ஒரு வரலாறு இரு கடிதங்கள் ஒரு கதை
வணக்கம்,
‘மெட்ராஸ் 1726’ எனும் நூலை செல்வம் தந்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் வாசித்து முடித்தேன். க. சுபாஷிணி ‘காலச்சுவடு’ மூலமாக ஓர் அரிய தமிழாக்கத்தை முன்வைத்துள்ளார். மிகவும் சுவையான உரையாடல்களைத் தெள்ளத்தெளிவான நடையில் அவர் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
சூல்ட்சே முதலில் இதைத் தெலுங்கில் எழுதி, பிறகு ஜேர்மனில் பெயர்த்தது என்னை வியக்கவைத்தது. சுபாஷிணி அதை ஜேர்மனிலிருந்து தமிழுக்குப் பெயர்த்தது மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
நெடுங்காலமாக மெட்ராஸ், சென்னை இரண்டினதும் தோற்றுவாய்களை இட்டு என்னுள் எழுந்த வினாக்களுக்கு இதில் கல்வெட்டுச் சான்றுடன் உரிய விடை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக விளங்கிய எனக்கு துபாஷி வகிக்கும் பங்கும் நீதிமன்ற வழக்கும் மிகவும் சுவைத்தன. சுபாஷிணி உணர்த்துவது போல், துவிபாஷி (இரு பாஷைக்காரர்) என்பது பேச்சுவழக்கில் தோபாஷி, துபாஷி எனத் திரிந்துள்ளது.
கதையோடு கதை, இலங்கை நீதிமன்றங்களில் interpreter தொலுக்கு முதலியார் எனப்பட்டார். இது துலக்கு முதலியார் என்பதன் திரிபு. துலக்கும் முதலியார் அதன் தோற்றுவாய்.
சென்னையில் வெவ்வேறு ஐரோப்பிய நாட்டவர்களும் மொழியினரும் மதத்தவரும் ரஷ்யரும் அராபியரும் பட்டாணியரும் வாழ்ந்ததும், போர்த்துக்கேய மொழியிலும்கூடப் பள்ளிகள் இயங்கியதும், பிராமணர் போர்த்துக்கேய மொழியில் பதில் கூறியதும். நான் எதிர்பார்க்காதவை. மரஞ்செடிகொடிகள், காய்கறிகள், பழவகைகள், பிராணிகள், பறவைகள், பலசரக்கு, உணவுகள், தொழில்கள் அனைத்தையும் சூல்ட்சே விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளார். தமிழ்ப் பெண்களையும் அவர் மெச்சத் தவறவில்லை!
கூறி வேறு, கேதாங்கி, யானைக்கால் மரங்கள் (116) உட்பட பத்துப் பதினைந்து மரங்களை இனங்காண முடியவில்லை. ஒரு மான் மிளகு (126), ஒரு மான் சீனி (127) என்பவற்றில் உள்ள மானின் பொருள் புரியவில்ல.
கொக்கோ, பனை மரங்கள் (ப: 73, 116) என்பது தென்னை, பனை மரங்கள் என்று நினைக்கிறேன். உடைந்த கிளைகள் (93) முறிந்துவிழுந்த கிளைகளைக் குறிப்பதாகத் தெரிகிறது. அமைதம் எண்ணெய்யை (97) சென்னைப் பேரகராதி நெய் என்கிறது.
Mosquito தமிழகத்தில் கொசு (101), இலங்கையில் நுளம்பு. இலங்கையில் பிராணிகளை மொய்க்கும் இன்னும் சின்னஞ்சிறிய சந்துவே கொசு. இது உண்ணி அல்ல. உண்ணி அவற்றைப் பீடிப்பது, கொசு அவற்றை மொய்ப்பது. Bread தமிழகத்தில் ரொட்டி; இலங்கையில் பாண் (பிரஞ்சு வழிவந்து தமிழிலும் சிங்களத்திலும் வழங்கும் சொல்). ரொட்டி இலங்கையில் சப்பாத்தி வகையைக் குறிக்கும். தமிழகத்தில் நாற்காலி, இலங்கையில் கதிரை (போர்த்துக்கேயச் சொல்). தமிழகத்தில் சிவப்பு மிளகாய் (126), இலங்கையில் செத்தல் மிளகாய். இங்கு orange சிங்களத்தில் தொடம், தமிழில் தோடை. அத்துடன் சர்க்கரை (saccharin), வெல்லம் (jaggery), சீனி (sugar) என மூவகை உண்டு. இந்நூலில் வரும் ‘சீனிக்கட்டி’ என்னவாய் இருக்கும் என்று யோசிக்கிறேன். இலங்கையில் linenஐ காரிக்கன் துணி என்று வழங்கியதாக நினைவு.
ஏனென்றால் அன்று நீங்கள் தலைமுடிக்கும் சேர்த்துக் குளிப்பதால் பால் அருந்தாமல் இருப்பது நலம் (125). இலங்கையில் இதை நீங்கள் முழுகுவதால்... என்கிறோம்.
“நீங்கள் சீனியை ஒரு பெரிய மண்பாண்டத்தில் வைத்து மூடிவிடுங்கள். அதனைச் சுற்றி ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீரை நிரப்பிவிடுங்கள். அப்படி செய்தால் எறும்புகளால் ஒன்றும் செய்ய முடியாது” (128). நானே இப்படிச் செய்ததுண்டு. ஒரு கும்பாவினுள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அதற்குள் சீனிப் பேணியை வைத்துவிடுவேன்!
“ஒரு கப் அரிசியும் சீனி கலந்த பாலும் நீங்கள் சாப்பிடலாம்” (123). இது சோறும் - பாலும் என்று நினைக்கிறேன். அரிசி, சோறு இரண்டையும் rice குறிப்பதும், boiled rice சோற்றைக் குறிப்பதும் தெரிந்ததே. சோற்றை அவித்த சோறு (138-142) என்று கொள்வது ஒருவகையில் கூறியது கூறலாகும். “அவர் அரிசியைச் சமைக்கும் போது...” (149) என்பது “அவர் சோறு சமைக்கும் போது” என்று வரும். “ஐயா நீங்கள் சமையலுக்கு நெருப்பு எரிக்க விறகுகள் வாங்கும்போது...” (152) இது “சமையலுக்கு விறகு வாங்கும்போது...” என்று குறுகும்.
வாண வேடிக்கைகள், வான வேடிக்கைகள் (138) என்று அச்சிடப்பட்டுள்ளது.
உரையாடல்கள் அனைத்திலும் நகைச்சுவை ததும்புகிறது. கப்பலில் வந்த மணமகள் கூரையைக் கொண்டுசென்ற ஐரோப்பியரைப் பற்றித் தமையன் சொல்லக் கேட்கும் இடத்தில் நகைச்சுவை உச்சத்தை எட்டுகிறது.
சுபாஷிணிக்கு எனது வாழ்த்தும் பாராட்டும்!
மணி வேலுப்பிள்ளை
அன்பின் கலாமோகனுக்கு,
மூன்று கிழமைகளுக்கு முன் நான் எனது டயரியில் எழுதிவைத்திருந்த குறிப்பொன்றைப் பார்த்தபோது உடனடியாகவே உங்களுக்கு இதனை எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுதெல்லாம் நிறைய விடயங்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறேன்.
அண்மையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த உங்களின் ‘கிழிவு’ கதையைப் படித்தேன். அதை நான் படித்த திகதி மே 18; இது தற்செயலானதுதான்.
கதையைப் படித்ததும் அது என்னைப் பழைய நினைவுகளுக்குள் இழுத்துச் சென்றது. கதை அற்புதம்.
1981ஆம் ஆண்டில் நான் திஸ்ஸமஹரமவில் கிரிந்தி ஓயா Irrigation and Settlement Projectஇல் வேலை செய்து கொண்டு இருந்தேன். அங்கு பணிபுரிந்தவர்களில் நானும் இன்னுமொருவரும் மட்டும்தான் தமிழர்கள். அங்கு எங்களுக்கு quarters தந்திருந்தார்கள். ஜூன் மாத ஆரம்பத்திலா அல்லது மே மாதக் கடைசியிலா என்று எனக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. நாடு முழுவதும் கலவரம் வெடித்திருந்தது. அந்த நேரம் தமிழர்களாகிய எங்கள் இருவருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று கலவரமடைந்த எங்களுடன் வேலை செய்த இன்னொரு சீனியர் என்ஜினீயர் எங்களைத் தனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார். அவரது வீடு வேலைத்தளத்தில் இருந்து ஓரளவு தொலைவில் இருந்தது. அங்கு போயிருந்தாலும் நாங்கள் யாரும் நித்திரைக்குப் போகும் எண்ணத்திலேயே இருக்கவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற படபடப்பிலேயே மூவரும் இருந்தோம். ஆனால் ஒருவருக்கொருவர் பயத்தைக் காட்டிக்கொள்ளாதிருக்க முயன்றோம். அதில் நாங்கள் வென்றோமா தோற்றோமா என்று இன்றுவரை தெரியவில்லை. அதிகாலையிலேயே எங்கள் இருவரையும் அம்பாந்தோட்டைக்குக் கூட்டிக்கொண்டுபோய் கொழும்புக்குப் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். நானும் நண்பனும் பஸ்ஸில் ஏறினோம்.
நான் நெற்றியில் பொட்டுவைக்கத் தொடங்கிய நாளில் இருந்து அந்த நாள்வரை ஒரு நாள்கூடப் பொட்டு வைக்காமல் வீட்டை விட்டு வெளிக்கிட்டதில்லை. அன்றுதான் முதன்முதலாகப் பொட்டு வைக்காமல் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டேன். எத்தனை மணித்தியாலப் பயணம் என்பதுகூடத் தெரியவில்லை. ஏதாவது ஒரு தரிப்பிடத்தில் பஸ் நிற்கும்போதும் நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டே இருந்தது. நானும் என்னோடு பயணம் செய்த நண்பனும் அருகருகேதான் இருந்தோம். ஆனால் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. என்ன மொழியில் பேசினாலும் பயணம் செய்பவர்கள் நாங்கள் சிங்களவர்கள் அல்லர் என்று தெரிந்துகொண்டு விடுவார்களோ என்று ஒரே நடுக்கமாக இருந்தது. நடுங்கிக்கொண்டே கொழும்பு வந்துசேர்ந்தோம்.
அதற்குப் பிறகு நான் திஸ்ஸமஹரமவுக்குத் திரும்பிப் போகவில்லை. கொழும்பில் head officeஇல் சில நாட்கள் வேலை செய்த பின்னர் பிரான்சிற்கு வந்துவிட்டேன்.
நான் ‘பொட்டு’ வைக்காமல் வந்தேன் என்ற வசனத்தை எழுதும்போது ஏனோ நீங்கள் ‘பள்ளம்’ சஞ்சிகையில் எழுதிய ‘பொட்டு’ சிறுகதையும் ஞாபகத்திற்கு வந்து போனது. அந்த ‘பொட்டு’ம் இந்த ‘பொட்டு’ம் ஒன்றல்ல.
77ஆம் ஆண்டு கலவரத்தின்போது மொறட்டுவாவில் இருந்தேன். அங்கிருந்து தப்பித்து நடுங்கியபடி யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தேன். 81ஆம் ஆண்டு திஸ்ஸமஹரமவில் இருந்து நடுங்கியபடிக் கொழும்பு வந்து சேர்ந்தேன். இப்படியே நினைவுகள் தொடர்கின்றன. இன்று மே 18.
இந்த நாளில் ‘கிழிவு’ கதையை வாசித்தது மனத்திற்குத் கஷ்டமாகத்தான் இருந்தது.
இருத்தலா இருத்தலின்மையா?
அகதி என்பது அவதிதான்.
கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது மனம்.
இப்படி எத்தனையோ எத்தனையோ?
என்றைக்கும் அன்புடனும் நட்புடனும் லக்ஷ்மி