வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
சேரன் கவிதைகள் என்றவுடன் வாசகர்கள் பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அவருடைய புகழ்பெற்ற கவிதையான ‘இரண்டாவது சூரிய உதயம்.’ யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு இலக்கிய வினையாக எழுதப்பட்ட இந்தக் கவிதை சக எழுத்தாளர்கள் பலராலும் பேசப்பட்ட கவிதை. “ஒரு கவிஞனின் பிரக்ஞையை மீறி அவன் வழியாக வரலாறு தன்னைப் பேசிக்கொள்கிற தருணமே மகத்தான கவிதைக்குரியது” என்று எழுதுகிற ஜெயமோகன் இக்கவிதையை அத்தகையதொரு தருணமாகக் காண்கிறார். இக்கவிதை மாத்திரமல்ல, ஈழத் தமிழர்களின்பால் தொடர்ந்த வன்முறை நிகழ்வுகளை — எடுத்துக்காட்டாக, திருநெல்வேலித் தாக்குதல், கறுப்பு ஜூலைப் படுகொலைகள், திலீபனின் உண்ணாவிரதம், இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் — உள்வாங்கி எழுதப்பட்ட பல கவிதைகள் சேரனிடம் உண்டு. சேரனின் இந்தக் கவிதை “அழிவில் ஆக்கம் ஒன்றைக் கண்டடையும் தருண”த்தைக் காட்டுவதாக வாசிக்கிறார் ஜெயமோகன் (2008). மேலும் பெரும் புரட்சிகரக் கவிதைகளில் l