போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
மரணத்தின் கதை
நக்சல் மண்ணில்
கனவுகளும் நிராசைகளும்
(கட்டுரைகள்)
ஆசுதோஷ் பரத்வாஜ்
தமிழில்: அரவிந்தன்
போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
என்னுடைய மேடம். அப்படித்தான் அவளைக் குறிப்பிடுவேன். அவளிடம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இப்போது நான் இறந்துவிட்டேன். யாருடன் அவள் குழந்தை பெற்றுக்கொள்வாள் என்று எனக்குத் தெரியாது. அப்போது என் பெயர் கோர்சா ஜோகா. இப்போதும்தான். கொல்லப்பட்ட பிறகு பெயர் மாறுவதில்லை. காவல் துறைப் பதிவேடு இப்படிச் சொல்கிறது: கோர்சா ஜோக்ராம் என்கிற ரஞ்சித் மட்காம் என்கிற சிவாஜி. ஊரறிந்த மாவோயிஸ்ட். வயது 35. கோண்ட் பழங்குடி.
14 நாட்களுக்கு முன்பு நான் கொல்லப்பட்டேன். 2015ஆம் ஆண்டின் முதல்நாள். சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் டிவிஷனில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில். காவல் துறையினர் என்னுடைய சடலத்தைப் பிணக் கூராய்வு செய்தார்கள். நான் எப்படிக் கொல்லப்பட்டேன் எனக்கு எத்தனை காயங்கள் ஏற்பட்டன, எங்கெல்லாம் கத்திகள் என்னைத் துளைத்தன என்றெல்லாம் ஒரு துண்டுத்தாளில் எழுதினார்கள். நான் பதினோரு ஆண்டுகள் கட்சியில் இருந்தேன். என்னிடம் ஏ.கே.47 துப்பாக்கி இருந்தது. தண்டகாரண்யப் பகுதிதான் என் களம். எனக்கு ஒரு காயம்கூடப் பட்டதில்லை. நான் காவல் துறையில் சேர்ந்த 18 மாதங்களுக்குள் என்னுடைய முன்னாள் தோழர்கள் என்னைக் கொன்றுவிட்டார்கள். கங்களூர் அருகே உள்ள என் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது என்னை அவர்கள் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்த்துவிட்ட பையன். என்னுடைய கிராமத்திற்கு அருகில் வசித்தான். அவனைக் கட்சிக்குள் நான் கொண்டுவந்தேன். அவன்தான் என்னை முதலில் குத்தினான். கொன்ற பிறகு என்னைத் தூக்கிச் சாலையில் வீசி எறிந்தார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அடிஷனல் சாஹேப் - பீஜப்பூரின் கூடுதல் காவல் துறை சூப்பிரன்டென்டென்ட் - நான் அவர்களுடைய தாக்குதல் பட்டியலில் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லியிருந்தார். காவல் துறையினரின் முகாம்களிலேயே வசிக்கும்படி அறிவுறுத்தினார். சரணடைந்த நக்சல்கள் காவல் துறைக் குடியிருப்புகளிலேயே தங்கிப் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் என்னுடைய பழைய தோழர்களை என்னால் எளிதாகச் சமாளிக்க முடியும் என்று நினைத்தேன். ஆயுதங்களுடனும் காவலர்களுடனும் வாழ்வதற்காக நான் வனத்தை விட்டு வெளியேறவில்லை. என்னுடைய கிராமத்தில் என் மேடத்துடன் (மனைவியுடன்) வாழ வேண்டும் என்று விரும்பினேன். எங்களுக்காகச் சிறிய வீடொன்றைக் கட்டிக்கொண்டிருந்தேன். கட்டிட வேலை நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் நான் தாக்கப்பட்டேன்.
உங்களிடம் நான் சொல்லவிருக்கும் விஷயத்தை வெளியார் யாரிடமும் இதுவரை பகிர்ந்துகொண்டதில்லை. என்னுடைய துறையின் ரகசியக் கோப்புகளில்கூட இது பதிவாகவில்லை. ஆம். பஸ்தரில் எண்ணற்ற மாவோயிஸ்டுகள் சரணடைவதை நான் உறுதிசெய்கிறேன். சரணடைந்த மாவோயிஸ்டுகளைக் காவல் படையில் கான்ஸ்டபிள்களாக நியமிக்கவும் செய்கிறேன். சிலரைத் தகவல் சொல்லும் படையினராக நியமிக்கிறேன். சிலரை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வனத்திற்கு என்னோடு அழைத்துச் செல்கிறேன். சரணடைந்தவர்கள் பற்றிய விவரத்தை அதிகாரபூர்வமான கோப்புகளில் உடனடியாகப் பதிவுசெய்து ராய்ப்பூர் காவல் துறைத் தலைமையகத்திற்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். தலைமையகம் தில்லி உள்துறை அமைச்சகத்திற்கு இது பற்றிய அறிக்கையை அனுப்பும். இந்த நடைமுறைகளை நான் பின்பற்றுவதில்லை. என்னால் பின்பற்ற இயலாது என்பதுதான் உண்மை.
நான் சட்டத்தை மீறுகிறேன் என்று சொல்பவர்கள் சட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தண்டேவாடா தில்லி அல்ல. இங்கே காவல் பணி என்பதும் அங்கே நடப்பதுபோல அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஒருவரைக் கைதுசெய்தால் அவரை 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டின் முன் நிறுத்த வேண்டும். பஸ்தரில் இது சாத்தியமில்லை. என்னுடைய படையினர் கோம்பாடுக்கோ குட்ரூலுக்கோ போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அவர்கள் பிடித்தால் அவரை நகரத்தில் இருக்கும் என்னிடம் அழைத்துவருவதற்கு 48 மணிநேரம் ஆகும். கையில் ஒருவர் சிக்கினால் முதலில் அவரை விசாரித்து அவரிடமிருந்து ரகசியங்களைப் பெறுவேனா அல்லது மாஜிஸ்திரேட்டிடம் கொண்டுபோய் நிறுத்துவேனா?
மாவோயிஸ்டுகளின் உயர்மட்டத் தலைவர் கணபதியோ அல்லது அவர்களுடைய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பூபதியோ பிடிபட்டால் அவர்களைக் கடமை தவறாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமா அல்லது மாதக்கணக்கில் பாதுகாப்பானதொரு வீட்டில் அவர்களை வைத்திருந்து அவர்கள் வரலாற்றைத் தோண்டி எடுக்க வேண்டுமா? டிவிஷனல் கமிட்டி உறுப்பினர் யாராவது பிடிபட்டால்கூட அதுபற்றி யாருக்கும் தெரியவிடாமல் பார்த்துக்கொள்வேன். பல வாரங்களுக்கு அவரைக் குடைந்தெடுப்பேன். அவரிடமிருந்து எல்லாவற்றையும் கறந்த பிறகே அவரை ஊடகங்கள் முன்பும் நீதிமன்றத்திலும் நிறுத்துவேன்.
சரணடையும் நக்சல்கள் விஷயத்திலும் இதே உத்தியைத்தான் பின்பற்றுகிறேன். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அவர்கள் என்னுடைய இடத்திற்கு வந்ததும் அதுபற்றி அதிகாரபூர்வமாக எப்படி அறிவிக்க முடியும்? வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அவரை வைத்திருந்து அவரிடமிருந்து எல்லாவற்றையும் ஒட்ட ஒட்டக் கறந்த பிறகுதான் வெளியே சொல்வேன்.
நக்சல்கள் என்னும் பெயரால் அரசு ஆவணங்களில் பதிவாகும் அனைவரும் நக்சல்கள் அல்லர் என்பது எனக்கும் தெரியும். அவர்களில் பலர் கிராமத்து மக்கள், கீழ்மட்டத்தில் இருக்கும் ஆயுதம் ஏந்தாத ஆதரவாளர்கள். ஆனால் அதனால் யாருக்குப் பிரச்சினை? நான் யாரையாவது கொலை செய்கிறேனா? காவல் நிலையத்தில் பூட்டிவைக்கிறேனா? கிராமத்திலிருந்து பழங்குடியினர் சிலரைக் கூட்டிவருகிறேன். சரணடைந்த நக்சல்கள் என்று அவர்களை அறிவிக்கிறேன். ஊடகங்கள் அவர்களைப் படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறேன். பிறகு அவர்களிடம் ஆளுக்கு 2000 ரூபாயையும் ஒரு பாட்டில் மதுவையும் கொடுத்து அனுப்பிவிடுகிறேன். இதன் மூலம் அவர்கள் எனக்கு விசுவாசமாகச் செயல்பட்டு நக்சல்களை ஒழிக்க உதவுவதற்கான சாத்தியக்கூறை உருவாக்குகிறேன். இதன் மூலம் கிராமவாசிகளுக்கும் நக்சல்களுக்கும் இடையே உரசலை ஏற்படுத்த முயல்கிறேன்.
போர் என்பது போர்க்களத்தில் நடப்பதல்ல. அது உங்கள் மனதில் உள்ள சதுரங்கப் பலகையில் நடப்பது. என் விருப்பப்டி செயல்பட வாய்ப்புக் கிடைத்தால் பஸ்தரில் இருக்கும் நக்சல்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிடுவேன்.
புத்திசாலிகள் என் வழியில் செயல்பட என்னை அனுமதிக்கிறார்கள். ஆனால் சரணடையும் கிளர்ச்சியாளர்களை என் படையில் சேர்த்துக்கொண்டு காவல் துறை நடவடிக்கைகளுக்கு அவர்களை அனுப்புவது ஏன் என்று கேட்கிறார்கள். நக்சல் ஒருவர் என்னை ஏமாற்றுவதற்காகவே சரணடைந்துவிட்டு, வனத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளும்போது நமக்கு எதிராகவே திரும்பிவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார்கள். என்னுடைய திட்டமெல்லாம் ஒரு நொடியில் தவிடுபொடியாகிவிடும். சரணடைந்த நக்சல்கள் பலர் காவல் துறைக்குச் சொந்தமான ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்றிருக்கிறார்கள். நக்சல்கள் என்னுடைய படையினரைத் தாக்கியது பற்றிக் காவல் துறையின் முகாம் படையினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். காவலர்களுடன் சென்று நக்சல்கள் வனத்தினுள் காவலர்களுக்கு எதிராகத் திரும்பித் தாக்குதல் நடத்தியது பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
இதில் உள்ள ஆபத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. சரணடைந்த நக்சல்களைப் பணியமர்த்தித்தான் ஆக வேண்டும். சரணடைந்த போராளிகளுக்கான மறுவாழ்வுக் கொள்கை என்னுடைய செயல்களுக்கு எதிரானது என்பது எனக்குத் தெரியும். சரணடைந்த நக்சலிடம் ஆயுதங்களைக் கொடுத்துக் காவல் துறை நடவடிக்கைக் குழுவுடன் அவரை அனுப்புவது நல்லதல்ல என்கிறது அந்தக் கொள்கை. மாறாக, தொலைபேசி பழுது பார்ப்பவர், தச்சர், எலக்ட்ரீஷியன் என்பனபோன்ற வேலைகளுக்கான பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். காவல் துறைக் குடியிருப்புகளில் அவரை வைத்திருக்கவே கூடாது. அவருக்கு வீடளித்து வாழ்வாதாரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். சரணடைந்த பின் காவல் துறையில் இணைந்த நக்சல்களைத்தான் நக்சல்கள் கொல்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். சரணடைந்த பிறகு கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று விவசாயம் பார்க்கும் நக்சல்களை அவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்பதையும் அறிவேன்.
ஆனால், பஸ்தரில் உயிர் மிகவும் மலிவானது என்பது உங்களுக்குத் தெரியாது. மனித உயிரானது அரசியல் சட்டம் என்னும் அரசு ஆவணத்தால் இங்கே உத்தரவாதம் பெறவில்லை. அது துப்பாக்கிக் குண்டின் முனையில் ஊசலாடுகிறது. அந்தக் குண்டு சரியான இடத்தைத் தீண்டினால் மனிதன் சட்டென்று பிணமாகிவிடுவான். குண்டு கொடூரமானதோ அநியாயமானதோ அல்ல. துப்பாக்கியின் விசையை அழுத்தும் விரல் கருணையற்றது என்று தவறாகக் கருதப்படுகிறது. உண்மையில் அந்த விரல் தன்னுடைய அச்சத்தைத்தான் விரட்டுகிறது. இரவில் வனத்திற்குள் மாட்டிக்கொள்ளும் சிப்பாய் ஒருவர் நொடிக்குப் பத்துக் குண்டுகளை உமிழும் துப்பாக்கியின் நாலாபுறமும் சுட்டுக் குழந்தைகள்முதல் இளைஞர்கள்வரை சிலரைச் சடலங்களாக ஆக்கும்போது அவர் தான் சடலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்கிறார். அவர் ஒரு சடலத்தின் மார்பில் கத்தியைச் சொருகி எடுத்து அதில் படிந்திருக்கும் ரத்தத் துளிகளை அந்தச் சடலத்தின் துணியில் துடைக்கும்போது அந்தக் கொலை பதிவுசெய்யப்படுகிறது.
பஸ்தரில் உயிரோடு இருப்பதற்கும் சாவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் அதிருஷ்டம்தான். பஸ்தரில் உயிரோடு இருப்பவர்களை யாரும் தேடுவதில்லை. இறந்தவர்களைத்தான் தேடுகிறார்கள். பிணங்களைத் தேடும் வேலையில் என் படையினர் அடிக்கடி ஈடுபடுவதில்லை. ஆனால் அது வேறு கதை. அதைப் பிறகு சொல்கிறேன்.
(நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி)