நன்றி ஒருவர்க்கு...
பசுக்களின் பாதுகாவலர்
காஜி மியான்
சஃபி
வெளியீடு:
புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
பக். 90
ரூ. 100
கஜினி முகம்மது இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த நிகழ்வின் விளைவு இன்றளவும் இந்திய அரசியல் களத்தைச் சூடேற்றிவருகிறது. இந்நிகழ்வு பற்றி உண்மைகளும் கட்டுக்கதைகளுமாகப் பல பிரதிகள் இருக்கின்றன. கஜினியின் சகோதரி மகன் காஜி மியான். அவரும் வரலாற்றில் இடம்பெற்றிருப்பவர். இவர் பஹ்ரெய்ச்சில் அடக்கம் பெற்றிருக்கின்ற இடம் தர்காவாகவும் இருந்துவருகிறது. ஸ்தல புராணம்போல நாட்டார் பாடல்கள் அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன.
இதற்கான காரணம் என்ன? காஜி மியான் திருமணத்திற்கான நேரத்தைப் பிராமணர்கள் குறித்துக் கொடுத்துள்ளனர். அவரும் அந்நாளில் மணமகனாக இருந்தார். இந்நேரத்தில் ஆயர்குலத் தலைவன் நந்தாவின் மனைவியான யசோதை, காஜி மியானைப் பார்க்க வருகிறார். தம்முடைய பசுக்களையும் தம் உறவினர்களின் பசுக்களையும் சோகல் தியோ, சஹர் தேவ் எனும் குறுநில மன்னர்கள் கொன்று குவிப்பதாக காஜி மியானிடம் சொல்கிறார். அப்படுகொலைகளைத் தடுக்க யசோதையால் முடியவில்லை. எனவே காஜி மியானை அணுகி முறையிட்டார் அவர். யசோதையின் பசுக்களைக் காப்பாற்றுவதற்காக மணக்கோலத்தைத் துறந்துவிட்டு காஜி மியான் செல்கிறார். அந்தப் போரில் மரணம் அடைகிறார். அப்போது அவருக்குப் பத்தொன்பது வயது.
காஜி மியானை மணக்கவிருந்த ஜொஹாரா பீவி துயர்ப்பட்ட நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். காஜி மியான் அடக்கப்பட்ட இடத்தின் அருகில் தனக்கென்று ஒரு புதைகுழியையும் ஏற்படுத்திக்கொண்டார்.
இதுபோன்ற வீரமும் துயரமும் கலந்த நிலையில் காஜி மியானும் ஜொஹாரா பீவியும் இருப்பதால் பாமர மக்களின் மனங்களில் குடியேறினார்கள். அவர்கள் மீது தாங்கள் காட்டும் நன்றியுணர்ச்சியைக் கதைகளாகவும் பாடல்களாகவும் மக்கள் படைத்தார்கள். இந்திய மரபில் நாம் காணக்கூடிய அதே நடைமுறைகள் தான் காஜி மியான் கதையிலும் காணப்படுகின்றன. இத்தகைய நாட்டார் மரபுகளில் மத வேறுபாடுகளை விடவும் நன்றியுணர்ச்சி பெருக்கெடுப்பது நம்மை நெகிழ்விக்கிறது.
இவர்களை நன்றிகூரும் மனிதர்கள் ஆண்டுதோறும் தங்களின் வழிபாட்டுச் சடங்குகளால் இருவருக்குமான திருமணச் சடங்குகளை நடத்தி மகிழ்கிறார்கள். இஸ்லாமியக் கொள்கைகளில் தர்கா வழிபாடு ஏற்பில்லாதது என்று கருதிய ஔரங்கசீப், காஜி மியான் தர்காவுக்கு எவரும் போகக் கூடாதென்று கட்டளை யிட்டுள்ளார். இருப்பினும் அது செல்லுபடியாகவில்லை. குழந்தை வரம் வேண்டியும் மத வேறுபாடுகள் இல்லாமல் அவருடைய சமாதிக்குப் பக்தர்கள் வந்துள்ளனர்.
மாட்டிறைச்சி அரசியல் தலைதூக்கியுள்ள இக்காலத்தில், காஜி மியான் என்ற கஜினி முகம்மதுவின் மருமகன் பசுக்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்னும் செய்தி முக்கியமானதாகிறது. மத வெறுப்பும் மண்டியுள்ள சூழலில் பல நாட்டார் வழக்காறுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நூலை சஃபி எழுதியுள்ளார்.
ஒரு தரப்பு, மதவாதத்தின் தன்மைக்குள் இந்திய வரலாற்றை இட்டுக்கட்ட முனைந்திருக்கின்றது. மறுதரப்பில் ஏழை எளிய கிராமவாசிகள் தங்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை முன்னிறுத்தி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் தங்களின் படைப்பாற்றலைக் காட்டியிருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையிலான முரண்களை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இந்த அடிப்படையில் கஜினி முகம்மதுவும் அவருடைய படையெடுப்புகளும் வரலாற்று ரீதியாக எவ்விதம் அணுகப்பட்டுவந்துள்ளன என்கிற ஆய்வும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரே கோயில் அல்லது ஒரே படையெடுப்பு வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் அவ்வக் காலத்திய பிரச்சினையாக உருமாற்றப்பட்டு வந்திருப்பது தெரிகிறது
காஜி மியான் இம்மண்ணின் பண்பாட்டோடு இசைந்து வாழ்ந்திருக்கிறார். அதனால் அவரைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் யாதொரு நெருடலும் காணப்படவில்லை. அது இந்திய பாமர மனங்கள் பண்பாட்டுச் செழுமையோடு வாழ்ந்திருப்பதற்கான தருணங்களாகப் பேறுபெற்றுள்ளன.
வரலாற்றை நிதானத்துடனும் நுட்பமான உணர்வுடனும் அணுகும் இப்பிரதியை வாசிப்பதற்கும் நுட்பமான மனம் தேவைப்படுகிறது. இஸ்லாமிய ஆதரவு, எதிர்ப்பு ஆகிய இரு நிலைகளிலும் சாயாத மனம் வேண்டும். இந்தச் சமநிலை நூலிழையும் பிறழ்ந்துவிடாத எச்சரிக்கை உணர்வு அவசியம்.