கவிதைகள்
உயர உயரப் போகும் பூனையின் வால்
பசிக்கும் நேரங்களில்
பூனை
அதன் குடலையே
வாலாக
மேலே
உயரமாக
நீட்டி நீட்டி
அதன்
அன்பானவர்களின்
இதய நரம்புகளுக்குள்
நுழைத்து
முடிச்சிட்டுக்கொண்டு
கொஞ்ச வேண்டிய வகையில் கொஞ்சி
பேச வேண்டிய வகையில் பேசி
நேயமாக மாயமாக
கரைந்துருகக்
கசிந்துருகச் செய்து
தேவையானவற்றைப்
பெற்றுக்கொண்டுவிடும்
அப்படியும்
நீங்கள்
கரைந்துருக
கசிந்துருக மறுத்து
கல்போல் நிற்கிறீர்கள் என்றாலும்
அது
கவலை கொள்ளாது
அதன்
வாலாக நீளும் குடலை
மேலே
உயரஉயர
நீட்டிக்கொண்டு சென்று
சூரியனையோ
சந்திரனையோ
தன்
குடல் வாலுக்கான
இதய நரம்புகளாக
முடிச்சிட்டுக்கொண்டு
கரைந்துருகக்
கசிந்துருகச் செய்யும்
அவை
எப்போதுமே
நம்மைப்போல
கைவிடக்கூடியவை அல்ல
என்பதால்
அவை நேரடியாக
அதன்
பசியைப் போக்க முடியாவிட்டாலும்
அவை
முடிச்சிட்ட
நரம்புகளின் வழியே
புத்தம்புது
ஒளியைச் செலுத்தும்
அது
மேலிருந்து
செங்குத்தாக
வேகவேகமாகக்
கீழே
ஊடுருவி வந்து
வால் குடல் வழியே
நுழைந்து நுழைந்து வந்து
கண்கள் வழியே ஓடித்
தேவையானதை
எளிதில்
கண்டடையச் செய்துவிடும்.
- த. அரவிந்தன்
மின்னஞ்சல்: thavaram@gmail.com
பெருமரத்தின் முன் ஒரு யட்சி
ஈரப்பிசுபிசுப்பில் கனத்த குழைகளாகித் தொங்கும்
காலத்தின் இழைகள்
நடு உச்சியின் வெய்யிலைத் தழைத்துக்
குளுமையைப் பரவ விடுகிறது நிலமெங்கும்
புலம்விட்டு நகர்த்தவியலாதபடிக்கு
மரத்தோடு பின்னிப்பிணைந்து
பற்றியிருக்கும் பெரு விழுது
என்னைப்பற்றிப் பேச
நான் போதுமெனக்கு
கர்வம் தொனிக்கிற நிற்றல்
காற்றின் குறிப்புகளில் படபடக்கிறது
நகர்தலற்ற அதன் அரூபக் காலடியோசை
அலகு கொண்டு கீற முயலும் மரங்கொத்தியைப்போல
உதடு குவித்து நானொரு முத்தமாகிறேன்
சின்ன இரு விழியில் ஒளியெடுத்து
எனை உலுக்கியெழுப்பி அன்பைப் பரவவிடுகிறாள்
பெருமர யட்சி
நான் மிதக்கும்வெளியில்
என் வழியெங்கும் ஊஞ்சலசைய
குறுஞ்சுனையின் கெண்டையென
குதித்துலாவுகிறேன் உளவெளியில்.
- பொன். வாசுதேவன்
மின்னஞ்சல்: pon.vasudevan@gmail.com