வண்ணம் சூழ் தூரிகை
பேராசிரியர் எஸ்.பி. சீனிவாசன் தமிழ் நவீன நாடக முன்னோடி. 1927 டிசம்பர் 4இல் மதுரையில் பிறந்தவர். விடுதலைப் போராட்ட உணர்வால் பள்ளிப் படிப்பை உதறியவர். இளமைப் பருவத்தில் கலையார்வம் மிகுந்திருந்தவர். விடுதலைப் போராட்ட உத்வேகத்தில் காங்கிரஸ் கட்சிக்காகச் சுவரோவியங்கள் வரைகிறார். அவரது ஓவியங்கள், கலைச் செயல்பாடுகளில் வெகுவாக ஈர்க்கப்பெற்ற பெருந்தலைவர் காமராசர் எஸ்.பி.எஸ்ஸைக் கலை பயில தாகூரின் சாந்தி நிகேதனுக்கு அனுப்பிவைக்கிறார். அங்கு நந்தாலால் போஸிடம் பயில்கிறார். சாந்தி நிகேதனின் அனுபவச் செழுமையோடு அடையாறு கலாசேத்ராவிற்கு வருகிறார். அங்கு ருக்மணி அருண்டேலுடன் பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார். தமிழ்த் திரைப் படங்களில் கலை இயக்கப் பிரிவில் பணியாற்றும் சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன. மேற்கண்ட பணிகளினூடாக நாடகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ‘ஏசியன் இன்ஸ்ட்டிட்டுயூட் ஆப் தியேட்டர்’ என்ற நிறுவனத்தில் பயில்வதற்குப் புதுதில்லி செல்கிறார். அந்நிறுவனமே பின்னர் தேசிய நாடகப் பள்ளியாக மாறுகிறது. அங்கு நாடகம் பயின்ற முதல் தமிழக மாணக்கர்கள் எஸ்.பி. சீனிவாசனும் என்.வி. ராஜமணியும் ஆகும். பேரா. ராமானுஜம், கோபாலி ஆகியோர் தேசிய நாடகப் பள்ளியாக மாறிய பிறகு இப்ராஹிம் அல்காசியிடம் மாணவர்களாகிறார்கள்.
ஏசியன் இன்ஸ்ட்டிட்டுயூட் ஆப் தியேட்டரில் கலை நுட்பங்களைக் கற்ற பேராசிரியர் காந்தியச் சிந்தனைகளின்பால் ஏற்பட்ட தாக்கத்தால் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்திற்கு கலை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அங்கு பேரா. ராமானுஜமும் எஸ்.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு அமைகிறது. நாடக இணையர்கள் இருவரும் கதராடையோடு தமிழகம் முழுவதும் பயணப்பட்டு நாடகப் பயிலரங்குகளை நடத்துகிறார்கள்.
நாடகப் பயிலரங்குகளுக்குப் பிரத்யேகப் பாடத்திட்டம், தேசிய அளவிலான தேர்ந்த பயிற்றுநர்கள், பயிலரங்க இறுதியில் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி நாடகத் தயாரிப்பு என்ற முறைமையை உருவாக்கினார்கள். இவர்கள் உருவாக்கியது தேசிய நாடகப் பள்ளியின் தாக்கத்தால் ஏற்பட்டது. தமிழ்நவீன நாடகத்தில் இரண்டு போக்குகள் ஆரம்பக் காலகட்டங்களைத் தீர்மானித்தன.
1. தேசிய நாடகப் பள்ளியின் காந்தி கிராமப் பல்கலைக்கழகப் பயிலரங்கில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் பேராசிரியர்கள் இருவரும் அதற்கு முதன்மையாக வித்திட்டவர்கள் ஆனார்கள்.
2. பாதல் சர்க்காரின் சோழமண்டலப் பயிலரங்கின் வழிவந்த முயற்சிகள். மேற்கண்ட இரண்டு போக்குகளும் பயிலரங்குகள், நாடக விழாக்கள், கலைச் செயல்பாடுகள் மூலம் நவீன நாடக இயக்கத்தைச் செழுமைப்படுத்தின. ஏனெனில் இரண்டாம் தலைமுறை நாடகக்காரர்கள், மேற்கண்ட இரண்டு பயிலரங்குகளிலிருந்தும்தான் உருவானார்கள்.
நவீன நாடகத்திற்கு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தியதோடு இரண்டாம், மூன்றாம் தலைமுறை நாடக ஆளுமைகள் உருவாவதற்கான அடித்தளங்களையும் பேராசிரியர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்தார்கள். இந்த அடிப்படை உருவாக்கங்கள் ஓர் இரவில் நடந்துவிடவில்லை; பேராசிரியர் இருவரின் அர்ப்பணிப்பான தொடர்பணிகளால் மட்டுமே சாத்தியப்பட்டன. பேராசிரியர்கள் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. மாதம் முழுவதிற்குமான அட்டவணைகளோடுதான் அவர்களின் நாடகப் பணிகள் அமைந்திருந்தன.
பேராசிரியர்கள் இருவரின் இணைப்பு மிகக் கச்சிதமானது. பேரா. ராமானுஜம் இயக்குநர் அல்லது நெறியாளர் என்றால் பேரா. எஸ்.பி. சீனிவாசன் வடிவமைப்பாளர் அல்லது அரங்கியலாளர். பேரா. ராமானுஜத்தின் கருத்தாக்கக் கற்பனைகளை பேரா. எஸ்.பி.எஸ். மிக நேர்த்தியாக அரங்கப்படுத்திவிடுவார். முழுமை அரங்கம் என்ற வார்த்தை எஸ்.பி.எஸ் இல்லையென்றால் முழுமையடையாது.
எஸ்.பி.எஸ். நாடக உடை, ஒப்பனை, அரங்கப் பொருள்கள், அரங்க நிர்மாணம், ஒலி ஒளி ஆகிய அனைத்து அரங்கக் கூறுகளிலும் விற்பன்னர். காட்சிப்படிமங்களில் புலமை பெற்றவர். “புழக்கத்தில் இருக்கும் பேச்சுக்கலைகளில் காணும் கருத்துப்படிமங்கள் சூட்சும வடிவம் கொண்டவை. வற்றி முழுப் பரிமாணங்களும் மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. அதே கருத்தை நடிப்பின் மூலம் காட்சிப் படிமங்களாக மேடையில் மாற்றும்போது ஸ்தூல வடிவம் கொள்கிறது. ஸ்தூல வடிவங்களிலிருந்து கிடைக்கும் அனுபவ நிலைகள் சிறந்தது” எனக் குறிப்பிடுவார். சர்வதேச அளவில் நாடக நெறியாக்கம், வடிவமைப்பு, நடிப்பில் பயின்றும்வரும் சிந்தனைகள் பற்றிய பிரக்ஞை கொண்டவர். அந்தச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குப் படைப்பு நுணுக்கங்களோடு கைமாற்றிவிட வேண்டும் என்ற அக்கறை அவரது செயல்பாடுகளில் வெளிப்படுவதை நான் அருகிலிருந்து கவனித்திருக்கிறேன்.
அரங்க வடிவமைப்பு நிர்மாணத்தில் விற்பன்னரான பேராசிரியர் ‘நாயைப் பறிகொடுத்தோம்’ போன்ற பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அரங்கப் பரிமாணங்கள், படிமங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியுள்ளார். வண்ணங்கள், வடிவமைப்புக் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளிவந்த நாடகங்கள் பெரும்பாலானவை குழந்தைகளுக்கானவை. பேராசிரியர் இயக்கிய நாடகங்கள் அதிகம் பயிலரங்கத் தயாரிப்புகள். அவரது நெறியாக்கம் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டது. கதாபாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள்வழி பயணப்படுவதிலிருந்து மாறுபட்டுக் காட்சிப் படிமங்கள் சார்ந்து வடிவமைப்புக் கூறுகளின் வழி பயணப்படுவார். இந்தப் பயணப்படுதல் குழந்தைகளின் அகவுலகிற்கு நெருக்கமானது. வண்ணங்கள் பற்றிய சிலாகிப்பு எப்பொழுதும் அவரிடம் உண்டு. வண்ணங்களைக் கையாளும்பொழுதும் அது தொடர்பாகப் போதிக்கும்பொழுதும் ஓர் இனம்புரியாத குதூகலம் அவரைத் தொற்றிக்கொள்ளும். ஒருபோதும் வண்ணங்களை அவரிடமிருந்து பிரித்துவிட முடியாது. குழந்தைகளின் அகவுலகிற்கு அவர் வண்ணங்கள் சூழ்ந்த தூரிகையாகவே திகழ்ந்தார்.
எஸ்.பி.எஸ்.ஸோடு ‘நாயைப் பறிகொடுத்தோம்’ நாடகத் தயாரிப்பில் அந்த நாடகத்தின் தலைப்பு பற்றி வினவியபோது ‘நாய்’ ஓர் உருவகம். மனிதன் நெருக்கடியான சமூகச் சூழலில் தனக்குள் இருக்கும் பொக்கிஷங்களை பறிகொடுக்கிறான். நாயைப் பறி கொடுத்தல் என்றால் அது கருணை, தியாகம் போன்ற மனித மாண்புகளைப் பறிகொடுப்பது என்றார். ஜி. நாகராஜன் கூட மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல். என்பார். நூற்றாண்டுகள் வாழ்ந்த மனிதனை, மனித சமூகத்தை ஒரு படைப்பாளி சல்லிப்பயலெனச் சுட்டுவது மாண்பிழந்துபோவதன் துயரத்தைத்தான். மனிதச் சமூகம் பறிகொடுத்து அலைவதைப் பார்த்துப் பதற்றமடைவதும் பரிதவிப்பதும் படைப்பாளிகளின் இயல்பாகிறது. நேர்மையான, உண்மையான படைப்பாளியை மனித மாண்பிழத்தலின் துயரம் அலைக்கழிக்கிறது. எதிர்காற்றில் பயணிப்பதுபோல் ஒவ்வொரு படைப்பாளியும் மனித குலத்திற்காகப் போராடுகிறான். காலம் போராடுவதையும் விடைபெறுதலையும் படைப்பாளிக்கு முன்வைத்தபடியே நகர்கிறது. எஸ்.பி. சீனிவாசன் சார் விடைபெற்றுக்கொண்டார்.
மின்னஞ்சல்: nigazh@gmail.com