நரை
கண்ணாடி முன்னால் அமர்கையில் மானசீகமாகக் களைத்திருந்தேன். குளிரைத் தேக்கியிருந்த லெதர் கதிரை சில்லிட்டது. சையத் வழக்கு முடிவுற்று ஐந்தாறு மணித்தியாலங்கள் கடந்திருந்த போதிலும் இன்னும் ஹோல்புர்ன் குடிவரவு நியாய சபை அறைக்குள்ளேயே மனம் அலைக்கழிந்தது. என்னுடைய பத்து வருட சட்ட உத்தியோக அனுபவத்தில் இப்படியொரு ஏமாற்றத்தையும் கசப்பையும் நான் ஒருபொழுதும் சந்திக்கவில்லை. சட்டத்தில் எழுதப்படாத அந்தக் கலாச்சார விதியின் எகத்தாளம், தலைமுடிக் கற்றைகள்போல் மனக் கண்களுக்குள் துருத்திக்கொண்டு நின்றன. எதேச்சையாகப் பின்னர் ஏதோவொன்றிலிருந்து அந்த எண்ணத்தை நானே சுதாரித்து, பெருமூச்சொன்றின் உதவியுடன் வலது பக்கமாக இருந்த கண்ணாடித் திரையினை நோக்கித் திரும்பினேன். வூல் விச் நகரம்