சரண்மனோன் கவிதைகள்
பைத்திய நெறிகள்
விரைவு வாகனம் மோதாமல்
விநாடியில் விலகுகிறான்
உதித்த எண்ணங்களை (கெட்ட) வார்த்தைகளாக, இல்லாத நபரிடம்
உதிர்க்கிறான்
கடைத் தெருவில் கனிவான மனசுகளைக்
கணித்துவைத்து,
டீயும் பன்னும் சமயத்தில் பரோட்டாவும்
பெறுகிறான்
விசேஷ வீடுகளில் கடைசிப் பந்தியில் அமர்ந்து,
ராத்திரிப் போஜனம் முடிக்கிறான்
பூக்கூடைச் சாளரத்தில் கைநீட்டி
சுருட்டு ஒன்றைப் பெறுகிறான்
குளிருக்குக் கதகதப்பாய்ப் புகைக்கிறான்
மார்ட்டின் ராஜின் சிமெண்ட் மெழுகிய சமாதியின்
மென்சூட்டில் படுத்துறங்கும் அவனின்
சாதுர்யங்கள்
சாத்தியமற்றவை உனக்கு!
----------------
ரெஜினாவின் பூனைக் குட்டிகள்
அனாதரவான
பூனைக் குட்டியை நிராகரிக்க
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டிருந்தனர் வீட்டில்.
அது வளர்ந்ததும் பாம்பைக் குற்றுயிரோடு வீட்டிற்குள்
கொண்டு வந்துவிடும் - அப்பா.
அது நிறையக் குட்டிகளை ஈன்றுவிடும் - அம்மா.
பூனையின் முடி
ஆஸ்துமாவை உண்டாக்கும் - பாட்டி.
அதை ஏற்றுக்கொள்ள ஒரு காரணம் தேடி
அலையத் தொடங்கினாள் சிறுமி ரெஜினா.
வனாந்திரத்தில் அந்தப் பூனைக்குட்டியும்
வீட்டில் ரெஜினாவும் தவித்தனர்
ஒரு பகல், ஒரு இரவு, ஒரு மழை
அவள் உடல் பூனைக்குட்டியைப் போலவே
மெலிந்து குற்றுயிராவதைக் காணத் தொடங்கினர்
அவள் வீட்டினர்
அதற்குப்பின் அந்தப் பூனைக்குட்டிக்கு
அடைக்கலம் கிடைத்தது
அந்த வீட்டில்
அன்றிரவு
மிகுந்த சமாதானத்தோடு அந்தக் குட்டியை
மார்போடு அணைத்து உறங்குகிறாள்...
அவள் இதயத்தில் காப்பாற்றப்பட்டிருந்தன
உலகிலுள்ள எல்லாப் பூனைக்குட்டிகளும்!
மின்னஞ்சல்: gokulsharane@gmail.com