கவிதைகள்
Courtesy Creativecommon
மூன்று நாள் குறுகலில்
மூன்று நாள் களைப்பில்
மூன்று நாளுக்கான சிவப்பு ஆதுரத்தில
ஒரு சின்னஞ்சிறு ஸ்பரிசத்திற்கான
காத்திருப்பு அடர்ந்திருந்தது
மூன்று நாள் வலியில்
தேவகுரலொன்று தனது
புல்லாங்குழலைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது
போக்கின் நாற்றம் குழைந்த
அக்கணத்தைத் ததும்பத் ததும்ப
தன் பரிசுத்தத்தால் ஆசிர்வதிக்கிறது.
மூன்று நாட்களில் உயிர்த்தெழும் கனம்தான்
சிருஷ்டிக்கும் கணம்...
மூன்று நாட்களோடு உறவாடும் நிறம்தான்
ஆதி நிறம்...
மூன்று நாளென்பது தேவிக்கானது
அவளது அலங்காரத்திற்கானது
அவள் ருத்ரம் சாந்தென நெற்றியில் நிறைந்து,
வலியில் குழைந்து வழிந்தோடும்
அத்தாண்டவத்தை தேவன் கண்ணுற்றுத் தாங்குகிறான்
அத்தாண்டவத்தில் தான
தேவன் தன் பாதியை அறிகிறான்
தன் பலம் அறிந்து ஆளுமையாகிறான்
மூன்று நாளென்பது
தேவியின் பூரணம் மலரும் நாட்கள்
மூன்று நாளென்பது இயற்கையின் கிழக்கு முகம்
மூன்று நாளென்பது உலகின் பரிசுத்தம்
- நித்யா சதாசிவம்
மின்னஞ்சல்: sivanithyashree@gmail.com
அறிவுப்பூக்கள்
மெதுவாய் இரண்டடி முன் நகர்ந்த
பாலகுமாரன்
பெருந்தொற்று முடிந்தது
என்றதும் ஆமோதிப்பாய்த் தலை
அசைத்தார் அறிவியல் புத்தகமாய்
அமர்ந்திருந்த சுஜாதா
எத்தனை நேரம் இருட்டிலே
அமர்ந்திருப்பது
முணுமுணுப்புச் சத்தம் வந்தது
புதுமைப்பித்தனிடம்
யாரும் தொடுவதில்லையென
அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும்
ஆமோதிப்பாய்த் தலையசைத்தார்கள்.
சந்தா கட்டியவர்களைத்
தேடிய போது வெறும்
நாற்காலிகளே அமர்ந்திருந்தன..
கண்ணில்பட்டவர்களும்
திரைப்படப் பத்திரிகையில்
நுனிப்புல் மேய்ச்சல்..
நல்ல வேளையாய் ஜெயகாந்தன்
கோபப்படவில்லை.
இலக்கியப் புதையல்களை
அடைகாத்து நாமிருக்க
‘ஒளித்தோற்ற விளையாட்டில்’ தொலைந்த தலைமுறைக்கு
இன்னொரு ‘ஆலாபனை’பாட வேண்டும் என்றார்
கவிக்கோ!
கூட்டங்கள் தொலைந்த
நூலகத்தை எப்படி
உயிர்ப்பிப்பது என் விவாதிக்கத்
தொடங்கினார்கள் கண்ணதாசனும்
பாரதிதாசனும்..
படிக்கும் பயிற்சியை
வயிற்றிலிருந்தே
தொடங்கலாம் என்றார் லா.ச.ரா..
கொஞ்சம் காலடித் தடங்கள
சத்தம் ‘சிறுவர் பகுதி’யில்
கேட்க உற்சாகமாய்ப்
பாப்பா பாட்டுடன் படிக்கும் பயிற்சியைத்
துவக்கினார் பாரதி..
எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது
என்றார் தி.ஜா..
- ஆனந்த் குமார்
மின்னஞ்சல்: vidaniru@gmail.com