தன்னலம் தனியுரிமை புலம்பல்கள்
பொது நூலகங்களில் வாங்குவதற்கான நாளிதழ்கள், பருவ இதழ்களைப் பரிந்துரைப்பதற்கான குழு சில மாதங்களுக்கு முன்பு தன் பரிந்துரைகளை அரசிடம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் கொள்முதல்கள் நடந்துவருகின்றன. பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கான குழுவின் பரிந்துரைகள் ஒரு மாதத்திற்கு முன்பு முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் கொள்முதல் ஆணைகளைத் தமிழக அரசு பிறப்பித்துவருகிறது. இறுதி ஆணைகள் இன்னமும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த இரண்டு செயல்பாடுகளையும் ஒட்டி வழக்கம்போலச் சர்சைகள் எழுந்திருக்கின்றன.
பொது நூலகங்களுக்கான இதழ்கள், பள்ளி நூலகங்களுக்கான நூல்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடுகளில் இந்த முறை ஆக்கப்பூர்வமான பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப் பள்ளி நூலகங்களுக்காக மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பல்துறை நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் செயல்பாட்டின் எல்லைகள் இந்த முறை விரிவடைந்துள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல் விவரப் பட்டியல்களைப் பெற்று, அவற்றிலிருந்து நூல்களைத் தேர்வுசெய்திருப்பதாகத் தெரிகிறது. தேர்வுக் குழுவில் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பல்துறை வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
அரசுப் பள்ளி நூலகங்களுக்காக அரசின் சார்பில் நூல்கள் வாங்குவது புதிதல்ல. காலங்காலமாக நடைபெற்றுவரும் செயல்பாடுதான் இது. ஆனால் இதுவரை இவ்வளவு விரிவான அளவில் இந்தச் செயல்பாடு நடைபெற்றதில்லை. இத்தனை பதிப்பகங்களின் நூல்கள் பரிசீலிக்கப்பட்டதில்லை. ஊழல் புரையோடியிருந்த அச்செயல்முறையில் ஓரிரு பதிப்பகங்களின் நூல்கள் மட்டுமே தொடந்து பல ஆண்டுகளாக இந்தக் கொள்முதல் பட்டியலில் இடம்பெற்றுவந்தன. தற்போது முதல்முறையாகப் பல்வேறு எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் அடங்கிய குழு, கணிசமான எண்ணிக்கையில் பதிப்பகங்களின் நூல் பட்டியல்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து நூல்களைத் தேர்வுசெய்திருக்கிறது. இரண்டு மூன்று பதிப்பகங்கள் மட்டுமே பங்குபெற்றுவந்த இந்த நடைமுறையில் தற்போது 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன. சிறுவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவருபவர்களும் இக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும் ஆதாரபூர்வமாக எழுப்பப்படவில்லை. இது வரவேற்கத்தக்க மாற்றம்.
எந்தச் செயல்பாட்டையும்போலவே இதிலும் குற்றம் குறைகளும் போதாமைகளும் இருக்கவே செய்யும். பள்ளி மாணவர்களின் தேவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தச் செயல்பாட்டின் போதாமைகளை விமர்சிக்கவும் இதற்கான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நடந்திருக்கும் ஆக்கப்பூர்வமான நகர்வுகளை அங்கீகரித்து, இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம் என்று சொல்வதே ஆரோக்கியமான விமர்சனம். கல்விச் சூழலையும் பள்ளி நூலகங்களின் செயல்பாடுகளையும் மேம்படுத்த விரும்புபவர்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களைத்தான் முன்வைப்பார்கள். ஆனால் தமிழ்ச் சூழலில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பொதுவாக இப்படி அமைவதில்லை. தனிப்பட்ட காழ்ப்புகளும் பொறாமையும் சுயநலமும் நிரம்பிய புலம்பல்கள் விமர்சனமாக வெளிப்படுவதே இங்கு வழக்கம். பள்ளிக் கல்வித் துறையின் இந்தச் செயல்பாடும் இத்தகைய புலம்பல்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
விமர்சனத்தில் வெளிப்படும் சில சொற்களைக் கொண்டே அதன் பெறுமானத்தை மதிப்பிட முடியும். “சுமார் 140 பதிப்பகங்களின் நூல் விவரப் பட்டியல் மட்டும்” பெறப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. இதுவரை 200 அல்லது 300 பதிப்பகங்களின் பங்கேற்பு நிகழ்ந்து, இந்த முறை அது 140ஆகச் சுருக்கப்பட்டிருந்தால் இந்த விமர்சனத்தில் நியாயம் இருந்திருக்கும். ஆனால் பல்லாண்டுக் காலமாக இரண்டு மூன்று பதிப்பகங்களே ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு நடைமுறையில் முதல் முறையாக 140 பதிப்பகங்கள் இடம்பெறுவது பெரும் பாய்ச்சல் அல்லவா? இந்நிலையில் “140 மட்டும்” என்று சொல்வது நகைப்பிற்கிடமான போலித்தனம் என்பதன்றி வேறென்ன?
“பட்டியலை வைத்தே” நூல்களைத் தேர்வு செய்தது குறித்தும் குற்றச்சாட்டு எழுகிறது. தலைப்பைப் பார்த்தால் உள்ளடக்கம் தெரிந்துவிடுமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. இதுவரையில் பட்டியலைக்கூடப் பார்க்காமல் ஓரிரு பதிப்பகங்களிடமிருந்து மட்டுமே கிடங்கில் தேங்கிக் கிடந்த நூல்கள் தேர்வுசெய்யப்பட்டபோது எழாத கேள்வி இப்போது எழுகிறது. சிறார் நூல்கள் வாசிப்பிலும் அந்நூல்கள் தொடர்பான செயல்பாடுகளிலும் நெடுங்காலமாக ஈடுபட்டுவருபவர்களுக்கும் தமிழ்ப் பதிப்புச் சூழல் குறித்த அடிப்படையான அறிதல் கொண்டவர்களுக்கும் பட்டியலிலிருந்தே நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய சிக்கல் இருக்க வாய்ப்பில்லை.
குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் எல்லாமே கமுக்கமாக நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குழுவினரின் பெயர்களை வெளியிடுவது அது குறித்த விவாதங்களுக்கு வலு சேர்க்கும் என்பதால் அதில் நன்மை உண்டு. ஆனால் குழுவினரின்மீது பல விதங்களிலும் செல்வாக்குச் செலுத்த முயல்வது, குழுவினரின் ஜாதகங்களைத் தோண்டியெடுத்து அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது எனப் புதிய பிரச்சினைகளையும் இது உருவாக்கும். பொது நூலகங்களுக்கான இதழ்களைப் பரிந்துரைத்த குழுவினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் எடுத்த முடிவுகளை ஒட்டிய விவாதங்களில் தனிநபர்கள் சார்ந்த விருப்பு வெறுப்புகள் பிரதிபலித்ததைப் பார்க்க முடிந்தது. எனவே குழுவை அறிவிக்காமல் இருப்பதைப் பெரிய குறையாகச் சொல்ல முடியாது.
பள்ளி நூலகங்களுக்கான நூல் தேர்வு தொடர்பாக அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்படவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பாடத் திட்டங்களுக்கு நூல்கள் வேண்டி முன்னர் வெளியிட்டு வந்த விளம்பரங்களை இப்போது வெளியிடுவதில்லை. பாடத்திட்ட நூல்களின் தேர்வு முழுவதுமாக எந்த ஜனநாயகத் தன்மையுமின்றி ஓரிரு பதிப்பகங்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறது. இதுபற்றி எழுதாத விமர்சனம் பள்ளி நூல்கள் பற்றி எழுகிறது. இன்னும்கூடப் பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு கோணங்களில் எழக்கூடும். எந்த நெறிமுறையும் வழிமுறையும் இல்லாமல் மொத்தமாக ஓரிரு நிறுவனங்கள் பங்குபோட்டுக்கொண்டு பெருத்த லாபம் அடைந்துவந்தபோது அது குறித்து வாய் திறக்காதவர்கள் தற்போது வாய்கிழியப் பேசுகிறார்கள். இதுவரை விளம்பரமே வெளியிடாமல், பரவலான அளவில் பதிப்பகங்களைத் தொடர்புகொள்ளாமல் நடைபெற்றுவந்த இந்தச் செயல்முறை இப்போது ஆக்கப்பூர்வமான சில அடிகளை எடுத்துவைத்திருப்பதை அங்கீகரிக்கும் விமர்சனங்களே பொருட்படுத்தத் தக்கவை. ஓரிரு நிறுவனங்களின் தனியுரிமையாக இருந்துவந்த இந்தச் செயல்பாடு தற்போது சீரடையத் தொடங்கியிருக்கிறது. இதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்கலாம்.
தனியுரிமைகள் கைவிட்டுப்போவது ஜனநாயகச் செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவு. அப்படி நடக்கும்போது இழப்பின் புலம்பல்கள் தார்மிகக் குரல்களைப் போல ஒலிப்பது இயல்புதான். இந்தப் போலி தார்மிகக் கூச்சலைப் பொருட்படுத்தாமல் அரசு தொடர்ந்து இந்தச் சீர்திருத்தத்தை ஜனநாயகப் பண்புடன் முன்னெடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.