“கூடார்த்தச் சித்திரங்கள்”
ஓவிய பாரதி
சுதேசமித்திரன் (1934 - 1937)
கே.ஆர். சர்மா
பாரதி பாடல்கள்
விளக்க ஓவியங்கள்
தொகுப்பும் பதிப்பும்:
ய. மணிகண்டன்
“கூடார்த்தச் சித்திரங்கள்”
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்
என்று பாடிய பாரதி ஓவியம் வரைய அறிந்தவரா எனத் தெரியவில்லை.தாகூர், விக்டர் யூகோ முதலியவர்களெல்லாம் கவிதைக் கலையோடு ஓவியக்கலையிலும் திறன் காட்ட முனைந்ததாக வரலாறு காட்டுகின்றது. ஏன்? பாரதியின் தாசனுக்குக்கூட ஓவியத்தில் கைவண்ணம் காட்டும் ஆற்றல் சற்றே இருந்திருக்கின்றது.
ஓவியத்தை ரசிக்கத் தெரிந்தவராக மட்டுமே பாரதியைப் பற்றி நாம் அறிகின்றோம்.அவரது எழுத்துகளே ஓவியங்கள் என்று உண்மையாகவே பாராட்டலாம். அவர் கையெழுத்துக்கூட ஓவியம்போலத்தான் ஒளிர்ந்திருக்கின்றது. தனக்கு வரையத் தெரியாத ஏக்கத்தையெல்லாம் தான் நடத்திய பத்திரிகைகளில் ஓவியங்களை இடம்பெறச் செய்து தீர்த்துக்கொண்டாரோ என்று எண்ணும் அளவிற்குத் தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முதலில் அவர்தான் ‘இந்தியா’ பத்திரிகையில் “கூடார்த்தச் சித்திரங்க”ளைத் (Cartoon) தொடர்ந்து இடம்பெறச் செய்திருக்கின்றார்.
ஓவியங்களையே கொண்ட ஒரு மாத இதழை நடத்தக்கூட அவர் கனவு கண்டிருக்கின்றார். ‘சித்ராவளி’ என்னும் பெயரில் அந்த இதழை நடத்த முயன்ற அவர் அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சித்திர விளக்கம் இடம்பெறும் என்றும் அறிவித்திருந்தார். இறுதிக்கட்ட வாழ்வில் – 1920இல் ‘அமிர்தம்’ என்னும் பெயரில் இருவார இதழொன்றை நடத்த முயன்றபோதும் அதில் ஓவியங்கள் இடம்பெறும் என்பதை “உலக முழுதிலும் அப்போதப்போது நடக்கும் செய்திகள் தெளிவான விளக்கங்களுடனும் சித்திரங்களுடனும் வெளியிடப்படும்” (பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும், ப. 314) என்றுஅறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ரவிவர்மா மறைந்தபோது எழுதிய இரங்கற்பாடலில் அவரை “நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான்” என்று போற்றியிருந்தார் பாரதி. உரைநடையிலும் “தமது நிகரற்ற சித்திர லேகனத் திறமையால் நமது நாட்டிற்கே ஓர் பூஷணமாக விளங்கினார்” (கால வரிசையில் பாரதி பாடல்கள், ப. 137) எனச் சிறப்பித்திருந்தார். ‘ஞானரத’த்தில் ஏறி உலாவி, பர்வதகுமாரியின் கையைப் பற்றிக்கொண்டு பறந்து திரிந்து, கந்தர்வலோகத்தின் காட்சிகளில் தன்னைப் பறிகொடுத்து, சித்திரக் காட்சி ஒன்றைக் கண்டு மனம் நடுங்கியபோது, “சித்திரத்துக்கு அஞ்சுகிறாய்” என்று பர்வதகுமாரியால் நகைக்கப்பட்ட பாரதி “கந்தர்வச் சிற்பனுடைய சித்திர சலாகை எங்கே? எனது பேதை எழுதுகோ லெங்கே?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார்.கந்தர்வநாட்டுச் சித்திரச்சாலையிலுள்ள காட்சிகளைத்தான் எப்படி எழுதிக் காட்டுவது என்று திகைத்திருக்கின்றார். சித்திரத்தில் தோன்றிய வனத்தை உண்மை வனமென்றே நம்பித் தடுமாறியிருக்கின்றார். “நமது நாட்டுச் சித்திரத்தொழிலை நாம் பாதுகாக்காமல் இருப்போமானால் இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு அப்பால் பாரத நாட்டில் எவருக்கும் கண் தெரியாமலே போய்விடும்”(பாரதியார் கதைக் களஞ்சியம், ப. 330) என்றும் அறிவுறுத்தியிருக்கின்றார்.
வரையத் தெரியவில்லை என்றாலும் ரசிக்கத் தெரிந்த பாரதி சித்திரங்களின், சித்திரக்கலையின் மேன்மையைக் கொண்டாடியிருக்கின்றார். புதுவை வாழ்க்கை முடிவுபெற்றுக் கடயம், எட்டயபுரம், பாபநாசம், குற்றாலம் என்றெல்லாம் தம் கடைசி நாள்களைக் கடத்திக்கொண்டிருந்த காலத்தில் தென்காசியிலே நண்பர் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில் சில நாள்கள் தங்கியிருந்தார். நண்பரின் தம்பி டி.எஸ்.சொக்கலிங்கத்திடம் தனக்கு ஒரு லட்ச ரூபாய் தேவை என்று சொல்லியிருக்கின்றார். எதற்கு அவ்வளவு தொகை என்று சொக்கலிங்கம் கேட்க, ஐம்பதாயிரம் ரூபாய் தனது கவிதைகளை அச்சிடும் செலவுக்கு என்று தெரிவித்திருக்கின்றார். மீதம் தொகை எதற்கு எனப் பாரதி தெரிவித்த விடை தனது கவிதைகள் சித்திரங்களோடு வெளிவர வேண்டும் என்பதில் அவருக்கிருந்த தீராத விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைந்தது.
(முன்னுரையிலிருந்து)