பழிவாங்கப்படுகிறார்களா முஸ்லிம்கள்?
முஸ்லிம்களின் மீதான போரை இந்துத்துவம் தொடங்கிவிட்டது; விட்டகுறை தொட்டகுறை என எதுவும் இல்லை. அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகைகளிலும் பாஜக மட்டுமன்றி, ஒன்றிய அரசும் இந்தப் போரில் பங்கெடுத்து வருகின்றது; உளவியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் அவை முஸ்லிம்களை அடித்து ஆடுகின்றன. இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தைக் கையாண்ட முறை முஸ்லிம் சமூகத்தைக் கிளர்ந்தெழ வைத்துள்ளது.
விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பங்களையும் உலக நாடுகள் பற்றிக்கொண்டு தத்தம் வளர்ச்சிக்கும் ஆதிக்கத்திற்குமான வழிவகைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அதன் எதிர்நிலையில் இந்தியச் சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கிக்கொண்டு வருகின்றன பாஜகவும் அதன் அரசும்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்தே முஸ்லிம்களை ஒட்டுமொத்தச் சமூக நீரோட்டத்திலிருந்து விலக்கிவைக்கும் பணிகளை இந்துத்துவ அரசு மேற்கொண்டுவிட்டது. இந்துத்துவ இணையதளங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கிலான வெறுப்புப் பதிவுகள் உருவாக்கப்பட்டு அவை சுற்றுக்கு விடப்படுகின்றன. முன்பெல்லாம் இதுபோன்ற மூளைச் சலவைகளில் பெரும்பாலும் சிலரே வசப்படுவார்கள்; படித்த வர்க்கம் ஒதுங்கிச் செல்லும். தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. படித்தவர்கள், காத்திரமான பதவிகளில் இருப்பவர்கள், ஓய்வுபெற்று வீட்டில் இருப்பவர்களென அனைத்துத் தரப்புகளிலும் மதவாதம் ஓங்கிச் செழித்திருக்கின்றது.
வரலாற்றினைத் திரித்து எழுதும் பணிகளையும் இந்துத்துவம் மேற்கொண்டுவருகிறது. நாடு முழுவதிலுமுள்ள அச்சு ஊடகமும் இணைய ஊடகமும் பிறழ்ந்து விட்டன. செய்திகளைக் கொடுப்பதில் பாரபட்சம்; இந்துத்துவத்தின் தரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பிரிவினைவாதங்களுக்கும் அவை நெய்யும் வார்க்கின்றன. கூச்சமில்லாமல் பொய்ச் செய்திகளை உருவாக்கவோ தலையங்கங்கள் தீட்டவோ அவை தயங்குவதில்லை. திரைப்படங்களின்மீது பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள ஈர்ப்பைக் கருதி அத்தரப்பிலும் ஏராளமான ஆளுமைகள் வளைக்கப்படுகின்றனர். அவர்களும் தீய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். மொத்தமாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் புற்றுக் கட்டியென வர்ணிக்கப்படுகின்றனர்; அவர்களைக் கருவறுக்க வேண்டும் என்கிற அளவில் கருத்தியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெரும் கலவரங்கள் நடக்கும் தருணங்களில் முஸ்லிம்கள் ஒருபோதும் இந்துக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் இந்துத்துவ இயக்கங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகின்றனர். ஆயினும் இந்தப் பிரச்சினைகளை ‘இந்துக்கள் எதிர் முஸ்லிம்கள்’ என்ற சூத்திரத்தின் கீழே கொண்டுவருகின்றது இந்துத்துவம். அவர்களின் உடை ஒழுங்குகளில் ஏற்படுத்தப்படும் ஒவ்வாமைகளிலிருந்து உணவுப் பழக்கம், வழிபாட்டு முறைகள், வணிக முறைமைகள், மதச் சடங்குகள் வரையில் ஒவ்வாமையை வளர்க்கும் போக்குகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மோடியின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதும் முஸ்லிம்களின் மீதான போர் வடிவெடுத்துவிட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் படுகொலைகள் நடந்தன. அவை ஏதோ அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையோ எனக் கருதும்படிப் பொதுப்போக்காகியிருந்தது. குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் - லட்சத் தீவுகளில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைநிலைக்குள் வன்முறையைச் செலுத்துதல், பாபர் மசூதியை நீதிநெறியின் பேரால் எடுத்துக்கொள்ளுதல், முஸ்லிம்களின் இதர வழிபாட்டுத் தலங்களையும் கையகப்படுத்த முனைதல்... எனப் பலப்பல முஸ்லிம் விரோதத் திட்டங்கள் வந்தபடியிருக்கின்றன. தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவேன் என்று சூளுரைத்து வாக்காளர்களிடம் உறுதிகொடுத்து வென்றவர்கள், அத்தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட முடியாமல் திணறும்போது அவற்றிற்கும் முஸ்லிம்கள் பொறுப்பேற்க வேண்டியதாக இருக்கிறது.
கடந்த நவம்பரில் முஸ்லிம்களின் மீதான பெரிய வன்முறை கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது. அங்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் கல்விக்கூடங்களில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஒருபக்கத்தில் நடக்கும்போது, மறுபக்கத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஓங்கிவளர்ந்தன. இதன் எதிரொலியாக முஸ்கான் பீவி என்ற மாணவி தன் முஷ்டியை உயர்த்தி இட்ட முழக்கம் அடுத்த சில நாட்களில் சர்வதேசச் செவிகளில் விழுந்தது. இந்திய முஸ்லிம்களின் எழுச்சிச் சின்னமாக அந்த மாணவி அடையாளம் காணப்பட்டார். இதனை இந்துத்துவம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குள் அடக்க ஒடுக்கமாகப் பதுமைகளாக வார்க்கப்பட்டுள்ளதாக உலகம் கருதியிருந்தது. ஆனால் அங்கிருந்துதான் ஓர் எழுச்சிப் போராளி வந்திருக்கிறார் என்று முஸ்லிம்களின் நேச சக்திகள் கூறின; அது திருப்புமுனையாக அமைந்தது. அதிலிருந்து முஸ்லிம் சமூகத்தை நாள்தோறும் ஏதாவதொரு காரணத்தை முன்வைத்துப் பழிவாங்கும் படலம் நடந்தேறி வருகிறது.
ஏற்கெனவே குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது முஸ்லிம் பெண்கள் தங்களின் இரும்புத் திரைகளைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டு, வெளியுலகில் காலடிகள் வைத்தனர். நூறு நாட்களையும் தாண்டி அவர்களை நடத்திய அந்தப் போராட்டத்தின் வாயிலாக, காவல்துறையின் வன்முறையை லதீதாவும் ஆயிஷாவும் ஒற்றைவிரல் நீட்டி அடக்கிவைத்தனர்.
நூபுர் ஷர்மா பாஜகவின் பொறுப்புவாய்ந்த பதவியில் இருப்பவர்.முஸ்லிம்கள் தம்மீதான தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்வதுண்டு. ஆனால் நபிநாயகம் மீதான விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்நிகழ்வுகளின் உச்சமாக வெளிப்பட்டார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர். அவரைத் தொடர்ந்து நவீன் ஜிண்டால் என்ற பாஜக உறுப்பினரும் நாயகத்தை இழிவுசெய்தார். அது சர்வதேச நிகழ்வானது. இதுவரையில் இந்திய முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களில் எவ்விதமான குறுக்கீட்டையும் செய்யாதிருந்த முஸ்லிம் நாடுகள் களத்தில் குதித்தன. கத்தார் நாடு ஓரடி முன்னே சென்று நூபுர் ஷர்மாவிற்காக ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தது. அதனால் மோடியின் தலைமையிலான அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கத்தார் நாட்டில் அப்போது நட்புறவுப் பயணத்திலிருந்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அளிக்கவிருந்த விருந்தை அந்நாடு ரத்துசெய்தது.
அதுவரையிலும் இந்தியர்களின் மனத்தில் உருக்குப் போன்ற தலைவனாகத் தன்னைத் தானே உருவாக்கி வளர்த்திருந்த மோடி, பாஜகவின் நடவடிக்கையாக நூபுர் ஷர்மாவையும் நவீன் ஜிண்டாலையும் கட்சியை விட்டு நீக்கிவைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார்.
இது கட்சியின் சிறுநடவடிக்கையாக இருந்தாலும் இந்துத்துவ வரலாற்றில் பெரும் பின்னடைவாகும். அதன் பின்னரும் அவர் அரசின் மீதான கோபம் தணியவில்லை. மலேசியா, இந்தோனேஷியா, மாலத் தீவுகள் போன்ற நாடுகளும் மோடி அரசின் மீதான தம் கண்டனங்களை வெளியிட்டன. வெளிநாட்டுப் பார்வைகளிலும் உள்நாட்டுப் பார்வைகளிலும் மோடி சரிந்துவிழுந்ததை வரலாறு மறைத்து வைக்காது. அவர்மீது பாஜகவின் தொண்டர்கள் கொண்டிருந்த நம்பிக்கை கேள்விக்குள்ளானது.
அடுத்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்த பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்ட போராட்டங்களும் முஸ்லிம்களுக்குப் பெரும் சோதனைகளாக முடிந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு உபியின் யோகி அரசு புல்டோசர்களை அனுப்பி அவற்றைத் தகர்த்தது. இவ்வகை அநீதியிலும் அஃப்ரீன் பாத்திமா என்ற பெண்மணி சர்வதேசக் கவனத்தைப் பெற்றார்.
நாட்டில் இவ்வளவு பெரிய அநீதிகள் நடக்கிறபோதும் இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் துணைக்கு வரவில்லையென்ற கோபம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊடகவுலகிலும் இந்த அநீதிகள் பேரளவுக்குச் சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நிகழவில்லை. சட்ட நடைமுறைகளின் சீரழிவுகள் குறித்துக் கோபப்பட்டு நடவடிக்கைகளைத் தானே முன்வந்து எடுத்திருக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்திற்கும் எதுவும் போய்ச் சேரவில்லை; வலியச் சென்று நடவடிக்கைகளைக் கோரிய பின்னரும் அதன் நெற்றிக்கண் திறக்கவில்லை. நடப்புக் காலம் இந்தியாவின் இருண்மைக் காலமாகச் சர்வதேசக் கவனத்தில் பதிந்திருக்கிறது. முஸ்லிம் சிறுபான்மைக்காக ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் அசையாதிருந்தமை இந்தியாவின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் சமூகம் அநாதரவாக நிற்கிறது.
இதற்கிடையில் தங்களின் துணையாக அரபுநாடுகள் வருமென்று முஸ்லிம் சமூகம் நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குமான ராஜாங்க உறவுகள் வேறு; அவற்றின் மத நம்பிக்கைகள் வேறு; பொருளாதாரப் பரிமாற்றங்களும் வேறு. எனவே ஓரளவுக்கு மேல் எந்த நாடும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தம் மூக்கை நுழைப்பதில்லை.
இந்தியாவில் பதினெட்டு கோடி முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்கள் தம் நெஞ்சுரம் கொண்டுதான் இந்துத்துவ வன்முறையை எதிர்கொண்டாக வேண்டும். இதைவிடச் சிறிய சமூகங்கள் பெரும் வல்லரசுகளை எதிர்கொண்டு தம் புத்திக் கூர்மையாலும் களப்போரட்டங்களாலும் வென்றுள்ளன. இதை முஸ்லிம் சமூகம் உணராமல் போவது ஏன்? எப்போதும் தம்மைச் சுய பரிசோதனை மேற்கொள்ள முஸ்லிம் சமூகம் தயங்கி நிற்பதையே இதற்கான காரணமாகக் கொள்ள வேண்டும்.
மக்களவையிலும் அரசியல் களத்திலும் அசைக்க முடியாத வலிமையுடன் இருக்கும் பாஜகவைச் சர்வதேச அழுத்தம் சற்றேனும் அசைத்துப்பார்த்திருக்கிறது. இந்த அழுத்தமும்கூட நபிகள் நாயகத்தைப் பற்றிய பேச்சு முதலான பிரச்சினைகளின்போது மட்டுமே எழக்கூடியது. சட்டத்தின் துணை கொண்டு இஸ்லாமியர் வீடுகளை நோக்கிப் பாயும் புல்டோசர்களை நிறுத்த இது உதவப்போவதில்லை. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகள் ஓரணியில் திரள்வது, மக்களின் உரிமைகளைக் காப்பதற்கான பொது மனசாட்சியின் குரல்கள் பல்வேறு களங்களிலும் உரக்க ஒலிப்பது, சட்டப்பூர்வமான போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுப்பது ஆகியவையே இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய கவசங்களாக இருக்க முடியும்.