‘சாதி ஆபத்தானது’
நாமக்கல்லின் இலக்கிய அடையாளம் என நெடுங்காலமாகத் திகழ்பவர் ‘குசிபா’ என அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியர், பல போராட்டங்களில் பங்கேற்றவர், செம்மலர் இதழைத் தொடங்கியவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் உள்ளிட்ட பல்வேறு கள வாழ்க்கை அவருடையது. ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ உள்ளிட்ட நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கவிதைகள், காவியம், குட்டிக்கதைகள், தன்வரலாறு எனவும் பங்களித்திருக்கிறார்.
அவரது இலக்கியப் பங்களிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நாவல் ‘தாகம்.’ கொங்கு வட்டார வழக்கு என்றதும் கோவைப் பகுதிப் பேச்சுமொழிதான் அனைவருக்கு நினைவு வரும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் நில அமைப்பு, வேளாண் முறைகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்ட நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் வட்டார வழக்கும் தனித்தன்மை உடையது. அம்மொழியைத் ‘தாகம்’ நாவலில் முதன்முதலாகப் பதிவு செய்தவர் குசிபா. ‘தாகம்’ நாவலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகியவற்றின் நாமக்கல் வட்டார வேளாண் வாழ்வை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அக்காலச் சாதியமைப்புப் படிநிலைகளை உணர்வுப்பூர்வமாகவும் எதார்த்தமாகவும் காட்டும் நாவல் அது. ஆதிக்க சாதியினரின் பாலியல் மீறல்களையும் அதிகார வேட்கையையும் நிகழ்வுகளாக அந்நாவல் கொண்டிருக்கும்.
இன்றைய காலக் கண் கொண்டு அந்நாவலைப் பார்த்தால் நாமக்கல் பகுதி மக்களுக்கே ஏதோ இட்டுக்கட்டியது போலத் தோன்றும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இப்பகுதி பெற்றிருக்கும் பாய்ச்சல் வளர்ச்சி அப்படி. மேட்டாங்காடு என்னும் வறண்ட புன்செய் நிலத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த மக்கள். ஒடக்கான் முட்டையிடாத அநாதிக் காடுகளில் கம்பும் சோளமும் பயிரிட்டு வாழ்ந்தவர்கள். அரிசி என்றால் கம்பரிசியும் வரகரிசியும்தான். நெல்லரிசியைக் கண்ணால் கண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். மழை மறைவுப் பிரதேசம். ஆற்று வளம் குறைவு. அத்தகைய கால வாழ்வுக்கு இன்று ஒரே சாட்சியாக இருப்பது ‘தாகம்’ நாவல். ‘இன்னைக்கு மானம் புழுக்கமா இருக்குது. ஒரு ஒளவு மழை பேஞ்சுட்டா தண்ணி எறைப்பு மிச்சமாகும். கருப்பண்ண சாமியே, நீ கண் தொறந்தா நடக்காத காரியம் ஏதாவது இருக்குதா?’ என்பது போன்ற இயல்பான பேச்சு மொழி இந்நாவலின் நடை மேம்பாட்டுக்குக் காரணம். இன்றைக்கு வழக்கிழந்து போன எத்தனையோ சொற்களை இந்நாவல் உரையாடல்களில் கண்டெடுக்கலாம். ஆவண மதிப்பும் இலக்கிய மதிப்பும் ஒருசேரக் கொண்டதாகத் ‘தாக’த்தைச் சொல்லலாம்.
‘தாகம்’ அவரது முதல் நாவல். அதன் தடத்தில் செல்லாமல் அடுத்தடுத்த நாவல்களில் விலகிச் சென்று வெவ்வேறு களப்பகுதியைத் தேர்ந்தெடுத்து எழுதினார். கொல்லிமலை மக்கள் பிரச்சினையைக் கள ஆய்வாளன்போல ஆராய்ந்து குசிபா எழுதிய ‘சங்கம்’ நாவலை ‘அது ஒரு சர்வே ரிப்போர்ட்’ என்று ஜெயகாந்தன் சொன்னாராம். ‘தாகம்’ தவிரப் பிற நாவல்கள் அனைத்தும் அப்படித்தான் அமைந்தன. பார்வையாளரின் கோணமும் வர்க்கப் பார்வையும் இணையச் ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ முதலியவற்றை எழுதினார். அவற்றைச் சிலர் சோசலிச எதார்த்தவாத எழுத்துக்கு உதாரணம் காட்டுவதுண்டு. மோசமான சோசலிச எதார்த்தவாத எழுத்துக்கு வேண்டுமானால் அவற்றைச் சான்றாக்கலாம். ‘தாகம்’ எழுதியவரின் தடம் புரளல் நேர்ந்த காரணம் தெரியவில்லை.
நாமக்கல்லில் இருபது ஆண்டுகளாக வசித்து வருகிறேன். குசிபா அவர்களைச் சந்திக்க நேர்ந்த தருணங்கள் குறைவு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டங்கள் சிலவற்றில் பார்த்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் இலக்கிய வட்டத்திலிருந்து பெருமளவு தம்மைத் துண்டித்துக்கொண்டிருந்தார் என்றே எனக்குத் தோன்றியது. அவரைச் சுற்றி உருவாக்கிக்கொண்டிருந்த எல்லை என்னைப் போன்றவர்களை விலகி நிற்கச் செய்தது. நான் தொகுத்த ‘கொங்குச் சிறுகதைகள்’, ‘தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்’ ஆகிய நூல்களில் அவர் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அனுமதி பெற நேரில் சந்தித்ததுண்டு. ‘அடிக்கடி வாங்க’ என்று சொல்லியிருக்கிறார். இருவரின் குடியிருப்புப் பகுதியும் அருகருகில்தான். இருசக்கர வாகனத்தில் ஐந்து நிமிடப் பயணத் தூரம். எனினும் ‘அடிக்கடி’ சந்திக்க அமையவில்லை.
எனது ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான பிரச்சினை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலையில் இருந்தேன். கொங்குப் பகுதி எழுத்தாளர்களில் ஜாம்பவான்கள் என்று கருதப்படுபவர்கள், அரசு நிறுவனங்களில் செல்வாக்கு உடையவர்கள் எல்லாம் ‘மாதொருபாகன்’ பிரச்சினையில் மௌனம் காத்தார்கள். சிலர் ‘சாதியை இழிவுபடுத்தி எழுதினால் எதிர்க்காமல் கொண்டாடுவார்களா?’ என்று நியாயம் பேசினார்கள். ‘கொஞ்சம் எச்சரிக்கையாக எழுதியிருக்கலாம்’ என்று அறிவுரை சொன்னார்கள்.
அப்போது குசிபா கருத்துரிமைக்கு ஆதரவாக நின்றார். அவரைச் சுற்றியிருந்த பலரும் என் எழுத்துக்கு எதிராக அறிக்கை விடும்படி அவரைக் கேட்டார்கள் என்றும் ‘எந்த எழுத்துக்கும் எதிராக ஒருபோதும் இருக்க மாட்டேன்’ என்று அவர் சொல்லிவிட்டதாகவும் பின்னர் அறிந்தேன். எழுத்தாளர் சுதந்திரத்தை வலியுறுத்திப் பத்திரிகைகளிடம் பேசினார். அவரைத் தமக்கு ஆதரவாக்கிக் கொள்ள நினைத்த எதிர்ப்பாளர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. எழுத்துரிமையை ஆதரித்து ஓராயிரம் குரல்கள் நாடு முழுதுமிருந்து வந்தன. இருப்பினும் அவை எல்லாவற்றை விடவும் உள்ளூரிலிருந்து வந்த குசிபாவின் கருத்து எனக்குப் பெருநம்பிக்கையைக் கொடுத்தது. நாமக்கல்லில் தைரியத்தோடு நான் இருந்தமைக்கு அவர் கருத்து தார்மீகமாக உதவியது.
‘எழுத்தாளன் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்’ என்று அறிவித்துவிட்டு ஓர் அறைக்குள் முடங்கிக்கிடந்த என்னைப் பார்க்கவந்த முதல் மனிதர் அவர்தான். 2015 ஜனவரி 14 அன்று அதிகாலையில் எங்கள் வீட்டுக்கு வந்தார். உயரமும் கம்பீரமும் கொண்ட உருவம். முதுமையாலும் சில படிகள் ஏறி வந்ததாலும் சற்றே தளர்ச்சி. அருகில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். சில நிமிடங்கள் ஏதும் பேசவில்லை. இறப்பு வீடு ஒன்றுக்குத் துக்கம் விசாரிக்க வந்த மனநிலை அவரிடம் இருந்ததைக் கண்டேன். தைரியமாக இருக்கும்படி ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். ‘தாகம் நாவல இவங்கெல்லாம் படிச்சாங்கன்னா எனக்கு எதிராவும் இப்படிச் செய்வாங்க. சாதி ஆபத்தானது’ என்று மென்மையான குரலில் பேசினார். அறையை விட்டு வெளியேறி வாசல் வரைக்கும் வந்து அவரை வழியனுப்பினேன்.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com