பின்னை இட்ட தீ
இன்றைய இலங்கைச் சூழல் கவலையளிக்கிறது. அமைதி வழியில் காலிமுகத் திடலில் நடந்து கொண்டிருந்த போராட்டங்களில் ஆளும் அரசுத் தரப்பு நடத்திய தாக்குதல்கள் ஆளும் தரப்பினரின் இருப்புக்கே எதிராக மாறியிருக்கின்றன. கடுமையான மக்கள் போராட்டங்களின் ஊடாகக் குழு வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்களும் முன்னைய காலங்களில் அக்குடும்பத்தினரால் உதவி பெற்றவர்களும் தாக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ராஜபக்ஷவின் இவற்றை அரங்கேற்றியவர்கள் வேறு யாருமல்லர்; முன்னொரு போதில் ‘நவீன துட்டகை முனு’ எனவும் பயங்கரவாதத்தை அழித்த சுத்த வீரன் எனவும் ராஜபக்ஷவைக் கொண்டாடிய, போற்றிய அதே சிங்கள மக்கள்தான்.
இப்போராட்டங்கள், ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரானதாக மாறியதை வடக்குக் கிழக்கில் வாழும் சிலர் கொண்டாடிப் புளகாங்கிதம் அடைந்தார்கள். இதை ஊழ்வினை, கர்மா, விதிபோன்ற சமயச் சொல்லாடல்களுடன் கடவுளின் கைங்கரியமாகவும் எண்ணிக் கொண்டாடினார்கள். கடவுளின் பெயரால் இவை யாவும் நியாயத் தீர்ப்பிற்கு உள்ளானதாகக் குதூகலித்தார்கள். இன்னும் கொளுத்தப்பட வேண்டிய இடங்கள், வீடுகள், கடைகள், நபர்களின் தனிப்பட்ட முகவரிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். கூடவே தாம் தமிழீழத்தில் வாழ்வதைப் போன்றும், இலங்கை என்பது பக்கத்திலிருக்கும் ஓர் அந்நிய நாடு போன்றும் அரசியல் போதாமைகளுடன் வெளிப்பட்டவர்களும் உண்டு.
ஒரு குடும்பத்துக்கு எதிரான போராட்டமாக மட்டுமே தமிழ்ச் சமூகம் இந்தப் போராட்டங்களைப் புரிந்துகொண்டதன் விளைவே இந்தக் கர்மவினை பற்றிய பேச்சுக்கள். இலங்கையில் இனத்துவம் தீவிரமடைவதற்கு ஒரு குடும்பமே காரணம் என்று கூறுவது போதிய அரசியல் அறிவற்ற விளக்கம். சிங்கள ஆட்சியாளர்களின் உளவியலில் ஊறியிருக்கும் இன மேட்டிமைவாதமும் தமிழ் இன வெறுப்பின் விளைவே அங்கு நடந்த இன மோதல்களும் அழித்தொழிப்புகளும். போரை முடித்துவைத்தது வேண்டுமென்றால் ராஜபக்ஷ குடும்பத்தினராக இருக்கலாம். தமிழர்களின் உரிமைப் போராட்டம் ராஜபக்ஷவை முன்வைத்துத் தொடங்கப்பட்டதல்ல. அது உன்னதமான நோக்கங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடங்கப்பட்டதாகும். ஒரு சமூகம் எங்கும் எந்த விதமான அடக்குமுறையும் இன்றி வாழ வேண்டுவதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் அது.
போராட்டக் குணமும் நவீன அரசியல் பார்வையுமுள்ள ஜனநாயக வழிமுறைப்பட்ட ஒரு சமூகம் கண்ணுக்குத் தெரியாத, அறியாத எந்த விதமான அரூபங்களையும் நம்பி அதன்மேல் தன் பிரச்சினைகளை ஏற்றிக்கொண்டிருக்காது. சுய விமர்சனமே அதை உயிர்ப்புள்ள ஆரோக்கியமான அரசியல்மயப்பட்ட சமூகம் ஆக்கும். இங்கு தமிழ்த் தரப்பு தன்னைப் பற்றிக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, தான் ஏன் அரசியல்மயப்பட்ட சிவில் சமூகமாக மாறவில்லை என்பதே! தனிமனித பிம்ப அரசியல், சாகசங்கள், தமிழ்ப் பெருமிதங்கள் ஆகியவற்றில் ஏன் அது சிக்கிக்கொண்டது? நாற்பது வருடப் போராட்டம் உலக நாடுகளால் ஏன் சிதறடிக்கப்பட்டது? லட்சியம், தியாகத்தின் பேரால் ஏன் இத்தனை படுகொலைகள் நிகழ்ந்தன? இதைப் பற்றிய கூர்மையான கண்ணோட்டங்களைக் கைக்கொண்டிருந்தால் இந்தக் கொண்டாட்டப் படலங்களே நிகழ்ந்திருக்காது; மாறாக, போராடும் இளைஞர்களுடன் இணைந்து இலங்கையின் சமத்துவத்துக்கும் சுதந்திரத்துக்குமான நீண்ட போராட்டத்தில் தார்மீகமான ஒரு தரப்பாக அது மாறியிருக்கும். தமிழ் அரசியல் தலைமைகளின் போதாமைகளால், அவர்களின் முன் கையேந்தியபடி நின்றிருப்பதற்கான தேவைகளும் இருந்திருக்காது. தமிழ்த் தரப்பு ஊழ்வினை என்ற பதத்தைச் சற்றே ஆழமாக அலசிப் பார்த்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பலியானோரின் ஊழ்வினை எதுவென்று அது தார்மீகமாகக் கேட்டுக்கொள்ளவும் வேண்டியிருந்திருக்கும்.
தமிழ்ச் சமூகம் கண்மூடித்தனமாக ஊழ்வினையை நம்ப ஆரம்பித்திருப்பது அதன் அரசியல்மயப்படாத நிலையினாலேயே! கையறு நிலை எப்போதும் பதற்றத்தையும் அச்சத்தையும் உண்டாக்கும். அந்த அச்சமானது வானிலிருந்து இறங்கவிருக்கும் தேவதூதரை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். ஒருவிதத்தில் தமிழ்ச் சமூகம் முருகக் கடவுளாகப் பிரபாகரனை வரித்துக்கொண்டதும் இந்த ஆபத்பாந்தவர் மனநிலையினாலேயே. சிங்களச் சமூகம் நவீன துட்டகைமுனுவாக ராஜபக்ஷவைக் கொண்டாடியதும் இந்த மனநிலையின் தொடர்ச்சியே. தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களும் ராஜபக்ஷவின் மீதான வெறுப்பும் அவர் அழித்தொழிக்கப்பட வேண்டியவர் என்ற எண்ணம் சிங்களவர் மத்தியில் ஏற்பட்டதற்கும் காரணம் ஊழ்வினை என்று தமிழ்ச் சமூகம் கற்பித்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கற்பிதத்தின் வேர் அரசியல்மயப்படாத வெற்றுப் பெருமிதங்களிலிருந்து முளைக்கிறது.
ஒரு வீடு கொளுத்தப்படும்போது நாமும் அதற்குச் சார்பானவர்களாய் இருந்தோமானால் நாளை நமது வீடும் கொளுத்தப்படும்; அப்போது நாம் கதறி அழுவதற்குக்கூட லாயக்கற்றவர்கள் ஆவோம். அங்கு எரியூட்டப்பட்டது நாளை நமக்கும் நடக்கும் என்ற படிப்பினை இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்கெனவே நடந்திருக்கிறது. குரூரங்களையும் இழப்புகளையும் சந்தித்த ஒரு சமூகம் கோபத்துடனே எதிர்வினை செய்வது இயல்பானதாக இருக்கலாம். ஆனால் பழிக்குப்பழி அரசியல் உணர்வு, ஜனநாயகப்படுத்தப்பட்ட அல்லது அவ்வாறு நம்பப்படுகிற இன்றைய காலத்தில் அரசியல் அனாதைகளாகவே தமிழர்களை நிறுத்தும்.
ராஜபக்ஷ குடும்பம் மக்களின் நேரடியான கோபத்துக்கும் கடுமையான எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது. தமிழர் தரப்பின் பிரச்சினையாக இருப்பது அக்குடும்பம் அல்ல; கல்விமுறையில் ஆரம்பித்துப் பொதுவெளிகள்வரை தமிழ்/முஸ்லிம் சிறுபான்மைத் தரப்புகளின் மீது அரசுகள் கட்டமைத்து வளர்த்துவந்திருக்கும் வெறுப்பு, அழித்தொழிப்பு, உரிமை மீறல் அரசியலே தமிழர் தரப்பை அச்சுறுத்தும் பிரச்சினைகளில் முதன்மையானவை. இன்றைய காலம் விட்டுக்கொடுப்புகளுக்கான பார்வைகளைக் கொண்ட நெகிழ்வும் விரிவும் கொண்ட உரையாடல்கள் சாத்தியப்படுவதற்கான காலகட்டம். சிங்கள இளைஞர்களில் சிலரும் தமிழ், முஸ்லிம் தரப்பில் சிலரும் அதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கான முன்னெடுப்பைக் காலிமுகத் திடலில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். பதின்மூன்று வருடங்களுக்குப் பின் காலிமுகத் திடலில் சிங்கள இளைஞர்களாலும் இடதுசாரித் தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அதன் அடையாளம். தமிழ்த் தரப்பு குண்டுச் சட்டியில் குதிரையோட்டிக்கொண்டிராமல் இந்தத் தரப்புகளுடனான உறவைப் பூத்துக் கனியச் செய்வதே கண் முன் இருக்கும் ஒரே அரசியல் தேர்வு. அல்லாவிடில் வீடு எரியும்போது குளிர் காய்ந்தவர்களாகவே வரலாறு அடையாளப்படுத்தும்.
இலங்கை மக்களின் பொருளாதாரச் சமூகச் சீர்கேடுகளுக்கு அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத அமைப்புகளும் நிறுவனங்களுமே தொடர் பங்காளிகள். இந்தப் போராட்டங்களில் தலைமைத்துவப் பண்புடனான ஒரு தலைமையைக் கண்டடைந்திருந்தால் இப்போராட்டம் பெருமளவு வெற்றியை அடைந்திருக்கும். அது மாற்று அரசியலுக்கான முன்னெடுப்பாகவும் ஆகியிருக்கும். இன, மத, பொருளாதார முரண்களையும் வீழ்ச்சியையும் கையாள அதன் தீர்வுகளை நோக்கி நகர்வதற்குரிய வெளி ஒன்றுக்கான ஆரம்பப் புள்ளியாய் அமைந்திருக்கும். ஆனால் நடந்திருப்பதோ வேறு. இன, மதவாத எல்லைக் கோடுகளை வரைந்து அதில் நின்று மக்களைப் பிரித்துவைத்துப் பரமபதம் ஆடியவர்களே மீண்டும் இலங்கையைக் கட்டியெழுப்பப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் மீண்டும் இலங்கைத் தேசத்தைக் கையகப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்ந்தால் புவியியல் அடிப்படையிலும், சர்வதேச ஒழுங்கமைவுகளின் அடிப்படையிலும், இந்தியாவின் வல்லாதிக்க நலன்களுக்காகவும் கடுமையான மனித வள, உளவியல், பொருளாதாரச் சுரண்டல்கள் அம்மக்கள்மீது திணிக்கப்படும். இதனால் பாதிக்கப்படப்போவது சிங்கள மக்கள் மட்டுமல்ல; ஆகவே சமகால அரசியல் போக்கைக் புரிந்துகொண்டு வினைக் கோட்பாடுகளைக் கைவிடுவதே இனப்பிரச்சினையில் அக்கறை கொண்டோரின் சிந்தனையாக இருக்க முடியும்; அல்லாது போனால் ஆசியாவின் கண்ணீராய்க் கடலின் நடுவில் தொடர்ந்து அது தொங்கிக்கொண்டிருக்க வேண்டி நேரலாம்.