்காட்டிய பெருமாள்முருகன் இதை ஏன் பார்க்காமல்விட்டு விட்டார் என்று தெரியவில்லை. இந்தப் பத்தியில் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படாததால் புரட்டாசிச் சனிக்கிழமை வழிபாட்டைச் சிவ வழிபாடாக எடுத்துக்கொண்டுவிட்டாரா? இந்தச் சம்பிரதாயத்தை உ.வே.சா.வும் கடைப்பிடித்துவந்ததும் பட்டீஸ்வரத்தில் ஆறுமுகத்தா பிள்ளை தலையீடு காரணமாக அதற்கு ‘விடை’ கொடுக்கவேண்டி வந்ததும் தெரியவருகிறது:
‘புரட்டாசிச் சனிக்கிழமைகளில் …’ காலையில் ஸ்நானம் செய்து அயலார் வீடுகளுக்கு ஈர வஸ்திரத்தோடு மௌனமாகச் சென்று ஈரச் சவுக்கத்தில் அட்சதை வாங்குவதை ஒரு விரதமாக எங்கள் முன்னோர்கள் கொண்டிருந்தனர். இதனைக் ‘கோபாலம் எடுத்தல்’ என்று சொல்வார்கள்.
‘பட்டீஸ்வரத்தில் நானிருந்தபோது முதல் சனிக்கிழமையன்று கோபாலம் எடுக்கும் பொருட்டுக் காலையில் ஸ்நானம் செய்யப் புறப்பட்டேன். ஆறுமுகத்தா பிள்ளை என்ன விசேஷமென்று விசாரித்தார். நான் விஷயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு மிக்க கோபம் உண்டாகிவிட்டது. “நீர் வைஷ்ணவரா? இந்த விரதத்தையெல்லாம் உங்களூரில் வைத்துக்கொள்ளும். இந்த எல்லைக்குள் அப்படிச் செய்யக் கூடாது. சைவர்களாகிய எங்களோடு பழகும் உமக்கு இப்படிப் புத்தி போனது ஆச்சர்யம்!” என்று கண்டிக்க ஆரம்பித்தார். அன்றியும் நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டிற்கு, நான் கோபாலம் எடுத்துக்கொண்டு வந்தால் உணவு அளிக்க வேண்டாமென்று சொல்லியனுப்பினார். நான் என்ன செய்வேன்! பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிடக்கூடாதென்றும் அதனால் பெருந்தீங்கு நேருமென்றும் நான் நம்பியிருந்தேன்… அன்று மத்தியான்னம் நான் உணவு கொள்ளவேயில்லை. தென்னந்தோப்பிற் சென்று கீழே படுத்துப் பசியினால் புரண்டேன்…
நான் உண்ண வரவில்லை யென்று தெரிந்து எனக்கு ஆகாரம் அளிக்கும் வீட்டினர் மிகவும் வருந்தினர். அவர்கள் அங்கே வந்து என்னைக் கண்டு வற்புறுத்தினமையால் அன்று பிற்பகலில் ஐந்துமணிக்குப் போய் போஜனம், செய்தேன். புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு அந்த ஊரில் விடை கொடுத்துவிட்டேன்.’(எ.ச. பக்.288). (அழுத்தம் எனது.)
உ.வே.சா.வின் தாய்வழிப் பாட்டனார் (மாதாமகர்) கிருஷ்ண சாஸ்திரிகள் சிவபூஜை செய்து வந்தார். உ.வே.சா.வின் தந்தையாருக்கு இயல்பாகவே சிவபூஜையில் நாட்டம் இருந்ததால் பின்னர் அதைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகே குடும்பத்தில் சிவபூஜைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. என்றாலும், உ.வே.சா.வின் தந்தையார் பெருமாள்மீதும் பக்தி கொண்டிருந்தார் என்பதை ஒரு சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. உ.வே.சா.வும் அவரது தாயும் தந்தையும் அரியிலூரை விட்டுக் குன்னம் குடிபெயரத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
தந்தையார் ஈசுவரப் பிரார்த்தனை செய்துகொண்டே என்னை எடுத்து வண்டியில் உட்காரவைத்தார். அந்தச் சமயத்தில் பெருமாள் கோயில் பக்கம் மேள வாத்தியத்தின் சத்தம் கேட்டது. தந்தையார் திரும்பிப் பார்த்தார். அங்கே காளிங்க நர்த்தன மூர்த்தியைப் படிச் சட்டத்தின் மீது எழுத்தருளிவித்துக் கோவில் வாயிலில் தீபாராதனை செய்தார்கள். என் தந்தையாருக்கு மயிர்க்கூச்செறிந்தது. “ நல்ல சகுனமாக இருக்கிறது. தெய்வத்தை நம்பிப் பிரயாணப் படுகிறோம்” என்று அவர் மனமுருகிக் கூறினார்.
… அந்தக் கிருஷ்ண விக்கிரகத்தை … தீபாராதனை செய்தார்கள். அந்தச் சமயமும் எந்தையார் என்னை வண்டியில் ஏற்றிய சமயமும் ஒன்றாக இருந்தன… அந்தக் கற்பூர ஒளி, “பழகிய இடத்தை விட்டுவிட்டுப் புதிய இடத்திற்குப் போகிறோமே!” என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த என் தந்தையாருடைய உள்ளத்தையும் விளக்கியது.’ (எ.ச. பக்.120)
ஸ்மார்த்தம் கொள்கை ரீதியாகவும் நடைமுறையிலும் சைவமாக இருக்க முடியாது.
இந்தக் கட்டுரையில் பெருமாள்முருகன் இரண்டு ‘கண்டுபிடிப்பு’களைச் செய்திருக்கிறார்.
முதல் கண்டுபிடிப்பு : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது இறுதி நாட்களில் சவேரிநாத பிள்ளைக்கு உதவச் சொல்லிச் சிலருக்குப் ‘பரிந்துரைக் கடிதங்கள்’ எழுதினார்; சவேரிநாத பிள்ளைக்குக் கிடைத்த இந்தப் ‘பாக்கியம்’ உ.வே.சா.வுக்குக் கிடைக்காததற்குக் காரணம், “உ.வே.சா. பார்ப்பனர் என்பதாலும் சைவர் என்பதாலும் திருவாவடுதுறை மடம் உள்ளிட்ட பலரின் ஆதரவு கிடைக்கும், கிறித்துவரான சவேரிநாத பிள்ளைக்கு அது சாத்தியமில்லை என மகாவித்துவான் கருதியிருக்கலாம்.”.
மகாவித்துவானுக்கும் அவரது மாணவர்களுக்குமிடையிலான உறவை இதைக் காட்டிலும் கொச்சைப்படுத்த முடியாது. முதலாவது, கிறித்துவராக இருப்பது அக்காலத்தில் தகுதிக் குறைவாகக் கருதப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மகாவித்துவான் கடிதம் எழுதிய கிறித்துவக் கனவான்கள் நால்வருமே அக்காலத்தில் பொருளும் புகழும் பெற்றுத் திகழ்ந்தவர்கள். வேதநாயகம் பிள்ளைக்கு அறிமுகம் தேவையில்லை. வரகனேரி சவரிமுத்தா பிள்ளை அக்காலத்தில் நன்கு மதிக்கப்பட்ட தனவந்தர்; மகாவித்துவானிடம் பாடம்கேட்ட ஆசிரியரான புதுச்சேரி சவராயலு நாயகருக்கு “அதன்பின்பு கிறித்துவக் குழாம்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம்” (மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், பாகம் 1, பக்.146); மகாவித்துவானின் மாணாக்கரான காரைக்கால் தனுக்கோடி முதலியார் அரசுப் பணியில் நல்ல நிலையிலிருந்தார். நிலைமை இப்படியிருக்க பெருமாள்முருகன் எதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்? இரண்டாவதாக, பெருமாள்முருகனே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி வேதநாயகம்பிள்ளையின் உறவினரும் அவரால் மகாவித்துவானிடம் அனுப்பப்பட்டவருமான சவேரிநாத பிள்ளைக்கு உதவச் சொல்லி அவருக்கே ‘பரிந்துரைக் கடிதம்’ அனுப்பினார் என்பது அபத்தமல்லவா? மீனாட்சிசுந்தரம் பிள்ளை கடிதம் எழுதிய பிற புரவலர்களும் சவேரிநாத பிள்ளையையும் அவருக்கும் மகாவித்துவானுக்குமிருக்கும் நெருங்கிய உறவையும் அறியாதவர்கள் அல்லர். அப்படியானால் அவர்களுக்கு எதற்காகப் ‘பரிந்துரைக் கடிதம்’? இதற்கான விடை, பெருமாள்முருகன் தன் கண்டுபிடிப்புக்குச் சாதகமாக்கிக்கொள்வதற்காக நறுக்கியும் திரித்தும் கொடுத்துள்ள பகுதியை முழுமையாகப் படித்தால் தெரியவரும். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்திலுள்ள அப்பகுதி இதோ:
தம்முடைய தேகஸ்திதி மிகவும் தளர்ச்சி அடைந்துகொண்டு வருவதையறிந்த இவர் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை), தம்மிடத்திற் படிக்கும் வியாகத்தை வைத்துக்கொண்டு பல வருஷங்களாக இருந்து வேறொரு பயனையும் கருதாமல் தமக்குப் பணிவிடைசெய்துகொண்டும் தமது குடும்பக் காரியங்களைக் கவனித்துக்கொண்டும் உண்மையாக நடந்துவந்த சவேரிநாத பிள்ளைக்கு விவாகம் செய்வித்து ஏதேனும் உபகாரம் செய்து ஸௌகரியப்படுத்தி வைக்க வேண்டு
மென்று எண்ணினார். தம்முடைய நண்பர்களாகிய முனிஸீப் வேதநாயகம் பிள்ளை, வரகனேரி சவரிமுத்தா பிள்ளை, புதுச்சேரி சவராயலு நாயகர், காரைக்கால் தனுக்கோடி முதலியார் முதலிய கிறிஸ்தவ கனவான்களுக்கும், பட்டீச்சுவரம் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன்மாளிகை இரத்தினம் பிள்ளை முதலியவர்களுக்கும் தம் எண்ணத்தைப் புலப்படுத்தித் தனித்தனியே கடிதமெழுதும்படி என்னிடம் சொன்னார் (மீ.ச.பாகம் 2 பக்.242 ) (அழுத்தம் எனது.)
இந்த மேற்கோளிலிருந்து மகாவித்துவான் எழுதியது ‘பரிந்துரைக் கடிதங்கள்’ அல்ல, தம்மோடு நெருங்கியவர்களுக்கு சவேரிநாதப் பிள்ளையின் எதிர்காலம் குறித்த தம் உள்ளக்கிடக்கையைக் குறிப்புணர்த்தி உணர்ச்சியோடு எழுதப்பட்ட கடிதங்கள் என்பது தெளிவு.
இனி உ.வே.சா. விஷயத்துக்கு வருவோம். உ.வே.சா. அவசரமாக வேலை தேடிக்கொள்ளாமல் தொடர்ந்து மேலும் கற்க வேண்டும் என்பதில் விருப்பமுடையவராக மகாவித்துவான் இருந்தார் என்பது ‘என் சரித்திர’த்திலிருந்து தெரிகிறது. இதைச் சுட்டும் சம்பவம் ஒன்று அந்நூலில் பதிவாகியிருக்கிறது. பிள்ளையிடம் பாடம் கேட்டுவரும் காலத்தில் உ.வே.சா.வுக்கு தியாகராசச் செட்டியாரோடு பழக்கம் அதிகரிக்கிறது. செட்டியாருக்கு இருந்த நன்மதிப்பும், அவரது உத்தியோகம் காரணமாக எவர் தயவையும் எதிர்பாராத நிலையில் அவர் இருப்பதும் உ.வே.சாவுக்குப் புலப்படுகிறது. ‘பிள்ளையவர்கள் சில சமயங்களில் தம் ஜீவனத்துக்குப் பிறர் கையை எதிர்பார்க்கும் நிலைமையில் இருந்ததையும் கவனித்த’ உ.வே.சா.வுக்கு ‘நமக்கும் ஓர் உத்தியோகம் இருந்தால் பொருட் கவலையின்றி இருக்கலாம்’ என்று தோன்றுகிறது. செட்டியாரைச் சந்திக்கும்போது ஒருமுறை தனக்கு எங்கேனும் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துத்தரக் கேட்டுக்கொள்கிறார். இது பிள்ளைக்குத் தெரியாது. சிலநாட்கள் கழித்து செட்டியார், தனது அன்பர்கள் மூவர் கும்பகோணத்தில் புதிதாகத் தொடங்க இருக்கும் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதர் வேலைக்கு உ.வே.சா.வைச் சேரச் சொல்கிறார். பிள்ளையிடம் இருவரும் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். பின்னர் நடந்ததை உ.வே.சா. சொல்லக் கேட்போம்:
அவர் (பிள்ளை) சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அவர் மனத்துள் பலவகையான எண்ணங்கள் ஓடினவென்று தோன்றியது. பிறகு தியாகராச செட்டியாரைப் பார்த்தார். “தியாகராசு, இப்போது என்ன அவசரம்! இவர் இன்னும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவில்லை. உத்ஸாகமாகப் படித்துவருகிறார். இப்பொழுதே உத்தியோகத்துக்குப் போய்விட்டால் இவ்வளவு ஊக்கமாகப் படிக்க முடியாது. நேரமும் கிட்டாது. இன்னும் சில வருஷங்கள் படிக்கட்டுமே; அப்பால் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். என் விருப்பத்தைக் கேளாமலே அவர் சொன்னாலும் எனக்கு எது நன்மையோ அதை யோசித்தே அவர் அவ்வாறு கூறினார். செட்டியாரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். “ஐயா சொல்வது உண்மைதான். இளமையிலே படிப்பதுதான் நிற்கும். நாள் ஆக ஆக உயர்ந்த உத்தியோகம் உம்மைத் தேடிக்கொண்டு வரும். நீர் கவலைப் படவேண்டாம். இவர்களிடம் நன்றாகப் படித்துக் கொண்டிரும்” என்று என்னிடம் சொன்னார். (எ.ச. பக்.369).
உ.வே.சா.மீது பிள்ளை எவ்வளவு நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தார் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உரைகல்.
மகாவித்துவானுக்கும் சவேரிநாத பிள்ளைக்கும் உள்ள உறவு, ஒரு தந்தைக்கும் கடமையுணர்வுள்ள மகனுக்குமான உறவைப் போன்றது. வேறு எவராலும் கொண்டிருக்க முடியாத உறவு. உ.வே.சா.வின் வார்த்தைகளில், “இக் கவிஞர்பிரானுடைய இறுதிக் காலம் வரையில் நம்பிக்கையாக அவரைப் போல் வேறு எவரும் இருக்கவில்லை” (மீ.ச. பாகம் 1 பக். 318 ). மகாவித்துவானுக்கும் உ.வே.சா.வுக்குமான உறவு, தனது லட்சியத்திற்கு எல்லா வகையிலும் பொருந்திய ஒரு மாபெரும் வித்துவான் ஆசிரியராகக் கிடைத்ததைப் பேறாகக் கருதிய மாணவனுக்கும் கற்பதில் முனைப்பும் விடாமுயற்சியும் கவனமும் கொண்ட ஒரு மாணவனைப் பெற்றதில் பேருவகைக் கொண்ட ஆசிரியருக்குமான உறவு. மகாவித்துவான், தமது மகன் வயதுகூட நிரம்பாத உ.வே.சா.வுக்குப் பாடம்சொல்வதற்காக அவர் இரவில் உணவை முடித்துவிட்டு வரும்வரையிலும் அந்த வீட்டுத் திண்ணையில் காத்திருக்கிறார் (எ.ச. பக். 277); ‘பாலபோத இலக்கணம்’ நூலை உ.வே.சா.வுக்குப் பாடம் சொல்வதற்காகத் தியாகராசச் செட்டியாரிடம் பிள்ளை கேட்டு அதைக் கொடுக்க அவர் உடன்படாததால், பிள்ளை அதிகாலை எழுந்து தனது அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அரை மைல் தூரத்திற்கு அப்பால் இருந்த நாரயணசாமி பிள்ளை வீட்டிற்குச் சென்று வாங்கிவந்து உ.வே.சா. எழுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் (எ.ச.367).
‘சவேரிநாது’ என்னும் அழைப்பில் பெருமாள்முருகன் உணர்ந்த வாஞ்சையின் சிறு துளியையேனும் தன்னளவில் ஒரு ‘ஆசானான’ அவர் இந்தச் சம்பவங்களிலும் உணர்ந்திருப்பாரென்றால் இந்த உறவுகளுக்குச் சாதிச் சாயம் பூசி மகாவித்துவானின் மேன்மையான குணநலன்களுக்குக் களங்கம் கற்பித்திருக்க மாட்டார்.
பெருமாள்முருகனின் இரண்டாவது கண்டுபிடிப்பு: மகாவித்துவானின் உடலைத் தொட்டுத் தீண்டி மார்பில் சாய்த்துக்கொள்ளும் பாக்கியம் சாதியின் காரணமாக உ.வே.சா.வுக்குக் கிடைக்கவில்லை; சூத்திரராகிய மகாவித்துவானைத் தொட்டால் அது தீட்டாகிவிடும்; ஆகவே தம் ஆசிரியர் உடலைத் தீண்டித் தாங்கும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கவில்லை; ‘இவருடைய (மகாவித்துவானுடைய) சரீரத்தைச் சார்த்திக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்த சவேரிநாத பிள்ளை’ என்று உ.வே.சா. தமக்கு அது கிடைக்காத ஏக்கத்தை வெளிப்படுத்துகிறாராம். இங்கு பெருமாள்முருகன் என்ற புனைவியலாளர் பளிச்சென்று தெரிகிறார். ஆய்வுக்குக் கற்பனையுணர்ச்சி தேவைதான். ஆனால் அதற்கும் ஓர் எல்லையுண்டு.
பெருமாள்முருகன் உருவியெடுத்துக்காட்டும் தொடரான ‘இவருடைய (மகாவித்துவானுடைய) சரீரத்தைச் சார்த்திக் கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்த சவேரிநாத பிள்ளை’ என்பது சவேரிநாத பிள்ளை பற்றிய அறிமுகமாக உ.வே.சா எழுதிய பகுதி எதிலும் இடம்பெற்றதல்ல. ‘ஏக்கம்’ தொனிப்பதாகப் பெருமாள்முருகன் மேற்கோள்காட்டும் இந்த வரியை அது இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பொருத்திப் பார்ப்போம்.
பதினைந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருக்கு(மகாவித்துவானுக்கு) ஸ்வாதீனத் தப்பும் தேகத்தில் ஒரு துவட்சியும் உண்டாயின. அதனை யறிந்த சவேரிநாத பிள்ளை இவருடைய பின்புறத்திற் சென்றிருந்து இவரைத் தம்முடைய மார்பிற் சார்த்தி ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொண்டார். அப்பொழுது சில நாழிகைவரையில் இவருக்குப் பிரக்ஞை இல்லை; சிலநேரம் கழித்துப் பிரக்ஞை வந்தது. உடனே திருவாசகத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைப் படிக்க வேண்டும் என்னும் குறிப்போடு, “திருவா” என்றார். அக்குறிப்பை அறிந்து அப்புத்தகத்தை எடுத்துவந்து அடைக்கலப் பத்தை வாசித்தேன். கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டுவந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஓர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்தில் சென்றபொழுது வலக்கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜ மூர்த்தியுடைய குஞ்சித சரணத்தை இவர் அடைந்த குறிப்பாக எங்களுக்குத் தோன்றியது. அப்போது இவருக்குப் பிராயம் 61. அந்தச் சமயத்தில் இவருடைய சரீரத்தைச் சார்த்திக்கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருந்த சவேரிநாத பிள்ளை அந்த நல்லுடலைப் படுக்கையிற் கிடத்திவிட்டு மற்றவர்களோடு புலம்பிக்கொண்டே அயலில் நின்றார்” (மீ.ச.,பாகம் 2, பக்.246).
மிகுந்த துக்ககரமான ஒரு நிகழ்வைச் செறிவான வார்த்தைகளால் நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் இந்த விவரணையில், “பாக்கியத்தைப் பெற்றிருந்த” என்ற சொல்லாட்சி, சவேரிநாத பிள்ளை சரீரத்தைச் சார்த்திக்கொண்ட செயலை வெறுமனே ஒரு நடவடிக்கையாக அல்லாமல் மேன்மையான காரியமாகப் பெருமைப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டிருப்பது தெளிவு. இதைத்தான் உ.வே.சா.வின் ஏக்கமாகப் பெருமாள்முருகன் கட்டுடைத்திருக்கிறார்.
இனி உ.வே.சா. மகாவித்துவானைத் தீண்டியிருக்கிறாரா என்று பார்ப்போம்.
பிள்ளையும் உ.வே.சா.வும் இணைந்து ஒரே மாட்டு வண்டியில் பயணம் செய்திருக்கின்றனர். மகாவித்துவானும் சவேரிநாத பிள்ளையும் உ.வே.சா.வும் ஒரே வண்டியில் மாயூரத்திலிருந்து திருவாவடுதுறை செல்லும் வழியில் அம்பர் புராணத்தை மகாவித்துவான் சொல்லச்சொல்ல உ.வே.சா. எழுதிச்செல்கிறார். (எ.ச. பக். 309-310). ஆடியாடிச் செல்லும் மாட்டுவண்டியில் மகாவித்துவான்மீது உடல் பட்டுவிடாமல் உ.வே.சா. எப்படிப் பயணம் செய்திருக்க முடியும்? மேலும் பிள்ளையின் இறுதி நாட்களில் “இவர் (மகாவித்துவான்) நித்திரை செய்யாமல் தளர்வுற்று இருத்தலையறிந்து ஒருவர் மாறி ஒருவர் இவரைக் கவனிப்பதற்கு விழித்துக்கொண்டே வந்தோம்” (மீ.ச. பாகம் 2, பக். 240), “பால் சிறிதுசிறிது கொடுத்துவந்தோம்’ (மீ.ச. பாகம் 2, பக். 245) என்று உ.வே.சா. எழுதுவதை எப்படி பொருள்கொள்ள வேண்டும்?
உ.வே.சா. மகாவித்துவானைத் தொட்டிருப்பார் என்பதை மறைமுகமாகக் குறிக்கும் இந்த நிகழ்ச்சிகள் அன்றித் தொட்டதற்கான நேரடிக் குறிப்பு இருக்கிறதா? இருக்கிறது. உ.வே.சா.வின் ‘என் சரித்திர’த்தில்.
ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறை யிலுள்ள கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவது என் வழக்கம். இருட்டு வேளையில் ஆசிரியர் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று திரும்புவேன். (எ.ச. பக். 319).
இந்தப் பகுதி பெருமாள்முருகன் கவனத்தில்படாமல் போய்விட்டதா? இல்லை உ.வே.சா.வின் சாதியுணர்வு பற்றிய அவரது முன்முடிவுகள் அவர் கண்ணை மறைத்துவிட்டனவா?
பெருமாள்முருகனுக்குத் தென்பட்டிருக்கும் – ஆனால் மகாவித்துவான் விஷயத்தில் உ.வே.சா. உண்மையில் கடைப்பிடித்திராத - தொடாமைக்கு வலுச்சேர்ப்பதற்காக அவர் “கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் உடனுறைந்தாலும் உணவு, இருப்பிடம், ஆசாரம் ஆகியவற்றில் தனித்து விலகியே இருந்தவர் உ.வே.சா.” என்று கட்டுரையில் எழுதுகிறார். உ.வே.சா. பாடம்கேட்ட சூழல் மரபான சமூக விதிகள் பேணப்பட்ட சூழல் என்பதை மறந்து, நவீனமான கல்விச் சூழலில் உ.வே.சா. மட்டுமே முரண்பட்டு நிற்பதுபோல அவர் சித்தரிக்கிறார். உணவு விஷயத்தில் உ.வே.சா.வுக்குத் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உண்மை. தனிச் சாப்பாடு பிராமணர்களுக்கு மட்டுமல்ல என்பதும் உண்மை.
பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டுவந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற வகுப்பினர்கள் முதலிய பலவகையினர் இருந்தார்கள். பிராமணர்கள் அன்னச் சத்திரத்தில் உண்டு வந்தார்கள். சைவப் பிள்ளைகள் மடத்திற் பந்தியிலே ஆகாரம் செய்துவந்தனர். மற்றவர்களுக்கும் தக்கபடி உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன. (எ.ச. பக். 333). (அழுத்தம் எனது.)
‘சவேரிநாத பிள்ளை சைவர்களோடு பந்தி போஜனம் செய்வ தில்லை’ (எ.ச. பக். 382) என்று உ.வே.சா. குறிப்பிடுவது இதைத்தான்.
இனி இருப்பிடத்திற்கு வருவோம். உ.வே.சா., தான் மகாவித்துவானோடு இருந்த ஊர்களிலும் சென்ற ஊர்களிலும் அவரது குடும்பத்தாரோ அல்லது நெருங்கிய உறவினரோ அவ்வூர்களில் இருந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களோடு தனியாகத் தங்கினார். பிற சந்தர்ப்பங்களில் எல்லாம் மாணவர்களோடு சேர்ந்து செல்லும்போது அவர்கள் தங்குமிடங்களிலும் மகாவித்துவானோடு தனியாகச் செல்லும்போது அவர் எங்கு தங்கினாரோ அங்கும் கூடவே தங்கினார் என்றுதான் உ.வே.சா. எழுத்துக்கள் மூலமாகத் தெரியவருகிறது. பெருமாள்முருகன் குறிப்பிடுவதுபோல சாதி காரணமாக வலிந்து தனித்துத் தங்கினார் என்று கொள்ளும்படியாக ஆதாரங்கள் எவையும் இல்லை.
ஆசாரம் என்று பெருமாள்முருகன் எதைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. சிவதீட்சை பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் ஆசாரங்களும் ஸ்மார்த்தரான உ.வே.சா.வின் ஆசாரங்களும் ஒன்றாக இல்லாமலிருப்பது இயற்கை. உ.வே.சா. இருவரின் நியமங்களையுமே ‘அனுஷ்டானங்கள்’ என்று குறிப்பிடுகிறார். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இருவருமாக ‘அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வந்தோம்/மீண்டோம்’ என உ.வே.சா. ‘என் சரித்திர’த்தில் குறிப்பதிலிருந்து மகாவித்துவானோடு தனது அனுஷ்டானங்களை மேற்கொள்வதில் அவருக்கு மனத்தடை எதுவுமிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
சவேரிநாத பிள்ளை “பிரசங்கம் புரிவதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தாரா, திருமலைராயன் பட்டணத்தில் ஏதேனும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினாரா என்னும் விவரம் தெரியவில்லை” என்று பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார். உ.வே.சா.வுக்குச் சாதிச் சாயம் பூசுவதற்காக இருப்பதிலிருந்து இல்லாததைக் ‘கண்டுபிடித்த’ பெருமாள்முருகன், சவேரிநாத பிள்ளையை ஒரு துன்பியல் நாயகனாக்கும் முயற்சியில் அவர் என்னவாக இருந்தார் என்பது பற்றிப் பதிவு இருப்பதையே கோட்டைவிட்டுவிட்டார். உ.வே.சா.வின் புகழ்பெற்ற கட்டுரையான ‘டிங்கினானே’யின் கதை சொல்லி சவேரிநாத பிள்ளைதான். அவரைப் பற்றி அக்கட்டுரையில் உ.வே.சா. எழுதியிருப்பது இது:
அவர்களிடம்(மீனாட்சிசுந்தரம் பிள்ளை) நான் பாடங் கேட்டுவந்த காலத்தில் சவேரிநாத பிள்ளை என்ற ஒரு கிறிஸ்தவரும் உடனிருந்து பாடம் கேட்டுவந்தார். அவர் பிள்ளையவர்களிடம் மிகுந்த அன்புடையவர்; பிள்ளையவர்களுடைய இறுதிக்காலம் வரையில் உடனிருந்து வந்தவர். பிற்காலத்தில் காரைக்காலில் தமிழ்ப் பண்டிதராக இருந்து புகழ் பெற்றார். (‘டிங்கினானே’, ப.சரவணன் (ப.ஆ), பக். 61)
மகாவித்துவானின் உண்மை மாணவர்கள் எவரும் சோடைபோகவில்லை.
உ.வே.சா.வும் சவேரிநாத பிள்ளையும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குத் தங்களோடுள்ள உறவின் தனித்தன்மையை நன்கு உணர்ந்திருந்தவர்கள். ஒருவரின் இடத்தை மற்றவர் ஈடுசெய்திட முடியாத உறவு அது. உ.வே.சா. சவேரிநாத பிள்ளை பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் அவருக்கும் மகாவித்துவானுக்கும் உள்ள நெருக்கத்தைச் சொல்லத் தயங்கியதே இல்லை. உ.வே.சா. கடிதக் கருவூலத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சவேரிநாத பிள்ளையின் கடிதங்களிலிருந்து அவர் உ.வே.சா.வின் தமிழிலக்கிய அறிவை மிகவும் மதித்தார் என்பதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் இருவரிடையே இருந்த நட்பு வலிமை குன்றாது தொடர்ந்திருந்தது என்பதும் தெரிகிறது. எனவே சாதி / மதத்தைக் காட்டி இருவரையும் எதிரெதிராக வைத்து உண்மை பாக்கியசாலிகள் யார் என்று புடம்போடும் ஆராய்ச்சி தேவையற்றது; மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.
உதவிய நூல்கள்:
உ.வே. சாமிநாதையர், [ப. சரவணன் (ப.ஆ)]: என் சரித்திரம், 2017, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
உ.வே. சாமிநாதையர், [ப. சரவணன் (ப.ஆ)]: டிங்கினானே, 2016, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
உ.வே. சாமிநாதையர், திரிசிபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (நிழற்பட பதிப்பு) பாகம் 1 & 2, 1986, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம்.
ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1, 2018, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.
மின்னஞ்சல்: srinipotty66@gmail.com